திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் கிழக்கு ஆளுநருடன் ஆலோசனை

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின்போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இந்திய பாதுகாப்பு அமைச்சின் குழுவினர் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

வடக்கில் படங்காட்டிய ஜனாதிபதி; கிழக்கில் படங்காட்டிய ஆளுநர் – நிலாந்தன்

புதிய ஆண்டு பிறந்த கையோடு ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார்.

வடக்கில் ஜனாதிபதி பல்வேறு தரப்புகளையும் சந்தித்தார்.தொழில் முனைவோர்,பல்கலைக்கழகப் பிரமுகர்கள்,குடிமக்கள் சமூகம் என்று சொல்லப்பட்டவர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இசைத்துறையில் விளையாட்டு துறையில் பளு தூக்கும் போட்டியில் சாதனை புரிந்தவர்கள், வடக்கில் கல்விப் பெறு பேறுகளில் சாதனை புரிந்தவர்கள், அரச உயர் அதிகாரிகள்,தனது கட்சிப் பிரதிநிதிகள் என்றிவ்வாறாக பல்வேறு தரப்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறார்.அவர் யாரைச் சந்திக்க வேண்டும் ,சந்திக்கக் கூடாது என்பதனை அவருக்கு இணக்கமான வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.

குறிப்பாக யூ எஸ் ஹோட்டலிலும் பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியிலும் உரையாற்றும் பொழுது, அவர் பேசியவற்றின் சாராம்சம் என்னவென்றால், மாகாண சபைகளுக்கு போதிய அதிகாரங்கள் உண்டு;மேல் மாகாணத்தில் கட்டியெழுப்பப்பட்டு இருப்பதுபோல பிராந்திய பொருளாதாரங்களைக் கட்டி எழுப்புங்கள்;மாகாண சபைகளின் நிதி அதிகாரம் அதற்குப் போதுமானது; முதலீட்டுக்கு எனது கையைப் பார்த்துக் கொண்டிராதீர்கள்; புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி உதவிகளையும் துறை சார்ந்த உதவிகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்; அதற்கு நாம் ஒத்துழைப்போம்… என்பதுதான். அதிலும் குறிப்பாக அவர் பொருளாதார வளர்ச்சிக்கு உதாரணங்களாக ஜப்பான், கொரியா,பிரித்தானியா போன்ற ஒற்றையாட்சி நாடுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார்.அங்கேயெல்லாம் கூட்டாட்சி இல்லை,ஆனாலும் அந்நாடுகள் பொருளாதாரரீதியாகச் செழிப்பாகக் காணப்படுகின்றன என்ற பொருள்பட யூஎஸ் ஹோட்டலில் அவர் பேசியிருக்கிறார்.

மாகாண சபைகள் இயங்காத ஒரு பின்னணியில், இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கம் இல்லாத ஒரு ஜனாதிபதி, மாகாண சபைகளுக்கு உள்ள நிதி அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார். விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வடமாகாண சபையானது முதலமைச்சர் நிதியம் ஒன்றை உருவாக்க முயற்சித்தது. ஏற்கனவே அதையொத்த நிதியம் மேல் மாகாணத்தில் உண்டு. ஆனால் மத்திய அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.ஆனால் ஜனாதிபதி கூறுகிறார்,13ஆவது திருத்தத்துக்குள் எல்லா அதிகாரங்களும் உண்டு என்று.

அப்படியென்றால் அவர் 2015 இலிருந்து பிரதமராக இருந்த காலகட்டத்தில் கூட்டமைப்போடு சேர்ந்து உருவாக்க முயற்சித்த “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வு முயற்சிக்குப் பொருள் என்ன? மாகாண சபைக்குள்ள அதிகாரங்கள் போதும் என்றால் எதற்காக அப்படி ஒரு ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய ஏற்பாட்டை குறித்து சிந்தித்திருக்க வேண்டும்?இது பற்றி யாராவது அவர்களிடம் கேள்வி கேட்டார்களோ தெரியவில்லை.ஆனால் வழமையாக இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று கேட்கும் வடக்கு இந்த முறை அது போன்ற கேள்விகளைக் கேட்கவில்லை என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்குச் சொன்னதாக ஒரு தகவல்.

இவ்வாறு ஜனாதிபதி வடக்கில்,படம் காட்டி,படம் எடுத்து,ரியோ கிறீம் ஹவுசில் ஐஸ்க்ரீமும் அருந்தி,பதின்மூன்றுக்குள் எல்லாம் உண்டு என்று கூறிய அதே காலப்பகுதியில்,கிழக்கில் அவருடைய ஆளுநர் பெருமெடுப்பில் ஒரு பண்பாட்டு பெருவிழாவை ஒழுங்குப்படுத்தியிருந்தார்.கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன் நோர்வேயின் அனுசரணையோடு பேச்சுவார்த்தைகள் நடந்த காலகட்டத்தில்,திருகோணமலையில் நடந்த “மானுடத்தின் ஒன்று கூடலுக்குப்” பின் அங்கே நடந்த மிகப்பெரிய அளவிலான ஒன்றுகூடல் அதுவென்று கூறலாம்.அதை ஒரு மெகா நிகழ்வாக ஆளுநர் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்.அதற்கு இந்தியாவின் உதவிகளையும் பெற்றிருக்கிறார். அதன்மூலம் தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பண்பாட்டு ரீதியிலான பிணைப்புக்களைப் பலப்படுத்தும் முயற்சிகளை வடக்கிலிருந்து கிழக்கிற்கும் விஸ்தரிக்கும் ஒரு எத்தனம் அது.அப்படி ஒரு பண்பாட்டு விழாவிற்கு இந்தியா பக்கத்துணையாக இருக்கிறது என்பது சிங்கள கடும்போக்குவாதிகளை கோபப்படுத்துமா?அல்லது பயப்படுத்துமா? என்பதனைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு பயிற்சியாளர்கள் முதற்கொண்டு,சிறப்பு விருந்தினர்கள்,அறிவிப்பாளர்கள் வரை தமிழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள்.பொங்கல் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்களை அந்த மைதானத்தில் திரட்டி, நூற்றுக்கணக்கில் பெண்களை ஆட வைத்து,தமிழ் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.அந்நிகழ்வில் உரையாற்றிய சாணக்கியன் தமிழர்களின் தலைநகர் என்று அழைக்கப்படும் திருகோணமலை என்று உச்சரிக்கிறார்.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களின் மூலம் அதிகம் சிங்கள மயப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் மாவட்டம் திருக்கோணமலை ஆகும். இப்பொழுதும் அங்கே குன்றுகளாகக் காணப்படும் பிரதேசங்களில் விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன.ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஒளிப்படத்தை,வாகன ஊர்தியில் எடுத்துச் சென்றபோது தாக்கப்படும் அளவுக்கு அங்கு தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உண்டு.அப்படிப்பட்ட ஒரு மாவட்டத்தில் பெருமெடுப்பில் ஒரு தமிழ்ப் பண்பாட்டு விழாவை ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒழுங்கமைத்திருக்கிறார்.

அவர் ஓர் அரச ஊழியர். ஜனாதிபதியின் பிரதிநிதி.ஆனால் நிகழ்வில் அவருக்கு தரப்பட்ட முக்கியத்துவம்; அவரை அங்கு கூடியிருந்தவர்கள் வரவேற்ற விதம்; என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும்பொழுது அவருக்கு அங்கே ஒரு கதாநாயக அந்தஸ்து வழங்கப்பட்டது.அவர் பேசுவதற்காக மேடையை நோக்கி வந்த பொழுது “அலப்பறை கிளப்புறோம்” என்ற ரஜினி படப்பாடல் ஒலிக்க விடப்பட்டது. அவர் ஒரு கதாநாயகனைப் போல மேடையை நோக்கி வந்தார். வரும் வழியில் நடனம் ஆடிய பெண்கள் அவரை நிறுத்தி கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அதாவது ஒரு நிர்வாக அதிகாரி கதாநாயகனாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் அந்த பண்பாட்டு விழா நடந்து கொண்டிருந்த அதே மாகாணத்தில், மட்டக்களப்பில்,மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரையை மீட்பதற்கான போராட்டம் 125ஆவது நாளைக் கடந்து விட்டது. அது மட்டுமல்ல, கிழக்கில் அண்மையில் பெய்த கடும் மழையால்,பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி நிவாரணங்களை வழங்கி வருகின்றது. அந்த ஒளிப்படங்கள் முகநூலில் பகிரப்படுகின்றன.ஒரு பகுதி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு மாகாணத்தில், இது போன்ற மெகா பண்பாட்டு நிகழ்வுகள் அவசியமா என்ற கேள்விகள் உண்டு. மேய்ச்சல் தரைக்காகப் போராடும் விவசாயிகள் வெள்ளத்தில் நிற்கிறார்கள்;அவர்களுடைய நாட்டு மாடுகளை வெட்டிக் கொல்லப்படுகின்றன அல்லது சுருக்கு வைத்துப் பிடிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத ஒர் ஆளுநர்,காளை மாடுகளை அடக்கும் போட்டிகளை ஒழுங்குபடுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

செந்தில் தொண்டமான் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மக்களைக் கவரும் விதத்தில் எதையாவது செய்ய முயற்சிக்கின்றார்.எனினும் சிங்கள பௌத்தமயமாக்கலையும் நிலப்பறிப்பையும் அவரால் தடுத்துநிறுத்த முடியவில்லை.அதில் அவருடைய அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது என்பதனை பௌத்த மதகுருமார் நிரூபித்து வருகிறார்கள்.அவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத ஓர் ஆளுநர்,வெள்ள அனர்த்த காலத்தில், பெருமெடுப்பில், பெருந்தொகை நிதியைச் செலவழித்து, ஒரு பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்.அதில் அவர் கதாநாயகனாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

எனவே கடந்த வாரம் வடக்கிலும் கிழக்கிலும் நடந்தவைகளைத் தொகுத்துப் பார்த்தால், மிகத் தெளிவான ஒரு செய்தி கிடைக்கின்றது. வடக்கில் ஜனாதிபதி பதின்மூன்றாவது திருத்தத்துக்குள் அதாவது மாகாண சபைக்குள் நிதி அதிகாரம் உண்டு என்று கூறுகிறார்.கிழக்கில் அவருடைய ஆளுநர் கதாநாயகனாக மேலெழுகிறார்.13ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் ஆளுநர் ஒருவர் கிழக்கில் தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டும் விழாக்களை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்.அதனால் அவருக்கு வரவேற்பும் கவர்ச்சியும் அதிகரித்திருக்கின்றன.13ஆவது திருத்தத்தின் கீழ் மத்திய அரசின் பிரதிநிதியாக காணப்படும் ஆளுநர் ஒருவர் கதாநாயகனாக மேலுயர்ந்துள்ளார்.அதன் மூலம் ஆளுநர் சக்தி மிக்கவர் அவர் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்பிக்கையூட்ட முயற்சிக்கப்படுகின்றது.

இவற்றின் மூலம் மாகாண சபையை ஒரு பலமான அதிகார கட்டமைப்பாக வெளிக்காட்டும் உள்நோக்கம் உண்டு.இதில் இந்தியாவை திருப்திப்படுத்தும் உள்நோக்கமுமுண்டு.வடக்கில் ஒரு சந்திப்பின்போது ஜனாதிபதி இந்தியாவுக்கும் மன்னாருக்கும் இடையிலான தரைப்பாலம் பற்றியும் பேசியிருக்கிறார். அவர் அதை நிறைவேற்ற மாட்டார் என்பது புத்திசாலியான யாருக்கும் விளங்கும்.ஆனால் அவர் அப்படிச் சொல்கிறார்.13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்வைப்பதன் மூலம்,இந்தியாவைத் திருப்திப்படுத்தும் வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம்,கிழக்கில் பண்பாட்டு பெருவிழாவில் இந்தியாவின் உதவிகளை பெற்றதன் மூலம்,அவர் இந்தியாவை சந்தோஷப்படுத்த விளைகிறார்.மாகாண சபைகளைப் பலமானவைகளாகக் காட்ட முயற்சிக்கின்றார்.

-நிலாந்தன்

இனவாதத்தை பரப்பும் அம்பிட்டிய தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; கிழக்கு ஆளுநர் உறுதி

கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில் முன்னெடுக்கப்படாது என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உறுதியளித்தார்.

அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த முற்படும் மூன்றாம் தரப்பினருக்கு எதிராக பொலிசார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்,

கிழக்கு மாகாணத்தின் மயிலத்தமடு – திவுலபத்தனபகுதியில் யுத்தத்திற்கு முன்பாக வசித்த மக்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் அங்கு படிப்படியாக குடியமர ஆரம்பித்துள்ளனர்.

அம்மக்கள் விவசாயிகள் மற்றும் கால்நடை விவசாயிகள் என இரு குழுக்களாக இருப்பதால் அப்பகுதி மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

மயிலத்தமடு பகுதியில் மீளக் குடியமரும்போது, பொலன்னறுவை மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பலரை மேலதிகமாக அழைத்து வந்துள்ளமையினால், அவர்களின் விவசாயச் செயற்பாடுகளைப் பாதுகாக்கும் வகையில், வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருப்போருக்கு தற்காலிக ஊக்குவிப்பு தொகையொன்றை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், அம்பாறை மற்றும் பொலன்னறுவை பகுதிகளிலிருந்து வந்தவர்களை அம்மாவட்டங்களிலேயே விரைவில் குடிமயர்த்துவது குறித்தும் ஆராயப்படுகிறது.

அதேபோல், மயிலத்தமடு – திவுலபத்தன பகுதியில் யுத்தத்திற்கு முன்னர் வசித்த மக்கள் அவர்களுக்குச் சொந்தமான காணிகளில் மீள் குடியமர்த்தப்பட வேண்டியது கட்டாயமானது என ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கும் நிலையில், மகாவலி அமைச்சு அப்பணியை சட்டரீதியாக முன்னெடுத்து வருகின்றது.

அதேநேரம் அனுமதியின்றி அரச காணிகளில் வசிப்பவர்களின் காணிகளைக் கையகப்படுத்தி, அவர்களை அக்காணிகளில் சட்டரீதியாக குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும், அரச காணிகளில் அனுமதியின்றி வசிப்பவர்கள் விண்ணப்பங்களைச் சமர்பித்து தமது இருப்பை சட்டரீதியாக்கிக்கொள்ள முடியும் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் மகாவலி வேலைத்திட்டத்திற்காக கிழக்கின் கோரளைப்பற்று பகுதியிலிருந்து தமிழர்களும், நாவலடி பகுதியிலிருந்து முஸ்லிம்களும் அகற்றப்பட்டிருந்த நிலையில் இந்த பணிகள் இன, மத அடிப்படையில் அல்லாது சட்டரீதியாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கிராம சேவகர்களிடத்திலிருக்கும் தரவுகளை அடிப்படையாக கொண்டே காணிகளைப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக சிங்கள மக்களின் குடியிருப்புகள் மற்றும் அங்கிருந்து அகற்றப்படுகின்றது என்ற வகையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கைகளும் பொலிசாரினால் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளன.

அதனால் மேற்படி முன்னெடுப்புகளின் போது சகல இனத்தவர்களுக்கும் இலங்கையர் என்ற வகையிலேயே சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதோடு, அதுகுறித்து அநாவசியமாக கருத்துக்களை வெளிப்படுத்த மூன்றாம் தரப்பினர் முற்படக் கூடாது. என்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் கேட்டுக்கொண்டார்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

BOI ஆடைகள் பூங்கா குறித்தும், திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் பக்தர்கள் அதிகளவில் உள்ள நிலையில் வயது மூப்பு காரணமாக திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கைக்கு சாதகமான பதிலை முதலமைச்சர் அளித்தார். இந்த சந்திப்பில் ஆந்திர முதலமைச்சரால் திருப்பதி பெருமாள் சுவாமி சிலை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய துணை தூதர் டாக்டர். வெங்கடேஷ் மற்றும் இலங்கை நாட்டின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி- யாழ்ப்பாணம் புதிய கப்பல் மார்க்கத்துக்கு புதுவை முதல்வரிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை!

யாழ்ப்பாணம்- காரைக்கால் இடையிலான கப்பல் சேவைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் வழித்தடத்தை மாற்றி புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம், திருகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா, வணிகத் தொடர்பு மேம்படும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் ரங்கசாமியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (4) முதல்வர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அச்சந்திப்பின் போது பல முக்கிய விஷயங்களை உரையாடினர். அச்சந்திப்பில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது அவர் முதல்வர் ரங்கசாமிக்கு அளித்த கடிதத்தில், “இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தங்களின் சார்பில் ஏராளமான உதவிகளை செய்துள்ளீர்கள். குறிப்பாக இலங்கை பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் புதுச்சேரியில் இருந்து மருந்துகளை அனுப்பியது பெரும் உதவியாக இருந்தது.

காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வரையிலான கப்பல் சேவை முயற்சிகளுக்கு நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த வழித்தடத்தை மாற்றி புதுச்சேரி-காங்கேசன் துறை மற்றும் திருகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க அனுமதி வழங்கும் நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா மற்றும் வணிகத் தொடர்பு மேம்படும்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கோணேஸ்வரம் கோயில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் மற்றும் நயனாதீவு, கதிர்காமம் முருகன் கோயில், நுவரேலியாவில் உள்ள சீதை கோயில், ரம்பொடவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு தரிசனங்களை மேற்கொள்ள இலங்கைக்கு முதல்வர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணஆளுநர் செந்தில்தொண்டமான் – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

கிழக்கு மாகாணஆளுநர் செந்தில்தொண்டமான் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தமை சிறப்பான விடயம் எங்களின் அபிவிருத்தி கூட்டாண்மை குறித்து ஆராய்ந்தோம்,எதிர்கால ஒத்துழைப்பிற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்தோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை எங்கள் அயல்நாடுகளிற்கு முதலிடம் என்ற கொள்கையில் முக்கியமான இடத்தில் உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் – இ.தொ.கா சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நிர்மாணிக்க இருக்கும் பத்தாயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தை விரைவுப்படுத்த மாற்று பொறிமுறை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்ததோடு, இதனால் மலையக மக்கள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்காக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மலையகத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான புதிய திட்டங்களை இந்தியா அறிமுகப்படுத்த வேண்டும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். இவ்விரண்டு கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்,பொதுச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன்,இ.தொ.காவின சட்ட பிரிவு பொறுப்பாளர் மாரிமுத்து,இ.தொ.காவின் ஆலோசகர் மதியுகராஜா, சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இக்கலந்துறையாடலில் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சரை சந்தித்தார் இ.தொ.கா.வின் தலைவர் செந்தில் தொண்டமான்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் ராமேஸ்வரன் ஆகியோர்  நன்றி தெரிவித்ததாகவும் இதன்போது தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் உள்ள மலையக மக்களுடைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவில் தமிழகத்தில் உள்ள  கூடலூரில் TENTEA நிறுவனத்தின் கீழ் வேலைசெய்யும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த மலையக தமிழர்களை அவர்களது குடியிருப்புக்களில் இருந்து வெளியேருமாறு வனத்துறையினர் சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கியுள்ள நிலையில், அங்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அம்மக்களுடன் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான், இப்பிரச்சினைக் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

தற்காலிகமாக அம்மக்கள் அக்குடியிருப்புகளில் இருப்பதற்கும், தமிழக அரசு இலவசமாக 650 புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, TENTEA  தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவும், அவர்களுக்கு தமிழக அரசின் நிதிஒதுக்கீட்டில் 650 வீடுகள் இலவசமாக  அமைத்துக் கொடுப்பதற்கான அறிவித்தலை தமிழக அரசு  விரைவில் வெளியிடும்  என  அறிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் இந்தியாவில்  PETA அமைப்பினால் ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை  தமிழக அரசுடன் இணைந்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்கம்  சட்ட ரீதியாக இவ்வழக்கை சந்தித்து உரிய அனுமதியை பெற்றுக் கொடுத்தது.

மீண்டும் PETA அமைப்பினால் தற்போது ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இவ்விடயத்தில் தலையிட்டு நிரந்தர தீர்வு பெற்றுத்தர வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் இந்த வருடம் போன்றே எதிர்காலத்திலும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்  என தெரிவித்தார்.

மேலும் இச்சந்திப்பில் பாரதியார் கவிதைகள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.இலங்கை தொழிலாளர் காங்கிர