மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் தலையிட முடியாது – நிதி இராஜாங்க அமைச்சர்

மத்திய வங்கியின் அதிகாரிகள் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்த முடியாது, தலையிடவும் முடியாது. ஒப்பந்தத்துக்கு அமைய மூன்று வருடத்துக்கு ஒருமுறை சம்பளம் அதிகரிக்கப்படுகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ‘நாடு வங்குரோத்து நிலையடைந்தமைக்கு மத்திய வங்கி பொறுப்புக் கூற வேண்டும் .நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் அதிகாரிகளின் சம்பளத்தை மாத்திரம் இலட்சக்கணத்தில் அதிகரித்துள்ளமை நியாயமானதா’ என கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளிக்கையில் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படுகிறது.ஒப்பந்தத்துக்கு அமைய மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்களின் சம்பளம் மூன்று வருடத்துக்கு ஒருமுறை அதிகரிக்கப்படுகிறது. ஆகவே இந்த சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்தவும் முடியாது, தலையிடவும் முடியாது. சம்பள அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை மத்திய வங்கியின் பரிபாலன சபையே எடுக்கும்.

மத்திய வங்கியில் பொருளாதார நிபுணர்கள் உயர் பதவிகளில் உள்ளதால் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. கூட்டு நிதியத்தின் ஊடாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. மத்திய வங்கியின் கணக்குகள் ஊடாகவே சம்பளம் வழங்கப்படுகிறது என்றார்.

டிஜிட்டல் கட்டண முறை (UPI) மூலம் இந்திய சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறையில் (UPI) QR குறியீட்டை பயன்படுத்தி ஒன்லைனில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

NPCI International Payments Limited மற்றும் இலங்கையில் LankaPay Pvt Ltd நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் 10,000 வணிக நிறுவனங்கள் தம்மை இந்த முறையில் பதிவு செய்துள்ளன.

மேலும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் தடையற்ற கொடுப்பனவு வசதிகளுக்காக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கையை 65,000 வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

UPI பணப்பரிமாற்ற முறையை ஒன்லைன் மூலம் அறிமுகம் செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்,

இது எங்களிற்கு மிகவும் முக்கியமான தருணம். இந்திய பிரதமர் மோடி அவர்களே இது உங்களிற்கு இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த தருணம். இராமர் கோயிலை திறந்துவைத்தமைக்காக நான் உங்களை பாராட்டவேண்டும்.

எங்கள் இரு நாடுகளிற்கும் இடையில் பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் தொடர்புகள் பிணைப்புகள் உள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் இருநாடுகளிற்கும் இடையில் பணப்பரிமாற்றம் இருந்து வந்துள்ளது. அதிஸ்டவசமாக அவ்வேளை மத்திய வங்கி என்ற ஒன்று இருக்கவில்லை.

இலங்கையின் உலர்வலயங்களின் கிராமங்களில் ஆயிரக்கணக்கான வருடங்களிற்கு முற்பட்ட – தென் இந்திய காலத்து நாணயங்கள் காணப்பட்டமை இலங்கை தென் இந்திய ஒத்துழைப்புகள் மிகவும் வலுவாக காணப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளன.

ஆகவே, நாங்கள் இன்று என்ன செய்கின்றோம் என்றால் அவற்றை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துகின்றோம்.

இலங்கைக்கு அதிகளவு இந்திய சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் நிலையேற்படும்போது எங்களின் அனைத்து கிராமங்களிலும் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை அதிகளவிற்கு பயன்படுத்தப்படும்.

“தமது இந்திய விஜயத்தின் “தொலைநோக்கு அறிக்கை”யின் பிரகாரம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறை, சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இதன்மூலம் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை தொடர்புகளை ஏற்படுத்தும் எனவும் இதனால் 400,000 வர்த்தகர்கள் பயனடைவார்கள்.

இந்திய வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தை நம்பிக்கைக்குரிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகவும் மொரீஷியஸுடனான ஒத்துழைப்பு புதிய தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சியை மேலும் உறுதிசெய்யும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்,

இந்தியாவும் மொறிசீயசும் வலுவான பொருளாதார கலாச்சார தொடர்புகளை கொண்டுள்ளன. இன்று நாங்கள் இந்த உறவுகளிற்கு மேலுமொரு புதிய பரிமாணத்தை வழங்குகின்றோம் என்றார்.

இதன்போது உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி,

ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும்முறையினால் இலங்கையிலும் மொறீசியசிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் நன்மையடைவார்கள்.

ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை காரணமாக இந்த இரு நாடுகளிலும் துரிதமாகவும் இலகுவாகவும் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடலாம் என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை உலகின் தென்பகுதி நாடுகள் மத்தியிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்துகின்றது. எங்கள் உறவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த பத்து வருடங்களில் சவாலான தருணங்களில் இந்தியா தனது அயல்நாடுகளில் எவ்வளவு தூரம் ஆதரவாக உள்ளது என்பதை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய பரிவர்த்தனை முறை

இந்தியாவின் யுனிஃபைட் இன்டர்ஃபேஸ் பேமெண்ட்ஸ் (Unified Interface Payments) என்ற யுபிஐ (UPI) தொழில்நுட்பம் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த பரிவர்த்தனை தொழில்நுட்பம் பெப்ரவரி 12ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் கையெழுத்திடும் நிகழ்வில் இரண்டு நாட்டு தலைவர்களும் இணையத்தின் ஊடாக இணைவார்கள் என்று தாம் நினைப்பதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இந்த தொழில்நுட்ப அறிமுகம் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்தித்த ஜப்பானிய நிதியமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நிதியமைச்சர் சுசூகி (H.E. Mr. SUZUKI Shunichi) உள்ளிட்ட ஜப்பான் தூதுக் குழுவினர் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சின் செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் – கலாநிதி ஹர்ஷ டி சில்வா

நிதி அமைச்சின் செயலாளருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திரைக்கு பின்னால் நடக்கும் விடயங்கள் தொடர்பில் தேடிபார்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் கதைக்கும் போது நிதி அமைச்சின் செயலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. தனது குடும்பத்தினர் தொடர்பிலும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

விடுக்கப்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் அறிவிப்பதாக நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அச்சுறுத்தல்கள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளரே கூறுகிறார்.

பிறிதொருவர் குறிப்பிடவில்லை. ஆகவே திரைக்கு பின்னால் நடக்கும் விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்துகிறோம் என்றார்.

நிதி விடுவிப்பினை உறுதிப்படுத்தினால் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தல்

நிதி விடுவிப்பு குறித்து அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.

பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது நிதி விடுவிப்பு தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தியதாக நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிதி தொடர்பில் சாதகமான தீர்மானம் கிடைக்கப் பெற்றால் அதனை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஓரிரு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் எனவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியினால் தேர்தலை நடத்த முடியாது என்பது நாட்டில் வழக்கமாகிவிட்டால் ஜனநாயகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் தொடர்பில் மக்களின் நம்பிக்கை சிதைவடையும். நிதி இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என்ற நிலை தோற்றம் பெற்றால் அது தவறானதொரு நிலைக்கு எடுத்துக்காட்டாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நட்டத்தை ஏற்படுத்தும் அரச நிறுவனங்களை திறைசேரி பாதுகாக்காது

நட்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 52 அரச நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதாகவும், 13 நிறுவனங்கள் நட்டம் அடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நட்டத்தில் இயங்கும் 13 அரச நிறுவனங்களின் நட்டம் ஆயிரத்து 29 மில்லியன் ரூபாய் எனவும், இலாபம் ஈட்டும் 39 நிறுவனங்களின் இலாபம் 218 பில்லியன் ரூபாய் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் வருடாந்த இழப்பு 811 பில்லியன் ரூபாயிற்கும் அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலாபம் ஈட்டும் நிறுவனங்களால் திறைசேரிக்கு வரியாக 28 மில்லியன் ரூபாயே செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், திறைசேரியில் இருந்து பணம் ஒதுக்குவது என்பது இந்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பணத்தை இந்த நிறுவனங்களின் பராமரிப்புக்காக ஒதுக்குவது என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசாங்கம் மக்களுக்கு சுமையை ஏற்றி நிறுவனங்களை நடத்தாது, ஒழுங்குபடுத்தும் அதிகார சபையாகவே செயற்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கான நிதியை வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை – தேர்தல் ஆணைக்குழு

2023 உள்ளூராட்சி தேர்தலுக்கு நிதியளிப்பது தொடர்பாக நிதி அமைச்சிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகத்திடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் இந்த விடயம் தொடர்பாக இந்த வாரம் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உறுப்பினர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி கூடுவார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த உறுப்பினர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 23ஆம் திகதி அறிவித்திருந்தது.

கொழும்பில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சருக்கெதிராக நீதிமன்ற செல்லத் தயாராகும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் விடுவிக்கப்படாமை தொடர்பில், நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் சில தினங்களில் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திடம் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, நிதி விடுவிக்கப்படவில்லை என்பதுடன், அது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்திற்கும் நிதி அமைச்சிடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும் நிதியை விடுவிக்காதிருப்பது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சின் கீழ் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை

நிதி அமைச்சின் கீழ் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் உதவுவதற்காக, நிறுவன மறுசீரமைப்பு அலகு ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.

இதற்கமைய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் லிமிடெட், ஸ்ரீலங்கா டெலிகொம் பி.எல்.சி மற்றும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளன.

இந்தநிலையில் அரச நிறுவனங்களில் ஆழமான பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.