இராணுவத்தை சரியான எண்ணிக்கைக்குள் பேணுவோம் என அமெரிக்க அதிகாரியிடம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதி

இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை சரியான அங்கீகரிக்கப்பட்ட அளவுக்குள் பேணி, பாரம்பரிய இராணுவக் கடமைகளில் அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் (தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம்) திருமதி அஃப்ரீன் அக்தருடன் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அமெரிக்க பிரதி உதவிச் செயலாளர் திருமதி அக்தரிடம் தெரிவிக்கப்பட்டன.

அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பு நடவடிக்கைகளை நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

மேலும் கடல்சார் விழிப்புணர்வு மற்றும் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இலங்கைக்கு உதவும் அமெரிக்காவின் முயற்சிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகளை அதன் பாதுகாப்புக் கொள்கையில் முன்வைப்பதற்கான இலங்கையின் முயற்சிகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார்.

இச்சந்திப்பை நினைவுகூரும் வகையில், பிரதி உதவிச் செயலாளர் அக்தர், இராஜாங்க அமைச்சர் தென்னகோனுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் இ.சொனெக், தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கடவுச்சீட்டுக்களுடன் பிரான்ஸில் தலைமறைவான இலங்கை முப்படை வீரர்கள்

2023ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ டிரையத்லான் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் முப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பிரான்சில் காணாமல் போயுள்ளனர்.

அதன்படி, நிகழ்விற்காக பிரான்ஸ் சென்ற 13பேர் கொண்ட தூதுக்குழுவின் தலைவரிடமிருந்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இலங்கை விமானப்படையின் இரண்டு அதிகாரிகள், தமது கடவுச்சீட்டுகளை திருடி, குழுவிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முப்படையைச் சேர்ந்த ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் மூன்று அதிகாரிகள் அடங்கிய 13 பேர் கடந்த 04 ஆம் திகதி அன்று பிரான்ஸ் சென்றனர்.

கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால், போட்டியாளர்களின் கடவுசீட்டுக்கள் மூத்த அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. எனினும் குறித்த ஏழு பேரும் தங்களது கடவுச்சீட்டுக்களை திருடிச் சென்றதாக நம்பப்படுகிறது.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது – சவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அடிக்கல் நட்டிருந்தார்.

தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சவேந்திர சில்வா, குறித்த திஸ்ஸ விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது என்றார்.

மேலும் இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

25,000 இராணுவத்தினர் பணியிலிருந்து விலகினர் – பொன்சேகா

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25,000 இராணுவத்தினரும் 1,000 பொலிஸாரும் பணியிலிருந்து விலகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் சுமார் 1,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவிகளைவிட்டு வெளியேறியுள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 200 பொலிஸ் அதிகாரிகள் பதவிகளை விட்டு விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யுத்தகாலத்தில் நடத்தப்பட்ட இரசாயன ஆயுததாக்குதல்களையும் ஜேவிபி கண்டிக்க வேண்டும்

தற்போது போராட்டங்களின் மீது இரசாயன குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக ஜேவிபி குற்றம் சாட்டுகிறது. இதேபோல, யுத்த காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்ற இரசாயன குண்டு தாக்குதல்களையும் தெற்கிலே இருக்கின்ற ஜேவிபி போன்ற ஏனைய கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையிலே தற்பொழுது பாரிய அளிவிலான ஜனநாயக புாராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. முக்கியமாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடார்த்தும்படியும், தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயர்வு மற்றும் சம்பள நெருக்கடி உள்ளிட்டவற்றை முன்வைத்து தொடர்ச்சியாக ஜனநாய போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர்கள், அனைத்து தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி அந்த போராட்டங்களை நசுக்குவதற்காக கண்ணீர் புகை பாவிப்பது நீர்த்தாகை பாவிப்பது உட்பட பல அடக்குமுறை தற்சமயம் நடந்துகொண்டிருக்கின்றன.

குறித்த கண்ணீர்புகையானது காலாவதியான கண்ணீர்ப்புகை எனவும், இரசாயனம் கலக்கப்பட்ட கண்ணீர் புகை எனவும் குறிப்பிட்டதுடன், அதனால்தான் தங்களுடைய கட்சியினுடைய ஒரு உறுப்பினர் இறந்திருக்கின்றார் எனவும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியரும் இறந்திருக்கிறார் எனவும் அண்மையில் ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

இந்த காலாவதியான கண்ணீர் புகை அல்லது ரசாயனம் கந்த கண்ணீர்ப்புகையானது பொதுமக்களிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது. ஆகவே இதை விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டிருக்கின்றார்.

சாதாரணமாக ஜனநாயக ரீதியில் நடக்கின்ற இந்த போராட்டத்திற்கு இப்படியான கண்ணீர்ப்புகையானது பொது மக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற இரசாயனம் கலந்த புகைக்குண்டுகளை பாவிக்கின்றார்கள். என்று சொன்னால், இதுவரை காலமும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற யுத்தத்திலே அப்பாவி பொதுமக்களிற்கு மேலே இந்த அரசாங்கத்தால் பாவிக்கப்பட்ட இரசாயன குண்டுகளை அதிலும் குறிப்பாக ஒரு யுத்தத்திலே பாவிக்க முடியாத சகல இரசாயன ஆயுதங்களையும் குண்டுகளையும் பாவித்து பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் இறப்பதற்கு மிக முக்கியமான காணமாக இருந்திருக்கின்றது.

ஆகவே, தற்சமயம் இந்த ஜனநாயக போராட்டங்களிற்கு பாவிக்கின்ற இந்த கண்ணீர்ப்புகை உயிர் ஆபத்தினை ஏற்படுத்திகின்றது என்று கண்டிக்கின்ற ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூறும் விடயம் தொடர்பில் நாங்களும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதேமாதிரி இந்த யுத்த காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்ற இந்த இரசாயன குண்டுகள், இதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவுகளிற்கும் தெற்கிலே இருக்கின்ற ஜேவிபி போன்ற ஏனைய கட்சிகளும் கண்டிக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பிலும் சரியான விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு இந்த அறகள போராட்டத்தின் மூலமாகதான் ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாக வந்திருக்கின்றார். அந்த போராட்டக்காரர்களிற்கு சகலவிதமான பாதுகாப்புக்களை பெற்றுத்தருவதாக சொன்ன ரணில் விக்ரமசிங்க இன்று ஜனநாயக ரீதியான போராட்டத்தை வன்முறைகொ்டு தடுக்க முற்படுவதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இவற்றுக்கப்பால், பாராளுமன்ற உறுப்பினர்களிற்குள்ள சிறப்புரிமையை பாவித்து இந்த அரசாங்கத்தினுடைய கெடுபிடிகள், உள்ளுராட்சி மன்ற தேர்தலை வைக்க வேண்டும் உள்ளிட்ட விடயங்களிற்காக குரல் கொடுக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களையும்கூட அதிகார தோரணையில் ரணில் விக்ரமசிங்க அடக்குகின்றார்.

அவர்களை வாயை பொத்தவேண்டும் எனவும், அமரவேண்டும் என்றும் சொல்லி இந்த நாட்டில் இருக்கக்கூடிய சிரேஸ்ட அரசியல் தலைவரும் ராஜதந்திரியும் என்று சொல்லக்கூடிய ரணில்விக்ரமசிங்கவின் வாயிலிருந்து இவ்வாறான வார்த்தைகள் வருவதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆகவே இந்த பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாக இருந்தால், தமிழ் மக்களுமடைய தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்படாத வரைக்கும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட முடியாது. அப்படி காணுவதாக இருந்தால் அது தற்காலிகமான தீர்வாகதான் இருக்கும்.

இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்களிற்கு, நிரந்தரமான பொருளாதார திட்டம் இல்லை. பொருளாதார கொள்கை இல்லை. வெளிவிவகார கொள்கைகூட இவர்களிற்கு இல்லை. இன்று சீனாவிற்கு ஒரு முகத்தையு்ம, இந்தியாவிற்கு ஒரு முகத்தையும், அமெரிக்காவிற்கு ஒரு முகத்தையும்தான் இவர்கள் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த ஒருவருட காலத்தில் இந்திய அரசாங்கம் செய்த உதவித்திட்டங்கள் இல்லையென்றால், இலங்கையில் உள்ள அத்தனை மக்களும் பட்டினி சாவை சந்திக்கக்கூடிய ஒரு நிலைதான் ஏற்பட்டிருக்கும்.

இந்திய அரசாங்கத்திடம் பெருந்தொகையான உதவிகளை பெற்றுக்கொண்டு, இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக சீனாசார்பு நிலைப்பாட்டைதான் கொண்டுள்ளார்கள். ராஜபக்சாக்களானாலும், ரணில் விக்ரமசிங்கவானாலும் குறைந்த பட்சம் இந்திய உதவியை பெற்றிருக்கின்றவர்கள் அவர்களிற்கு விசுவாசம் இல்லாதவர்களாகதான் நடந்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இந்தியாவானாலும், ஏனைய நாடுகளானாலும் இலங்கைக்கு நிதி உதவி செய்கின்றவர்கள், நீண்டகாலமாக தீர்க்கப்படாமலிருக்கின்ற தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் இந்த அரசாங்கத்திற்கு உதவித்திட்டங்களை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது.

தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான கொரவமான தீர்வு காணப்படாதவரைக்கும் இந்த பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என தெரிவித்தார்.

முதுகு தெரிவதால் ஆட்களை உறுதிப்படுத்துவது சிரமமாம்: இராணுவப் பேச்சாளர் சொல்கிறார்

மார்ச் 7 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட இராணுவத்தினர் இரும்பு கம்பிகள் மற்றும் கொட்டன்களை வைத்திருந்தார்களா என்பதை அறிய இலங்கை இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

இரும்புக் கம்பிகள் மற்றும் மரக் கொட்டன்களுடன் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

புகைப்படத்தின் மூலத்தை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தினர் பயன்படுத்தப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவரது கருத்துப்படி, இராணுவத்தினர் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்களை சமாளிக்க பொலிஸ் கலகக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை முன் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் கணியில் ஈடுபடவில்லை என பிரிகேடியர் ரவி ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் முதுகைக் காட்டும் புகைப்படமே இருப்பதால், அன்றைய தினம் கடமையில் இருந்த அராணுவத்தினர் இரும்பு கம்பிகள் மற்றும் கொட்டன்களுடன் இருந்தார்களா என்பதை சரிபார்க்க முடியாது என்றார்.

புகைப்படம் அண்மையில் எடுக்கப்பட்டதா அல்லது பழைய சம்பவத்தில் எடுக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த நீண்ட காலம் தேவைப்படும் எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆயுதம் தாங்கிய படையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழில் கைது

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த வேளை, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இராணுவத்தினரை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி , இராணுவத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

அது தொடர்பில் இராணுவத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , கோப்பாய் மற்றும் நீர்வேலி பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

இந்தியாவுடனான இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம்

இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 7ஆவது ஆண்டு இந்தியா-இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளும் தங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்தன.

இதன்போதே, இருதரப்பு பயிற்சிகளை மேம்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இரு தரப்பு அனுபவம் மற்றும் திறன்களை முழுமையாகப் பகிர்ந்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஆஜர்ப்படுத்த அல்லது காரணம் கூற நீதிமன்றம் உத்தரவு

ஆட்கொணாவு மனு மீதான கட்டளை இராணுவத்தினருக்கு எதிரானதாகவுள்ளமை மிகப்பெரிய வெற்றி எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஆஜர்ப்படுத்தவும் அல்லது காரணம் கூறவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேல் தெரிவித்தார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை  சசிதரன்  (எழிலன்), உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் (கெலம்பஸ்) ஆகியோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு  நேற்று (வியாழக்கிழமை) வழங்கப்பட்டது.

அதன் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஆட்கொணர்வு மனுக்கள் 3 மீதான தீர்ப்புகள்   வழங்கப்பட்டன. போரின் இறுதியில் இராணுவத்திடம் சரணடைந்த குடும்பத்தினர் சார்பில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்ற நீதிவானால் வழங்கப்பட்டது.

இதன் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்திடம் சரணடைந்தமைக்கான சான்றுகள் இருப்பதில் மன்று திருப்தியடைந்து அவர் இராணுவத்தினரின் வசம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் என்ற தொனியில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் அல்லது அப்படி முடியாது போனால் அதற்கான காரணங்களை விளக்கவும் எதிர்வரும் மாதம் 22 ஆம் திகதி வழக்குகள் திகதியிடப்பட்டுள்ளன.

அத்துடன் ஆட்கொணர்வு மனுமீதான கட்டளை இலங்கை இராணுவத்தினருக்கு எதிரானதாக ஆக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி. ஏனெனில் 2009 ஆம் ஆண்ட தொடக்கம் தங்களுடைய உறவினர்களை தேடி வந்த பயணம் 2013 இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 9 வருடங்களுக்க பின்னர் பூரணமாக நிறைவடைந்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினர் இதற்கான காரணத்தினை சொல்லித்தான் ஆகவேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் அவர்களை சார்ந்தது. இதுவரை காலமும் ஏதோ காரணங்களை சொல்லிக்கொண்டிருந்தவர்களிடம் அதற்கான பொறுப்பை இந்த நீதிமன்றம் கேட்கின்றது. அதை சொல்லித்தான் ஆகவேண்டும். நீதிமன்றத்தின் மூலம் எமக்கு கிடைத்த ஒரு வெற்றி மற்றும் நிவாரணமாகவே இதனை கருதவேண்டியுள்ளது என்றார். .

அத்துடன் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன, எனவே, இனிமேலாவது காணால் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மட்டுமல்ல மேலும் பல விடயங்கள் தொடுர்பாக பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

இலங்கை இராணுவத்தை 2030 இனுள் 100,000 ஆக குறைக்க திட்டம்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிடுகின்றது.

தற்போது 200783 ஆக காணப்படும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 2024 இல் 135,000 ஆகக்குறைப்பதற்கு எண்ணியுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2030 இல் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒருஇலட்சமாக குறைக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரெமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தேவைகளிற்கு ஏற்ப எதிர்கொள்ளக்கூடிய பாதுகாப்பு சவால்களிற்கு தீர்வை காண்பதற்காக சிறந்ததிறன் உள்ள இராணுவத்தை உருவாக்கும் நோக்கம் குறித்தும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized