புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கு விளக்கமளிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தலைமையில் வெள்ளிக்கிழமை (01) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இதன்போது முன்வைத்துடன் அதுதொடர்பில் அவர்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில் நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்கள். சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைபு திணைக்களம், உயர் ஸ்தானிகர் காரியாலயம் மற்றும் தூதுவராலய காரியாலயங்களை பிரிதிநிதித்துவப்படுத்தி ராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த 13 ஆண்டுகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2,793 பேர் கைது

கடந்த 13 ஆண்டுகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2,793 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 2, 474 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதானவர்களில் 184 பேர் சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களில் 44 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 31 பேர் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களிலேயே இந்த தகவல் தெரியவந்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இனிவருங்காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், நல்லிணக்கத்தை முன்னிறுத்தி நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்கள் சுயாதீனமாகச் செயற்படும் அதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகாரசேவையின் பிரதி நிறைவேற்றுப்பணிப்பாளர் பயோலா பம்பலோனி ஆகியோரின் தலைமையில் கடந்த 9 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

அதனையடுத்து அக்கூட்டம் தொடர்பில் இருதரப்பினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை (16) வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டத்தின்போது நல்லிணக்கம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் பிரச்சினைகள், துறைசார் ஒத்துழைப்பு, சர்வதேசப் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக இருதரப்பு உறவுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், மிகமுக்கியமானதொரு தருணத்திலேயே கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பு இடம்பெற்றது.

இதனப்போது கடந்த சில வருடங்களாக சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டியிருப்பதன் அவசியம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இலங்கைத்தரப்பு விளக்கமளித்தது.

அதேவேளை இலங்கையின் ஜனநாயகக்கட்டமைப்புக்களின் மீண்டெழும் தன்மை குறித்தும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தமது பாராட்டை வெளியிட்டனர்.

மேலும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் குறித்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் கேள்விக்குப் பதிலளித்த இலங்கை அதிகாரிகள், இவ்விடயம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் முன்னிலையிலுள்ள வழக்குகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.

அடுத்ததாகப் பொருளாதார மீட்சியைப் பொறுத்தமட்டில், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எடுத்துரைத்த இலங்கை அதிகாரிகள், இவ்விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்புநாடுகளால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்குத் தமது நன்றியை வெளிப்படுத்தினர்.

அத்தோடு இலங்கை அரசாங்கம் நாணய, நிதி மற்றும் ஆட்சிநிர்வாக மறுசீரமைப்புக்களை ஏற்கனவே மேற்கொள்ள ஆரம்பித்திருப்பது குறித்தும், இம்மறுசீரமைப்புக்களின் விளைவாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

அதற்குத் துலங்கலை வெளிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களின் அவசியம் மற்றும் சுயாதீன கட்டமைப்புக்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியதுடன் தற்போது திட்டமிடப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் ஊழலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளமையைப் பாராட்டினர்.

அதேபோன்று ஜனநாயக நிர்வாகத்தை மேலும் விரிவுபடுத்தக்கூடிய அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் தொடர்பில் ஐரோப்பிய அதிகாரிகள் தமது வரவேற்பை வெளிப்படுத்தினர்.

அதுமாத்திரமன்றி ஆட்சிநிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டுக்குழுவினால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நினைவுறுத்திய ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், அக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

மேலும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலின்போது, அச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அதில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் நீதியமைச்சானது பொதுமக்களிடமிருந்தும், ஏனைய சம்பந்தப்பட்ட தரப்புக்களிடமிருந்தும் திருத்த யோசனைகளைக் கோரியிருப்பதாக இலங்கைப்பிரதிநிதிகள் மற்றைய தரப்புக்கு எடுத்துரைத்தனர்.

அதுமாத்திரமன்றி வெகுவிரைவில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யவிருக்கின்ற இச்சட்டமூலம் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக அமைந்திருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதனையடுத்துக் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கான இலங்கையின் கடப்பாடு குறித்து நினைவுபடுத்தியதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தவேண்டாம் எனவும் வலியுறுத்தினர்.

இதன்போது இலங்கையின் நீதித்துறைசார் மறுசீரமைப்புக்கள் மற்றும் நல்லிணக்க செயன்முறையில் தமது தொடர்ச்சியான ஆதரவை மீளுறுதிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், புதிதாக நிறுவப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, ஏற்கனவே இயங்கிவரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய அனைத்துக்கட்டமைப்புக்களும் சுயாதீனமாக செயற்படவேண்டியதன் அவசியத்தையும், பாதிக்கப்பட்ட தரப்பினருடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் முக்கியத்துவத்தையும் மீண்டும் சுட்டிக்காட்டினர்.

அடுத்ததாக இருதரப்பினருக்கும் இடையிலான வர்த்தகத்தொடர்புகளின் முக்கியத்துவம் குறித்து இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் அவதானம் செலுத்தினர்.

இதில் குறிப்பாக ஐரோப்பிய உற்பத்திகள் இலங்கையின் சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

அதேபோன்று இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டாளர்களின் கலந்துரையாடலை வெகுவிரைவில் இலங்கையில் நடாத்துவதற்கும் இருதரப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.

மேலும் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அடுத்த 10 வருடகாலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான புதிய வழிகாட்டல்களை முன்வைத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், 2020 – 2022 ஆம் ஆண்டு வரையான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு அறிக்கை எதிர்வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டனர்.

ஜி.எஸ்.பி. பிளஸ்ஸுக்கு மீள விண்ணப்பிக்க ஒத்துழைப்பு வழங்கத் தயார் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித்தலைவர் உத்தரவாதம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு மீள விண்ணப்பிக்கும் செயன்முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான ஜோஸப் பொரெல் தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர்மட்ட மாநாடு நேற்று சனிக்கிழமை (13) சுவீடனின் ஸ்ரொக்ஹோம் நகரில் நடைபெற்றது.

ஐரோப்பிய வெளிவிவகார செயற்பாட்டுப் பிரிவுடன் இணைந்து சுவீடனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தோ – பசுபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அதன்படி, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டார்.

அதேவேளை வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான ஜோஸப் பொரெலை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்தை முன்னிறுத்தி இதுவரையான காலமும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு வந்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கொவிட் – 19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதிலும், பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட உதவிகளை அமைச்சர் அலி சப்ரி இதன்போது நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் இலங்கையின் வலுவான வர்த்தகப் பங்காளியாக திகழும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேபோன்று ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொள்வதற்கு மீள விண்ணப்பிக்கும் செயன்முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஜோஸப் பொரெல் தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பொருளாதார மீட்சி, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இலங்கையினால் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டாம்

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தேசிய கலந்துரையாடல் முடிவடைந்து, தெளிவான திட்டத்துடன் அதன் பரிந்துரைகள் வெளியிடப்படும் வரை காத்திருக்குமாறும் ஆணைக்குழு கோரியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக கவனம் செலுத்துவதற்கு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து மேலும் ஆராய வேண்டியமை அவசியமானது என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் 30 வருடங்களுக்கும் மேலாக நீடித்த, உள்நாட்டுப் போரின் அழிவுகளின் கீழ் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு சமூகங்களுக்கு மாத்திரமல்ல என்றும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

70 மற்றும் 80 களில் தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் இந்த செயல்முறை அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சமாதானம் மற்றும் நல்லிணக்க செயல்முறையை சமமாக எதிர்கொள்ளும் ஒரு தேசிய உரையாடலை நிறுவுவது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு சட்டமூலத்திற்கான சூழலின் அவசியத்தை சிறப்பாக வரையறுக்கும் என்பதை உறுதியான கருத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளது.

வடக்கு – கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

இன்று யாழ்ப்பாணத்திலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி தலைவர்களும் பிரதானிகளும் அதேபோன்று தமிழ் அரசுக் கட்சியினுடைய தலைவரும் ஒன்று கூடி வருகின்ற 25ஆம் தேதி வடக்கு கிழக்கு தழுவிய பாரிய கதவடைப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு மக்களுக்கு அறைகூவல் விடுப்பதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து அதே போன்று தொல்லியல் நடவடிக்கைகளினாலே எங்களுடைய பூர்வீகத்தை அழித்தொழிக்கின்ற அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முதல் யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் தேசிய கட்சிகள் மதத் தலைவர்கள் சமூக அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி இதற்கான எதிர்ப்பு போராட்டம் என்று நடத்துவதாக முடிவு எட்டப்பட்டிருந்ததது. எதிர்வரும் 24ஆம் தேதி இந்த போராட்டம் நடத்தப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அது இறுதி முடிவாக இருக்கவில்லை.

இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்வரும் 25ஆம் தேதி வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதாக கட்சி தலைவர்கள் தீர்மானத்தை எட்டி உள்ளனர். இதற்கு அனைத்து சமூக அமைப்புக்கள் மதத்தலைவர்கள் பொது அமைப்புகள் அனைவருடைய ஆதரவையும் கோரியுள்ளார்கள். பாராளுமன்றத்திலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கு அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பினை வெளியிட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் உரிமைகளை முக்கியமானவையாக பெறுமதிமிக்கவையாக பைடன் நிர்வாகம் கருதினால் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு பைடன் நிர்வாகம் தெளிவான செய்தியை தெரிவிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மனித உரிமையின் அனைத்து அளவுகோல்களிலும் தோல்வியடைந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் உரிமைகள் மிக முக்கியமானவை என பைடன் நிர்வாகம் கருதினால் இந்த சட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்படவேண்டும் அல்லது முற்றாக கைவிடப்படவேண்டும் என்ற செய்தியை ஜனாதிபதி ரணில்விக்கிரமசி;ங்க அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு தசாப்தகாலமாக சிறுபான்மையினத்தவர்களையும் தன்னை விமர்சிப்பவர்களையும் தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து பைடன் நிர்வாகமும் அமெரிக்க காங்கிரசும் அமைதியாகயிருந்தால் அது மாற்றுநிலைப்பாடுடையவர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திறனை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ள நாஸ் பல தசாப்தகாலங்களாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல்கொடுத்துவந்துள்ள இலங்கையின் சிவில் சமூகத்தை அவமதிக்கும் செயலே உத்தேச சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அல்லது மோசமான சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் அதிகாரிகள் உத்தேச சட்டத்தை கொண்டுவரவில்லை மாறாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்குவைத்து அவர்களை மௌனமாக்கும் நோக்கத்துடனேயே இந்த உத்தேச சட்டம் கொண்டுவரப்படுகின்றது எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை வாபஸ் பெற வலியுறுத்துமாறு சர்வதேச இராஜதந்திரிகளிடம் கோரிக்கை

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைவிட மிகமோசமான முறையில் தமது பிரஜைகளின் மனித உரிமைகளை மீறத்தக்கதோர் சட்டமூலத்தினை இலங்கை அரசாங்கம் கூர்மதியின்றி முன்மொழிந்திருக்கின்றது.

எனவே அச்சட்டமூலத்தை உடனடியாக வாபஸ்பெறும் அதேவேளை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக இடைநிறுத்துமாறும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அதனை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும்படி 450 க்கும் மேற்பட்ட கல்வியியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை வாபஸ் பெறும்படி அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மதகுருமார்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச்சார்ந்த 450 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு, இலங்கையிலுள்ள வெளிநாட்டுத்தூதரகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் கடந்த மார்ச்மாத இறுதியில் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இச்சட்டமூலம் இம்மாத இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் கொண்டுவரப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமானது இலங்கையின் ஜனநாயகத்துக்குப் பாரதூரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதைத் திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றோம்.

அதன்படி இப்பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை வாபஸ் பெறுமாறும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறும் நாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திவரும் நிலையில், இம்முயற்சிக்கு உதவுமாறு உங்களிடம் கோருகின்றோம்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைவிட மிகமோசமான முறையில் தமது பிரஜைகளின் மனித உரிமைகளை மீறத்தக்கதோர் சட்டமூலத்தினை இலங்கை அரசாங்கம் கூர்மதியின்றி முன்மொழிந்திருக்கின்றது.

இப்புதிய சட்டமூலமானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளைத் தக்கவைத்திருப்பதுடன், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

இது ஜனநாயகத்தில் பொதுமக்களின் முனைப்பான பங்கேற்புக்கான இடைவெளியைச் சுருக்குவதுடன், சமுதாயங்களை அரசின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி, அரசை இராணுவமயப்படுத்தும்.

ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான கடப்பாடுகளை, பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் போன்ற பிறிதொரு மிகமோசமான சட்டத்தைத் திருட்டுத்தனமாக அறிமுகப்படுத்துவதற்காகப் பயன்படுத்தமுடியாது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கும், கடந்த 2022 ஆம் ஆண்டு அச்சட்டத்தை மறுசீரமைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களைச் சமாளிக்கும் நோக்கிலான ‘ஏமாற்று’ நடவடிக்கைகளே தவிர, அவை மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வுகாணும் உண்மையான நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டவையல்ல.

பயங்கரவாதத்தடைச்சட்டம் கட்டாயமாக நீக்கப்படவேண்டும் என்பதும், அது அதிவிசேட நிறைவேற்றதிகாரங்களைக்கொண்ட எந்தவொரு சட்டவாக்கத்தினைக்கொண்டும் பதிலீடு செய்யப்படக்கூடாது என்பதும் எமது தெளிவானதும், தொடர்ச்சியானதுமான நிலைப்பாடாகும்.

எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு உங்களது செல்வாக்கின் ஊடாகவும், இலங்கை அரசாங்கத்துடன் நீங்கள் பேணிவரும் இராஜதந்திர, அரசியல் மற்றும் பொருளாதார நல்லுறவைப் பயன்படுத்தியும் அனைத்து இலங்கையர்களுக்குமான மனித உரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் மேம்படுத்திப் பாதுகாக்கின்ற முதன்மை நிலைப்பாட்டை நீங்கள் மேற்கொள்ளவேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் முழுமையான உள்ளடக்கம், அதன் தொனி மற்றும் உண்மையான நோக்கம் என்பன இச்சட்ட மறுசீரமைப்பை அர்த்தமற்றதாக்குவதுடன், இது பயங்கரவாதத்தடைச்சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடு முழுமையாக வலுவிழக்கச்செய்கின்றது.

அதேபோன்று கடந்த மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக இடைநிறுத்தல் மற்றும் சர்வதேச சட்டநியமங்களுக்கு அமைவாக அதனை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தல், தண்டனைச்சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் உள்ளடங்கலாகப் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சட்டவாக்கத்தை விரிவாகப் பரிசீலித்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துமாறு நீங்கள் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வரையறை அற்ற அதிகாரம் வழங்குவது மிகவும் பயங்கரமானது – சாலிய பீரிஸ்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அனுமதிக்கப்பட்டால் நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்படுவதற்கு இடமிருக்கிறது. குறிப்பாக பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வரையறை அற்ற அதிகாரம் வழங்குவது மிகவும் பயங்கரமானது என சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வரையறை இல்லாத அதிகாரம் வழங்கி இருக்கிறது.

இது மிகவும் பயங்கரமானது.அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. குறித்த சட்டமூலத்தின் பிரகாரம் பயங்கரவாதத்தை தடுப்பதென்ற அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்து 90 நாட்கள் பிரதி பொலிஸ்மா அதிபரின் அனுமதியுடன் தடுத்துவைக்க முடியும்.

அத்துடன் சட்டத்தின் பிரகாரம் குறித்த சந்தேக நபரை 48 மணி நேரத்துக்கு முன்னர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினாலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவை நீக்குவதற்கு நீதிவானுக்கு முடியாது.

நீதிபதியையும் தாண்டிய அதிகாரமே பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இந்த சட்டமூலத்தின் ஊடாக வழங்கப்படுகிறது.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரதான பிரச்சினையாக இருப்பது பயங்கரவாதம் என்றால் என்ன என வரையறுக்கப்படுவதில் இருக்கும் தெளிவின்மையாகும்.

அதேநேரம் பல்வேறு அமைப்புகளை தடைசெய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் வகையில் உறுப்புரைகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு பல விடயங்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இதில் சில சரத்துக்கள் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் வகையில் அமைகின்றன.

அதனால் இந்த உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டால் மிகவும் பாதகமான நிலைமை நாட்டில் ஏற்படலாம்.

எனவே அனைவரும் ஒன்றிணைந்து இதில் திருத்தங்களை கொண்டுவர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். அல்லது இதனை தோற்கடிக்க வேண்டும் என்றார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் பாதிக்கும்

இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடு செய்ய முன்மொழியப்பட்டிருக்கும் சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைகளை வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் முடிவு எடுப்பதற்கு முன்னதாகவே இந்த புதிய மாற்றுச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான தூதுவர் டெனில் சைபி தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நீடிக்கத் தவறினால், இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகச் சலுகை கிடைக்காமல் போகக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளை அடையாளப்படுத்தும் போது நீதித்துறை மற்றும் மக்களது கோரிக்கையை கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கையில், இந்த செயல்முறை மிகவும் குறைவான வெளிப்படைத் தன்மையை கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.