மீண்டும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி

நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் எனவும் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் தன்னுடன் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதேவேளையில், நல்லிணக்கம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் மார்ச் மாதம் அது தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பதுளை குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இன்று (27) கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரேயொரு முஸ்லிம் தேசிய பாடசாலையான குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை பாடசாலை மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியின் புதிய இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு சஞ்சிகையை பாடசாலை அதிபர் ஏ.ஏ சமூனினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபெறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதக்கங்களையும் வழங்கி வைத்தார்.

கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி, நினைவுப் புத்தகத்தில் ஒரு குறிப்பொன்றை பதிவிட்டதோடு, கல்லூரி ஆசிரியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

நாட்டின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வகையில், அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளோம். இந்த வேலைத்திட்டத்துடன் நாம் முன்னோக்கிச் சென்றால், நிச்சயமாக நாட்டில் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க முடியும். அதேநேரம் நாட்டின் ஏனைய பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.

எனவே, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. இந்த நாட்டில் இன்று தீர்க்கப்பட வேண்டிய இரு பிரதான பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எம்முடன் இணைந்து செயற்படுமாறு மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.

நாட்டில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது முதல் விடயமாகும். இரண்டாவது விடயம் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகும். ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல, நாட்டில் நல்ல பொருளாதாரம் மற்றும் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அத்துடன் இலங்கையர் என்ற அடையாளம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைத்து மக்களும் இலங்கையர்களே. இன்று எமது நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சிங்கள அடையாளத்தையும், மதத்தையும், கலாசாரத்தையும் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல நாம் செயற்படுகின்றோம். ஏனைய இனத்தினரையோ, மதத்தினரையோ ஒருபோதும் சிறுமைப்படுத்தக்கூடாது. நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவரும் இலங்கையர்களாக முன்னோக்கிச் சென்றால் மட்டுமே வளமான நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வுகளை வழங்கியுள்ளோம், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கி வருகின்றோம். அத்துடன், ஏனைய இனத்தவர்களின் பிரச்சினைகளிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. யுத்தம் நிறைவடைந்த போதிலும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன. அரசாங்கம் என்ற வகையில் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்..

சிலர் தமது கிராமங்களை இழந்துள்ளனர். எனவே, 1985 ஆம் ஆண்டு வரைபடத்தின் பிரகாரம் செயல்பட முடிவு செய்துள்ளேன். அந்த வரைபடத்தின்படி, தற்போது எதாவது கிராமம் காடுகளால் மூடப்பட்டிருந்தால், அந்த கிராமங்களில் உள்ள மக்கள் குடியேற அனுமதிக்க வேண்டும். அதன் உரிமையை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும். அதன்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் ஏற்கனவே அந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

இன்னும் சிலருக்கு அந்தப் பிரதேசங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நாங்கள் அந்த பிரச்சினைகள் தொடர்பில் தனித்தனியாக பணியாற்றி வருகிறோம். அத்துடன், காணாமற்போனோர் பிரச்சினை, இழப்பீடுகள் உட்பட இதுவரையில் தீர்க்கப்படாத சகல பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தாலும், வலுவான பொருளாதாரம் இல்லை என்றால், மீண்டும் அதே பிரச்சினைகள் தலைதூக்கும். மலையக தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, செயல்பட்டு வருகிறோம். அவர்களுக்கு காணி, கல்வி மேம்பாடு உள்ளிட்ட உரிமைகளை வழங்க விசேட திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

அத்துடன் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சரவையில் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். கொவிட் காலத்தில் இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினை எழுந்தது. அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஏனைய நாடுகள் அது பற்றிய முடிவுகளை பிற்காலத்தில் மாற்றிக்கொண்டாலும், இலங்கையில் அந்த முடிவுகளை மாற்ற நீண்ட காலம் எடுத்தது.

அதற்கான காரணங்களை ஆராய்ந்து, அத்தகைய நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருக்க சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இறுதிச் சடங்குகளை எப்படிச் செய்வது என்பது அந்தந்த மதத்தின்படி முடிவு செய்யப்பட வேண்டும். இது குறித்து எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதமளவில் அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்க்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெல்வது கடினம்

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்கு சாதகமாக களமிறங்கினாலே அன்றி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்தரிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் 2024 ம் ஆண்டு எந்த தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது

முதலில் பாராளுமன்றத் தேர்தல் நடாத்துவதற்கு வாய்ப்பு இல்லை ஏனென்றால் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று அதில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தற்போதைய ஜனாதிபதியை தொடர்ந்து இருக்க அனுமதிக்க மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டினால் ஜனாதிபதி தேர்தல் தான் முதலில் நடக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது

அப்படி நடந்தால் கூட நான்கு பிரதான கட்சிகளிலும் முக்கியமானவர்கள் வேட்பாளர்களாக களமிறங்க கூடும் அவ்வாறு களமிறங்கினால் தனி ஒருவரினால் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்கினை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும்

அவ்வாறு இருக்கும்போது ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வருவாரா என்ற கேள்வி எழுகின்றது? ரணில் ஜனாதிபதியாக வரவேண்டுமாக இருந்தால் மொட்டு கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சாதகமாக அமைந்தால் மாத்திரமே ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இருந்து பஸில் வியூகம் வகுப்பு: நாடு திரும்பியதும் மொட்டுக்குள் அதிரடி மாற்றம்

அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன்

விசேட சந்திப்பை நடத்தவுள்ளார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை மையப்படுத்தியதாகவே இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு தொகுதி அமைப்பாளர்களுக்கு இதன்போது பஸில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து சிலர் நீக்கப்பட்டு அவர் களுக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்படும் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனும் கூட்டணி நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

Posted in Uncategorized

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கேள்வியெழுப்பிய யஸ்மின் சூக்கா

இலங்கையில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட அனைத்து அதிபர் ஆணைக்குழுக்களும் ‘என்ன நேர்ந்தது’ என்பதைக்

கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, அவை ‘யார் அதனைச் செய்தது’ என்பதைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இதேவெளை தற்போதைய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் அதனை ஒத்த நடவடிக்கையா என்ற கேள்வி எழுப்பியிருக்கின்றது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகள் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், இதுகுறித்து யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் மேலும் கூறியிருப்பதாவது:

“இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) அட்டூழியங்கள் இடம்பெற்ற 1989 ஜுலை மாத காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட அதிகாரி ரத்நாயக்க இன்னமும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை.

ஏனெனில் இலங்கையில் நியமிக்கப்பட்ட அனைத்து அதிபர் ஆணைக்குழுக்களும் என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, யார் அதனைச் செய்தது என்று கண்டறிவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக கடந்தகால வரலாறு மீளத்திரும்புகின்றதா?

மனித உரிமைகள் செயற்பாட்டாளரான எம்.சி.எம்.இக்பால் போன்றவர்களின் பங்கேற்புடன் முன்னர் இயங்கிய பல்வேறு ஆணைக்குழுக்கள் மிகக்கடினமாக உழைத்த போதிலும், அப்போதைய காலப்பகுதியில் சாதாரண வன்முறைகளாக விபரிக்கப்பட்டவை அனைத்தும் மிகுந்த அதிர்ச்சியளிப்பவையாகவே காணப்பட்டன.

எது எவ்வாறெனினும் வலிந்து காணாமல் ஆக்கப்படல்களுடன் தொடர்புடைய கடத்தல்காரர்களை அடையாளங்காணமுடியும். ஆனால் 1989 ஒக்டோபர் மாதத்திலிருந்து அதுபற்றி எவரேனும் விசாரணைகளை மேற்கொண்டனரா?

குறிப்பாக 1989இல் காணாமல்போன நபரொருவர் பற்றிய தகவல்களில், அவர் தமது காவலின்கீழ் இருந்ததாக இராணுவத்தினர் (தலத்துஓயா இராணுவ முகாம்) கூறுகின்றனர். அவ்வாறெனில், அந்நபரை எவ்வித சாட்சியங்களுமின்றி காணாமலாக்கியது யார்? அக்காலப்பகுதியில் தலத்துஓயா இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் யார்? அதனைக் கண்டறிவது அத்தனை கடினமானதல்ல.

அதேபோன்று பிறிதொரு காணாமலாக்கப்படல் சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில், 1990ஆம் ஆண்டு பேராதனையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவரைக் கைதுசெய்த பின்னர் காணவில்லை. (இராணுவத்துக்குச் சொந்தமான குறித்த வாகனத்தின் பதிவிலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.) அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் 2009 மே மாதம் 18ஆம் திகதி தம்மிடம் சரணடைந்து காணாமல்போன நூற்றுக்கணக்கான தமிழர்களை அவர்களை அழைத்துச்சென்ற பேருந்து (பதிவிலக்கமின்றி) கண்டறியமுடியாது என இராணுவம் கூறியது.

அதுமாத்திரமன்றி 1989ஆம் ஆண்டு இராணுவத்தைச் சேர்ந்த சீருடையணியாத சுமார் 30 – 40 பேரால் அழைத்துச்செல்லப்பட்ட தனது 20 வயது மகன் காணாமல்போனமை குறித்து முறைப்பாடளிப்பதற்கு கலகெதர காவல்துறையினர் அனுமதியளிக்கவில்லை என தாயொருவர் தெரிவித்துள்ளார்.” என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி – பாட்டலி சம்பிக்க ரணவக்க

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியமைத்து 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் போட்டியிடுவோம்.அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களை இனி ஆதரிக்கமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் குடியரசின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2024 ஆம் ஆண்டு தீர்மானமிக்கது.2019 ஆம் ஆண்டு 69 இலட்ச மக்கள் அரசியல் ரீதியில் செய்த தவறின் பிரதிபலனை ஒட்டுமொத்த மக்களும் தற்போது எதிர்கொள்கிறார்கள்.பொருளாதார பாதிப்புக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என ராஜபக்ஷர்களும் அவர்களின் சகாக்களும் இனி குறிப்பிட முடியாது.ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என உயர்நீதிமன்றம் முத்திரை பதித்துள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.விசேட வைத்தியர்களின் வெளியேற்றத்தால் நாட்டின் சுகாதாரத்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடிகளை நினைவில் வைத்துக் கொண்டு அரசியல் ரீதியில் மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பலர் வரிசையில் நிற்பதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். 2019 ஆம் ஆண்டும் இவ்வாறு குறிப்பிட்டுக் கொண்டு தான் அவர்கள் கோட்டபய ராஜபகஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினார்கள். இதன் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டும் அரங்கேற்ற முயற்சிக்கிறார்கள்.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் ராஜபக்ஷர்கள் படுதோல்வியடைவார்கள்.அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களை இனி ஆதரிக்க போவதில்லை.மக்களின் அரசியல் சிந்தனை மாற்றமடைந்துள்ளது,ஆகவே நிச்சயம் ஆட்சிமாற்றம் ஏற்படும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியமைத்து 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் போட்டியிடுவோம்.நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை தோற்றுவிப்போம் என்றார்.

மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு பொறுப்பேற்க வேண்டும் – மனோ கணேசன்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என உரக்க கூறி வைக்க விரும்புகிறேன். நண்பர் இராதாகிருஷ்ணன் இந்த மகத்தான நிகழ்வை நடத்தி, மலையக தமிழ் மக்களின் வரலாற்று, நிகழ்கால அவலங்களை, உரை, கலை வடிவங்களில் இந்த மேடையில் கூற வைத்து விட்டார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் எனக்கு ஒரு கடப்பாடு இருக்கிறது. வரலாறு, நிகழ்கால அவலங்களுக்கு அப்பால் நாம் இன்று எங்கே, எப்படி நிற்கிறோம், எங்கே, எப்படி போக வேண்டும் என்ற எதிர்காலம் கூற வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

மலையக மக்கள் முன்னணி சார்பில் இராதாகிருஷ்ணன் எம்பி தலைமையில் நுவரேலியாவில் நடைபெற்ற 200ல் மலையக மாற்றம் விழாவில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்திய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

இந்நாட்டின் சிங்கள, ஈழத்தமிழ், முஸ்லிம் சகோதர இனத்தவர் தங்கள் ஓட்டங்களை 1948லேயே ஆரம்பித்து விட்டார்கள். மலையக தமிழர் தமது குடியுரிமையை சட்டப்படி முழுமையாக பெற்றுக்கொள்ளவே 2003ம் வருடம் ஆகிவிட்டது. ஆகவே நாம் எமது ஓட்டத்தை தாமதமாக ஆரம்பித்த பிரிவினர் ஆகும். ஆகவே எமது அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார அடைவுகள், சகோதர இனத்தவர்கள் அடைந்துள்ள, இலக்குகளை விட குறைவாக இருப்பது ஆச்சரியம் அல்ல. ஆனால், இந்த இருபது வருடங்களில் ஏனையோர் மரதன் ஓடும்போது நாம் நூறு மீட்டர் ஓடி வேகமாக பல முன்னேற்றங்களை கண்டுள்ளோம். எனினும் இன்னமும் நாம் போக வேண்டிய தூரம் கணிசமாக இருக்கிறது.

நாம் அடையவேண்டிய வளர்ச்சியை அடையாமல் குறைவளர்ச்சியில் நிற்கிறோம். மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு பொறுப்பேற்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் வரும் போதெல்லாம், 1948ல் இலங்கையின் அந்நிய செலவாணி தொகை ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக அதிகமாக இருந்தது என்று பெருமையாக கூறுவார். அது உண்மை. அதன் பின்னுள்ள கசப்பான உண்மை என்ன? அந்த அதிக தொகை அந்நிய செலவாணியை இரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தி பெற்று தந்தது நமது மக்களின் தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட உழைப்பினால் கிடைத்த ஏற்றுமதி வருமானம் ஆகும். ஆனால், இதற்காக 1948லேயே முதல் சுதந்திர இலங்கை அரசு எமக்கு செய்த கைம்மாறு என்ன? எமது குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்து எம்மை நாடற்ற மக்கள் ஆக்கியதே அந்த கைம்மாறு ஆகும்.

1964ல் எம்மை கலந்தாலோசித்து எமது உடன்பாடுகளை பெறாமலேயே இந்திய அரசு, எம்மில் பெரும்பான்மையோரை நாடு கடத்த உடன்பாடு தெரிவித்தது. அன்று ஏற்படுத்தப்பட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் மூலமாக எமது மக்கள் கால்நடைகள் போல் நாடு கடத்தப்பட்டு, இங்கே நாம் அரசியல்ரீதியாக பலவீனபடுத்தப்பட்டோம். இந்த ஒப்பந்தம் எமக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும்.

1972 வரை நாம் குடியரசு ஆகவில்லை. அதுவரை பிரிட்டிஷ் மகாராணியார் தான் எமது தேசத்தலைவராக இருந்தார். நாம் டொமினியன் சிலோன் என்ற நாடாக இருந்தோம். எம்மை 200 வருடங்களுக்கு முன்னர் இங்கே கொண்டு வந்தவர்களும் அவர்கள்தான். 1948ல் எமது குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போதும், 1964ல் நாடு கடத்தல் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதும் பிரிட்டிஷ் மகாராணியார் கண்ணை மூடிக்கொண்டு இருந்தார். இந்த ஒப்பந்தம் பிரிட்டிஷ் அரசால் எமக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும்.

இந்த வரலாற்றின் காரணமாக, எமது எதிர்கால வளர்ச்சிக்கு உதவிட வேண்டிய தார்மீக கடப்பாடு இன்று, இந்திய, பிரித்தானிய அரசுகளுக்கு உண்டு. அதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், இங்கிலாந்து பிரதமர் ரீஷி சுனக் அவர்களும் நிறைவேற்ற வேண்டும் எனக்கோருகிறேன். கடந்த வாரம் நானும், இராதாகிருஷ்ணனும் இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் தூதுவர் அன்ரூ பெட்ரிக்கை சந்தித்த போது, இதை நான் அவருக்கு தெளிவாக எடுத்து கூறினேன். அவரது இன்றைய பிரிட்டிஷ் மன்னர் சார்ள்சின் அரசு எமக்கு உதவிட வேண்டும். இந்தியாவின் கடப்பாடு பற்றி நான் பலமுறை இந்திய தலைவர்களிடம் எடுத்து கூறியுள்ளேன்.

இலங்கையின் கடப்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார் திசாநாயக்க ஆகியோர் நிறைவேற்ற வேண்டும். எனது கருத்தை இவர்களுக்கும் நான் பலமுறை எடுத்து கூறியுள்ளேன் என கூறினார்

Posted in Uncategorized

தமிழ்க் கட்சிகளுக்கு ஆலோசனை சொல்லும் ஹரின் தமிழர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? – சபா.குகதாஸ் கேள்வி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் எந்த முடிவை எடுக்கக் கூடாது எனவும் ரணிலை ஆதரிக்க வேண்டும் என மொட்டு அரசாங்கத்தை விமர்சித்து அதே அரசாங்கத்தில் தற்போது அமைச்சராக இருக்கும் ஹரீன் பெர்ணான்டோ நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சரே நீங்கள் தமிழ்க் கட்சிகளிடம் கோரிக்கை வைப்பதற்கு முன்பாக நீங்களும் உங்கள் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் தமிழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என கூறமுடியுமா? நல்லாட்சியில் நடாத்திய நாடகத்தை தமிழ் மக்கள் இன்னும் மறந்து விட வில்லை.

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என கோருவதற்கு முன்பாக ஜனாதிபதி மூலம் தமிழர்கள் எதிர்பார்க்கும் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருந்தால் உங்கள் மீது நாம் கேள்வி கேட்பதற்கான இடைவெளி ஏற்பட்டியிருக்க வாய்ப்பில்லாது இருந்திருக்கும்.

ஆனால் எதிர்மாறாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளையும் தமிழ் மக்களையும் தொடர்ந்தும் ஏமாற்றியே வருகின்றார் .

ஜனாதிபதியின் அதிகாரத்துக்க உட்பட்ட அரச திணைக்களத்தால் நடைபெறும் தமிழர் நில அபகரிப்பைக் கூட தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கின்றார். பயங்கரவாத தடைச்சட்டத்தில் தமிழர்களை சிறையில் அடைப்பதை நிறுத்துமாறு கேட்க பயங்கரவாத சட்டம் நடைமுறையில் உள்ளதா என கேட்கிறார் இதனை அமைச்சரே நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்.

அமைச்சர் ஹரீன் அவர்களே இன்னும் சில மாதங்கள் இருக்கின்றது. முடிந்தால் ஜனாதிபதியும் நீங்களும் இணைந்து தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பில் பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பாராளுமன்றத்தால் மீளப் பெறாத அதிகாரப் பகிர்வை வழங்குங்கள்.

இது உங்களால் முடியும். காரணம் உங்களின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் பலமாக உள்ளது. இதனை ஒர் இரு மாதங்களில் உறுதி செய்யுங்கள் நீங்கள் கேட்கும் ஆதரவை பெரும் பாண்மை தமிழ்க கட்சிகள் பரிசீலிக்கும் எனவும் தெரிவித்தார்.

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் அவசியம்- மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் பீபிள்ஸ் பவுண்டேசன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து ”எமது உரிமைகள், எமது வளங்களை பாதுகாக்க எமது மாகாணத்தின் மாகாண சபையை வலுப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளிலான செயலமர்வொன்று கண்டி வரையறுக்கப்பட்ட கூட்டுறவு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம். மாகாண சபை இந்நாட்டுக்கு அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்களாயின் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை தேவையும் இல்லை.

தற்போது மாகாண சபை மக்கள் கூட்டிணைப்பற்ற அரச அதிகாரிகளால் செயற்படுத்தப்படுகின்றது. இதனால் மாகாண சபை குறித்தான கேள்வியொன்றை எழுப்பும் போது அரச அதிகாரிகள் அதற்கு நேரடியாக பொறுப்பேற்காமல் இருக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் இந்நிலை மாற்றமடைந்திருக்கும்.

தற்போது மாகாண சபை செயற்திட்டங்களில் மக்கள் கருத்துக்களை கேட்டறிய வாய்ப்பு இல்லை. எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை தெரிவு செய்தலை உடன் மேற்கொள்ள வேண்டும். அநேகமானோர் மாகாண சபை வெள்ளை யானை என தெரிவித்து வருவதுடன், மாகாண சபை உறுப்பினர்களை பராமரிக்க அதிக நிதி வீண்டிக்கப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்களின் பராமரிப்புக்கு அரச வருமானத்தில் 1 வீதமளவே செலவாகுகின்றது எனவும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஜயலத் பண்டார, முன்னாள் ராஜா உஸ்வெட கெய்யாவ, ஜனநாயக இளைஞர் காங்கிரசின் தலைவர் கே.அர்ஜூன, பீபிள்ஸ் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஹேரத் உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் சிவிலமைப்புக்கள் உட்பட இளைஞர் யுவதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சிக்கான மூலோபாயம் இறந்த உடலுக்கு ஓட்சிசன் கொடுப்பது போன்றது – சபா.குகதாஸ்

ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சிக்கான மூலோபாயம் இலங்கையை பொறுத்தவரை இறந்த உடலுக்கு ஓட்சிசன் கொடுப்பதாகவே அமையும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீழ்ந்து போன இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அடிப்படை மூலோபாய விடையங்கள் சிலவற்றை கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடந்த உள்நாட்டு இறைவரி தொடர்பான கலந்துரையாடலில் முன்வைத்து உரையாற்றினார்.

ஜனாதிபதி கூறிய மூலோபாயம் ஒன்று வெளிநாடுகளுடன் வர்த்தக உடனபடிக்கைகளை மேற் கொள்ளுதல் குறிப்பாக இந்தியா, சீனா, தாய்வான் , ஜப்பான் போன்ற நாடுகளிடம் எதிர்காலத்தில் உடன்படிக்கைகளை கைச்சாத்திடுதல் இரண்டாவது ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக உறவை விரிவுபடுத்தல் மூன்றாவது நாட்டின் அனைத்து துறைகளையும் டிஐிற்றல் மயப்படுத்தல் அதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை விரிவாக்கம் செய்தல் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் ஜனாதிபதி கூறிய மூலோபாயம் இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்பதற்கானது அல்ல இவை அரசியல் அமைதி உடைய , ஊழல் அற்ற ஆட்சியாளர்களை கொண்ட நாடுகளுக்கோ பொருத்தமான மூலோபாயங்கள் மாறாக இலங்கையை பொறுத்தவரை இறந்த உடலுக்கு ஓட்சிசன் கொடுப்பதாகவே அமையும்.

இலங்கையின் பொருளாதாரம் தற்போது தலைகீழாக கிடக்கின்றது அதனை நிமிர்த்தி இருத்த முதல் கட்டம் ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டிய அடிப்படை மூலோபாயம் முதலாவது இனப்பிர்ச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு இரண்டாவது ஊழல் வாதிகளின் ஊழல் பணங்களை நாட்டின் திறைசேரிக்கு கொண்டு வருதல் மூன்றாவது ஊழல்வாதிகளை தண்டித்தல் தடுப்பதற்கான சட்டங்களை சட்ட ஓட்டை இன்றி நடைமுறைப்படுத்தல் எனவே இவ்வாறான மூலோபாயங்களே வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்தக் கூடிய அடிப்படைகள்.

மேலும் வரிகளை அதிகரித்து சொந்த மக்களை கருவறுத்து உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்காது தொடர்ச்சியான கடன்களை பெற்றுக் கொண்டு சந்தர்ப்பவாத கால எல்லைகளை கூறி அந்நியச் செலாவணி வருமானத்தை பெற்றுக் கொள்ளாமல் பொருளாதாரம் பற்றி கதைப்பது தேர்தல் இலக்குகள் மட்டுமே இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இணக்கம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டோரின் விடுதலை, மயிலத்தமடு மாதவணை பிரச்சனை, உள்ளூராட்சி மன்றங்களில் அமைய தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கல், 13வது திருத்தம் முழுமையாக அமுலாக்கல், வடகிழக்கில் அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஜனாதியுடனான இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டு, பேச்சளவில் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்று வடகிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மேற்கொண்ட சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இன்று பிற்பகல் 03 மணியளவில் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் வடகிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதில் உண்மைக்கும், ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவை அமைப்பதற்கான வரைபொன்று அனைவருக்கும் பரிமாறப்பட்டது. ஜனவரி மாதத்தில் இதனை பாராளுமன்றத்தில் சட்டமாக்குவதாகப் பேசப்பட்டது.

அத்துடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டது. பூநகரியில் சோளார் மற்றும் காற்றாளை திட்டங்கள், இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்வது, இந்தியாவில் இருந்து குழாய் மூலமாக மின்சாரம், எரிபொருட்கள் கொண்டுவருவதுடன், இலங்கை இந்தியாவிற்கிடையில் தரைவழிப் பாதை போன்றவற்றுக்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இதன்போது எங்களாலும் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்த வண்ணம் இருப்பது தொடர்பிலும், கடந்த நவம்பர் மாதமளவிலும் மட்டக்களப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டு அதில் 4 பேர்தான் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஏனையவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் பேசப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தையும் மாவீரர் தின நிகழ்வுக்காக நிதி கோரியதாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள விடயமும் சுட்டிக் காட்டப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பில் ஒரு வித்தியாசமான நிலைமை இருப்பதாகவும், மட்டக்களப்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் விரும்பத்தக்கதாக இல்லை என்ற கருத்துப்பட ஜனாதிபதி விடயங்களைத் தெரிவித்தார். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கு தான் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் காணிப் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது நாங்கள் மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரை விவகாரம் சம்பந்தமாகத் தெரிவித்தோம். அது தொடர்பிலும் மிக விரைவில் உரிய தீர்மானம் எடுப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் உள்ளூரட்சி மன்றங்களிலே நீண்ட காலமாக அமைய, தற்காலிக அடிப்படையில் வேலை செய்கின்ற ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் நாங்களும் எமது கோரிக்கையை முன்வைத்தோம். இது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்களால் கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த விடயத்திற்கும் விரைவில் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் 13 வது திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பில் தெரிவித்தார். இதன்போது பிரதேச செயலாளர்களை மாகாண சபையின் கீழ் கொண்டு வருவதற்கு தான் ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இதன் போது நான் தெரிவிக்கையில் 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டு பின்னர் 1988ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் அந்த அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டது. ஆரம்ப காலத்தில் மாவட்ட அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் என்று தான் இருந்தது. அதனை 1988ல் மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்கள் என்று சொல்லி அவர்களை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றைய நிலையில் கிராமசேவை உத்தியோகத்தர் பதவி கூட மாகாணசபைக்கு பதில் அளிக்க முடியாமல் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கின்றது.

அதுமாத்திரமல்லாமல் பாராளுமன்றத்தில் தாங்கள் ஜனாதிபதியாக வந்த போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினரகளிடமும் 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பில் தெரியப்படுத்தி இருந்தீர்கள் அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தார்கள். எனவே 13வது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக அமுல்ப்படுத்துவதற்குப் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வராது என்று நினைக்கின்றோம்.

13வது திருத்தம் புறையோடிபோயுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக இல்லாது விட்டாலும் ஒரு இடைக்காலத் தீர்வாகக் கிடைக்கப்பட்டது. அதையாவது முற்றுமுழுதாக நிறைவேற்றினால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடு மிக விரைவில் மீண்டெழும் என்ற விடயங்களும் எம்மால் சுட்டிக்காட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.