இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துகின்றது – சர்வதேச மன்னிப்புச்சபை கவலை

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

முகமட் அஸ்வர் முகமட் அனாஸ் முகமட் ஹபீர் ஜபீர் முகமட் சித்தீக் இராவுத்தர் மரீக்கார் ஆகிய நால்வரும் இலங்கை பொலிஸாரினால் மே 18ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனசர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

நாங்கள் முன்னர் கரிசனை வெளியிட்டுள்ளபடி பயங்கரவாத தடைச்சட்டம் கண்மூடித்தனமான கைதுகளிற்கும் நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கும் துணைபோகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் காலத்திற்கு காலம் ஏதேனும் நியாயமான அல்லது உரிய செயல்முறை பாதுகாப்பின்றி சிறுபான்மையினத்தவர்களை இலக்குவைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை சித்திரவதைகள் போன்றவற்றின் மூலம் பலவந்தமாக வாக்குமூலம் பெறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவானிற்கு வழங்கிய தகவல்களின் படி அதிகாரிகள் மேலும் நால்வரிடம் வாக்குமூலங்களை பெறவுள்ளனர் அவர்கள் தாங்களும் கைதுசெய்யப்படலாம் என அச்சம்கொண்டுள்ளனர் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அரசாங்கம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவேளை இந்த விடயங்கள் கவலையை ஏற்படுத்துகி;ன்றன என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கான வரைவிலக்கணத்தை மேலும் விஸ்தரிக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்இவலுவான ஆதாரங்கள் இருந்தால் நியாயமான விசாரணை தரங்களை பயன்படுத்தி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குற்றத்திற்காக அவர்களிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை உடனடியாகவும் பாரபட்சமின்றியும் சர்வதேச மனித உரிமைகள்தரநிலைகளிற்கு இணங்க முன்னெடுக்கவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கை அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளால் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது – சர்வதேச மன்னிப்புச் சபை

கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தையும், எதிர்ப்புப்போராட்டங்களையும், கேள்வி எழுப்புதலையும் சகித்துக்கொள்ளமுடியாத அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளால் இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்கான இடைவெளி வெகுவாக சுருக்கமடைந்துள்ளது என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரண தெரிவித்துள்ளார்.

உலக பத்திரிகை சுதந்திர தினமான புதன்கிழமை (03) இலங்கையில் ஊடக சுதந்திரம் எவ்வாறான நிலையில் உள்ளது என்பது குறித்தும், அண்மையகாலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் தொடர்பிலும் கேசரியிடம் கருத்து வெளியிடுகையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபையின் செயற்பாட்டாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தையும், எதிர்ப்புப்போராட்டங்களையும், விமர்சனங்களையும், கேள்வி எழுப்புதலையும் சகித்துக்கொள்ளமுடியாத அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளால் அண்மையகாலங்களில் ஊடக சுதந்திரத்துக்கான இடைவெளி என்பது மிகவும் சுருக்கமடைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ‘ஊடகங்களை அமைதிப்படுத்துவதற்காக சட்டங்களை முறைகேடாகவும், ஓர் ஆயுதமாகவும் பயன்படுத்துவது வழமையான விடயமாக மாறியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் சிறுபான்மையின ஊடகவியலாளர்கள் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றும் த்யாகி ருவன்பத்திரண குறிப்பிட்டார்.

மேலும் தகவல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும், மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கும் ஊடக சுதந்திரம் என்பது இன்றியமையாததாகும் என்று வலியுறுத்திய அவர், ‘ஊடகவியல் ஓர் குற்றமல்ல’ என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பினை வெளியிட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் உரிமைகளை முக்கியமானவையாக பெறுமதிமிக்கவையாக பைடன் நிர்வாகம் கருதினால் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு பைடன் நிர்வாகம் தெளிவான செய்தியை தெரிவிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மனித உரிமையின் அனைத்து அளவுகோல்களிலும் தோல்வியடைந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் உரிமைகள் மிக முக்கியமானவை என பைடன் நிர்வாகம் கருதினால் இந்த சட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்படவேண்டும் அல்லது முற்றாக கைவிடப்படவேண்டும் என்ற செய்தியை ஜனாதிபதி ரணில்விக்கிரமசி;ங்க அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு தசாப்தகாலமாக சிறுபான்மையினத்தவர்களையும் தன்னை விமர்சிப்பவர்களையும் தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து பைடன் நிர்வாகமும் அமெரிக்க காங்கிரசும் அமைதியாகயிருந்தால் அது மாற்றுநிலைப்பாடுடையவர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திறனை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ள நாஸ் பல தசாப்தகாலங்களாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல்கொடுத்துவந்துள்ள இலங்கையின் சிவில் சமூகத்தை அவமதிக்கும் செயலே உத்தேச சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அல்லது மோசமான சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் அதிகாரிகள் உத்தேச சட்டத்தை கொண்டுவரவில்லை மாறாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்குவைத்து அவர்களை மௌனமாக்கும் நோக்கத்துடனேயே இந்த உத்தேச சட்டம் கொண்டுவரப்படுகின்றது எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவி குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை பிரதிநிதிகள் இன்று ஆராய்வு

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி குறித்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் இன்று சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர்.

இலங்கைக்கு எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணயநிதியம் இணங்கியது என்பது குறித்து அறிந்துகொள்வதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது சர்வதேச மன்னிப்புச்சபையின் இலக்குகளை தெளிவுபடுத்தும் அதேவேளை இலங்கை அரசாங்கத்துடனான சர்வதேச நாணயநிதியத்தின் இணக்கப்பாடு குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் சிறந்த விதத்தில் அறிந்துகொள்ள விரும்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்;ளார்.

நெருக்கடியான தருணங்களில் சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து உதவிகளை பெற்ற நாடுகள் மனித உரிமைகளை பாதுகாக்கும் விதம் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை எப்போதும் கரிசனை வெளியிட்டு வந்துள்ளது என தெரிவித்துள்ள யாமினி மிஸ்ரா இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார சமூக அரசியல் உரிமைகள் உட்பட மனித உரிமைகளிற்கு முன்னுரிமை வழங்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறான உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றாலும் அவை சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கீழ் உத்தரவாதம் செய்யப்பட்ட பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவதாக காணப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்பாட்டில் இலங்கை மக்களிற்கான தனது நலன்புரிசேவைகளை குறைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படக்கூடாது என தெரிவித்துள்ள யாமினி மிஸ்ரா கடன் வழங்கிய அனைவரும் மனித உரிமை கடப்பாட்டினை பின்பற்றவேண்டும்,அனைத்து செயற்பாடுகளும் வெளிப்படை தன்மை மிக்கவையாகவும் பொதுமக்களிற்கு தெரியப்படுத்தப்படுபவையாகவும் காணப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களின் உரிமைகளை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் நாடுகளில் இலங்கை ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை

மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார்.

எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிப்ரஸ் முச்சென் கூறியுள்ளார்.

ஜி 20 நாடுகள் இலங்கைக்கு உதவும் வாய்ப்பை தவறவிட்டுள்ளன – சர்வதேச மன்னிப்புச் சபை

அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் உலகளாவிய ஆய்வாளரும் கொள்கை ஆலோசகருமான சன்ஹிதா அம்பாஸ்ற் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கையின் 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இலங்கையை இக்கடன்நெருக்கடியிலிருந்து விடுவிப்பது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவிய பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் சவால்கள் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இருப்பினும் இதன்போது கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாடொன்றுக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக அக்கூட்டத்தின் இறுதி அறிக்கையில் இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண்பது குறித்து வெறுமனே மேம்போக்காக மாத்திரமே அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வறிக்கையானது உலகளாவிய ரீதியில் நாடுகள் முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதுடன்,  இலங்கையின் கடன் நிலைவரம் தொடர்பில் உடனடித்தீர்வொன்றைக் கண்டறிவதற்கான அவசியத்தை ஏற்றுக்கொண்டிருப்பினும், அதனை முன்னிறுத்தி செயற்திறன்மிக்க திட்டங்களோ அல்லது நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படவில்லை.

ஜி-20 அமைப்பானது சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்களையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்தரப்புக் கடன்வழங்கல் கட்டமைப்புக்களில் அங்கம்வகிக்கும் ஆதிக்கம் மிகுந்த நாடுகளையும் உள்ளடக்கியுள்ளது.

எனவே இவ்வமைப்பானது செயற்திறன்மிக்கவகையில் ஒருங்கிணையுமேயானால், அதனூடாக இலங்கைக்கு அவசியமான கடன்சலுகையை வழங்கவும், நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதுகாத்து வலுப்படுத்தவும் முடியும்.

ஏனெனில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது நாட்டுமக்கள்மீது இன்னமும் மிகமோசமான தாக்கங்களை ஏற்படுத்திவருகின்றது. உயர்வான பணவீக்கம், மட்டுப்படுத்தப்பட்டளவிலான சமூகப்பாதுகாப்பு, உணவு மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல்கள் என்பன மக்களின் வாழ்க்கைத்தரத்திலும், அவர்களின் உரிமைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கையின் கடன்நெருக்கடியானது மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் இயலுமையைப் பாதித்துள்ளது.

எனவே 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்படும் தாக்கத்தை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு இலங்கையை இக்கடன்நெருக்கடியிலிருந்து விடுவிப்பது இன்றியமையாததாகும்.

அதேவேளை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதை முன்னிறுத்தி சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலாக வெவ்வேறு தரப்புக்களுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாகவும், பொறுப்புக் கூறத்தக்கவையாகவும் அமைவதென்பது இவ்வாறானதொரு நெருக்கடி மீண்டும் உருவாவதைத் தவிர்ப்பதற்கு இன்றியமையாததாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையைக் கண்டறிவதற்கான புதிய பொறிமுறை முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் – சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளக நீதிப்பொறிமுறைகள் தற்போது அவசியமற்றவையாக மாறியிருப்பதுடன் அவை பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை இழந்திருக்கின்றன.

எனவே பொறுப்புக்கூறல் சார்ந்த பொறிமுறைகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்துவதுடன் உண்மையைக் கண்டறிவதற்கான புதிய பொறிமுறையானது நாடளாவிய ரீதியிலான விரிவான கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உபகட்டமைப்பான சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பில் மீளாய்வு செய்யும் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானது.

அதன்படி இலங்கை தொடர்பான மீளாய்வு இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மீளாய்வுக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி மனித உரிமைகள் அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை தொடர்பான தமது அறிக்கைகளைச் சமர்த்துள்ளன.

அந்தவகையில் ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபை மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.

மன்னிப்புச்சபையின் அறிக்கையில் அமைதிப்போராட்டங்கள் மீதான அடக்குமுறைகள், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாடு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமை ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அவைகுறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கடந்த 2022 பெப்ரவரி மாதம் முதல் இலங்கை மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அப்போராட்டங்களை இராணுவமயப்படுத்தப்பட்ட முறைமையின் ஊடாக அரசாங்கம் எவ்வாறு கையாண்டது என்பதையும், சில போராட்டங்களுக்கு எதிராக எவ்வாறு அநாவசியமானதும் மிகையானதுமான பாதுகாப்புப்படையினர் பயன்படுத்தப்பட்டனர் என்பதையும் நாம் ஆவணப்படுத்தியுள்ளோம்.

இருப்பினும் இச்சம்பவங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் தற்போதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இவ்வனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அமைதிப்போராட்டக்காரர்களைப் பாதுகாப்பதற்கும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கு இடமளிப்பதற்கும் அதிகாரிகள் தவறியிருக்கின்றார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு குறைந்தபட்சம் 3 சந்தர்ப்பங்களில் நாட்டில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டதுடன் உரியவாறான செயன்முறைகள் மற்றும் நீதிமன்ற மேற்பார்வையின்றி நபர்களைக் கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்குமான மட்டுமீறிய அதிகாரங்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. அதன்படி அதிகாரிகளால் கடத்தல் பாணியிலான கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் 2022 ஓகஸ்ட் மாதம் போராட்டங்களுக்குத் தலைமைதாங்கிய இரு மாணவத்தலைவர்களைப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைப்பதற்கான உத்தரவு ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எவ்வித அடிப்படைகளும் அற்றவையாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் போராட்டங்கள்மீதான அடக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருமாறும், அமைதியான முறையில் ஒன்றகூடுவதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அடுத்ததாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதாக இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் உத்தரவாதமளித்திருப்பினும், அச்சட்டம் இன்னமும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும், ‘பயங்கரவாதம்’ என்பதற்கான உரிய வரைவிலக்கணம் இன்மை, நீண்டகால தடுப்புக்காவலில் வைக்கப்படல் உள்ளடங்கலாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்படும் முக்கிய குறைபாடுகள் அத்திருத்தங்களின் ஊடாக நிவர்த்திசெய்யப்படவில்லை.

இந்நிலையில் பயங்கரவாதத்தடைச்சட்டமானது தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் ஊடாகப் பதிலீடு செய்யப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பயங்கரவாதத்தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கும் அதேவேளை, புதிதாகக் கொண்டுவரப்படக்கூடிய எந்தவொரு சட்டமும் சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

மூன்றாவதாக பிரகீத் எக்னெலிகொட வழக்கு, கடற்படையினரால் 11 பேர் கடத்தப்பட்ட வழக்கு, திருகோணமலை 5 மாணவர்கள் வழக்கு, ஜோசப் பரராஜசிங்கம் வழக்கு, லசந்த விக்ரமதுங்க வழக்கு உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் வழக்கு விசாரணைகள் முடக்கப்படுவது அல்லது தாமதிக்கப்படுவதானது தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு மேலோங்குவதற்கு வழிவகுக்கும்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளக நீதிப்பொறிமு;றைகள் தற்போது அவசியமற்றவையாக மாறியிருப்பதுடன் அவை பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை இழந்திருக்கின்றன. எனவே பொறுப்புக்கூறல் சார்ந்த பொறிமுறைகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை உண்மையைக் கண்டறியும் புதிய பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துமேயானால், அது நாடளாவிய ரீதியிலான கலந்துரையாடல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவேண்டும் என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

தெற்காசியாவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான நிகழ்நிலை அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கை உள்ளடங்கலாக தெற்காசியப்பிராந்தியத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களை உள்ளடக்கிய நிகழ்நிலை அருங்காட்சியகமொன்றை உருவாக்குவதை முன்னிறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை செயற்பட்டுவருகின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்கு முன்னரான இனக்கலவரங்களின்போதும் பெருமளவானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்கள் மற்றும் உள்நாட்டில் நிறுவப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், நீதியை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்றுடன் 2204 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே தெற்காசியப்பிராந்திய நாடுகளில் இவ்விவகாரம் தொடர்பில் பணியாற்றிவரும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து, இயலுமானவரையில் தெற்காசியப்பிராந்தியத்தில் இடம்பெற்ற அனைத்து வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களையும் உள்ளடக்கிய நிகழ்நிலை அருங்காட்சியகமொன்றை உருவாக்குவதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை திட்டமிட்டுள்ளது.

இச்செயற்திட்டத்திற்கான ஒத்துழைப்பை வழங்க முன்வருமாறு இலங்கையைத் தளமாகக்கொண்டியங்கும் சில அரச சார்பற்ற அமைப்புக்களிடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தின் போதான மனித உரிமை மீறல்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைக்கு மன்னிப்புச்சபை கோரிக்கை

இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள்உயிரிழப்பு குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள்இடம்பெறவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக பலத்தை கடைப்பிடிக்கும் போது நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமையை பின்பற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பில் பொலிஸார் மேற்கொண்ட சட்டவிரோத கண்ணீர்புகை பிரயோகம் நீர்த்தாரை பிரயோகம் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி குறித்து பதிலளித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை தொடர்பிலான பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரிந்திரினி கொரியா இலங்கையில் பல மாத ஆர்ப்பாட்டங்களிற்கு பின்னரும் இலங்கை பொலிஸாருக்கு அமைதியான ஒன்றுகூடலிற்கான உரிமையை  உறுதி செய்யவேண்டிய அவர்களது கடமை குறித்தும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும்போது கட்டுப்பாட்டை பின்பற்றவேண்டியது குறித்தும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தவேண்டியது கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் நடவடிக்கைகள் கடந்த பல மாதங்களாக பல உயிர்களை பலியெடுத்துள்ளன இன்றும் அது இடம்பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள்அங்கிருந்து வெளியேற முடியாத தப்பமுடியாத நிலை காணப்படுவதையும்வீடியோ காண்பித்துள்ளது,அவ்வாறான சூழ்நிலையிலும் பொலிஸார் சர்வதேச மனிதஉரிமை சட்டம்  பலத்தை பயன்படுத்துவதற்கான தராதரங்கள்ஆகியவற்றை மீறி நீர்த்தாரை பிரயோகம் கண்ணீர்புகைபிரயோகம்ஆகியவற்றை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களிற்கு எதிரான பரந்துபட்ட வன்முறைகள்இல்லாத போது கண்மூடித்தனமான விளைவுகளை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் மன்னிப்புச்சபையின் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை தொடர்பிலான பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரிந்திரினி கொரியா தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் சூழமைவில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள்உயிரிழப்பு குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள்இடம்பெறவேண்டும் இவற்றிற்கு காரணமானவர்கள் நீதியின்முன்நிறுத்தப்படவேண்டும் எனவும்  சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மீதான முடக்கம் சிவில் சமூகங்களின் சுதந்திரத்தை பாதித்துள்ளது – சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கை அரசாங்கம் கடந்த இருவருடகாலமாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை மிகையாக முடக்கிவந்திருப்பதுடன் அதன்விளைவாக சிவில் சமூகங்களின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு சமூகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன இன்றியமையாதவையாகும்.

அவற்றுக்கு மதிப்பளிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் அதேவேளை, அவை உரியவாறு பூர்த்திசெய்யப்படவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கருத்துச்சுதந்திரத்திற்கான இடைவெளி சுருக்கமடைந்து வருகின்றமைக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துவரும் சர்வதேச மன்னிப்புச்சபை, இவ்விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை அரசாங்கம் பொதுமக்களின் குரலை அடக்கும் வகையில் தொடர்ச்சியாகவும் வலுவாகவும் ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்துவருகின்றது.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு தற்போது அமைதிப்போராட்டங்களை அடக்குவதற்கும், எதிர்ப்புக்குரல்களை ஒடுக்குவதற்குமான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முழுமையாக இல்லாதொழிக்கவேண்டியது அவசியமாகும்.

உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு சமூகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன இன்றியமையாதவையாகும். அவற்றுக்கு மதிப்பளிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, அவை பூர்த்திசெய்யப்படவேண்டும்.

இலங்கை அரசாங்கம் கடந்த இருவருடகாலமாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை மிகையாக முடக்கிவந்திருப்பதுடன் அதன்விளைவாக சிவில் சமூகங்களின் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுபான்மையின சமூகத்தைச்சேர்ந்தவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியமைக்காக மாத்திரம் அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாக் கப்பட்டிருப்பதுடன் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அரசாங்கத்திற்கு அதிருப்தியளிக்கக்கூடியவகையில் தமது பணியை முன்னெடுத்த ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் என்போர் இலக்குவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அதுமாத்திரமன்றி மாணவ செயற்பாட்டாளர்களும் தொழிற்சங்கவாதிகளும்கூட இலக்குவைக்கப்பட்டிருக்கின்றார்கள். கருத்துக்களை வெளியிடல் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை மட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும், அதனுடன் நெருங்கிய கட்டமைப்புக்களும் அவதூறு பிரசாரங்கள், கடத்தல் பாணியிலான கைதுகள், ஊடக நிறுவனங்களில் தேடுதல் நடவடிக்கைகள், பயணத்தடைகள், இடமாற்றங்கள் மற்றும் தன்னிச்சையான கைதுகள், சித்திரவதைகள் போன்ற பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளன.

மேலும் இலங்கை ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களை ‘பயங்கரவாதிகள்’ என்றும், ‘பாசிஸவாதிகள்’ என்றும் அழைத்ததன் மூலம் போராட்ட இயக்கங்களை மிகமோசமானதாகச் சித்தரிக்க முற்பட்டனர்.

அத்தோடு போராட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளடங்கலாகப் போராட்டக்காரர்கள் மூவருக்கு எதிராக அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பிரயோகித்தது. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்ச்சியான வன்முறைகளுக்கு உள்ளாவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டமானது கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து பெரும் எண்ணிக்கையான தன்னிச்சையான தடுத்துவைப்புக்கள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வழிகோலியுள்ளது.

அச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதாக அரசாங்கம் பலமுறை வாக்குறுதியளித்துள்ள போதிலும், தற்போதுவரை அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

அதுமாத்திரமன்றி ஒருவரைத் தன்னிச்சையாகக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்குமான ஆயுதமாகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருகின்றது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.