உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் ஐ.நா தலையிட வேண்டும் – இலங்கை கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வெளிப்படையான விசாரணைக்கான இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முயற்சிகளிற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆதரவளிக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் ஜெனீவாவில் மனித உரிமைகளிற்கான ஐக்கிய நாடுகளின் பிரதி ஆணையாளர் நடா அல் நசீவை சந்தித்தவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஐநாவின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் கர்தினாலுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சமில்பெரேராவும் கலந்துகொண்டுள்ளார்.

நீதிக்கான எங்களின் தொடர்ச்சியான வேண்டுகோள்கள் குறித்து ரணில்ராஜபக்ச அரசாங்கம் அலட்சியமாகயிருப்பதால் ஐநா தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தின் குற்றச்சாட்டினை தொடர்ந்து சர்வதேசரீதியில் கண்காணிக்கப்பட்ட முழுமையான விசாரணைக்கு கத்தோலிக்க திருச்சபை விடுத்த வேண்டுகோளிற்கு அரசாங்கம் இன்னமும் பதிலளிக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.