யுத்தகாலத்தில் நடத்தப்பட்ட இரசாயன ஆயுததாக்குதல்களையும் ஜேவிபி கண்டிக்க வேண்டும்

தற்போது போராட்டங்களின் மீது இரசாயன குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக ஜேவிபி குற்றம் சாட்டுகிறது. இதேபோல, யுத்த காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்ற இரசாயன குண்டு தாக்குதல்களையும் தெற்கிலே இருக்கின்ற ஜேவிபி போன்ற ஏனைய கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையிலே தற்பொழுது பாரிய அளிவிலான ஜனநாயக புாராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. முக்கியமாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடார்த்தும்படியும், தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயர்வு மற்றும் சம்பள நெருக்கடி உள்ளிட்டவற்றை முன்வைத்து தொடர்ச்சியாக ஜனநாய போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர்கள், அனைத்து தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி அந்த போராட்டங்களை நசுக்குவதற்காக கண்ணீர் புகை பாவிப்பது நீர்த்தாகை பாவிப்பது உட்பட பல அடக்குமுறை தற்சமயம் நடந்துகொண்டிருக்கின்றன.

குறித்த கண்ணீர்புகையானது காலாவதியான கண்ணீர்ப்புகை எனவும், இரசாயனம் கலக்கப்பட்ட கண்ணீர் புகை எனவும் குறிப்பிட்டதுடன், அதனால்தான் தங்களுடைய கட்சியினுடைய ஒரு உறுப்பினர் இறந்திருக்கின்றார் எனவும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியரும் இறந்திருக்கிறார் எனவும் அண்மையில் ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

இந்த காலாவதியான கண்ணீர் புகை அல்லது ரசாயனம் கந்த கண்ணீர்ப்புகையானது பொதுமக்களிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது. ஆகவே இதை விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டிருக்கின்றார்.

சாதாரணமாக ஜனநாயக ரீதியில் நடக்கின்ற இந்த போராட்டத்திற்கு இப்படியான கண்ணீர்ப்புகையானது பொது மக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற இரசாயனம் கலந்த புகைக்குண்டுகளை பாவிக்கின்றார்கள். என்று சொன்னால், இதுவரை காலமும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற யுத்தத்திலே அப்பாவி பொதுமக்களிற்கு மேலே இந்த அரசாங்கத்தால் பாவிக்கப்பட்ட இரசாயன குண்டுகளை அதிலும் குறிப்பாக ஒரு யுத்தத்திலே பாவிக்க முடியாத சகல இரசாயன ஆயுதங்களையும் குண்டுகளையும் பாவித்து பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் இறப்பதற்கு மிக முக்கியமான காணமாக இருந்திருக்கின்றது.

ஆகவே, தற்சமயம் இந்த ஜனநாயக போராட்டங்களிற்கு பாவிக்கின்ற இந்த கண்ணீர்ப்புகை உயிர் ஆபத்தினை ஏற்படுத்திகின்றது என்று கண்டிக்கின்ற ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூறும் விடயம் தொடர்பில் நாங்களும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதேமாதிரி இந்த யுத்த காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்ற இந்த இரசாயன குண்டுகள், இதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவுகளிற்கும் தெற்கிலே இருக்கின்ற ஜேவிபி போன்ற ஏனைய கட்சிகளும் கண்டிக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பிலும் சரியான விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு இந்த அறகள போராட்டத்தின் மூலமாகதான் ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாக வந்திருக்கின்றார். அந்த போராட்டக்காரர்களிற்கு சகலவிதமான பாதுகாப்புக்களை பெற்றுத்தருவதாக சொன்ன ரணில் விக்ரமசிங்க இன்று ஜனநாயக ரீதியான போராட்டத்தை வன்முறைகொ்டு தடுக்க முற்படுவதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இவற்றுக்கப்பால், பாராளுமன்ற உறுப்பினர்களிற்குள்ள சிறப்புரிமையை பாவித்து இந்த அரசாங்கத்தினுடைய கெடுபிடிகள், உள்ளுராட்சி மன்ற தேர்தலை வைக்க வேண்டும் உள்ளிட்ட விடயங்களிற்காக குரல் கொடுக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களையும்கூட அதிகார தோரணையில் ரணில் விக்ரமசிங்க அடக்குகின்றார்.

அவர்களை வாயை பொத்தவேண்டும் எனவும், அமரவேண்டும் என்றும் சொல்லி இந்த நாட்டில் இருக்கக்கூடிய சிரேஸ்ட அரசியல் தலைவரும் ராஜதந்திரியும் என்று சொல்லக்கூடிய ரணில்விக்ரமசிங்கவின் வாயிலிருந்து இவ்வாறான வார்த்தைகள் வருவதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆகவே இந்த பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாக இருந்தால், தமிழ் மக்களுமடைய தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்படாத வரைக்கும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட முடியாது. அப்படி காணுவதாக இருந்தால் அது தற்காலிகமான தீர்வாகதான் இருக்கும்.

இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்களிற்கு, நிரந்தரமான பொருளாதார திட்டம் இல்லை. பொருளாதார கொள்கை இல்லை. வெளிவிவகார கொள்கைகூட இவர்களிற்கு இல்லை. இன்று சீனாவிற்கு ஒரு முகத்தையு்ம, இந்தியாவிற்கு ஒரு முகத்தையும், அமெரிக்காவிற்கு ஒரு முகத்தையும்தான் இவர்கள் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த ஒருவருட காலத்தில் இந்திய அரசாங்கம் செய்த உதவித்திட்டங்கள் இல்லையென்றால், இலங்கையில் உள்ள அத்தனை மக்களும் பட்டினி சாவை சந்திக்கக்கூடிய ஒரு நிலைதான் ஏற்பட்டிருக்கும்.

இந்திய அரசாங்கத்திடம் பெருந்தொகையான உதவிகளை பெற்றுக்கொண்டு, இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக சீனாசார்பு நிலைப்பாட்டைதான் கொண்டுள்ளார்கள். ராஜபக்சாக்களானாலும், ரணில் விக்ரமசிங்கவானாலும் குறைந்த பட்சம் இந்திய உதவியை பெற்றிருக்கின்றவர்கள் அவர்களிற்கு விசுவாசம் இல்லாதவர்களாகதான் நடந்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இந்தியாவானாலும், ஏனைய நாடுகளானாலும் இலங்கைக்கு நிதி உதவி செய்கின்றவர்கள், நீண்டகாலமாக தீர்க்கப்படாமலிருக்கின்ற தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் இந்த அரசாங்கத்திற்கு உதவித்திட்டங்களை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது.

தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான கொரவமான தீர்வு காணப்படாதவரைக்கும் இந்த பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என தெரிவித்தார்.

முதுகு தெரிவதால் ஆட்களை உறுதிப்படுத்துவது சிரமமாம்: இராணுவப் பேச்சாளர் சொல்கிறார்

மார்ச் 7 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட இராணுவத்தினர் இரும்பு கம்பிகள் மற்றும் கொட்டன்களை வைத்திருந்தார்களா என்பதை அறிய இலங்கை இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

இரும்புக் கம்பிகள் மற்றும் மரக் கொட்டன்களுடன் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

புகைப்படத்தின் மூலத்தை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தினர் பயன்படுத்தப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவரது கருத்துப்படி, இராணுவத்தினர் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்களை சமாளிக்க பொலிஸ் கலகக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை முன் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் கணியில் ஈடுபடவில்லை என பிரிகேடியர் ரவி ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் முதுகைக் காட்டும் புகைப்படமே இருப்பதால், அன்றைய தினம் கடமையில் இருந்த அராணுவத்தினர் இரும்பு கம்பிகள் மற்றும் கொட்டன்களுடன் இருந்தார்களா என்பதை சரிபார்க்க முடியாது என்றார்.

புகைப்படம் அண்மையில் எடுக்கப்பட்டதா அல்லது பழைய சம்பவத்தில் எடுக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த நீண்ட காலம் தேவைப்படும் எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஆயுதம் தாங்கிய படையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழில் கைது

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த வேளை, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இராணுவத்தினரை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி , இராணுவத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

அது தொடர்பில் இராணுவத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , கோப்பாய் மற்றும் நீர்வேலி பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

இந்தியாவுடனான இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம்

இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 7ஆவது ஆண்டு இந்தியா-இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளும் தங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்தன.

இதன்போதே, இருதரப்பு பயிற்சிகளை மேம்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இரு தரப்பு அனுபவம் மற்றும் திறன்களை முழுமையாகப் பகிர்ந்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஆஜர்ப்படுத்த அல்லது காரணம் கூற நீதிமன்றம் உத்தரவு

ஆட்கொணாவு மனு மீதான கட்டளை இராணுவத்தினருக்கு எதிரானதாகவுள்ளமை மிகப்பெரிய வெற்றி எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஆஜர்ப்படுத்தவும் அல்லது காரணம் கூறவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேல் தெரிவித்தார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை  சசிதரன்  (எழிலன்), உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் (கெலம்பஸ்) ஆகியோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு  நேற்று (வியாழக்கிழமை) வழங்கப்பட்டது.

அதன் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஆட்கொணர்வு மனுக்கள் 3 மீதான தீர்ப்புகள்   வழங்கப்பட்டன. போரின் இறுதியில் இராணுவத்திடம் சரணடைந்த குடும்பத்தினர் சார்பில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்ற நீதிவானால் வழங்கப்பட்டது.

இதன் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்திடம் சரணடைந்தமைக்கான சான்றுகள் இருப்பதில் மன்று திருப்தியடைந்து அவர் இராணுவத்தினரின் வசம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் என்ற தொனியில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் அல்லது அப்படி முடியாது போனால் அதற்கான காரணங்களை விளக்கவும் எதிர்வரும் மாதம் 22 ஆம் திகதி வழக்குகள் திகதியிடப்பட்டுள்ளன.

அத்துடன் ஆட்கொணர்வு மனுமீதான கட்டளை இலங்கை இராணுவத்தினருக்கு எதிரானதாக ஆக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி. ஏனெனில் 2009 ஆம் ஆண்ட தொடக்கம் தங்களுடைய உறவினர்களை தேடி வந்த பயணம் 2013 இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 9 வருடங்களுக்க பின்னர் பூரணமாக நிறைவடைந்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினர் இதற்கான காரணத்தினை சொல்லித்தான் ஆகவேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் அவர்களை சார்ந்தது. இதுவரை காலமும் ஏதோ காரணங்களை சொல்லிக்கொண்டிருந்தவர்களிடம் அதற்கான பொறுப்பை இந்த நீதிமன்றம் கேட்கின்றது. அதை சொல்லித்தான் ஆகவேண்டும். நீதிமன்றத்தின் மூலம் எமக்கு கிடைத்த ஒரு வெற்றி மற்றும் நிவாரணமாகவே இதனை கருதவேண்டியுள்ளது என்றார். .

அத்துடன் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன, எனவே, இனிமேலாவது காணால் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மட்டுமல்ல மேலும் பல விடயங்கள் தொடுர்பாக பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

இலங்கை இராணுவத்தை 2030 இனுள் 100,000 ஆக குறைக்க திட்டம்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிடுகின்றது.

தற்போது 200783 ஆக காணப்படும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 2024 இல் 135,000 ஆகக்குறைப்பதற்கு எண்ணியுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2030 இல் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒருஇலட்சமாக குறைக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரெமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தேவைகளிற்கு ஏற்ப எதிர்கொள்ளக்கூடிய பாதுகாப்பு சவால்களிற்கு தீர்வை காண்பதற்காக சிறந்ததிறன் உள்ள இராணுவத்தை உருவாக்கும் நோக்கம் குறித்தும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

இராணுவ செலவீனங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள இலங்கை அரசாங்கம் முப்படையினரின் பதவிகளை வெற்றிடமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது.

இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு ஏனைய திறன்களுக்காக பயிற்சியளிக்கவும் விருப்ப ஓய்வு வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழிந்திருந்தார்.

அதேநேரம், பாதுகாப்பு அமைச்சும் முப்படைகளில் இருந்து வெளியேறியவர்களுக்கு பொதுமன்னிப்புக் காலமொன்றை 15 நவம்பர் முதல் 31 டிசம்பர் 2022 வரை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், முப்படைகளின் செயற்பாட்டுடன் தொடர்பில்லாதிருக்கும் நபர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்திற்குள் உரிய அறிவிப்புக்களை செய்யாது விட்டால் அந்தந்த சேவைகளிலிருந்து சட்டப்பூர்வ வெளியேற்றப்படத் தகுதியுடையவர்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அதிகாரிகள் மற்றும் ஏனைய தரவரிசைப் படையினர் உட்பட இதுவரை 16, 141 பேர் பொதுமன்னிப்புக்காக விண்ணப்பித்துள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 12 அதிகாரிகள் மற்றும் பிற தரவரிசைகளை உடையவர்கள் 96 பேர் வெளிநாட்டில் உள்ளனர். அவர்களில் விண்ணப்பங்களைச் அனுப்பியவர்கள் பற்றிய பரிசீலனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் துஷாந்த விஜேசிங்க குறிப்பிடுகையில், 983 விமானப்படை வீரர்கள் பொதுமன்னிப்புக்காக விண்ணப்பித்துள்ளதுடன், 732 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடற்படையால் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர் உறுதிப்படுத்தப்படவில்லை.

முப்படைகளிலிருந்தும் 18,202 பேர் பதவி விலக விருப்பம்

பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, விடுமுறை பெறாது கடமைக்கு சமூகமளிக்காதிருந்த பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தின்போது 18,202 பேர் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர்.

இராணுவத்தில் 16,174 பேரும், கடற்படையில் 1,061 பேரும், விமானப்படை 967 பேரும் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையில் இராணுவத்தின் 32 அதிகாரிகளும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அமைதி காக்கும் இலங்கைப் இராணுவத்தினர் பொருளாதார நெருக்கடியால் ரயர்கள், வாகன உதிரிப்பாகங்கள் இன்றி பாதிப்பு

மாலியில் நிலைகொண்டு ஐ.நா அமைதிப்படையில் கடைமையாற்றும் இலங்கை இராணுவத்தினர் கவச வாகனங்கள், இராணுவ வாகனங்களுக்கான ரயர்கள் மற்றும் விமானங்கள், உலங்குவானூர்தி , ஏனைய வாகனங்களுக்கான உதிர்ப்பாகங்கள் இன்றி தமது கடைமைகளை முன்னெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் என கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 240 இலங்கை இராணுவத்தினர் மாலியில் பணிபுரிகின்றனர். இவர்கள் ஐக்கிய நாடுகளின் உதவிகளை கொண்டு செல்லும் வாகன தொடரணிகளுக்கு 1200 km வரையான தூரத்துக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ரஷ்ய மற்றும் சீனதயாரிப்பு கவச வாகனங்களை பாதுகாப்பு பணிகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். வாகன உதிரிப்பாகங்கள், ரயர்கள் இன்றி இக் கவச வாகங்களில் பல சேவையிலீடுபடுத்தப்படாமல் தரித்து வைக்கப்பட்டுள்ளன. மோசமான காலநிலை மற்றும் வீதிகள் காரணமாக விமானப்படையினரின் விமானங்கள், ஆயுத தளபாடங்களும் பராமரிப்பு பணிக்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளன.

இதுவரையில் மாலியில் இடம்பெற்ற தாக்குதல்களில் இரண்டு இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் பல்வேறு குழுக்களால் நடாத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதல்களில் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், வெளிநாடுகளில் அமைதி காக்கும் படையினருக்கு சவால்கள் இருப்பதை ஒப்புக்கொண்டார். எவ்வாறாயினும், ரஷ்யா மற்றும் சீனாவில் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் அருண ரணசிங்க, மேற்படி ஹெலிகாப்டர்களின் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்புத் தேவைகளுக்கான நிதி 2023 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் ஐ.நா அமைதி காக்கும் இலங்கைப் இராணுவத்தினர் இலங்கைக்கு 24 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டித் தந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் மீது தாக்குதல் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ் மானிப்பாயில் பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.

மானிப்பாய் ஆலடி சந்தியில் நேற்று திங்கட்கிழமை இரவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் இருந்த வேளை இளைஞன் ஒருவர் தலைக்கவசம் அணியாது வந்தமை தொடர்பில் பொலிஸாருக்கும் இளைஞர் ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து , அங்கு கடமையில் இருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இளைஞன் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்ட வேளை வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டனர்.

தாக்குதல் சம்பவத்தினை அடுத்து அங்கு மக்கள் கூடியமையால் இளைஞனை கைது செய்த பொலிஸார் , மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று, இரத்த காயங்களுடன் நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்த பின்னர் யாழ்.போதனா வைத்திய சாலையில் இளைஞனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , முதற்கட்டமாக யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்று தாக்குதலுக்கு இலக்கான இளைஞனிடம் இன்று செவ்வாய்க்கிழமை வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் , சட்ட வைத்திய அதிகாரியிடம் இருந்து சட்ட மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டு மேலதிக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் தெரிவித்தார்.