அரசாங்கத்தின் புதிய நல்லிணக்க முயற்சிகளுக்கு வெற்றியளிக்குமா என பிரித்தானிய தூதுவர் சந்தேகம்

அரசாங்கத்தின் புதிய நல்லிணக்க முயற்சிகள் பலனளிக்குமா என சமூகத்தில் சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்றூ பட்ரிக்; அரசாங்கத்தின் இந்த முயற்சிகளிற்கு இன்னமும் பரந்துபட்ட ஆதரவு கிடைக்கவில்லை என்பதை உணரமுடிகின்றது. எனவும் தெரிவித்துள்ளார்

டெய்லி மிரருக்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிலவேளைகளில் ஜெனீவா தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் விதம் குறித்து நான் சிறியளவு கரிசனைகொண்டுள்ளேன்,சர்வதேச சமூகம் இலங்கை விடயங்களில் தலையிடுகின்றதா என்ற கேள்வி தனக்கு எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கேள்வி ; சமீபகாலங்களில் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் ஈடுபாட்டை அதிகரித்துள்ளதை காண்கின்றோம்-இரு நாடுகளிற்கும் இடையிலான இருதரப்பு உறவின் புதிய திசை எது?

பதில் ; எனக்கு இரு தரப்பு உறவில் புதிய திசை குறித்து எதுவும் தெரியாது, எனினும் எங்கள் இரு நாடுகளிற்கும் இடையில் நீண்டகாலமாக வலுவான பிணைப்பு காணப்பட்டது இது 75வருட கால இராஜதந்திர உறவுகளை சமீபத்தில் கொண்டாடுவதற்கு காரணமாக அமைந்தது.

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் கல்விகற்கும் இலங்கையர்கள் மத்தியில் பல தொடர்புகள் இருக்கலாம்,இது புரிய திசை தொடர்பானதல்ல மாறாக கொவிட்டும் பொருளாதார நெருக்கடிகளும் எங்கள் உறவுகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை உணரச்செய்துள்ளன.

இந்த நெருக்கடிகளில் இருந்து இலங்கை மீள்வதற்கு பிரிட்டன் பெரும் பங்களிப்பை வழங்கியது.

இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன் ஆகவே இது உறவுகளை வலுப்படுத்துதல் தொடர்பானது தவிர புதிய திசை குறித்தது அல்ல.

கேள்வி ; இரு தரப்பு உறவுகள் குறித்து வரும் இலங்கையர்கள் ஜெனீவா செயற்பாடுகள் குறித்து அதிகம் பேசுகின்றனர் – ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கிய நாடுகளில் பிரிட்டனும் ஒன்று இலங்கை நல்லிணக்கத்திற்கான சொந்த முயற்சிகளில் ஈடுபடும் அதேவேளை சர்வதேச தலையீடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டு வந்துள்ளது- நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை எடுத்துள்ள சமீபத்தைய நடவடிக்கைகளை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றதா?

பதில் ; நாங்கள் இணை அனுசரணை நாடுகளின் ஒரு பகுதி என்பது உண்மை, இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அமெரிக்கா கனடா மலாவி ஆகிய உட்படபல நாடுகள் தலைமை வகிக்கின்றன .

சிலவேளைகளில்இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் விதம் குறித்து நான் சிறியளவு கரிசனைகொண்டுள்ளேன்,சர்வதேச சமூகம் இலங்கை விடயங்களில் தலையிடுகின்றதா என ?

மனித உரிமை நிபுணர்கள் செயற்பாட்டாளர்களிடம் நீங்கள் பேசினால் அவர்கள் சீர்திருத்தங்கள் மற்றும் யுத்தத்தின் பாராம்பரியத்திற்கு தீர்வை காண்பதற்கான விடயங்களில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் பங்களிப்பில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இலங்கை மீது தனது கருத்துக்களை திணிப்பது சர்வதேச சமூகம் இல்லை.

கடந்த செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் வெளியான அறிக்கையை வாசித்துபார்த்தால் அது அரசாங்கம் முன்னேற்றம் காண்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றது அதேவேளை இன்னமும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டி உள்ளதை வலியுறுத்துகின்றது.

நான் மற்றுமொரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன் இருதரப்பு உறவுகளில் மனித உரிமைகள் மிகவும் முக்கியமான விடயம்.ஆனால் அது மாத்திரம் இருதரப்பு உறவுகளுக்கான விடயமல்ல. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பிரிட்டன் வழங்கிய பங்களிப்பு குறித்து நான் முன்னர் தெரிவித்தேன்.இந்த நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக பிரிட்டன் இலங்கையுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றது.

இருதரப்பு உறவுகளில் கருத்துவேறுபாடுகள் எழக்கூடும்.

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் தீர்மானம் குறித்து கருத்துடன்பாடு ஏற்பட்டதும் நாங்கள் 2019க்கு முன்னர் காணப்பட்ட நிலைமைக்கு திரும்பலாம் என நான் கருதுகின்றேன்.

கேள்வி ; உண்மை நல்லிணக்கம் ஆணைக்குழுவை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது- இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் ; இலங்கை எடுத்துள்ள ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்றுள்ளோம்.

நான் இலங்கைக்கு வந்து ஆறு மாதங்களே ஆகின்றன ஆகவே இது எனக்கு புதிய விடயம்.

இலங்கையில் பல வருடங்களாக மனித உரிமைகள் விடயங்களில் பணியாற்றிய மனித உரிமை நிபுணர்களுடன் நீங்கள் பேசினால் அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பிய கடிதங்கள் என்பவற்றை வைத்து பார்த்தல் இந்த விடயம் குறித்து போதியளவு கலந்தாலோசனைகள் இடம்பெறவில்லை என்ற கரிசனை காணப்படுவது புலனாகின்றது.

இந்த விடயங்கள் குறித்து கடந்தகாலங்களில் ஆராய்ந்த குழுக்கள் உள்ளன என தெரிவிக்கும் அவர்கள் இந்த குழுக்களின் அறிக்கைகள் வெளியாகவில்லை பகிரங்கப்படுத்தப்படவி;லலை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் பலனளிக்குமா என சமூகத்தில் சந்தேகம் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் இந்த விடயத்திற்கு புதியவன் என்ற அடிப்படையில் நான்இதனை இவ்வாறோ உணர்ந்துகொள்கின்றேன்.

அரசாங்கத்தின் முயற்சிகளை நான் வரவேற்கும் அதேவேளை பரந்துபட்ட மக்கள் மத்தியில் நான் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மூலம் அரசாங்கத்தின் இந்த முயற்சிகளிற்கு இன்னமும் பரந்துபட்ட ஆதரவு கிடைக்கவில்லை என்பதை உணரமுடிகின்றது.

கேள்வி ; இலங்கைக்கு நீங்கள் வந்து ஆறுமாதங்களாகின்றது – நிலைமை எவ்வாறானதாக காணப்படுகின்றது?

பதில் ; இலங்;கையில் எனது குறுகியகாலத்தின் போது நான் கருத்துபரிமாற்றத்தில் ஈடுபட்டவர்களின் கருத்தினையே நான் வெளிப்படுத்துகின்றேன் இலங்கை அரசாங்கம்முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்பவர்கள் உள்ளனர் அதேவேளை பல விடயங்களிற்கு இன்னமும் தீர்வு காணப்படவேண்டியுள்ளது.

யுத்தத்தின் பாரம்பரியம் குறித்த விடயங்களிற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டம்குறித்த கரிசனைகள் காணப்படுகின்றன -நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து சர்வதேச சமூகம் பல கரிசனைகளை கொண்டுள்ளது.

கேள்வி ; அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் கரிசனைகளை உள்வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது – சட்டமூலத்தின் புதிய வடிவம் குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில் ; உயர் நீதிமன்றம் இந்த சட்டமூலம் குறித்து தனது மதிப்பீட்டினை தெரிவித்துள்ளதால் நான் இது குறித்து பின்னரே உங்களிற்கு கருத்து தெரிவிக்கவேண்டும்.

அதனை ஆழமாக ஆராய்வதற்கான வாய்ப்பு எங்களிற்கு கிடைக்கவில்லை.

கேள்வி ; ஜெனீவா தீர்மானத்தினை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிவில் சமூகத்தினர் வரவேற்றுள்ளனர் என நீங்கள் தெரிவிக்கின்றீர்கள் -எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கே உள்ளது-இதற்கான பிரிட்டனின் பதில் என்ன?

பதில் ; அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் பகிரங்கமாக விவாதித்துள்ளோம் கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளோம்.

நான் முன்னர் சொன்னது போல தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவிவகித்தவேளை கருத்துடன்பாடு காணப்பட்டது.

அவ்வேளை இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தீர்மானம் குறித்து இணைந்து செயற்பட்டன.என்னை பொறுத்தவரை அது சிறந்த நடைமுறை.

ஆனால் தற்போது அரசாங்கம் தான் அந்த நிலைக்குதிரும்பவிரும்பவில்லை என தொவிpக்கின்றது.

நாங்கள் இவற்றை (ஜெனீவா தீர்மானம்) மோதலிற்காக முன்னெடுக்கவில்லை மாறாக பிரிட்டன் ஏனைய பல நாடுகளுடன் உலகின் எந்த பகுதியையும் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயற்படுகின்றது.

கேள்வி ; இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் காணப்படும் போது இரண்டு தீவிரபோக்குகள் காணப்படுவதை நாங்கள் காண்கின்றோம்-ஒரு தரப்பினர் நாட்டில் உள்ளனர் அவர்கள் குறைந்தளவு அதிகாரப்பரவலாக்கலை கூட ஏற்க தயாரில்லை-இன்னுமொரு தீவிரவாத போக்குடையவர்கள் புலம்பெயர் தமிழர்கள் அவர்கள் தனிநாட்டை கோருகின்றனர்.

இந்த இருதரப்பினர் மத்தியிலும் சமநிலையை காண்பதற்கு பிரிட்டன் உதவமுடியுமா?

பதில் ; இலங்கைமக்களிடம் பேசுவதே முதல் முக்கிய விடயம் என நான் தெரிவிப்பேன் -எவரும் தனிநாடு குறித்து பேசுவதை நான் காணவில்லை செவிமடுக்கவில்லை.

13 வது திருத்தம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன -அதிகாரப்பரவாலாக்கல் என்றால் என்ன என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

எனினும் தனிநாடுகுறித்த கருத்துக்கள் விவாதங்கள் எவற்றையும் நான் இலங்கைக்குள் காணவில்லை.

13 வதுதிருத்தத்தின் மூலமான குறிப்பிட்ட அளவு அதிகாரப்பரவலுடன் கூடிய ஐக்கிய இலங்கை என்பதிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது என்பதே இந்தியா பிரிட்டன் அமெரிக்கா ஆகியவற்றை உள்ளடக்கிய நாடுகளின் நிலைப்பாடாக உள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்பு

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச உள்ளிட்ட அதிகாரிகள், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதியொன்றை திங்கட்கிழமை (19) மல்வத்து அஸ்கிரி மகா மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தனர்.

இச்சட்டமூலத்திற்குப் பாராட்டு தெரிவித்த மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரியத் தரப்புப் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர் இதனை மேலும் பரிசீலனை செய்து பொது நிலைப்பாட்டை அறிவிக்கவும் இணக்கம் தெரிவித்தனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகச் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் மேலும் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்தனர்.

கலாநிதி மகவெல ரதனபால தேரர், கலாநிதி முருத்தெனியே தர்மரதன தேரர் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை இடைக்கால செயலகத்தின் பிரிவு தலைவர் (கொள்கை) கலாநிதி சி. வை. தங்கராஜா, மக்கள் தொடர்பு நிறைவேற்று அதிகாரி தனுஷி டி சில்வா, சிரேஷ்ட சட்ட நிறைவேற்று அதிகாரிகளான யஸ்மதா லொகுனாரங்கொட, துலான் தசநாயக்க, இணைப்பாளர் எஸ். டி. கொத்தலாவல ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

புலிகளால் பெளத்த மதத்திற்கு எவ்வித இடையூறுகளும் இருந்ததில்லை – வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர்

”விடுதலைப்புலிகளின் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்

வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில் இன்றைய தினம் இடம்பெற்ற குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த மத தலைவர்கள் ” குருந்தூர் மலை விடயமானது தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது. இதனை தனி ஒரு மதம் மட்டும் தனக்கானது என உரிமை கொண்டாட கூடாது. சிங்கள பெளத்தர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பது முரணானது, ஆனால் இங்கு தமிழ் பெளத்தர்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதுவே உண்மை.

தெற்கில் சம்பந்தமே இல்லாமல் சிங்கள பெளத்த கிராமத்திற்குள் கிறிஸ்தவ மதகுருவோ அல்லது சைவ பூசகரோ வந்து தங்கள் தளம் எனகூறி உரிமை கொண்டாடினால் சிங்கள பெளத்தர்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது விட்டுத்தான் கொடுப்பார்களா..?

அவ்வாறு இருக்கும் போது தமிழரின் பூர்வீக இடமான குருந்தூர்மலை பகுதியில் பெளத்த துறவி ஒருவர் தினமும் சென்று உரிமை கொண்டாடினால் தமிழர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வாறு சாத்தியப்படும்.

வணக்க ஸ்தலங்கள் எல்லா மதத்தவருக்கும் எல்லா இனத்தவருக்கும் உரியது சிங்கள பெளத்த என்றில்லாமல் நாங்கள் இலங்கையர்கள் யாரும் வணங்கலாம் என்ற பொதுநிலைக்கு நாங்கள் சிந்திக்க வேண்டும்.

மேலும் ஒரு சிலர் இவ்விடயத்தினை அரசியலாக்கி இனங்களுக்கிடையிலான முறுகலினை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றனர். இவ்வாறான தொல்பொருள் பகுதிக்கான இடத்தின் முழுப்பொறுப்பினையும் தொல்பொருள் திணைக்களம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் இதில் வேறு எந்த மதத்தவரும் தலையிடக்கூடாது” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இச் சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமசாரநாயக்க தேரர், நாகதீப ரஜமகா விகாரை விகாராதிபதி பூஜ்ய தவத கல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், மடுக்கந்தை விகாராதிபதி மூவ அட்டகம ஆனந்த தேரர், உலுக்குளம் விகாராதிபதி பெரிய உலுக்குளம சுமணதிஸ்ஸ தேரர், தவ்ஜீத் ஜும்மா பள்ளிவாசல் மெளலவி சதுர்தீன் மெளலவி, ஓமந்தை பங்கு தந்தை ஜெஸ்லீ ஜெகநாதன்,கணேசபுரம் கருமாரி நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரமசிறி பூ. முகுந்தன்சர்மா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

’தெமலோ’ இனவாதத்தை குறிக்கும் சொற்பதம், தமிழர் அல்லது திரவிடர் என்றே அழைக்க வேண்டும் – டயனா கமகே

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் இனவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும்.

தமிழர்களை ‘தெமலோ’ என்று குறிப்பிடுவதன் ஊடாகவே இனவாதம் வெளிப்படுகிறது. தமிழர்களை ‘தமிழர் அல்லது திரவிடர்’என்று அழைக்க வேண்டும்.

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்த காலம் முடிவடைந்து விட்டது.

ஆகவே 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பந்தய,சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டின் உயரிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாத காரணத்தால் 30 வருடகால யுத்தம் தோற்றம் பெற்று நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது.

ஆகவே நடைமுறைக்கு சாத்தியமான வகையில் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

நாடு என்ற முதலில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் முதலில் இனவாதத்தை இல்லாதொழித்து தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். அப்போது தான் சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும்.

தமிழ் நபர் ஒருவரை பார்த்து ‘தெமலோ’ என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.அங்கிருந்து தான் இனவாதம் தோற்றம் பெறுகிறது.

தமிழர்களை ‘தமிழர் அல்லது திரவிடர்’ என்று குறிப்பிட வேண்டும்.

அடிப்படை விடயங்களில் இருந்து மாற்றாத்தை ஏற்படுத்தினால் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தலாம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இனவாதம்,மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்த காலம் முடிவடைந்து விட்டது.

இளம் தலைமுறையினர் புதிய மாற்றத்தை நோக்கி பயணிக்கிறார்கள்,அதற்கமைய அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது நாட்டை பிளவுப்படுத்தும்,சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது.

நாட்டின் சுயாதீனத்தை உறுதிப்படுத்திய வகையில் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

இலங்கைக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திறன் உள்ளது – கனடா தூதுவர்

கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா தூதுவர் கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது இலங்கைக்கும் இதற்கான திறன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையாலும் கனடாவை போல அதிகளவு சாதிக்க முடியும்,கனடா தன்னை இருமொழி நாடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னிறுத்தியுள்ளது என எரிக்வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

கனடாவின் வாழ்க்கை பெருமளவிற்கு ஆங்கில பிரென்ஞ் ஆகியவற்றை கொண்டதாக காணப்படுகின்றது தமிழ் மொழியும் பயன்படுத்தப்படுகின்றது கனடா தன்னை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தன்னை இவ்வாறே முன்னிறுத்துகின்றது இலங்கை உடனான உறவுகளிலும் இது குறித்தே கவனம் செலுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ளோம் இது மிகவும் நீண்டகால கடினமான நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் இதனை சாதகமான அம்சங்கள் சாதகதன்மைகளுடன் முன்னெடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா ஒரு சிறந்ததேசமாக விளங்குவதற்கு இலங்கை தமிழர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார்.

இலங்கை தனது அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டுமாயின் நல்லிணக்கம் மிக அவசியம் அலி சப்றி

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்குமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மாத்திரமே அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்த அமைச்சர், சட்டம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவிற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் பணிகளை நிறைவேற்றுவதற்காக சர்வதேச மட்டத்தில் பல விரிவுரைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இடைக்கால செயலகம் அமைக்க ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக ஆணைக்குழுவின் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான அடித்தளத்தைத் தயார்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்காக புதன்கிழமை (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் அவசியத்தையும் அதனை ஸ்தாபிப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் விளக்கிய அமைச்சர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களையும் மேற்கொள்வதாகவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, மூன்று தசாப்த கால யுத்தத்தினால் இன, மத வேறுபாடின்றி அனைவரும் பாரிய சேதங்களை சந்திக்க நேரிட்டது என்று தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை நாட்டிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் எழுந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்காக ஸ்தாபிக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் முன்வைத்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் பொறிமுறைகளை ஆராய்ந்து இலங்கைக்குப் பொருத்தமான பொறிமுறையை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாவிட்டால் நாடு மீண்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும். எனவே சமூகத்தை தெளிவுபடுத்தி இதனைச் செயற்படுத்துவதற்கான ஆதரவைப் பெற வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

சுதந்திரம் பெற்று 20 வருடங்கள் நிறைவடையும் போது நல்லிணக்கத்தின் ஊடாக சிங்கப்பூர் அபிவிருத்தியடைந்த நாடாக மாறியுள்ளதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அசங்க குணவன்ச தெரிவித்தார்.

இலங்கை தனது அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டுமாயின் நல்லிணக்கம் மிகஅவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் துரதிர்ஷ்டவசமான யுகம் மீண்டும் ஏற்படாத சூழலை உருவாக்க முடியும் என சுட்டிக்காட்டிய அசங்க குணவன்ச, உள்நாட்டில் வெற்றிகரமான மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொறிமுறையை உருவாக்கத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காகவே இடைக்கால செயலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சட்டம் ,கொள்கைப் பிரிவு மற்றும் மக்கள் தொடர்பாடல் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் உரையாற்றிய வண.தம்பர அமில தேரர், கடந்த தேர்தலில் மதவாதமும், இனவாதமும் பாரியளவில் தலைதூக்கியதால், அந்த அனுபவத்தை மக்கள் மறக்க முன் இந்த செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு கோரிக்கைவிடுத்தார்.

ஜனாதிபதி தற்போது துணிச்சலான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வாறே மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெறாதிருக்க தேவையான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தம்பர அமில தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான உத்தரவாதம் என்ன? – பொது அமைப்புக்கள் கேள்வி

இலங்கையின் கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், புதிதாக ஸ்தாபிக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? வெளிப்படையாக பேசும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பலதரப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் பின்னணியில், அவர்களை மீண்டுமொரு முறை ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு கோருவது நியாயமானதா என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசாங்கம் ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டிருக்கும் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (11) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையிலான கூட்டறிக்கையொன்றை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, மனித உரிமைகள் அபிவிருத்திக்கான நிலையம், சட்டம் மற்றும் மனித உரிமைகள் நிலையம், முஸ்லிம் பெண்கள் அபிவிருத்திப் பேரவை, சமத்துவத்துக்கான யாழ். சிவில் சமூகம் உள்ளிட்ட 15 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து வெளிவிவகார அமைச்சரிடம் கையளித்தன.

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.

சமூகங்கள், குறிப்பாக உள்நாட்டுப் போரினால் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் சமூகங்கள் எதிர்கொண்ட மீறல்கள் மற்றும் துயரங்களை தீர்ப்பதில் உண்மை கண்டறிதல் முக்கிய பங்கு வகிக்கின்றது என நாம் நம்புகின்றோம்.

இருப்பினும், இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்படும் எந்தவொரு ஆணைக்குழு அல்லது நியாய சபையிலும் பாதிக்கப்பட்ட சமூகம் நம்பிக்கையற்றதாக காணப்படுகிறது.

இவ்விடயத்தில் கடந்தகால அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் உண்மையை கண்டறியும் செயன்முறை மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் இழைத்தோரை பொறுப்புக்கூறச் செய்யும் செயன்முறை ஆகியவற்றை இழுத்தடிக்கும் நோக்கம் கொண்டதாகவே அமைந்திருந்தது.

வெவ்வேறு அரசாங்கங்களினால் கடந்த 30 வருடகாலமாக உருவாக்கப்பட்டுவரும் ஆணைக்குழுக்களின் வரிசையில் இப்போது புதிதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் இணைந்திருக்கின்றது. கடந்தகால ஆணைக்குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளில் பெரும்பாலானவை இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை.

அவ்வாறிருக்கையில், புதிதாக ஸ்தாபிக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? வெளிப்படையாக பேசும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பலதரப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் பின்னணியில், அவர்களை மீண்டுமொரு முறை ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு கோருவது ஏற்புடையதா?

பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டறியப்படுவது இலங்கையில் வருடாந்தம் இடம்பெறும் நிகழ்வாக மாறிவிட்டது. இதுகுறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான முனைப்பு எதுவும் அரசாங்கத்திடம் இல்லை.

இதுகுறித்த விசாரணைகளுக்கு அவசியமான நிபுணர் குழுவொன்றை அமைத்து, அவசியமான நிதியை ஒதுக்கீடு செய்து, விசாரணை செயன்முறைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவற்றுக்கு இடையூறு விளைவிப்பதே அரசாங்கத்தின் வழமையான செயற்பாடாகக் காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் பொதுமக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்துமேயானால், முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டமொன்றை தயாரித்தல், பாதிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் வாக்குமூலம் வழங்குவதை தவிர்க்கும் வகையில் முன்னைய ஆணைக்குழுக்களிடம் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை தொகுத்தல், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவித்தல், வடக்கில் நிலவும் மிதமிஞ்சிய இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்தல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை மீளாய்வு செய்தல், இதன்போது ஆலோசனை செயலணி முன்வைத்த பரிந்துரைகளை கவனத்திற்கொள்ளல், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் பாரிய மனிதப்புதைகுழிகள் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறுபட்ட விரிவான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

இவற்றை நடைமுறைப்படுத்தாமல் அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குமேயானால், அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். பாதிக்கப்பட்ட தரப்பினர் நீண்டகாலமாக போராடி பெற்றுக்கொண்ட சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகளுக்கு தென்னாபிரிக்கா ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்ப தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து, ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடாத்திய அலி சப்றி

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் குறித்து தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சு முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், இம்முயற்சிகளுக்கு தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் விசேட ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றன.

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அவசியமான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை தென்னாபிரிக்காவும், இந்த ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்கான ஒத்துழைப்புக்களை சுவிற்ஸர்லாந்தும், இதற்குரிய நிதி உதவியை ஜப்பானும் வழங்குவதாக அறியமுடிகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஸுகொஷி ஹிடேகி, இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபக்ளெர் மற்றும் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சன்டைல் எட்வின் ஸ்கால்க் ஆகியோருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (11) வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இவ்வனைத்து தரப்புக்களும் மிக நெருக்கமாக பணியாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், இந்த இலக்கை அடைந்துகொள்வதில் இலங்கைக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கம்

மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இணக்கப்பாட்டுக்கு வருவதே குழுவின் முதற்கட்ட நடவடிக்கை என அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப கொண்டுவருவது இரண்டாவது நடவடிக்கை என கூறினார்.

இதேநேரம் பொறுப்புக்கூறல் நடவடிக்கைக்காக உண்மையைக் கண்டறியும் உள்ளக பொறிமுறையை நிறுவுவதே உபகுழுவின் மூன்றாவது படி என்றும் அலி சப்ரி குறிப்பிட்டார்.

இன நல்லிணக்க செயற்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி அதனூடாக அபிவிருத்தி அடைவதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அனுமதி கோரி சமர்ப்பித்த பத்திரத்திற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கோரும் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்கும் மற்றுமொரு முயற்சியாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதேபோன்ற பொறிமுறையை மாதிரியாகக் கொண்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க தேர்மனைக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தனர்.

யுத்தத்திற்குப் பிந்தைய சூழலில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அத்தகைய அமைப்பின் நன்மைகள் தீமைகள் குறித்து இருவரும் அங்கு கலந்துரையாடியுள்ளனர்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் 21 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும் இவர்கள், பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை விசாரிக்க தனித்தனி பெஞ்ச்களில் செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.