காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஆஜர்ப்படுத்த அல்லது காரணம் கூற நீதிமன்றம் உத்தரவு

ஆட்கொணாவு மனு மீதான கட்டளை இராணுவத்தினருக்கு எதிரானதாகவுள்ளமை மிகப்பெரிய வெற்றி எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஆஜர்ப்படுத்தவும் அல்லது காரணம் கூறவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேல் தெரிவித்தார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை  சசிதரன்  (எழிலன்), உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் (கெலம்பஸ்) ஆகியோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு  நேற்று (வியாழக்கிழமை) வழங்கப்பட்டது.

அதன் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஆட்கொணர்வு மனுக்கள் 3 மீதான தீர்ப்புகள்   வழங்கப்பட்டன. போரின் இறுதியில் இராணுவத்திடம் சரணடைந்த குடும்பத்தினர் சார்பில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்ற நீதிவானால் வழங்கப்பட்டது.

இதன் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்திடம் சரணடைந்தமைக்கான சான்றுகள் இருப்பதில் மன்று திருப்தியடைந்து அவர் இராணுவத்தினரின் வசம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் என்ற தொனியில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் அல்லது அப்படி முடியாது போனால் அதற்கான காரணங்களை விளக்கவும் எதிர்வரும் மாதம் 22 ஆம் திகதி வழக்குகள் திகதியிடப்பட்டுள்ளன.

அத்துடன் ஆட்கொணர்வு மனுமீதான கட்டளை இலங்கை இராணுவத்தினருக்கு எதிரானதாக ஆக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி. ஏனெனில் 2009 ஆம் ஆண்ட தொடக்கம் தங்களுடைய உறவினர்களை தேடி வந்த பயணம் 2013 இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 9 வருடங்களுக்க பின்னர் பூரணமாக நிறைவடைந்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினர் இதற்கான காரணத்தினை சொல்லித்தான் ஆகவேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் அவர்களை சார்ந்தது. இதுவரை காலமும் ஏதோ காரணங்களை சொல்லிக்கொண்டிருந்தவர்களிடம் அதற்கான பொறுப்பை இந்த நீதிமன்றம் கேட்கின்றது. அதை சொல்லித்தான் ஆகவேண்டும். நீதிமன்றத்தின் மூலம் எமக்கு கிடைத்த ஒரு வெற்றி மற்றும் நிவாரணமாகவே இதனை கருதவேண்டியுள்ளது என்றார். .

அத்துடன் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன, எனவே, இனிமேலாவது காணால் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மட்டுமல்ல மேலும் பல விடயங்கள் தொடுர்பாக பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.