சகல தரப்பினரின் ஒத்துழைப்பின்றி தனித்து தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணைக்குழுத் தலைவர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மாத்திரமல்ல; எந்தவொரு தேர்தலையும் தேர்தல் ஆணைக்குழுவினால் தனித்து நடத்த முடியாது. அரசியலமைப்பு ரீதியில் தேர்தலுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும். எனவே, சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எம் மீது மாத்திரம் குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேர்தல் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன எம்மை அழைத்து பேசவுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவரது அழைப்பினை ஏற்று நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கும் எந்த சந்தர்ப்பத்திலும் ஆணைக்குழு தயாராகவே உள்ளதாகவும் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இரண்டு சந்தர்ப்பங்களில் தினம் தீர்மானிக்கப்பட்ட போதிலும், நிதியின்மை காரணமாக திட்டமிட்டபடி, தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் தேவைக்காகவே ஆணைக்குழு இவ்வாறு செயற்படுகின்றது என எதிர்க்கட்சிகள் விசனம் வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் ஆணைக்குழுவை அழைத்து பேசவுள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து வினவியபோதே ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் ஆணைக்குழு என்பது அரசியலமைப்பு ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டதாகும். ஏனைய நிறுவனங்களும் அவ்வாறே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசியலமைப்பின் அடிப்படையில் தேர்தலுடன் தொடர்புடைய சகல நிறுவனங்களும், திணைக்களங்களும் ஒத்துழைத்தாலன்றி தனித்து எம்மால் எந்தவொரு தேர்தலையும் நடத்த முடியாது.

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் பிரதான சிக்கல் நிதியின்மையாகும்.

உயர் நீதிமன்ற உத்தரவின் பின்னரும் நிதி அமைச்சினால் தேர்தலுக்கான நிதி விடுவிக்கப்படாமலேயே உள்ளது. அவ்வாறிருக்கையில் எவ்வாறு எம்மால் தேர்தலை நடத்த முடியும்? அரசாங்கத்துக்கு நிதி நெருக்கடிகள் காணப்பட்டால் வெளிதரப்பினரிடமிருந்து நிதியை பெற்று தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பில் இல்லை.

வெளிதரப்பினரிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கான சட்ட மூலமொன்றோ அல்லது அமைச்சரவை யோசனையொன்றோ முன்வைக்கப்பட்டால் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். ஆனால், நாட்டில் அவ்வாறான ஏற்பாடுகள் இல்லை. அத்தோடு இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டுமெனில், அதற்கான நிதியையும் நிதி அமைச்சு அல்லது திறைசேரியிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், இதில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்துழைப்பும் எமக்கு கிடைக்கவில்லை. எனவே, தனியார் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் நிதி நெருக்கடி தாக்கம் செலுத்துகின்றது. இவை தொடர்பில் சிந்திக்காமல் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஆணைக்குழு மீது குற்றஞ்சுமத்துவது ஏற்புடையதல்ல. உரிய காலத்தில் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆணைக்குழு ஸ்திரமாகவுள்ளது என்றார்.

குழுக்களை நியமிக்காமல் தேர்தலை முறையாக நடத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான பல்வேறு குழுக்களை நியமித்து ஜனநாயக மக்கள் பிரதிநிதித்துவ சபைகளை நிறைவேற்று அதிகாரம் கொண்டு செல்லும் நிலை காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

அதன்பிரகாரம் மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையத்தின் பிரதம செயற்பாட்டாளர் டி.எம். திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் குழுக்களை நியமிக்காமல் தேர்தலை முறையாக நடத்துவதற்கு தேவையான சூழலை தயாரிக்க வேண்டும் என ஐனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் விவகாரங்களை ஆராய்வதற்காக பிரதமர் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆளுனர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபைகளின் விவகாரங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தலைமையில் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிட்டடத்தக்கது.

Posted in Uncategorized

சுயாதீனத்தன்மையை சீர்குலைக்கும் வகையிலான தலையீடுகளை நிறுத்த ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

நீதிமன்றம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் அதில் தலையீடுகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும், உள்ளூராட்சிமன்றத்தேர்தல்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்குமாறும் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் 83 பேர் ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் பவானி பொன்சேகா, ஒஸ்டின் பெர்னாண்டோ, ரணிதா ஞானராஜா, ஜயம்பதி விக்ரமரத்ன, லயனல் போபகே, பாக்கியசோதி சரவணமுத்து, ஜெஹான் பெரேரா, தீபிகா உடகம உள்ளடங்கலாக 83 சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உயர்நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறிவிட்டது என்ற பொய்யான காரணியின் அடிப்படையில் நீதிமன்றக்கட்டமைப்பை அச்சுறுத்துவதற்கு ஜனாதிபதியினாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலராலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் நாம் மிகுந்த அதிருப்தியடைகின்றோம்.

உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களுக்கான நிதியை விடுவிக்காமல் இருக்கும் செயற்பாட்டைத் தடுக்கும் வகையில் சட்டமா அதிபர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதியரசர்களால் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்தே இத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

எமது நாட்டின் ஜனநாயக செயன்முறையைப் புறந்தள்ளும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேபோன்று இவ்விடயம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் தலையீடு செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் சட்டத்தின் ஆட்சியிலும், நாட்டுமக்களின் உரிமையிலும், ஜனநாயகத்திலும் ஏற்படுத்தப்படும் இடையூறாகவே அமையும் என்று சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அதேவேளை ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய செயற்பாடுகள், சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் உரிய தினத்தில் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத்தேர்தலை நடத்தும் திட்டத்தைக் குழப்பும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின்மீது பிரயோகிக்கப்பட்ட தொடர் அழுத்தங்கள் தோல்வியடைந்ததை அடுத்து, தற்போது அரசாங்கம் அதன் ‘தாக்குதல்களுக்காக’ நீதிமன்றத்தைத் தெரிவுசெய்திருக்கின்றது.

இது ஆபத்தான போக்கிலான அரசாங்கத்தின் செயற்பாட்டைக் காண்பிக்கின்றது. எந்தவொரு ஜனநாயக சூழலிலும் தமது அரசியல் நிலைப்பாடு மற்றும் தெரிவை மிகவும் அமைதியானதும், செயற்திறனானதுமான முறையில் வெளிப்படுத்துவதற்கு மக்கள் கொண்டிருக்கும் வாய்ப்பான தேர்தலின் ஊடாக அவர்களது குரல் ஒலிப்பதை எவ்வகையிலேனும் தடுக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது.

இவையனைத்தும் ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சியின்கீழ் இலங்கையின் ஜனநாயகம் மிகமோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதையே காண்பிக்கின்றது. எனவே நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மீண்டும் மிகமுக்கியமான விடயமாக மாறியிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் எவ்வித தாமதமுமின்றி உள்ளூராட்சிமன்றத்தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடமும், தேர்தலை நடாத்துவதற்குப் பொறுப்பான அனைத்துத்தரப்புக்களிடமும் வலியுறுத்துகின்றோம் என்று அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை மார்ச் 28, 29, 30, 31 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 3ஆம் திகதியும் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து கலந்துரையாடியுள்ள போதே இவ்வாறு தீமானிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 25 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு தினம் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

14 நாட்களுக்குள் கணக்கறிக்கையை சமர்ப்பிக்க தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகளுக்கு காலக்கெடு

2021 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகளை இன்று முதல் 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு வழங்காவிட்டால், அந்தந்த அரசியல் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்யவும் தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

இதேவேளை தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களை 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலை எதிர்வரும் 23 ஆம் திகதி நடத்துவதற்கு இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வாக்குசீட்டு அச்சிட பணம் கோரி அரச அச்சகம் மீண்டும் திறைசேரிக்கு கடிதம்

தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்காக பணம் வழங்குமாறு கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாக அரச அச்சகம் அறிவித்துள்ளது.

திறைசேரியின் நடவடிக்கை  பிரிவிற்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்தார்.

அந்த கடிதத்தின் பிரதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.

அச்சு நடவடிக்கைகளுக்கான பணத்தை பெற்றுத்தருமாறு கோரி இதற்கு முன்னர் நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய போதிலும், அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அரச அச்சகர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்துங்கள்: மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகள் கூட்டாக வலியுறுத்தல்!

உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகான தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் விபரம் வருமாறு-

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், பொதுமக்களின் துன்பங்களைக் குறைக்கவும், சமூக அமைதியின்மையைப் போக்க முறையான கொள்கைப் பொறிமுறையைத் தயாரிக்கவும். <br>

நாட்டில் நிலவும் கடுமையான, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரமற்ற தன்மையைப் போக்கி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மகா சங்கம் என்ற வகையில் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவ்வாறாயினும், பொருளாதாரச் சுருக்கம், பணவீக்கம், மோசமான அரசாங்க நிர்வாகம், தற்போதைய உயர் மின் கட்டணங்கள், தண்ணீர்க் கட்டணம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுப்படியாகாத அதிகரிப்பு போன்றவற்றால் எழுந்துள்ள சமூக அழுத்தத்தையும் ஜனாதிபதி அறிந்திருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.

வளர்ந்து வரும் பொருளாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும், மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் ஜனரஞ்சகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் அனைத்து தரப்பினரும் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் புரிந்து கொண்டு நாட்டை பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்துவதற்கு உழைக்க வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதற்காக கடந்த காலகட்டம் முழுவதிலும் தொடர்ச்சியான நடைமுறை நிலையான கொள்கைகளை முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். கட்சி அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் நலன் கருதி தேசிய கொள்கைகளின் அடிப்படையில் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மக்கள்தொகை வீழ்ச்சியுடன் ஏற்படும் சமூகச் சிதைவு மற்றும் அராஜகம் பற்றி இலக்கிய குடதந்த சூத்திரம் மற்றும் சக்கவட்டி சிஹானதா சூத்திரம் போன்ற பௌத்த சூத்திரங்களில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் பொதுமக்கள் மீது சுமத்தாமல், பொது நிதியை முறையாக நிர்வகிப்பது, ஊழல் மற்றும் பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது, மக்கள் பிரதிநிதிகள் அனுபவிக்கும் வரம்பற்ற சலுகைகளை அகற்றுவது போன்ற நடைமுறைத் தீர்வுகளின் மூலம் பொதுமக்களின் துன்பத்தைக் குறைக்க அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மேலும், உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது பொதுமக்களிடையே சற்று கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் மூலம் மக்களின் இறையாண்மையை உறுதிப்படுத்துவது என்பது ஜனநாயகத் தலைவராக அங்கீகரிக்கப்பட்ட உங்களுக்கும் நன்றாகத் தெரியும்.

எனவே, உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவது அரசின் பொறுப்பு.

‘நாட்டில் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக மக்கள் நடத்தும் போராட்டங்கள் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறுதியற்ற தன்மையை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படக்கூடாது.

மேலும், நாட்டின் சட்ட எல்லைகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை பொதுமக்களுக்கு இருக்க வேண்டும்.

எனவே, அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி, சட்டத்தின் மேலாதிக்கத்தைப் பெற்று மக்களின் வாழ்க்கையை படிப்படியாக மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம் போதுமானதா? என பரிசீலிக்க கோரிக்கை

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம் போதுமானதா என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலிக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்த நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேர்தல் முக்கியமா? மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் இலங்கைக்கு தற்போது அவசியம் – அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie Chung) தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

நிமல் புஞ்சிஹேவா மீண்டும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு விண்ணப்பம்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான விண்ணப்பம் அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டம் தொடர்பாக தாம் உள்ளிட்ட தற்போதைய ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட பல சட்டமூலங்களை நிறைவேற்றும் நடவடிக்கைக்காக குறித்த விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிமல் புஞ்சிஹேவா நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.

அத்துடன், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு மீண்டும் விண்ணப்பிக்குமாறு பல சிவில் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்திருந்தார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அங்கத்துவத்திற்காகவும் தாம் விண்ணப்பித்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டிருந்தார்.