திருகோணமலை ஸ்ரீ லங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காணி விமானப்படை முகாமுக்கு வழங்க முயற்சி

திருகோணமலை மாவட்டம் குச்சிவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட பகுதியில் உள்ள 298 ஏக்கர் காணியில் உள்ள ஒலிபரப்புக் நிலையம் மூடப்பட்டு விமான படை முகாம் ஒன்றை நிர்மாணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஸ்ரீ லங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் இந்த காணி கடந்த 75 வருடகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காணியில் பிரத்தியேக ஒலிபரப்புக் நிலையம் அமைந்துள்ளது. உலகில் மிகப்பெரிய பிராந்தியங்களை உள்ளடக்கிய சிறு மற்றும் நடுத்தர அலைகளை ஒளிப்பரப்புகிறது.

இவ்வாறான ஒலிபரப்பு நிலையம் ஓமானில் உள்ளதுடன் அது தற்போது முழு நேரமும் இயங்குவதில்லை.குறைந்த செலவில் நீண்ட தூரம் செல்லும் இந்த அலைவரிசைகளை உலகின் பெரும்பாலான நாடுகள் மதம் மற்றும் ஏனைய பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றன. தற்போதைய வானொலியின் கீழ் சுமார் 75 ஆயிரம் டொலர்கள் வருமானம் பெறுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த பகுதி வலுவான அலைகள் இருக்கும் பகுதி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் 2021 ஆம் ஆண்டு வருமானத்தை ஈட்டிக் கொள்ளாத, பயன்படுத்தாத அரச வளங்களை மறுசீரமைப்பது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்த அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு அமைய வானொலி கூட்டுத்தாபனம் முறையான,சிறந்த நடவடிக்கைளை பின்பற்றி கனடா நாட்டு நிறுவனத்துடன் ஒன்றிணைந்து சூரிய சக்தித் திட்டத்தை ஆரம்பிக்கும் பணிகளை மேற்கொண்டது.

இதற்கமைய இந்த காணியை இலவச மானியப் பத்திரம் மூலம் ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்துக்கு மாற்றி உரிய செயற்திட்டத்துக்கு அமைய வருமானம் ஈட்டவும்,அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியத்தை இடைநிறுத்தவும் அமைச்சரவை இரண்டாவது அங்கீகாரம் வழங்கியது.

இதன்படி ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மேற்படி விதிவிலக்கு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், அனைத்துப் பரிந்துரைகளையும் பெற்றதன் பின்னர் இறுதி எழுத்துப்பூர்வ அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்களை காணி அமைச்சு 2023.04.11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் கையளித்தது.இந்த ஆவணங்களை முறையாக ஆராயாமல்,சுற்றுச்சூழல் தொடர்பில் அவதானம் செலுத்தாமல் ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தை மூடி விட்டு விமானபடை முகாம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ஆராய விமானப்படையின் அதிகாரிகளை நியமித்தார்.

இதனடிப்படையில் விமானப்படையின் குழு ஒன்று 2023.05.03 ஆம் திகதி விமானப்படையின் குழுவினர் திருகோணமலைக்கு சென்று நில அளவை நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் படை முகாம்கள் காணப்படுகின்ற நிலையில் இந்த பகுதிக்கு மேலதிகமாக விமானப்படை முகாம் ஒன்று தேவையில்லை என சிவில் உரிமைகள் அமைப்பு குறிப்பிடுகின்றமை கவனத்துக்குரியது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி உட்பட உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக சிவில் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

திருகோணமலையில் சீனாவின் யுனான் மாகாண ஆளுநரால் புத்தகப் பைகள் வழங்கி வைப்பு

திருகோணமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை (19) விஜயம் செய்த சீன நாட்டின் யுனான் மாகாண ஆளுநர் “சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து அன்பளிப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ் திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 30 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி வைத்தார்.

இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர், வித்தியாலய அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை – இந்தியா கடல்வழி மின் விநியோக ஒப்பந்தம் தயார்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மின்சாரத்தை கொண்டு வருவதற்கான உடன்படிக்கை கொள்கை ரீதியில் எட்டப்பட்டுள்ளது என்று அறிய வருகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின்சாரத்தை கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் சிறப்பு மின் கேபிளை அமைக்க இந்திய – இலங்கை அதிகாரிகள் உடன்படிக்கைக்கு வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சூழவுள்ள கடற்பரப்பில் இந்திய – இலங்கை எல்லைகளை பிரிக்கும் மணல்பரப்பின் ஊடாக இந்த மின்சார கேபிளை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர,

திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குதங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக இந்தியாவில் இருந்து திருகோணமலைக்கு நிலத்தடி வழியாக எரிபொருள் குழாய் அமைக்கவும் இரு நாட்டு அரசுகளும் திட்டமிட்டுள்ளன.

மின்சார கேபிள் அமைக்க சுமார் 80 கோடி அமெரிக்க டொலர்கள் செலவாகும் என தற்போதைய முதற்கட்ட கணிப்பில் தெரியவந்துள்ளது.

மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை ; இராணுவம், கடற்படையால் நிர்மாணப் பணிகள்

இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை – மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது.

இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பௌத்த விகாரையின் தேவைக்காக தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் 64ஆம் கட்டையிலுள்ள மலையடி பிள்ளையார் ஆலயம் அந்த வீதியால் பயணிக்கும் மக்களின் வழிபாட்டுத் தலமாகும்.

இந்த ஆலயப் பகுதிக்கு கடந்த 2021 டிசெம்பர் மாதம் பிக்குகள் குழு ஒன்று இரவு வேளை சென்றிருந்தது. அங்கு புத்தர் சிலை ஒன்றை அவர்கள் வைத்துச் சென்றனர்.

மறுநாள் காலை இதை அவதானித்த அப்பகுதி மக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து, காவல்துறையினரின் தலையீட்டில் அங்கிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டது.

எனினும், சில நாட்களின் பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆலயத்தை அண்மித்து – ஆலய வளாகத்திலேயே மீண்டும் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து மலைப்பகுதியில் “கெட்டியாராமை சிறீ பத்ர தாது ரஜ மகா விகாரை” க்கான நிர்மாணப் பணிகள் நடை பெற்றன.

இராணுவமும் கடற்படையும் இணைந்து இரவு – பகலாக இந்த விகாரையின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த விகாரையின் நிர்மாணப்பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

திருகோணமலையில் ஏற்கனவே இந்துக்களின் முக்கியத்துவம் பெற்ற கன்னியா வெந்நீரூற்று முழுமையாக பௌத்த மயமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழர் தாயகத்தின் முல்லைத்தீவு – குருந்தூர்மலை, வவுனியா – வெடுக்குநாறி மலை என இந்து ஆலயங்கள் பல பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் தமிழ், சிங்கள மக்களிடையே மோதல்

திருகோணமலை – திருக்கடலூர் மற்றும் விஜிதபுர ஆகிய கிராமத்திலுள்ள தமிழ் – சிங்கள மக்களுக்கிடையில் இன்றைய தினம் (06.04.2023) பாரிய மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலைக் கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பான்மை இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடற்பரப்பில் சிறுபான்மை இனத்தவகள் மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து அப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் பெருமளவிலான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதையடுத்து, தற்போது நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்- திருகோணமலையில் பொது மக்களின் காணியில் புத்தர் சிலை வைக்க முயற்சி

திருகோணமலை,குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அமளிதுமளி நிலவியுள்ளது .குறித்த சம்பவம் நேற்று (1) இடம்பெற்றுள்ளதுடன் ஒரு வாரகாலமாக இந்த நிலைமை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாதுகாவலருடன் சென்றிருந்த வேளையில் பொதுமக்களை மெய்பாதுகாவர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளார். புல்மோட்டை அரிசி மலை விகாரையினை சேர்ந்த பௌத்த மதகுருவே இவ்வாறான சண்டித்தன வாய்த்தகராறில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகம் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் இணைந்து தங்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இந்தியா

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவை இந்திய அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகமும் இந்திய திட்டமொன்றை கோரியுள்ளதுடன், அதற்கு வெளியில் இந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

எதிர்வரும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டுக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அந்த விஜயத்தின் போது இது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கிடையில், எரிபொருள் விநியோகம், விநியோகம் மற்றும் விற்பனையை 3 சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் கடந்த வாரம் முடிவு செய்தது.

சம்பூரில் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்தின் கூட்டு வர்த்தக நிறுவனத்துக்கு சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதி

இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்தின் கூட்டு வர்த்தக நிறுவனமொன்றுக்கு திருகோணமலை – சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சம்பூர் நிலக்கரி அனல்மின் உற்பத்தி நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்ட இடத்திலேயே, 135 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 42.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 50 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதனைத் தவிர 23.6 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சம்பூரில் இருந்து கப்பல்துறை வரையிலான 40 கிலோமீட்டர் தூரம் கொண்ட 220 கிலோவாட் மின்மாற்றுவழியை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ், 85 மெகாவாட்டுன் கூடிய சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கப்பல்துறையிலிருந்து ஹபரணை வரையில் 220 கிலோவாட் இயலளவுடன் கூடிய 76 கிலோமீட்டர் தூரம் கொண்ட மின்மாற்றுவழியை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை 2024 முதல் 2025 வரையிலான இரு ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் மீள்புதுப்பிக்கத்தக்க துறையின் ஒத்துழைப்பிற்கான உடன்பாட்டை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்திய மற்றும் இலங்கை தனியார் மற்றும் அரச துறையின் தொழில்முயற்சியாளர்கள் ஒருங்கிணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டு ஏனைய பகுதிகளிலும் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சூரிய மின்னுற்பத்தி, கடலோர காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் உயிர்த்திணிவு சார் மின்னுற்பத்தி கருத்திட்டங்கள் என்பன இந்த இணக்கப்பாட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

கிண்ணியா வெந்நீர் ஊற்று பெளத்த இடிபாடுகளைக் கொண்ட இடமாக தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம்

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்துக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக போற்றப்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிகள் தற்போது, பௌத்த மயமாக்கல் பகுதியாக மாற்றப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் அறிவிப்பு
இந்த நிலையில், கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் தளத்தை, அனுராதபுர காலத்தைச் சேர்ந்த பௌத்த இடிபாடுகளைக் கொண்ட தனித்துவமான இடமாக அடையாளம் காண முடியும் என தொல்பொருள் திணைக்களத்தன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் கன்னியா வெந்நீர் ஊற்று, தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, 2011 ஒக்டோபர் 9ஆம் திகதியிட்ட அரச வர்த்தமானி பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை, திருகோணமலை மாவட்ட செயலகம் என்பன கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது.

வெந்நீர் ஊற்றின் வருமானம் அரசாங்கத்திற்கு
இந்த நிலையில், தொல்பொருள் திணைக்களம் தலையிட்டு கன்னியா வெந்நீர் ஊற்றின் மூலமாக கிடைக்கும் வருமானத்தை, திணைக்களத்தின் கணக்கின் ஊடாக அரச வருமானத்துடன் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் திருகோணமலை பிரதேச தொல்பொருள் திணைக்களம் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வளாகம், இந்தியன் ஒயில் நிறுவன எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு நேற்று (03) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படாத திருகோணமலை எண்ணெய் தாங்கிக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி, திருகோணமலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையம் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை இந்தியன் ஒயில் நிறுவனத்தின் எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை IOC முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா வரவேற்றதுடன், இந்தியன் ஒயில் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கலக்கும் ஆலையையும் ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

எண்ணெய் களஞ்சிய முனையத்தில் அமைந்துள்ள அதிநவீன ஆய்வுக்கூடத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அதன் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், அண்மையில் மேம்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது உள்நாட்டு கிரீஸ் உற்பத்தி ஆலையையும் பார்வையிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடாந்தம் 3,000 மெட்ரிக் தொன் கொள்ளளவைக் கொண்ட இந்த கிரீஸ் உற்பத்தி ஆலையானது நாட்டின் மொத்த கிரீஸ் தேவையையும் பூர்த்தி செய்யும் என்பதோடு, தற்போது கிரீஸ் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச்செலாவணியை சேமிக்கும் திறனையும் கொண்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் நெருக்கடியான காலப்பகுதியில் நாட்டிற்கான எரிபொருள் விநியோகத்தை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்ல இந்தியன் ஒயில் நிறுவனம் மேற்கொண்ட அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.