சீனாவின் உரங்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் – தலைவிரித்தாடும் ஊழல் மோசடிகள்

நாட்டு மக்கள் இக்கட்டான நிலையில் தத்தளிக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளுக்கு சென்று உரை நிகழ்த்திக்கொண்டிருப்பதாக ஜக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகை எப்படி ஆள்வது, சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்று உலகத் தலைவர்களுக்குப் பல்வேறு உபதேசங்கள் வழங்கப்படுகின்றன.

உலகத் தலைவர்களுக்கு உபதேசம் செய்யும் ஜனாதிபதி தனது அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு உபதேசம் செய்ய முடியவில்லை ஏனெனில் இந்த அரசாங்கத்தில் உள்ள மோசடிகள், ஊழல்கள் மட்டுமன்றி அரசாங்கத்தின் கையாலாகாத்தனம், தோல்விகள் இவையனைத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதிலும் ஜனாதிபதி இவற்றையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எருவுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் கொடுக்கப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நாட்டில் மோசடிகளும் ஊழல்களும் தலைவிரித்தாடியுள்ளன.

ஆனால் அந்த அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை, வெளியிடப்படவில்லை.

மறுபுறம், அரசாங்கம் மோசடி மற்றும் ஊழல் சட்டமூலம் பற்றி பேசுகிறது. மோசடி, ஊழல் போன்ற சட்டமூலத்தை எடுத்துக்கொண்டாலும், மோசடி, ஊழல்கள் குறித்து வெளியாகியுள்ள அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடாது என்று கூறுகின்றனர்.

சீன உரங்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஊழல் மோசடிகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை – அமெரிக்க தூதர் ஜூலி சங்

இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், சாதகமான வணிகச்சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான கொள்கை உருவாக்கத்துக்கான உத்வேகத்தை அமெரிக்க வர்த்தகப்பேரவை வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மேலும் பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க வர்த்தகப்பேரவையின் வருடாந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இவ்வருடம் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்புத்தொடர்புகள் ஆரம்பமாகி 75 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.

இவ்வேளையில் அமெரிக்காவும் இலங்கையில் இயங்கிவரும் அமெரிக்க வர்த்தகப்பேரவையும் இலங்கை பொருளாதாரத்தின்மீது ஏற்படுத்தியுள்ள நேர்மறையான தாக்கம் தொடர்பில் நினைவுகூறவிரும்புகின்றேன்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவானது மக்கள், வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.

எமது இருநாடுகளும் சுமார் 7 தசாப்தகாலமாக பொருளாதார அபிவிருத்தி முதல் தேசிய பாதுகாப்பு வரை பல்வேறு விடயங்கள் தொடர்பில் மிகவும் விரிவாக ஒன்றிணைந்து பணியாற்றிவந்திருப்பதுடன் இருநாடுகளுக்கும் இடையில் வலுவான நட்புறவும் பரஸ்பர நன்மதிப்பும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

அதேவேளை வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவித்ததன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதில் அமெரிக்க வர்த்தகப்பேரவையும் முக்கிய பங்காற்றியுள்ளது.

குறிப்பாக சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட அமெரிக்க வர்த்தகப்பேரவையானது இலங்கையில் அமெரிக்க தனியார்துறை முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தல் ஆகியவற்றைப் பிரதான நோக்கங்களாகக்கொண்டு இயங்கிவருகின்றது. அதன்படி கலந்துரையாடல்கள், ஆலோசனை வழங்கல்கள் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் வளர்ச்சிக்கு அமெரிக்க வர்த்தகப்பேரவை உதவிகளை வழங்கியுள்ளது.

குறிப்பாக இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், சாதகமான வணிகச்சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான கொள்கைகளை உருவாக்குவதற்கான உத்வேகத்தையும் தற்போது இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் மறுசீரமைப்புக்கள் குறித்த ஆலோசனைகளையும் அமெரிக்க வர்த்தகப்பேரவை வழங்கியிருக்கின்றுது.

இதனை முன்னிறுத்திய பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. சிறந்த ஆட்சி நிர்வாகத்தை ஊக்குவிப்பதற்கும், ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் மேலும் பல்வேறு விடயங்களைச் செய்யவேண்டியுள்ளது.

ஆனால் தற்போது அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் இலங்கை மற்றும் அமெரிக்க வணிகங்களுக்கான புதிய வாய்ப்புக்கள் உருவாவதற்கும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீட்சியடைவதற்கும், பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதற்கும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த குடும்பத்தின் ஊழல்களை உடனடியாக விசாரிக்கவேண்டும்! செல்வம் எம்.பி. வலியுறுத்து

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று ரெலோ இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாணய நிதியம் பணம் கொடுப்பது சம்பந்தமாக சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊழல்கள் விசாரிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் காரணமாகத்தான் இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகவே இந்த ஊழலை விசாரிக்காத பட்சத்தில் நாடு மிகவும் மோசமான சூழலில் அதாவது பின் தங்கிய நிலையில் தொடர்ந்து செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆகவே மகிந்த ராஜபக்ஷ குடும்பம் இந்த ஊழல் செயற்பாடுகள் மூலம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வந்து இன்றும் நடமாடிக்கொண்டிருக்கும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் கோரிக்கையாக முன் வைக்கிறோம். அப்படி இல்லை என்றால் இங்கு முதலீடு செய்யப்பட்ட வங்கிகளின் பணங்கள் எல்லாம் இந்த கடனுக்காக எடுக்கப்பட்டு மிக மோசமான ஒரு சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஊழலை விசாரிப்பதன் ஊடாகத்தான் இந்த நாட்டில் முன்னேற்றகரமான செயற்பாடுகளைச் செய்ய முடியும். ஜனாதிபதி இனப்பிரச்னைக்கு இவ் வருடத்துக்குள் தீர்வு என மீண்டும் அறிவிக்கத் தொடங்கி இருக்கிறார்.

எங்களை பொறுத்தவரை தீர்வு என்பது எப்படி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. அந்தக் கேள்வியை ஜனாதிபதியிடமே நாங்கள் கேட்கின்றோம்.

வடக்கு-கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற வேலை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அது புத்தசாசன அமைச்சாக இருக்கலாம், வனவள திணைக்களமாக இருக்கலாம், வன ஜீவராசிகள் திணைக்கள மாக இருக்கலாம். இப்படி திணைக்களங்களிடம் அதிகாரங்களைக் கொடுத்து விட்டு இனப்பிரச்னைக்கு தீர்வு என்பது எப்படி சாத்தியாகும்? – என்றார்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் குறித்து கவலை

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் குறித்து இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தில் சில பாராட்டத்தக்க விதிகள் இருந்தாலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

பல ஆண்டுகளாக கோரும் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தில் சில மாற்றங்களை வரவேற்றாலும், அந்த அமைப்பு இரண்டு குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளது.

முதலாவதாக, முன்மொழியப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட மற்ற அனைத்து எழுதப்பட்ட சட்டங்களையும் மீறுவதாக கூறியுள்ளது.

இரண்டாவதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இரகசியப் பிரமாணத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதிற் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தின் வினைத்திறன் முழுமையாக அதனை அமுல்படுத்துவதை பொறுத்தே அமையும் எனவும் இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கு மேலதிக மாற்றம் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபைச் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஏற்பாடுகள், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிகள், நியமங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (06) வியாழக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் விசேடமாக ‘இலஞ்சம் அல்லது ஊழலுக்கு எதிரான விடயங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு’என்ற பெயர் வடிவிலான சுயாதீன ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இடையறா வழியுரிமையையும், பொது இலட்சியையொன்றையும் கொண்டிருக்க வேண்டும்.

தவிசாளர் உட்பட மூன்று உறுப்பினர்களை கொண்டதாக ஆணைக்குழுவின் அமைப்பு காணப்படும்.சட்டம் – மருத்துவ கணக்காய்வுசட்டம் – மருத்துவக் கணக்கியல், பொருளியல், சர்வதேச தொடர்புகளும் இராஜதந்திர சேவைகள், பகிரங்க அலுவலக முகாமைத்துவம் அல்லது பொது முகாமைத்துவம் ஆகிய துறைகளில் ஆகக்குறைந்தது 20 ஆண்டுகால சேவைகளை கொண்டிருத்தல் வேண்டும்.

ஆணைக்குழுவின் ஒவ்வொர் உறுப்பினர்களும் இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும், அறுபத்திரெண்டு வயதிற்கு மேற்பட்டவராக இருத்தலாகாது, உடல் ரீதியிலும், உளரீதியிலும் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும். அத்துடன் தகுதி வாய்ந்தவராகவும், நேர்மையானவராகவும், உயர் ஒழுக்கமுடையவராகவும், நன்மதிப்புள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் சம்பளம் பெறும் தொழில்களில் ஈடுபட்டிருப்பின் அவற்றை துறத்தல் வேண்டும். அத்துடன் ஆணைக்குழுவின் உறுப்பினராக பதவி வகிக்கும் போது சம்பளம் பெறும் சேவைகள், உயர் தொழில்கள் ஆகியவற்றை தொடர கூடாது.

ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினராக பதவியேற்க முன்னர் அவர்கள் தங்களின் அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையும், பொறுப்புக்களையும் அரசியலமைப்பு பேரவைக்கு வெளிப்படுத்த வேண்டும்.

ஆணைக்குழுவின் தவிசாளர் ஐந்தாண்டு காலத்திற்கும், ஏனைய உறுப்பினர்கள் நான்காண்டு காலத்திற்கும் பதவி வகிப்பார்கள். இவர்களின் சம்பளம் பாராளுமன்றத்தின் திரட்டு நிதியத்தின் மீது பொறுப்பாக்கப்பட்டுள்ளது, பதவி காலத்தின் போது சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர குறைக்கப்பட கூடாது.

ஆணைக்குழுவானது 158 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் அதன் பணிகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்திற்கு பொறுப்புள்ளதாகவும் பொறுப்பு கூற வேண்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 159 ஆவது உறுப்புரையின் பிரகாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆணைக்குழுவின் செயலாற்றுகை தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(1) பிரிவு 41 மற்றும் 65ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணைக்குழு அதன் தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கும் அதன் பணிகளை நிறைவேற்றுவதற்குமான கூட்ட நடப்பெண் இரண்டு உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

ஆணைக்குழுவின் பொறுப்புக்களாக விதிகளை அழுத்திக் கூறுதல், வலியுறுத்தல் ஊடாக ஊழலை தடுத்தல் தொடர்பான கல்வி அல்லது பயிற்சியை உரிய தரப்பினருக்கு வழங்கல், ஊழல், அதற்கான காரணங்களும் அதன் பாரதூரத்தன்மை மற்றும் அதனால் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள் என்பன தொடர்பாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல், ஊழலைத் தடுத்தல், ஊழலுக்கு எதிரான போராட்டத்திலும் ஈடுபடல். ஆணைக்குழுவானது குடியியற் சமூகத்தினதும், அரச சார்பற்ற மற்றும் சமுதாய அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்களினதும் முனைப்பான பங்குப்பற்றலை ஊக்குவித்தல் வேண்டும்.

Posted in Uncategorized

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படின் ஜனாதிபதி சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒன்று.

இந்நிலையில் இந்த சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நீதியமைச்சர், “புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கான, சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அது வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைவடைந்துள்ளது.

எனவே, அந்த ஆணைக்குழுவுக்கு புதிய சட்டத்தின் பிரகாரம் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். கடந்த காலங்களில் சுயாதீனத்தன்மையைக்கருதி ஓய்வுபெற்றவர்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டனர்.

ஆனால் சேவைகள் சிறப்பாக இடம்பெறவில்லை. எனவே, சிறப்பாக செயற்படக்கூடியவர்களை நியமிப்பதற்கும் ஏற்பாடுகள் உள்ளன.

சொத்து விபரங்களை வெளியிடுவது ஒரு சிலருக்கு விலக்களிக்கப்பட்டுவந்தது.

எனினும், புதிய சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி, மாகாண முதல்வர்கள், ஆளுநர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்காமல் நாணய நிதிய கடனுதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – சபா குகதாஸ்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயம் இல்லை காரணம் ஐெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து பிரேமதாச ,சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச போன்ற ஐனாதிபதிகளின் காலத்திலும் கிடைத்தது ஆனால் அவ் உதவி மூலம் நாடு வளர்வதற்கு பதிலாக ஊழல்ப் பெருச்சாளிகளே வளர்ந்தன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை  உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை கிடைத்த உதவியை விட பெருந் தொகையான உதவி இம்முறை கிடைக்கவுள்ளது.

இவ் உதவி பல கடிமான நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் தான் இலங்கைக்கு கிடைக்கின்றது இதனால் சிறிது காலம செல்ல நிபந்தனைகளின் பாதிப்பை பொது மக்கள் எதிர் நோக்க வேண்டியுள்ளதை புரியாது பாராட்டுக்களும் வெடி வெடிப்புக்களும் நடைபெறுவதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

மனிதவுரிமை மீறல்களுக்கான நீதி கொடுக்கப்படாமல் உள் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நாணய நிதியத்தின் கடன் உதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சாத்தியமானது இல்லை.

ஆகவே, கிடைக்கும் கடன் உதவி ஊழல் வாதிகளை பாதுகாக்கவே பயன்பட போகிறது என்ற கசப்பான உண்மையை நாட்டு மக்கள் வெகு விரைவில் உணர்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

75 ஆண்டுகளாக இடம்பெறும் ஊழல் மோசடிகளே இலங்கையின் யாசகம் பெறும் நிலைக்கு காரணம் – பேராயர்

சுதந்திர தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி எமது நாடு சிறப்பாகவுள்ளதாக வெளிநாட்டு தூதுவர்களிடமும், இராஜதந்திரிகளிடமும் காண்பித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.

கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகளே இதற்கு காரணமாகும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது இலங்கை பாரிய நெருக்கடி மிக்க நாடாக காணப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்ற ஊழல் மோசடிகளால் இந்த நிலைமை ஏற்பட்டது.

இலங்கை இன்று பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி, சகல துறைகளிலும் வீழ்ச்சியடைந்த நாடாக காணப்படுகிறது.

பொருளாதார சீர்குலைவால் மாத்திரமின்றி அனைத்து துறைகளினதும் சீர்குலைவின் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.

எமது மக்கள் சரியான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை. நீதியை போன்றே சரியானவற்றை நடைமுறைப்படுத்துவதை இன்று மக்கள் மறந்துள்ளனர்.

தமக்கு ஏதேனுமொன்று கிடைக்கப் பெறும் என்ற எதிர்பார்ப்பிலேயே அனைத்தையும் நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

உயர் மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை எவரேனும் ஒருவரிடம் ஏதாவதொன்றை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பெப்ரவரி 4ஆம் திகதி என்ன சுதந்திர தினத்தை கொண்டாடினோம்?

21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, தேசிய கொடியேற்றப்பட்டு, வீதிகளில் மரியாதை அணிவகுப்புக்களை ஏற்பாடு செய்து, இது சிறந்த நாடு என்பதை தூதுவர்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் காண்பித்தோம்.

ஆனால், மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.

இதுவா சுதந்திரம்? புரட்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் என்று ஜனாதிபதி கூறுகின்றார். அது எமது சுதந்திரமா அல்லது ஜனாதிபதியின் சுதந்திரமா?

இலங்கை இதற்கு முன்னர் இழைத்துள்ள பல தவறுகளின் காரணமாகவே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் பிரதானமானது திறந்த பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தியமையாகும்.

எமது நாட்டில் காணப்படும் பொருட்களுக்கான தட்டுப்பாடு இந்தியாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. சீனாவுடனும் இவ்வாறான உறவே காணப்படுகிறது.

தற்போதுள்ள கடனை மீள செலுத்த முடியாமல், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மேலும் கடன் பெறவுள்ளனர். நாம் எமது தாய்நாட்டை சீரழித்துள்ளோம் என்றார்.

நாட்டில் ஊழல் மோசடி தீவிரமடைந்துள்ளது – தம்மரத்ன தேரர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாட்டில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. பொதுத்தேர்தலை நடத்தினால் ஆரம்ப கட்டமைப்பில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. ஏனெனில் அரசியல்வாதிகள் அனுமதி பத்திரம் பெற்ற ஊழல்வாதிகள் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.

மிகிந்தலை ரஜமஹா விகாரையில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 31) இடம்பெற்ற ஊடகவியளலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது,தேர்தலை நடத்திய உடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமா,சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்குமாறு.தேர்தலை நடத்தினால் ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்கள்.

பிரதேச சபை, மாநகர சபை, மாகாண சபை, பாராளுமன்றம் என அனைத்து அரச கட்டமைப்பு ஊழல் மோடியால் துறைபோயுள்ளது.

அரசியல்வாதிகள் அனுமதி பத்திரம் பெற்ற ஊழல்வாதிகளாக உள்ளார்கள். எவர் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் வாழ்வதற்கான போராட்டத்தை தொடர வேண்டிய நிலை தற்போது காணப்படுகிறது.

பொதுத்தேர்தலை நடத்தினால் ஆரம்ப கட்டமைப்பில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்கள் நிதியை மோசடி செய்ய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.அடி மட்டத்தில் இருந்து ஊழல் மோசடி தீவிரமடைந்துள்ளது.

பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை உள்ளுராட்சி மன்ற சபைகள் தோற்கடிக்கின்றன.உள்ளூராட்சி மன்றங்கள் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுகின்றன.உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் ஊழல் மோசடிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம்.அரச நிதி கொள்ளையடிக்கப்பட்டதால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.மோசடி செய்யப்பட்ட நிதியை அரசுடமையாக்க வேண்டும் என்றார்.

ஊழல், பாலியல் இலஞ்சத்துக்கெதிரான சட்ட மூலங்கள் ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும் – நீதி அமைச்சர்

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். பாலியல் இலஞ்சம் கோருவதற்கு எதிரான விதிவிதானங்கள் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன்.

பாலியல் இலஞ்சம் கோரலினால் பாதிக்கப்பட்ட தரப்பினரது இரகசியத்தன்மையை பாதுகாக்கும் வகையில் புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதியமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு அரச சேவை மாத்திரமல்ல தனியார் சேவையும் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளது. யுத்த காலத்தில் நாடு வங்குரோத்து நிலை அடையவில்லை.யுத்த காலத்தில் வெளிநாட்டு கையிருப்பு 7 பில்லியன் டொலர் வரை திறைசேரியில் சேமிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளிநாட்டு கையிருப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டு நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு மத்திய வங்கி பொறுப்புக் கூற வேண்டும். உண்டியல் மற்றும் அலாவா முறைமை ஊடான பண அனுப்பல்களுக்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியமை தற்போது பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணியாக உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு தனியார் தரப்பினரது பங்களிப்பு இன்றியமையாததாகும்.கடந்த 11 வருட காலமாக இலங்கைக்கு முறையாக செலுத்த வேண்டிய 54 பில்லியன் டொலர்களை பிரதான நிலை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள்.இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.

ஊழல் மோசடி இலங்கை வங்குரோத்து நிலை அடைவதற்கு பிரதான காரணம் என சர்வதேசம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.நடைமுறையில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டத்தின் ஊடாக உருவாக்கவுள்ளோம்.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்த விபரங்களை வெளியிடுவதற்காக 1975 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.தற்போதைய சூழலில் இந்த சட்டம் செயற்பாடற்றதாக உள்ளது. ஆகவே இந்த சட்டத்தை நீக்கி சொத்து விபரங்களை ஒன்லைன் ஊடாக பதிவு செய்யக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்திற்கு அமைய ஊழல் ஒழிப்பு சட்டத்தில் புதிய சரத்துக்களை உள்ளடக்கவுள்ளோம்.

ஜனாதிபதி, ஆணைக்குழுக்களின் தலைவர்கள், ஆளுநர்கள், மாகாண சபை முதலமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பழைய சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.ஆனால் புதிய சட்டத்தில் இவர்கள் அனைவரையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது இலங்கைக்கு மிக முக்கியமானதொரு சட்டமாகும்.

பாலியல் இலஞ்சம் கோருவது பாரதூரமான குற்றமாகும்.அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பாலியல் இலஞ்சம் கோரல் நெருக்கடிக்கு உள்ளாகும் பெண்கள் பெரும்பாலும் அவற்றை பகிரங்கப்படுத்துவது இல்லை.தமக்கு நேர்ந்த அநீதியை வெளியில் குறிப்பிட்டால் தமக்கும்,தம்மை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற நிலையில் இருந்துக் கொண்டு அவர்கள் அந்த கொடுமைகளை பகிரங்கப்படுத்துவதில்லை.

சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலத்தில் பாலியல் இலஞ்சம் கோரலினால் பாதிக்கப்பட்ட தரப்பினரது இரகசியத்தன்மையை பாதுகாக்கவும்,பாலியல் இலஞ்சம் கோரியவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் விசேட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.இந்த சட்டமூலம் எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.