பௌத்த மத மேம்பாட்டுக்கு இந்தியா 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

இந்திய அரசினால் நன்கொடை அடிப்படையிலான உதவித்திட்டத்தின் கீழ் அமுலாக்கப்படும் பௌத்த மத மேம்பாட்டுக்கான 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி மற்றும் யாழ்ப்பாணக் கலாசார நிலைய செயற்பாடுகள் ஆகியவற்றின் அமுலாக்கம் குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்ரமநாயக்கவும் , இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இருவேறு பிரத்தியேக சந்திப்புகளை நேற்றுமுன்தினம் மேற்கொண்டிருந்தார்.

2020 செப்டெம்பர் 26 ஆம் திகதி இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின்போது பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான விசேட நன்கொடையாக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவித் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்ததுடன் அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின்போது கடந்த மார்ச் 28 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளப்பட்டவேண்டியதாகும்.

பௌத்த மதத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்களின் அடிப்படையில் கூட்டாக அடையாளப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் திட்டங்களை துரிதமாக அமுலாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென உயர் ஸ்தானிகரும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவும் இச்சந்திப்பின்போது இணங்கியிருந்தனர்.

அத்துடன் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள வணக்கஸ்தலங்கள் மற்றும் பிரிவேனாக்களில் சூரியக்கல மின் வசதிகளை அமைத்தல் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்தும் இப்பேச்சுக்களின்போது அடையாளம் காணப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணக் கலாசார நிலையம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, நவீன வசதிகளுடனான இக்கலாசார நிலையத்தினை மக்கள் பாவனைக்காக அனுமதிப்பது குறித்த கூட்டு கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

11 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய நன்கொடை உதவித்திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த கலாசார நிலையம் இந்திய இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பினை பிரதிபலிக்கும் சிறந்த உதாரணமாக உள்ளதுடன் இதில் இரு தள நூதனசாலை, 600க்கும் அதிகமான பார்வையாளர்களுக்கான வசதியினைக் கொண்ட கேட்போர் கூடம், 11 மாடிகளைக் கொண்ட கற்றல் நிலையம், திறந்த அரங்கமாக பயன்படுத்தக்கூடிய வசதியுடனான பொது சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.

மக்களை மையமாகக் கொண்ட இந்த நன்கொடைத் திட்டங்கள் ஊடாக மக்களின் நாளாந்த வாழ்வில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் இந்தியாவின் திடசங்கற்பத்தினை சுட்டிக்காட்டுவதாக இந்த இரு சந்திப்புகளும் அமைகின்றன.

இலங்கை அரசினால் முன்னுரிமைப்படுத்தப்பட்டதும் இலங்கையின் சகல சமூகங்களினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த திட்டங்கள் அமைந்துள்ளன.

இதுவரை இலங்கையில் இந்தியாவால் 85 நன்கொடைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் புதிய திட்டங்களில் இலங்கையின்  பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமை திட்டமும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா தொடர்ந்து உங்களுக்கு உதவி வழங்கும் – இந்திய தூதுவர்

மலையக மக்கள் இந்தியாவுடன் மிகவும் பலமான தொடர்புகளை கொண்டுள்ளனர். இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்கள் மனோ கணேசன் கூறியவாறு இலங்கையை கட்டியெழுப்ப பங்களிப்பு வழங்கி வருகின்றனர் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்தியாவுடன் நட்புறவு மற்றும் உறவுகளை பேணுவதற்கும் மலைய மக்கள் பங்களிப்பு வழங்குகின்றனர். இந்தியாவும் உங்களை மறக்காது. இந்தியா உங்களை எந்த நேரத்திலும் நினைவில் வைத்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

வீடுகளின் நிர்மாணம் ஊடாகவும் புலமைபரிசில்கள் மற்றும் கல்வி ஊடாகவும் இந்தியா தொடர்ந்தும் உங்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுகின்றது. நாங்கள் இங்கு வந்ததில் இருந்து இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றோம்.

இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தொடர்பில் இந்திய மக்கள் அறிவார்கள். நான் இன்று ஒன்றை கூற விரும்புகின்றேன். இந்திய மக்கள் இலங்கையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்குவார்கள். குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது வீடுகளை நிர்மாணிப்பதில் பழனி திகாம்பரம் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

இன்று இந்தியாவின் உதவி மூலம் உணவு, எரிபொருள் மருந்து உரம், ஆகியவற்றுடன் அரசி மாத்திரமல்லாமல். கோதுமை மாவும் இலங்கை மக்களுக்கும் இந்த பிராந்திய மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இளம் பிள்ளைகள், இளம் சிறுவர்கள், மற்றும் தாய்மாருக்கான பால்மாவை வழங்குவதற்கும் இந்தியா தயாராக உள்ளது. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என திருவள்ளுவர் கூறியுள்ளார்.

அதேபோன்று நீங்கள் கேட்காமலேயே நண்பன் செய்வதை போன்று இந்தியாவும் உதவி வழங்கும். உங்களின் நண்பான இந்தியா இருக்கும் என நான் உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகின்றேன். இலங்கை மக்களுக்கும் இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கும் இடையில் மிகவும் பலமான உறவு காணப்படுகின்றது.

நீங்கள் கட்டாயம் இந்தியாவிற்கு வருகைதர வேண்டும். அடிக்கடி இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளும் பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகின்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என கோருகின்றேன் என்றார்.