ஜனவரி 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரிக் கோப்பொன்றைத் திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், அனைவரும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எதிர்கால நலன்புரி நன்மைகள் கூட இந்த வரிக் கோப்பு இலக்கத்தின் கீழ் வழங்கப்படும் என சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் உள்ளிட்ட 14 வகைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் நேற்று (ஜூன் 01) முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் ஒப்புதலுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

வர்த்தமானி அறிவித்தலின் படி, எந்தவொரு வருங்கால வைப்பு நிதிக்கும் ஊழியர் மற்றும் முதலாளி இருவரிடமிருந்தும் மாதாந்திர பங்களிப்பு ரூ. 20,000 உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதன்படி, பின்வரும் தொழில் வல்லுநர்கள் ஜூன் 1 முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்:

1. இலங்கை மருத்துவ கவுன்சிலில் (SLMC) பதிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள்

2. இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினர்கள்

3. இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினர்கள்

4. இன்ஸ்டிடியூஷன் ஒஃப் இன்ஜினியர்ஸ் இலங்கையின் உறுப்பினர்கள்

5. தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்

6. இலங்கை கட்டிடக்கலை நிறுவகத்தின் உறுப்பினர்கள்

7. இன்ஸ்டிடியூட் ஒஃப் க்வாண்டிட்டி சர்வேயர்ஸ் ஸ்ரீலங்காவின் உறுப்பினர்கள்

8. இலங்கை உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள்

9. பிரதேச செயலகங்களில் தமது தொழில்களை பதிவு செய்த நபர்கள்

10. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை (முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கை உழவு இயந்திரங்கள் தவிர) வைத்திருக்கும் நபர்கள்

11. ஏப்ரல் 01, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு இலங்கையில் ஏதேனும் அசையாச் சொத்தை பத்திரப் பரிமாற்றத்தின் மூலம் வாங்கிய நபர்கள்

12. எந்தவொரு வருங்கால வைப்பு நிதிக்கும் ஊழியர் மற்றும் முதலாளி இருவரிடமிருந்தும் ரூ. 20,000 இற்கும் மேற்பட்ட மாதாந்திர பங்களிப்பை வழங்கும் பணியாளர்கள்

13. உள்ளூர் அதிகாரசபையிடமிருந்து கட்டிடத் திட்டத்திற்கான அனுமதியைப் பெறும் எந்தவொரு தனிநபரும்

14. மாதாந்தம் ரூ. 100,000 சம்பளம் பெறும் யாரேனும் அல்லது இலங்கையில் எந்தவொரு சேவையையும் வழங்குவதற்கு 12 மாத காலத்திற்கு ரூ. 1,200,000 வருமானம் பெறுபவர்கள்.

அறிவிப்பின்படி, மேலே குறிப்பிடப்பட்ட எந்த வகையிலும் சேராத, டிசம்பர் 31, 2023 இல் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அல்லது ஜனவரி 01, 2024 அன்று அல்லது அதற்குப் பிறகு 18 வயதை எட்டியவர்கள் ஜனவரி 1, 2024 முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்