இலங்கையில் இலஞ்ச ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொலிஸார்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த வருடம் இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 3,431 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இலஞ்சம் மற்றும் ஊழல் முறைப்பாடுகளுக்காக கைது செய்யப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பொலிஸ் அதிகாரிகள் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் 2,789 முநைப்பாடுகள் விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2020 சீனி மோசடி – ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கமைய, சீனி மோசடியில் தொடர்புடைய பிரதான நிறுவனங்களிடமிருந்து வரிகளை அறவிடுவதில் நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இயலாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு கடுமையான அதிருப்தியை வெளியிட்டது.

அக்டோபர் 13, 2020 திகதி வர்த்தமானி 2197/12 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சீனி இறக்குமதிக்கான விசேட வியாபாரப் பண்ட வரியில் 99.5% குறைக்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்து இதன்போது குழு தனது அதிருப்தியை சுட்டிக்காட்டியது.

நுகர்வோரின் செலவிலிருந்து குறைக்கப்பட்ட வரி விகிதத்தை நியாயமற்ற வகையில் ஒரு சில பாரிய நிறுவனங்களுக்கு அனுகூலம் பெறுவதற்கு இடமளித்து இந்தவொரு பொறுப்புக்கூறும் முறையொன்றை செயற்படுத்தியில்லை என குழு சுட்டிக்காட்டியது.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து எந்தளவு வரி அறவிடுவது என்பது தொடர்பில் விசாரித்த குழு, ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு பணிப்புரை வழங்கியது. சீனி மோசடி சம்பந்தமான வரி அறவிடுவதன் தற்போதைய நிலையைத் தெளிவாகப் புரிந்துகொள்வதே இதன் நோக்கமாகும்.

இந்தச் சிக்கலை மேலும் ஆராயும் வகையில், சீனி மீதான விசேட வியாபாரப் பண்ட வரியை ஒரு கிலோவுக்கு 0.25 சதத்திலிருந்து ஒரு கிலோவுக்கு 50 ரூபாவாக மீண்டும் மாற்றும் முன்மொழிவு தொடர்பான குழுவின் கரிசனையை குழு எடுத்துக்காட்டியது.

சம்பந்தப்பட்ட பாரிய நிறுவனங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க அனுமதிக்கும் அதே வேளையில் சராசரி இலங்கையரிடம் இருந்து 30 பில்லியன் ரூபாவை வசூலிக்கும் நிதியமைச்சின் நோக்கம் இதன்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பொது மக்கள் மீது கூடுதல் நிதிச்சுமைகளை சுமத்துவதற்கு முன்பு தவறு செய்பவர்களைப் பொறுப்புக்கூற வைக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.

விசேட வியாபாரப் பண்ட வரி மற்றும் இறக்குமதி விலைகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, MRPயை விதிப்பை குறித்து விரிவான ஆய்வு நடத்துமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு குழு பணிப்புரை வழங்கியது.

மேலும், மொத்த விநியோகஸ்தர்கள் MRP க்கு மேல் விற்பனை செய்வது மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான தற்போதைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை முன்மொழியுமாறு குழு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்தது.

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஏன்? விளக்கம் கோரியது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரி உள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு அங்கமாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரை எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நேரில் சமூகமளிக்குமாறு பல்கலைக்கழகப் பதிவாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்காகப் பொது நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அரச பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளது என்றும் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முதற்கட்டமாகத் தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடந்த 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக விடயம்சார் அறிவுடைய பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவரின் வாக்குமூலமொன்றை பதிவுசெய்துகொள்ள வேண்டிய தேவையேற்பட்டுள்ளதால், கோரப்படும் ஆவணங்களுடன் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி காலை 09.30 மணிக்கு அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழுவினால் பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தன்மை தொடர்பிலான அறிக்கையொன்று, பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுச் சின்னமொன்றை தாபிக்கும் போது பின்பற்றப்படவேண்டிய நடமுறைகள் தொடர்பிலான அறிக்கையொன்று, நினைவுத் தூபியை நிர்மாணித்ததற்குரியதான கொள்முதல் கோப்பு மற்றும் அதன் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி மற்றும் நினைவுத் தூபியின் தற்போதைய நிலைமை தொடர்பிலான அறிக்கையொன்று போன்ற விடயங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தினுள் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு வழிவகுப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டு முழுமைபெறாத நிலையில் இருந்த தூபி இடிக்கப்பட்டது.

தூபி இடிக்கப்பட்டதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாலும், தமிழ் உணர்வாளர்களாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனவரி 09 முதல் 10 வரை யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. அதனையடுத்து 11 ஆம் திகதி அதிகாலை மாணவர் பிரதிநிதிகளுக்கும், பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது உரிய அனுமதிகள் பெறப்பட்டு தூபி அமைக்கப்படும் எனத் துணைவேந்தரால் உறுதியளிக்கப்பட்டது.

அதன் பின்னர், நிலைமை தொடர்பில் பல்கலைக்கழகப் பேரவையில் விளக்கமளிக்கப்பட்டு அதற்கான அனுமதி பெறப்பட்டதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தூபி அமைப்பதற்காகப் பல்கலைக்கழக நிதி பயன்படுத்தப்படுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. தன்னார்வ நன்கொடையாளர்களிடமிருந்து அப்போதைய மாணவர் ஒன்றியத்தினர் சேகரித்த நிதியைப் பயன்படுத்தி தற்போதைய தூபி அமைக்கப்பட்டதுடன், தூபி கட்டப்பட்டதற்கான நிதி விபரங்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கணக்கறிக்கையில் காட்டப்பட்டதுடன், கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட அறிக்கை பல்கலைக்கழக நலச் சேவைகள் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோத்தாவின் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இல்லை – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின்  அறையில் 17.85 மில்லியன் பணத்தைக் கைப்பற்றியமை தொடர்பிலான வழக்கில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதில்லை என, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கே நேற்று புதன்கிழமை (18) இவ்வாறு அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில்  போதிய  ஆதாரங்கள் இன்மையால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கை வருகை

அமெரிக்க இராஜாங்கத்  திணைக்களத்தின் உலகளாவிய  ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்  ரிச்சர்ட் நெபிவ் இம் மாதம் 8 ஆம்  திகதி முதல் 9 ஆம்  திகதி வரை கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளதாக  கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

.அவருடன் வருகை தரும் தூதுக்குழுவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்பு ஆய்வாளர் டிலான் ஐகென்ஸ் அடங்குவார்.

கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்கம், எதிர்க்கட்சி, சர்வதேச நாணய நிதியம், தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர்களையும் நெபிவ் சந்திப்பார்.

ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகள், மற்றும் நாட்டிலுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகள் என்பன தொடர்பில் ஆராய்வதே அவரது வருகையின் நோக்கமாகும்.

களனி பாலத்தில் ஆணிகள் பொருத்தப்பட்டனவா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் – தயாசிறி

களனி பாலத்தில் 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இதுதொடர்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை அமைச்சர் பந்துல குணவர்த்தன சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” 2021, நவம்பர் 27 ஆம் திகதியன்று புதிய களனி பாலம் திறக்கப்பட்டது. இன்றுடன் இது திறக்கப்பட்டு 599 நாட்கள் ஆகின்றன.

ஆனால், இங்கிருந்து 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டுள்ளதாக இம்மாதம் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது, 8 இலட்சத்து 75 ஆயிரத்து 866 டொலர் பெறுமதியான ஆணிகள்தான் இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் என்றால், 77 இலட்சத்து 92 ஆயிரத்து 402 கிலோ இருப்புகள் இங்கு களவாடப்பட்டுள்ளமை தெரியவருகிறது.

ஒரு ஆணியின் நிறையானது 5 கிலோ என எடுத்துக் கொண்டால், 15 இலட்சத்து 58 ஆயிரத்து 480 ஆணிகள், 599 நாட்களில் இங்கிருந்து கழற்றப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு 100 ஆணிகள் வீதம் திருடப்பட்டிருந்தால், 21 வருடங்களேனும் தேவை இவ்வளவு ஆணைகளை கழற்றுவதற்கு.

ஆனால், 599 நாட்களில் இவ்வளவு ஆணிகள் கழற்றப்பட்டிருக்குமானால், ஒரு நாளைக்கு 1300 ஆணிகளை கழற்றியிருக்க வேண்டும்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கழற்றினால்கூட, 10 ஆணிகளைத்தான் இங்கிருந்து கழற்ற முடியும்.
எனவே, இந்த விடயத்தின் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.

உண்மையில் இங்கு ஆணிகள் கழற்றப்பட்டுள்ளனவா? அல்லது ஆணிகள் பொறுத்தப்படவில்லையா என்பதை அமைச்சர் சபைக்கு கூற வேண்டும். ”என்றார்.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 51 வாகனங்களை காணவில்லை

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு இறுதி வரை ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த வாகனங்களின் பெறுமதியையும் நிர்ணயிக்க முடியாதுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சொந்தமான 53 வாகனங்கள் ஏனைய அரச நிறுவனங்கள், விஹாரைகள், சமயத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 2022ஆம் ஆண்டு 27 வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவுக்காக அலுவலகம் ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது – குமார வெல்கம

எந்த ஆட்சியிலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையைப் பொறுத்தவரையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை ஒழிக்கவே முடியாது.

அனைத்து அரசாங்கங்களும் ஆட்சிக்கு வரும்போது பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி தமது அரசாங்கத்தை அமைக்கின்றன.

மாறிமாறி வரும் அனைத்து அரசாங்கங்கள் இதனையே வழக்கமாகக் கொண்டுள்ளன.

இவ்வாறுதான் மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் எவரும் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை.

ஊழல் என்பது புதியதொரு விடயமல்ல. தேர்தல் முறைமையின் ஊடாகவே ஊழல் அதிகரித்துள்ளது. நாடாளுமன்றம் தற்போது ஒரு வர்த்தக நிறுவனம் போன்றே செயற்படுகின்றது.

சூழ்நிலைக்குத் தேவையான சட்டங்களை இயற்றியாவது ஊழலை ஒழிக்க வேண்டும்.
வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் விலைமனுக் கோரல் விவகாரத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறன.

எனவே இவற்றினைக் கருத்திற் கொண்டே ஊழல் எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது என்று மக்கள் குறிப்பிடுவது உண்மையான விடயமாகும்” என அவர் அமேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

உயர் இராணுவ அதிகாரியின் பாதுகாப்பிற்கு 7 வாகனங்கள்

உயர் இராணுவ அதிகாரி ஒருவரின் வாகனத்துடன் ஏழு வாகனங்கள் பாதுகாப்பிற்காக சென்றமை குறித்து காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கேள்வியெழுப்பியுள்ளார்.

உணவு கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் இந்த சந்தர்ப்பத்தில் இதுபோன்ற உயர் அதிகாரிகளுக்கு அதிகளவு பணத்தை செலவழிப்பது சரியா என்றும் அவர் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

மூன்று மாதங்களாக முதியோருக்கான உதவித்தொகையும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறான சூழலில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு ஏழு வாகனங்களை அணிவகுப்புக்கு அழைத்துச் செல்ல பணம் ஒதுக்கியது யார் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

புகையிரத திணைக்களத்தின் முறையற்ற நிர்வாகத்தால் புகையிரத சேவை பலவீனமடைந்துள்ளது – பந்துல

புகையிரத திணைக்களத்தின் முறையற்ற நிர்வாகத்தால் புகையிரத சேவை பலவீனமடைந்துள்ளது. புகையிரத சேவையை தனியார்மயப்படுத்த வேண்டாம் என்றால் சேவையை நிச்சயம் அதிகார சபையாக மாற்றிமைக்க வேண்டும். திணைக்களம் என்ற நிர்வாக கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு  முன்னேற்றமடைய முடியாது என போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

புகையிரத சாரதிகள் சங்கத்தின் வருடாந்த கூட்டம் இன்று (11) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

போக்குவரத்து சேவைத்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இருப்பினும், மாற்றத்தை ஏற்படுத்த மானியம் போதாது. புகையிரத திணைக்களத்தின் வருமானம், செலவு முகாமைத்துவத்தில் நிலவும் பலவீனத்தன்மை திணைக்களம் நட்டமடைவதற்கு பிரதான காரணியாக உள்ளது. சிறந்த நிர்வாக கட்டமைப்பு இல்லாமல் நிறுவனத்தை முன்னேற்ற முடியாது.

பொது போக்குவரத்து சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து அமைச்சரவை ஊடாக தீர்வு காண தயாராகவுள்ளேன். குறுகிய அரசியல் நோக்கத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க போராட்டங்களின் பங்குதாரர்களாக புகையிரத தொழிற்சங்கங்கள் ஆளாகக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.

புகையிரத சேவையை திணைக்களம் என்ற கட்டமைப்புக்குள் வைத்துக்கொண்டு ஒருபோதும் மேம்படுத்த முடியாது. திணைக்களம் எனும்போது வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. துறைமுக அதிகார சபை, டெலிகொம் நிறுவனம் ஆகியன அபிவிருத்தி அடைவதை போல் புகையிரத திணைக்களம் அபிவிருத்தியடைய வேண்டும்.

புகையிரத சேவையாளர்களின் தொழில் மற்றும் ஓய்வூதிய உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த வேண்டாம் என்றால் நிச்சயம் புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும். திணைக்களம் என்ற கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு முன்னேற முடியாது என்றார்.