பொதுமக்களின் வரிச்சுமைகள் குறைக்கப்பட வேண்டும் – ரவி கருணாநாயக்க

பொது மக்களின் வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

திவால் நிலையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றாலும் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே வரிகளை குறைப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே வரி செலுத்தி வருபவர்களுக்கு சுமையை ஏற்படுத்தாமல் வரி வலையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரிக் கோப்பொன்றைத் திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், அனைவரும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எதிர்கால நலன்புரி நன்மைகள் கூட இந்த வரிக் கோப்பு இலக்கத்தின் கீழ் வழங்கப்படும் என சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் உள்ளிட்ட 14 வகைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் நேற்று (ஜூன் 01) முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் ஒப்புதலுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

வர்த்தமானி அறிவித்தலின் படி, எந்தவொரு வருங்கால வைப்பு நிதிக்கும் ஊழியர் மற்றும் முதலாளி இருவரிடமிருந்தும் மாதாந்திர பங்களிப்பு ரூ. 20,000 உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதன்படி, பின்வரும் தொழில் வல்லுநர்கள் ஜூன் 1 முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்:

1. இலங்கை மருத்துவ கவுன்சிலில் (SLMC) பதிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள்

2. இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினர்கள்

3. இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினர்கள்

4. இன்ஸ்டிடியூஷன் ஒஃப் இன்ஜினியர்ஸ் இலங்கையின் உறுப்பினர்கள்

5. தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்

6. இலங்கை கட்டிடக்கலை நிறுவகத்தின் உறுப்பினர்கள்

7. இன்ஸ்டிடியூட் ஒஃப் க்வாண்டிட்டி சர்வேயர்ஸ் ஸ்ரீலங்காவின் உறுப்பினர்கள்

8. இலங்கை உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள்

9. பிரதேச செயலகங்களில் தமது தொழில்களை பதிவு செய்த நபர்கள்

10. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை (முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கை உழவு இயந்திரங்கள் தவிர) வைத்திருக்கும் நபர்கள்

11. ஏப்ரல் 01, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு இலங்கையில் ஏதேனும் அசையாச் சொத்தை பத்திரப் பரிமாற்றத்தின் மூலம் வாங்கிய நபர்கள்

12. எந்தவொரு வருங்கால வைப்பு நிதிக்கும் ஊழியர் மற்றும் முதலாளி இருவரிடமிருந்தும் ரூ. 20,000 இற்கும் மேற்பட்ட மாதாந்திர பங்களிப்பை வழங்கும் பணியாளர்கள்

13. உள்ளூர் அதிகாரசபையிடமிருந்து கட்டிடத் திட்டத்திற்கான அனுமதியைப் பெறும் எந்தவொரு தனிநபரும்

14. மாதாந்தம் ரூ. 100,000 சம்பளம் பெறும் யாரேனும் அல்லது இலங்கையில் எந்தவொரு சேவையையும் வழங்குவதற்கு 12 மாத காலத்திற்கு ரூ. 1,200,000 வருமானம் பெறுபவர்கள்.

அறிவிப்பின்படி, மேலே குறிப்பிடப்பட்ட எந்த வகையிலும் சேராத, டிசம்பர் 31, 2023 இல் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அல்லது ஜனவரி 01, 2024 அன்று அல்லது அதற்குப் பிறகு 18 வயதை எட்டியவர்கள் ஜனவரி 1, 2024 முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்

வரிச்சீர்திருத்தங்களில் தலையிடப் போவதில்லை – சர்வதேச நாணய நிதியம்

அரசாங்க வருமானம் பாதிக்கப்படாத வகையில் வரி மாற்றங்களில் தலையிடப்போவதில்லை என சர்வதேச நாணய நிதியம், இந்நாட்டின் தொழில் நிபுணர்களுக்கு உறுதியளித்துள்ளது.

வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதி தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் இலங்கையின் தொழிற்சங்கங்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

வரி சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களை தொடர்வது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்

நாடு முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கை : இயல்பு நிலை பாதிப்பு

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் (15.03.2023) நாடளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி, அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வித் துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த பணி பகிஷ்கரிப்பு காரணமாகஅனைத்து மாவட்டங்களின் மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளைத் தாங்கியவாறு 20000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்தை வழங்க வேண்டும், மாணவர்களின் போதனை குறைபாட்டை நிவர்த்தி செய், பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களைக் கொடு உள்ளிட்ட பல்வேறு பதாகைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்களும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

மலையகம்

தூரப் பகுதிகள், பிரதேசங்களில் உள்ள தோட்டங்களிலிருந்து பிரதான மற்றும் பிரதேச வைத்தியசாலைகளுக்குச் சிகிச்சைபெற வந்த மக்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதேவேளை, பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் சமூகம் அளிக்கவில்லை. மாணவர்களின் வருகையும் இருக்கவில்லை. விடயம் அறியாமல் பாடசாலைக்கு சமூகம் அளித்த ஒரு சில மாணவர்கள் திரும்பிச்சென்றனர். மலையகப் பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும் பணிகள் இடம்பெறவில்லை. அரச வங்கிகள் உட்படப் பல துறையினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கினர்.

மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் போக்குவரத்துச் சேவைகள் வழமை போன்று நடைபெற்றுவருவதுடன், மக்கள் தமது அன்றாட கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு சுமார் 60க்கு மேற்பட்ட கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை ஆசிரியர் சங்கமும், ஆசிரியர் சேவை சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிபர், ஆசிரிய சங்கங்கள் மற்றும் சுகாதாரத் துறையினர், உள்ளிட்டோர் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால் பாடசாலை சென்ற மாணவர்கள் வீடு திரும்பிச் சென்றுள்ளார்கள். மேலும், மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள் இன்று மாவட்ட மருத்துவமனையில் கிளினிக் மற்றும் சிகிச்சைக்காக சென்ற நோயாளர்கள் மருந்தினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வீடு திரும்பியுள்ளார்கள்.

வவுனியா

வவுனியாவில் ஆசிரிய தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ‘மக்களைப் பொருளாதார சுமையிலிருந்து காப்பாற்று, அரச நிறுவனங்களை விற்பனை செய்வதை நிறுத்து, அடிப்படை சட்டங்களைச் சீரழிக்காதே, முதலாளிகளுக்கு வரிச் சலுகை உத்தியோகஸ்தர்களுக்கு வரி அறவீடு’ உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பத்தைகளைத் தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆசிரியர் சேவா சங்கம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, வைத்தியர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

 

திருகோணமலை
தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை திருவண்ணாமலை பிரதேச பொறியாளர் காரியாலயத்திற்கு முன்னால் ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், மீதமுள்ள சம்பளப்படிகள், மருத்துவ விடுப்பு படிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். மருத்துவ விடுமுறைக்கான கொடுப்பனவை தடுக்காதே அநியாயமாக அறவிடப்படும் விடுதி வாடகைகள் உடனடியாக குறைக்கப்பட வேண்டும் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கோசமிட்டுள்ளனர்.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றைய பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் பணிப்பகிஷ்கரிப்பு

நியாயமற்ற வரிக்கொள்கை, வங்கி  வட்டி வீதம் அதிகரிப்பு, சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து பல துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01)  பணிப்பகிஷ்கரிப்பில்  ஈடுபட்டன.

தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த நிலையில், பெட்ரோலிய, மின்சக்தி, துறைமுகம், ரயில்வே, ஆசிரியர் மற்றும் தபால் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

இன்று காலை 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மெதுவாக வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை  முன்னெடுத்துள்ள துறைமுக தொழிற்சங்கங்கள் , இன்று பகல் கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கான் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஒன்றுகூடி எதிர்ப்பில் ஈடுபட்டன.

நியாயமற்ற வரிக்கொள்கையை விரைவாக மாற்றுமாறு அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர். கான் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக வீதியை மறித்து சுமார் ஒரு மணித்தியாலம் துறைமுக தொழிற்சங்கத்தினர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

துறைமுக தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பினர் திருகோணமலை சீனன்குடா துறைமுக சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழில்முறை தொழிற்சங்க ஒன்றியத்தின் பங்குதாரரான இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் இன்று கம்பஹா ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

குருநாகல் மாவட்ட வங்கி ஊழியர்களும் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.

காலி, மாத்தறை, அநுராதபுரம் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன. நாட்டில் பல பகுதிகளிலும் இன்று வங்கி சேவைகள் முடங்கியிருந்தன.

புத்தளம், மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள அரச வங்கிகள் முழுமையாக இன்று மூடப்பட்டிருந்தன.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களும்  சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் ஊழியர்களும் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று முற்பகல் அரச வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் மாத்திரமே அளிக்கப்பட்டன. தேசிய வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று பகல் எதிர்ப்பிலும் ஈடுபட்டனர்.

சுகாதார தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த மற்றுமொரு எதிர்ப்பு நடவடிக்கை தேசிய கண் வைத்தியசாலைக்கு முன்பாக நடத்தப்பட்டது. சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலும்  குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கம்பளை ஆதார வைத்தியசாலையின்  தாதியர்கள்,  வைத்தியர்கள் , ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கம்பளை ஆதார வைத்தியசாலை வளாகத்திலிருந்து கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதி வரை  பேரணியாக சென்றவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

மாத்தளை, புத்தளம், திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார்  ஆகிய மாவட்டங்களின் வைத்தியசாலைகளில் இன்று முன்னெடுக்கப்பட்ட  பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்பட்டன.

பாடசாலை ஆசிரியர்கள் கறுப்பு ஆடையணிந்து இன்று பணிக்கு சமூகமளித்திருந்தனர். இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து கொட்டாவையில் இன்று மாலை எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

நீர்கொழும்பில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில்  ஆசிரியர்களும் அதிபர்களும்   கறுப்பு ஆடை  அணிந்தும் கறுப்பு பட்டி அணிந்தும் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தனர்.

கம்பளையில் அதிபர்கள், ஆசிரியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கம்பளை ரயில் நிலையத்திற்கு முன்பாக  பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

நாவலையில் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

அம்பாறையில் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வங்கி ஊழியர்கள், வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வங்கி ஊழியர் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், மின்சார சபை பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டன.

தேசிய நீர் வழங்கல் சபை ஊழியர்கள் இரத்மலானை தலைமை அலுவலகத்தில் இருந்து சொய்சாபுர வரை இன்று காலை  ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.

ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஏற்பாடு செய்த எதிர்ப்பு நடவடிக்கை ரயில்வே தலைமையகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரம்

புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் கூடியிருந்தது.

பெற்றோலியம், துறைமுகம், மின்சாரம், நீர், வங்கி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பல வல்லுநர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

சர்வதேச நாணய நிதியம் கூறும் அனைத்தையும் செயற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை – ஹர்ஷ

நியாயமான முறையில் தனிநபர் வருமான வரியை அறவிடுவதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் இருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிச்சயம் வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அவை பொது மக்களின் கழுத்தை நெரிக்கும் வரி திருத்தமாக அமையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அத்தோடு சர்வதேச நாணய நிதியம் கூறும் அனைத்தையும் செயற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற போதிலும் , இன்று நாம் அதன் நிபந்தனைகளுக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ளோம் என்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தனிநபர் வருமான வரி 36 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாட்டைப் போன்றே , திறைசேரியில் ரூபாவிற்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. இதற்கான தீர்வு என்ன? நிச்சயமாக பணத்தை அச்சிட முடியாது. எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த காலங்களை விட தற்போது பணம் அச்சிடும் வீதம் குறைவடைந்துள்ளது.

சீனி வரி குறைப்பின் மூலம் 20 – 25 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளது. அதனை மீளப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து தனிநபர் வருமான வரியை கண்மூடித்தனமாக அதிகரிப்பது நியாயமற்றது. வருமானத்தை அதிகரிப்பதற்கு வரி அறவிடப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் தற்போதுள்ளதை விட நியாயமான முறையில் வரியை அறவிட முடியும்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிச்சயம் வரி திருத்தம் மேற்கொள்ளப்படும். அரசாங்கத்தின் வருமானமும் குறைவடையாமல் , அதே சந்தர்ப்பத்தில் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் எமது ஆட்சியில் வரி கொள்கை பின்பற்றப்படும். அதே போன்று ஏற்றுமதி பொருளாதாரத்திலும்அதிக அவதானம் செலுத்தப்படும்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திற்கு சொந்தமான நாடு அல்ல. எனவே அவர்கள் கூறும் அனைத்தையும் செயற்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. நாம் முன்வைக்கும் வேலைத்திட்டத்தை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும். நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற நேரடி பேச்சுவார்த்தைகளின் போது நான் இதனைக் கடுமையாக வலியுறுத்தினேன்.

ஆனால் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றோம். இவ்வாறு தொடர்ச்சியாக பயணிக்க முடியாது. இதற்கு மாற்று வேலைத்திட்டம் எம்மிடமிருக்கிறது. அதனை நாம் பாராளுமன்றத்திலும் சமர்ப்பித்திருக்கின்றோம் என்றார்.

சமூக பாதுகாப்பு வரி மீள்பரிசீலனை செய்யப்படும் – செஹான் சேமசிங்க

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 34 இலட்சம் குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரணத்தை கோரியுள்ளன.

வரி அறவிடல் ஊடாகவே நிவாரணம் வழங்க முடியும்.சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

வரி அறவிடல், பொருளாதார நிலைமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் கடந்த ஆறு மாத காலத்தில் முன்னெடுத்த கடுமையான தீர்மானங்கள் சாதகமான பெறுபேற்றை அளித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை உடன் இம்மாத நடுப்பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.

கடுமையான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். கடுமையான தீர்மானங்களை எடுக்காமல் இருந்திருந்தால் நாட்டில் கடந்த வருடத்தில் ஏப்ரல், மே ஆகிய காலப்பகுதியில் இருந்த நிலை தற்போது பன்மடங்கு அதிகரித்து பாரிய விளைவை நாடு எதிர்கொண்டிருக்கும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 43 இலட்ச குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரண உதவியை கோரியுள்ளார்கள்.இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.வரி அறவிடல் ஊடாகவே நிவாரணம் வழங்க முடியும்.

பொருளாதார மட்டத்தில் உயர் நிலையில் உள்ள 10 சதவீதமானோரிடமிருந்து உதவிகளை பெற்று நடுத்தர அல்லது ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க புதிய வரிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அரச வருமானத்தை 14 சதவீதமாக தக்கவைத்துக் கொள்ள பெறுமதி சேர் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி இன்னும் ஓரிரு மாதங்களில் மீள்பரிசீலனை செய்யப்படும்.சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி பெற்றுக் கொள்ளப்பட்டவுடன் ஒருசில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Posted in Uncategorized

வரி அதிகரிப்பால் பாரிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் புலம்பெயர்வு

ஜனவரியில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரிகள் காரணமாக  இலங்கையின் பாரிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் செலவுகளை குறைப்பதற்கும் அல்லது வெளிநாடுகளிற்கு புலம்பெயர்வதற்கும் சிந்திக்கின்றனர் என எக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது.

கடும் வருமானவரிகள் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால் இலங்கையின் பாரிய நிறுவனங்களை சேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள்  செலவுகளையும் முதலீடுகளையும் குறைக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.

இலங்கை அரசாங்கம் வங்குரோத்து நிலையை அறிவித்து பத்துமாதங்களிற்கு பின்னர்  புதிய வரிகள் நடைமுறைக்கு வரவுள்ளன.

எனினும் புதிய வரிகள் வருமானம் உழைப்பவர்களின் நுகர்வுதிறன் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன, குறிப்பாக ஏற்கனவே கடன்பட்டவர்கள் வீடுகளிற்காக வங்கிகளில் கடன் பட்டவர்கள்  நுண்கடன்களை பெற்றவர்கள் அதிகளவு பாதிப்பை எதிர்கொள்ளவுள்ளனர்.

மாதாந்தம் 150,00 ரூபாயை உழைக்கும் இலங்கையர் ஒருவர்  தனது தனது வருமானத்தில் 2.3 வீதத்தினை செலுத்தவேண்டும் ஆனால் ஒரு மில்லியன் உழைப்பவர் 28.7 வீதத்தினை செலுத்தவேண்டும்.

எப்படி செலவுகளை குறைப்பது என தெரியவில்லை என்கின்றார் வங்கி துறையை சேர்ந்த 52 வயது நபர்.

இவர் ஏற்கனவே தனது வாகனங்களிற்கான லீசிங் மற்றும் வீட்டு கடன் போன்றவற்றை செலுத்தவேண்டிய நிலையில் காணப்படுகின்றார்.

நான் இரு கடன்களையும் பெற்றவேளை வட்டிவீதம் குறைவாக காணப்பட்டது என்னால் மாதம் ஒரு இலட்சம்  ரூபாயை சேமிக்க முடிந்தது என தெரிவித்த அவர் தற்போது பணவீக்கம் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்றவற்றால் எதனையும் சேமிக்க முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நான் மலிவான பொருட்களிற்கு மாறிவிட்டேன் என மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர் தெரிவித்தார்.

இவரை போன்ற பல தனியார் துறை ஊழியர்கள் ( ஏற்கனவே வருமான வரி செலுத்துபவர்கள் ) புதிய வரி குறித்து ஏமாற்றம் வெளியிட்டனர்.

தனியார் துறையை சேர்ந்த பலர் தாங்கள் வரிகளை செலுத்த தயார் என குறிப்பிட்ட அதேவேளை வெளிப்படைத்தன்மையின்மை அரசாங்கத்தின் பண விரயம்  பொறுப்பற்ற அரசியல் தீர்மானங்கள் போன்றவை இந்த வரிகள் அவசியமற்றவை என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது என தெரிவித்தனர்.

ஊதிப்பெருப்பிக்கப்பட்டுள்ள  அரசசேவை குறித்தும் தனியார் துறையினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட வினைத்திறன் அற்ற அரசசேவையை தொடர்ந்தும் காப்பாற்றுவதற்கு அரசசேவையை சேர்ந்தவர்கள் தங்கள் சக்தியை வீணடிக்கின்றனர் இது எப்படி நியாயமான விடயமாகும் என வாகனங்கள் திருத்தும் நிலையத்தை சேர்ந்த சுனில் என்பவர் கேள்வி எழுப்பினார்.

எனது ஊழியர்கள் மோசமான காலநிலைக்கு மத்தியிலும்மேலதிக நேரம் வேலை பார்த்து சம்பாதிக்கின்றனர் காலையிலிருந்து நள்ளிரவு வரை வேலைபார்க்கின்றனர் என குறிப்பிட்ட அவர் அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களிற்கு வருமானம் வழங்குவதற்காக தனியார் துறையை சேர்ந்தவர்கள் மீது அரசாங்கம் எப்படி வரி சுமையை செலுத்த முடியும் எனகேள்வி எழுப்பினார்.

புதிய வரிகளுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு

அரசாங்கத்தின் புதிய வரிகள் குறித்து அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பை வெளியிடவுள்ளது.

2023 ஜனவரியின் கடைசி வாரத்தில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரியின் இறுதி வாரத்தை கறுப்பு ஆர்ப்பாட்ட வாரம் என அறிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க அரசாங்கம் அறிவித்துள்ள தன்னிச்சையான வரிமாற்றங்கள் தங்களின் தொழில்துறையை சேர்ந்தவர்களிற்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பல வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்ட மகஜரை ஜனவரி 10 ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.