மகாவம்சம் உலக நினைவக மரபுரிமை ஆவணமாக யுனெஸ்கோவினால் அங்கீகாரம்

இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலான மகாவம்சத்திற்கு யுனெஸ்கோ ஸ்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார ஸ்தாபனமான யுனெஸ்கோ (UNESCO), தமது சர்வதேச நினைவகத்தில் பாதுகாத்துவரும் ஆவணப் பொருட்களின் பட்டியலில் மகாவம்சத்தினையும் இணைத்துள்ளது.

கி.பி 6 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து இலங்கையின் வரலாற்றைக்கும் கூறும் மகாவம்சத்தின் நம்பகத்தன்மை இலங்கையிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

மேலும் மகாவம்சம் தென்கிழக்கு ஆசியாவில் பௌத்தத்தை பிரபலப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது எனவும் மகாவம்சத்தின் பல கையெழுத்துப் பிரதிகள் பல நாடுகளில் இருப்பதுடன், இந்நூல் பேரரசர் அசோகரின் வரலாற்றை அறிய பெரும் பங்காற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஐ.நா முழு ஒத்துழைப்பு வழங்கும் – ஐ.நா. பொதுச் செயலாளர் உறுதி

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸின் பரிஸ் நகரில் நடைபெறுகின்ற ‘புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்’ தொடர்பிலான மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டாரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு உறுதிளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடம் தெளிவுபடுத்தினார்.

நிலையான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுகின்ற போதும் வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

நிலையான அபிவிருத்து இலக்குகளை மேம்படுத்தும் அதேநேரம் காலநிலையினால் ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புக்களை மட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட உபாய மார்க்க திட்டங்களை எடுத்துக்காட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கமைய முன்னெடுக்கப்படும் ‘காலநிலை சுபீட்சத்துக்கான திட்டமிடல்’ தொடர்பிலும் செயலாளர் நாயகத்துக்கு விளக்கமளித்தார்.

பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் , கடன் மறுசீரமைப்பு மற்றும் காலநிலை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களின் போது இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இடையிலான ஒத்துழைப்புகளை பலப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்தக் கோரிக்கை

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் குறித்துத் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகள், அச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறும், அச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்திடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முறையற்ற பயன்பாடு குறித்துக் கண்டனத்தை வெளிப்படுத்தி பேராசிரியர்களான ஜயதேவ உயன்கொட, அர்ஜுன பராக்கிரம, சுமதி சிவமோகன் ஆகியோர் உள்ளிட்ட 156 தனிநபர்களும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், சட்ட மற்றும் சமூக நிதியம், தேசிய சமாதானப்பேரவை உள்ளிட்ட 25 சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மையகாலங்களில் 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் மற்றும் அச்சட்டப்பிரயோகத்தின் ஊடாகக் கருத்துச்சுதந்திரம் மீறப்படல் என்பன தொடர்பில் நாம் தீவிர கரிசனை கொண்டுள்ளோம்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமென உருவாக்கப்பட்ட இச்சட்டத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் சட்டத்தரணிகளை மௌனிக்கச்செய்வதற்கும், அவர்களைத் தண்டிப்பதற்கும் அரசாங்கம் பயன்படுத்திவருகின்றது.

அதன் ஓரங்கமாக அண்மையில் நடாஷா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகர ஆகியோர் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டமையைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உள்நாட்டில் தனிச்சட்டமாக நிறைவேற்றப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்துவதென்பது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் சார்ந்த இலங்கையின் அணுகுமுறை தொடர்பான முக்கிய அளவுகோலாகும்.

அவ்வாறிருக்கையில் அண்மையகாலங்களில் இலங்கையினால் இச்சட்டம் பிரயோகிக்கப்படும் முறை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு அதன் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தது.

எனவே இச்சட்டத்தின் தவறான பயன்பாடு, அச்சட்டத்தின் ஊடாக இலக்குவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் தரப்பினருக்கு மாத்திரமன்றி, தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

அதுமாத்திரமன்றி மனித உரிமைகளைக் கையாளும் முறைமை குறித்தும், இச்சட்டப்பிரயோகம் மீதான தேசிய மற்றும் சர்வதேச அழுத்தங்கள் குறித்தும் இலங்கை அரசாங்கம் பெருமளவுக்குக் கவனம் செலுத்தவில்லை என்பதை அண்மையில் இடம்பெற்ற கைதுகள் எடுத்துக்காட்டுகின்றன.

தேசிய ரீதியான அல்லது இன, மதரீதியான வெறுப்பைத் தூண்டுவதை கருத்துச்சுதந்திரத்தை நசுக்குவதற்கான ஆயுதமாக இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்திவருகின்றது. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் தனிநபர்களின் கருத்துக்களுக்காக அவர்களை இலக்குவைப்பதற்கும், பகிரங்கமாக அச்சுறுத்துவதற்குமான துணிச்சலை பேரினவாதக்குழுக்களுக்கு வழங்கியுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறும், அச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்று அக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை செய்யாதுவிடின் சர்வதேச சமூகம் செய்வதற்கு நேரும் – ஐ. நா. மனித உரிமைகள் பேரவை காட்டம்

கடந்த கால மீறல்கள் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூறல் செயல்பாடுகளை முன் னெடுக்கவில்லை. இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாதுவிடின் சர்வதேச சமூகம் அதனை பூர்த்தி செய்வதற்கான பங்கை வகிக்க முடியும் – இவ்வாறு ஐ. நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நாடா அல்-நஷிப் எச்சரித்துள்ளார்.

அத்துடன் நம்பகமான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என்றும் இலங்கை தொடர்பில் அவர் நேற்றுமுன்வைத்த வாய்மூல அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடக்கிறது. இதில், இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை நேற்று வாசிக்கப்பட்டது. பிரதி ஆணையாளர் இதனை முன்வைத்தார்.

அதில், “ஆழமான அரசமைப்பு மறுசீரமைப்புகளை மேற்கொண்டு, பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது மாத்திரமல்லாமல் மனித உரிமைகளை பாதுகாப்பதையும் உறுதிப்படுத்துமாறு இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தை அலுவலகம் வலியுறுத்துகின்றது.

உள்ளூர் பதற்றம் மற்றும் முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி ஆரம்பித்துள்ள பேச்சுகள் மற்றும் தொல்பொருள், வனவள திணைக்களம் மற்றும் படைத் தரப்பினருக்கு காணிகளை சுவீகரிக்கப் போவதில்லை என்ற உறுதி மொழி ஆகியவற்றுடன் அனைத்து தரப்பினருக்குமான ஞாபகார்த்த நினைவுசின்னம் உட்பட கடந்தகால விடயங்களை கையாள்வது தொடர்பான அறிவிப்புகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நாங்கள் வரவேற்கின்றோம்.

எனினும் இந்த விடயங்கள் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஊடாக இந்த உறுதிமொழிகள் தெளிவாக தெரியக்கூடிய வகையில், இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நல்லிணக்க பொறிமுறையான உண்மை ஆணைக்குழு தொடர்பான அறிவிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் இரண்டு ஆணைக்குழுக்களை இலங்கை அரசாங்கம் அமைத்திருந்தது. எனினும், அந்த ஆணைக்குழுக்கள் மூலம் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிமனை பாதிக்கப்பட்டவர்களை திருப்தி செய்யும் வகையில் எதிர்பார்த்த இலக்குகளை அடையவில்லை. கடந்த காலம் தொடர்பான பொறுப்புக்கூறலில் கணிசமான இடைவெளி காணப்படுகின்றது. தண்டனை விலக்களிப்பு காணப்படும் வரை நீடித்த சமாதானத்தை அடைய முடியாது. 51/1 தீர்மானத்தின் கீழ் பொறுப்புகூறலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் குறித்த முன்னேற்றம் தொடர்பாக அதற்கான குழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இது தற்போது முன்னெடுக்கப்படும் குற்றவியல் விசாரணைகளுக்கு உறுதியான ஆதரவளிக்கும் ஒன்றாக இருக்கும். ஐ. நா. மற்றும் ஏனைய மூலங்கள் ஊடாக சேகரிக்கப்படும் தரவுகள் எதிர்கால பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த செயல்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் முக்கிய பங்கை வகிப்பார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகள் மற்றும் குடிசார் அமைப்புக்களுடன் செயல்திறன் மிக்க ஈடுபாடு இதில் இருக்கும். கடந்த கால மீறல்கள் குறித்து இலங்கை அதிகாரிகள், நம்பகமான விசாரணைகள் மற்றும் வழக்கு தொடுக்கும் செயல்பாடு உள்ளிட்ட ஏனைய பொறுப்புகூறல் செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை. இந்தப் பொறுப்புகூறல் செயல்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாதுவிடின் சர்வதேச சமூகம் அதனை பூர்த்தி செய்வதற்கான பங்கை வகிக்க முடியும்” – என்றார்

ஒரு தசாப்தகாலப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் – ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்

இலங்கைக்குக் கடந்த ஒரு தசாப்தகாலமாக விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட ஆணையாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க்கின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (19) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் முதல்நாள் அமர்வில் தொடக்கவுரை ஆற்றுகையிலேயே இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இலங்கையை எடுத்துநோக்குமிடத்து, பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் கூறுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பது கவலைக்குரிய விடயமெனச் சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க், ‘இருப்பினும் இலங்கை தொடர்ச்சியாக எம்மோடு இணைந்து செயலாற்றிவருகின்றது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஒரு தசாப்தகாலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணைபெற்ற பலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததாகவும், அவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டுமெனத் தாம் ஊக்குவிப்பதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் திங்கட்கிழமை (19) ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தொடரின் திங்கட்கிழமை (19) ஆரம்ப அமர்வில் இலங்கை குறித்து மிகச்சொற்பளவான விடயங்கள் மாத்திரமே பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை (21) இலங்கை நேரப்படி மாலை 6.30 மணி (ஜெனிவா நேரப்படி பி.ப 3 மணிக்கு) இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை வாசிக்கப்படவுள்ளது.

இவ்வறிக்கையில் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற 51/1 தீர்மானத்தின் பிரகாரம் நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல்மோசடிகள் என்பன மனித உரிமைகள்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகள் தமது கரிசனைகளை வெளிப்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டாலும், இம்முறை இலங்கை தொடர்பில் புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படமாட்டாது.

மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவத்தினர் மீது பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் – ஐ.நா மீளாய்வுக்குழு பரிந்துரை

வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்குப் பரிந்துரைத்திருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழு, அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி இன, மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வுப்பேச்சு மற்றும் அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்துமாறும் அக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழுவானது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த மீளாய்வினைக் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்தது.

இம்மீளாய்வின்போது கண்டறியப்பட்ட விடயங்களையும், மனித உரிமைகள் பாதுகாப்பை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளையும் உள்ளடக்கிய 24 பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

‘உள்நாட்டிலும், பூகோள ரீதியிலும் மிகமோசமான சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தாலும்கூட, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளை இலங்கை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது.

அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் இலங்கை முன்னேற்றமடைந்திருக்கின்றது. அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தமும், தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமும் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும், ஜனநாயக ஆட்சி நிர்வாகத்தையும், நிதியியல் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்தியதுடன் தேர்தல் செயன்முறையில் வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்தியது.

ஊழல் ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று மத்திய வங்கிச் சட்டமூலமானது அவ்வங்கியின் சுயாதீனத்தன்மையை வலுப்படுத்துவதுடன், நீண்டகால அடிப்படையில் பொருளாதாரத்தின் நிலைபேறானதன்மையினை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டிருக்கின்றது’ என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதேவேளை இம்மீளாய்வின்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் 106 பேர் உரையாற்றியதுடன் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், சீனா, இந்தியா, டென்மார்க், ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ், மாலைதீவு, நேபாளம், ரஷ்யா உள்ளடங்கலாக 101 நாடுகள் பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.

இலங்கைப் பாராளுமன்றத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மீதான திருத்தங்கள், சர்வதேச சட்டங்களுக்கு ஏற்புடைய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை தயாரிக்கும் செயன்முறையை நோக்கிய இடைக்கால நடவடிக்கையாக அமைந்தது.

அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் சட்டத்தைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

மேலும் வடமாகாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட பிரிவொன்று ஜனாதிபதி செயலகத்தின்கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அப்பிரிவானது வடமாகாண அபிவிருத்தி, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதையும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழு ஆகியவற்றுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதையும் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

அடுத்ததாக காணாமல்போனோர் குறித்த பெரும்பாலான முறைப்பாடுகள் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், அவைகுறித்த விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகிவருகின்றது.

அத்தோடு இழப்பீட்டுக்கான அலுவலகமானது இதுவரையில் 4610 சம்பவங்கள் தொடர்பில் அவர்களது குடும்பத்தினருக்கு மொத்தமாக 277.9 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்கியிருக்கின்றது. அச்சம்பவங்களில் பெரும்பான்மையானவை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வட, கிழக்கு மாகாணங்களில் பதிவானவையாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலை முன்னிறுத்தி இலங்கையால் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய 294 பரிந்துரைகளையும் இம்மீளாய்வுக்குழு அதன் அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது. அவை ஏனைய நாடுகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் தொகுப்பாகும். அவற்றில் முக்கிய பரிந்துரைகள் வருமாறு:

சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற ஏனைய நடத்தைகள் மற்றும் தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தின் தேர்வுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் தெரிவுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான சர்வதேச பொருத்தனைகளின் தேர்வுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், மரணதண்டனையை இல்லாதொழிப்பதை இலக்காகக்கொண்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் இரண்டாவது தேர்வுக்குரிய செயன்முறையை அங்கீகரித்தல், சர்வதேச மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து பேணுதல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுதல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தல், பொருளாதார மற்றும் நிதியியல் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்தல், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளை மேம்படுத்தல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதுடன் அதன் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதற்கு அவசியமான வளங்கள் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்தல், நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடியவாறு விரிவான கலந்துரையாடல்களின் அடிப்படையிலான அரசியலமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், உலகளாவிய காலாந்தர மீளாய்வின் பின்னரான பரிந்துரைகளின் அமுலாக்கத்தை ஒருங்கிணைப்பதற்கான உள்ளகப்பொறிமுறை நிறுவுதல், வெறுப்புணர்வுப்பேச்சு மற்றும் அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் இன, மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வுப்பேச்சுக்களைத் தடுத்தல், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளைத் தண்டித்தல், இன, மத, சாதி, பால் மற்றும் வேறு எந்தவொரு அடிப்படைகளிலுமான அடக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், மரணதண்டனையை முற்றாக இல்லாதொழித்தல், அனைத்து வடிவங்களிலுமான சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல், காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு உரிய பதிலைக் கூறுவதுடன் இழப்பீட்டை வழங்கல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிசெய்தல், அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுத்தல், அனைத்து மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலும் இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளல் ஆகிய பரிந்துரைகளும் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கள் (19) ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி அமர்வில் வாசிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானதுடன். அன்றைய தினமே இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் எழுத்துமூல அறிக்கை வாசிக்கப்பட்டது.

அதுமாத்திரமன்றி. அக்கூட்டத்தொடரில் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்ட 51/1 என்ற புதிய தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விசேட தீர்மானங்களோ அல்லது விவாதங்களோ உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் 19ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தொடரில் எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை ஜெனிவா நேரப்படி, பி.ப 3 மணிக்கு இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூல உரை இடம்பெறவுள்ளது.

இதன்போது, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற 51/1 தீர்மானத்தின் பிரகாரம், நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் மோசடிகள் என்பன மனித உரிமைகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அன்றைய தினம் ஈரான் மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து முறையே எழுத்துமூல அறிக்கை மற்றும் உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூல அறிக்கை என்பனவும் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மேம்பட்டு வருவதாக ஐ. நா. தெரிவிப்பு

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டமும் இணைந்து மேற்கொண்ட பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு பணி அறிக்கையின்படி, இலங்கையில் 3.9 மில்லியன் மக்கள் அல்லது சனத்தொகையில் 17 வீதமானவர்கள் மிதமான நிலையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை கடந்த ஆண்டு ஜூன்/ஜூலையில் இருந்து கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது.

இதேவேளை கிட்டத்தட்ட 10,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர், இது கடந்த ஆண்டு 66,000 பேராக இருந்தது.

உணவுப் பாதுகாப்பின் முன்னேற்றம் சிறந்த உணவு நுகர்வில் இருந்து உருவாகிறது என ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. இது உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடை காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவை காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

நேர்மறையான போக்கு இருந்தபோதிலும், சில மாவட்டங்களில் குறிப்பாக கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்றவற்றில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகமாகவே உள்ளது.

தோட்டத் துறையில் உள்ள தேயிலைத் தோட்ட சமூகங்களுக்குள்ளும், சமுர்த்தி போன்ற சமூக உதவித் திட்டங்களை நம்பியிருக்கும் தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியிலும் மிக உயர்ந்த அளவிலான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை காணப்பட்டது.

ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடு

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்ட இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளது.

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அண்மையில் அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, அதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன் ஓரங்கமாக மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளனர்.

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்த சட்டத்தின் ஊடாக அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்குத் தயாராகிவருவதாகவும், எனவே இவ்விடயத்தில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறும் அம்முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் சானக பண்டார, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஓர் உறுப்புநாடு எனவும், ஆகவே மக்களின் ஜனநாயகத்தை ஒடுக்குவதற்குத் தயாராகிவரும் அரசாங்கத்தின் இந்நடவடிக்கையில் ஐ.நா உடனடியாகத் தலையிடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

‘பொதுமக்கள் தகவல்களை அறிந்துகொள்வதற்குத் தாம் கொண்டிருக்கும் உரிமையை ஊடகங்களின் வாயிலாகவே அனுபவிக்கின்றனர். இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது அரசாங்கமும் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்கு முற்படுகின்றனர்’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ‘ஊடகங்கள்மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் பொதுவானதொரு கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது. ஆனால் சர்வாதிகாரிகளால் எப்போதும் நாட்டை ஆளமுடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் அத்தகைய ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடித்துவிடுவார்கள்’ என்றும் சானக பண்டார எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உணவு பாதுகாப்பின்மை இன்னமும் உயர்மட்டத்தில் உள்ளது- ஐ.நா

இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் உணவுப்பாதுகாப்பில் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளதாக உலக உணவுதிட்டமும் ஐக்கியநாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனமும் தெரிவித்துள்ளன.

2023 பெப்ரவரி மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட உணவு பயிர் பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐநாவின் அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன.

இலங்கையில்தற்போது 3.9 மில்லியன் மக்கள் ( 17 வீதமானவர்கள்) மிதமான மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள ஐநா அமைப்புகள் கடந்த வருடம் ஜூன் ஜூலை மாதங்களில் இது 40 வீதமாக காணப்பட்டது என தெரிவித்துள்ளன.

கடந்தவருடம் 60,000 மக்கள் மிகவும் மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்தனர் தற்போது அது பத்தாயிரமாக குறைவடைந்துள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவி;த்துள்ளன.

உணவுநுகர்வில் ஏற்பட்ட முன்னேற்றமே உணவுபாதுகாப்பில் ஏறபட்ட முன்னேற்றத்திற்கு காரணம் என தெரிவித்துள்ள ஐநாவின் அமைப்புகள் உணவுவிலைகள் குறைவடைந்துள்ளமையும்,அறுவடை காலத்தில் விவசாய சமூகத்தினர் மத்தியில் காணப்பட்ட முன்னேற்றமும் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளன.

இந்த சாதகமான மாற்றம் தென்படுகின்ற போதிலும் கிளிநொச்சி நுவரேலியா மன்னார் மட்டக்களப்பு வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உணவுப்பாதுகாப்பின்மை இன்னமும் உயர்மட்டத்திலேயே உள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியிலேயே அதிகளவு உணவுப்பாதுகாப்பின்மை காணப்படுகின்றது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.