தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு

சுயநிர்ணய உரிமை, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தமிழர்களின் போராட்டத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தைப் பொங்கலை முன்னிட்டு பிரித்தானிய தமிழ் சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், எமது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார கட்டமைப்பிற்கு அவர்கள் ஆற்றிய பல பங்களிப்புகளையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

கல்வி, மருத்துவம், வணிகம், கலை, இலக்கியம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் அவர்களின் பங்களிப்புகள் தமிழ் சமூகத்தையும் நாட்டையும் வலிமையாக்கியுள்ளதாகவும் உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள தமிழ் மாணவர்களின் கடின உழைப்புக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் சுயநிர்ணயம், சமாதானம் மற்றும் நீதிக்காக தமிழ் மக்கள் ஆற்றிய தியாகங்களை நாம் நினைவுகூர வேண்டிய தருணமும் இது என்றும் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பதில் இலங்கை அரசாங்கம் இனியும் தாமதிக்காது என்பதை உறுதிசெய்ய தொழிற்கட்சி தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகிக்கும் என்றும் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் ; பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

இலங்கையில் இன்னமும் நம்பத்தகுந்த நல்லிணக்கப்பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கவலை வெளியிட்டிருக்கும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் ஏற்பாடு செயப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் வாழும் தமிழர்கள் அந்நாட்டுக்கு வழங்கியுள்ள பங்களிப்பை நினைவுகூர்ந்திருக்கும்  பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் எட் டெவி, தமிழர்களுக்கு எதிரான தொடர் அடக்குமுறைகள் மற்றும் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்வதில் நிலவும் பின்னடைவு என்பவற்றை மனதிலிருத்திச்செயற்படவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள அவர், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனேடிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடையை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு அவர்கள் இருவருக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ரிம்ஸ், இருப்பினும் நம்பத்தகுந்த நல்லிணக்கப்பொறிமுறையொன்று இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான லூயிஸ் பிரென்ச், டோன் பட்லர், சாரா ஜோன்ஸ் மற்றும் தெரேஸா வில்லியர்ஸ் ஆகியோர் தமிழ் மக்களுடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதுடன் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு தாம் அரசியல் ரீதியில் மேற்கொள்ளவேண்டிய மேலும் பல விடயங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு முழுமையான ஆதரவு வழங்குங்கள்; 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அமெ. காங்கிரஸிடம் கோரிக்கை

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும் தமிழ் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியில் நிர்ணயித்துக்கொள்வதை முன்னிறுத்தி சுதந்திரமான சர்வஜன வாக்கெடுப்புக்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்விற்காக இதனை முன்னெடுக்குமாறு 6 அமைப்புகளும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

1. உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு
2. வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு
3. நியூயோர்க் இலங்கை தமிழ் சங்கம்
4. இலங்கையின் சமத்துவம் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு
5. ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் நடவடிக்கை குழு
6. உலகத்தமிழர் அமைப்பு

ஆகிய 6 அமைப்புகளே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கூட்டாக கடிதமொன்றை அனுப்பியுள்ளன. புத்தாண்டு புதிய நம்பிக்கைகளைக் கொண்டு வருவதைப் போன்று, இலங்கையில் 7 தசாப்த காலத்துக்கும் மேலாக தொடரும் இனப்பிரச்னைக்கான தீர்வினை வழங்குவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதி செய்வற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு காங்கிரஸை வலியுறுத் துவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தம், தமிழ் மக்கள் மீது மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 3 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமலாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில், இறுதிக்கட்ட போரின் போது, சுமார் 1,46,679 தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் கருத்து தெரிவித்திருந்ததுடன், ‘இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறியிருப்பதாக’ அவர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் தமிழ் மக்களின் அரசியல் அடையாளத்தை சுதந்திரமாக நிர்ணயித்துக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் விவகாரத்தில், சர்வதேச சட்டங்கள் அனுசரிக்கப்படுவதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறித்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இவ்வாறான பின்னணியில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதை முன்னிறுத்திய அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் பயன்படுத்துமாறும், இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்துவதாக 6 புலம் பெயர் தமிழர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸிடம் கோரியுள்ளன.