இந்திய பிரதமர் வலியுறுத்திய 13ம் திருத்தச்சட்டம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படும் – ஜீவன்

இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குழாமினர் இந்தியாவிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு நாடு திரும்பியிருந்தனர்.

இதன்போது விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன்போது இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும்.

அதன்பின்னர் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான விடயங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து தீர்மானிக்கப்படும்.

அதேபோல் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறிப்பாக திருகோணமலையை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் வலுசக்தி திட்டங்கள் ஆகியவற்றிற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பினை வழங்கியிருக்கின்றது.

எனவே எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். எமது இந்தியப் பயணம் வெற்றியளித்துள்ளது.

குறிப்பாக மலையக சமூகம் 200 வருடங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது. எமது இந்தியப் பயணத்தின்போது 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் விசேடமாக நாட்டினது பொருளாதார நெருக்கடி மற்றும் மலையக மக்களது வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

அதனடிப்படையில் கிட்டத்தட்ட மூவாயிரம் மில்லியன் ரூபாவினை மலையகத்தினது வீட்டுத்திட்டம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ஒதுக்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

விசேடமாக மலையகத்தின் கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்காக இந்த நிதி பயன்படுத்துவதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் – இ.தொ.கா சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நிர்மாணிக்க இருக்கும் பத்தாயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தை விரைவுப்படுத்த மாற்று பொறிமுறை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்ததோடு, இதனால் மலையக மக்கள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்காக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மலையகத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான புதிய திட்டங்களை இந்தியா அறிமுகப்படுத்த வேண்டும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். இவ்விரண்டு கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்,பொதுச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன்,இ.தொ.காவின சட்ட பிரிவு பொறுப்பாளர் மாரிமுத்து,இ.தொ.காவின் ஆலோசகர் மதியுகராஜா, சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இக்கலந்துறையாடலில் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.

புதிய அமைச்சர்கள் இருவர் பதவிப்பிரமாணம்

 புதிய அமைச்சர்களாக ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா தேவி வன்னியாரச்சி ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று(19) பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

அதற்கமைய, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா தேவி வன்னியாரச்சி பதவியேற்றுள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த அமைச்சுப் பதவியை வகித்த மஹிந்த அமரவீர, புதிய அமைச்சரை நியமிக்க ஜனாதிபதிக்கு அனுமதியளித்து இன்று(19) காலை இராஜினாமா செய்திருந்தார்.

இ​.தொ.கா ஏற்பாட்டில் ’மலையகம் 200’ நிகழ்வுகள்

மலையகத் தமிழர்கள்  இலங்கைக்கு வருகைதந்து எதிர்வரும் 2023ஆம் ஆண்டுடன் இரு நூறு வருடங்களாகும் நிலையில், அதனை முன்னிட்டு ‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளின்கீழ் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக இ.தொ.காவின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களாகபோகிறது. இதனையொட்டி பிரதேச, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல நிகழ்வுகளை நடத்துவதற்கு காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தோட்ட மட்டத்தில் கலாசார,  விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளும் , தோட்ட வாரியாக நடத்தப்படும். பாடசாலை மட்டத்திலும் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். எமது வரலாறு தொடர்பான தேடலுக்காக கட்டுரை, கவிதை, நாடகம் ஆகிய போட்டிகள் நடத்தப்படும் .

இதற்கான ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னின்று நடத்தினாலும் அனைத்து தரப்பினரும் இதில் இணைந்து கொண்டு தமது ஒத்துழைப்புகளை வழங்கலாம் எனவும் ​தெரிவித்தார்.

Posted in Uncategorized

இ.தொ.கா வின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், தொழிற்சங்கவாதியுமான முத்து சிவலிங்கம் காலமானார்.

79 வயதான அவர் கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இன்று காலை நுவரெலியாவில் அவரது இல்லத்தில் வைத்து காலமானதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அவரது இறுதி நிகழ்வுகள் குறித்த தகவல்கள் பின்பு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஓமானில் சிக்கியுள்ள மலையக பணிப் பெண்களை மீட்க இ.தொ.க கலந்துரையாடல்

இலங்கையிலிருந்து ஓமான் நாட்டுக்கு பணிப்பெண்களாக கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிக்கி தவிக்கும் மலையகம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பணிப் பெண்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துரையாடியுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

இலங்கையிலிருந்து சுற்றுலா விசா மூலம் பணிப்பெண்களாக ஓமான் நாட்டுக்கு சென்று அங்கு தமது நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் தங்கியிருக்கும் மலையக உட்பட்ட ஏனைய பிரதேசங்களில் உள்ள பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்து அவர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என இ.தொ.கா கலந்துரையாடியுள்ளது.

இதன்போது ஓமான் நாட்டில் விசா இன்றி தங்கியிருக்கும் பணிப்பெண்களிடம் நாளாந்தம் 05 திராம் அபராத தொகை அறவிடப்படுகிறது.

அதேநேரத்தில் இலங்கையிலிருந்து ஓமானுக்கு பணிப்பெண்களாக சேர்த்து கொள்வதற்கு செலவு செய்த அனைத்து செலவுகளையும் வழங்கிவிட்டு பணிப்பெண்களை இலங்கைக்கு அழைத்து செல்லுமாறு அந்நாடு அறிவித்துள்ளது.

அதேவேளை இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றதாக கலந்துரையாடலில் தெரிவித்துள்ளதுடன், வெளிநாட்டு  வேலைவாய்ப்பு பணியகமும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சும் இணைந்து ஓமானில்  சிக்கியுள்ள மலையகம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பணிப் பெண்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  இ.தொ.கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஓமானில் தங்கியுள்ள இலங்கை பணி பெண்களை மீட்டெடுப்பதற்காக இலங்கையில் இருந்து தூதுக்குழு ஒன்று ஓமான் நாட்டிற்கு சென்று அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இ.தொ.கா மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சரை சந்தித்தார் இ.தொ.கா.வின் தலைவர் செந்தில் தொண்டமான்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் ராமேஸ்வரன் ஆகியோர்  நன்றி தெரிவித்ததாகவும் இதன்போது தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் உள்ள மலையக மக்களுடைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவில் தமிழகத்தில் உள்ள  கூடலூரில் TENTEA நிறுவனத்தின் கீழ் வேலைசெய்யும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த மலையக தமிழர்களை அவர்களது குடியிருப்புக்களில் இருந்து வெளியேருமாறு வனத்துறையினர் சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கியுள்ள நிலையில், அங்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அம்மக்களுடன் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான், இப்பிரச்சினைக் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

தற்காலிகமாக அம்மக்கள் அக்குடியிருப்புகளில் இருப்பதற்கும், தமிழக அரசு இலவசமாக 650 புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, TENTEA  தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவும், அவர்களுக்கு தமிழக அரசின் நிதிஒதுக்கீட்டில் 650 வீடுகள் இலவசமாக  அமைத்துக் கொடுப்பதற்கான அறிவித்தலை தமிழக அரசு  விரைவில் வெளியிடும்  என  அறிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் இந்தியாவில்  PETA அமைப்பினால் ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை  தமிழக அரசுடன் இணைந்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்கம்  சட்ட ரீதியாக இவ்வழக்கை சந்தித்து உரிய அனுமதியை பெற்றுக் கொடுத்தது.

மீண்டும் PETA அமைப்பினால் தற்போது ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இவ்விடயத்தில் தலையிட்டு நிரந்தர தீர்வு பெற்றுத்தர வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் இந்த வருடம் போன்றே எதிர்காலத்திலும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்  என தெரிவித்தார்.

மேலும் இச்சந்திப்பில் பாரதியார் கவிதைகள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.இலங்கை தொழிலாளர் காங்கிர