பிரபாகரனின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை ஆலடி சந்திக்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணியின் முன்னால் கேக் வெட்டப்பட்டது.

Posted in Uncategorized

புலிகளின் மாவீரர் தினத்தை நினைவுகூருபவர்கள் மீது கடும் நடவடிக்கை – பொலிஸ்மா அதிபர் உறுதி

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சிப்பவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) பணிப்பாளர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், அத்தகைய நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம இந்த உறுதிமொழியை வழங்கினார்.

நவம்பர் 27 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பில் பதிவிட்டவருக்கு எதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக முன்னாள் ஊழியர் ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்பணியாற்றி  தற்போது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் சண்முகநாதன் பிரதீபன் என்ற நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும் (Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த நபரை காங்கேசன்துறை பொலிஸாரின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்துக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் உள்ளிட்ட இருவர் மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவும் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

குறித்த நபர் சமூக ஊடக வெளியில் நன்கு அறிப்பட்டவர் என்பதுடன் சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு  ஆக்கபூர்வமான தகவல்களை பகிர்ந்து வருவதுடன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அச்சமின்றி சமூக ஊடக பதிவுகள் மூலம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஏன்? விளக்கம் கோரியது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரி உள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு அங்கமாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரை எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நேரில் சமூகமளிக்குமாறு பல்கலைக்கழகப் பதிவாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்காகப் பொது நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அரச பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளது என்றும் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முதற்கட்டமாகத் தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடந்த 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக விடயம்சார் அறிவுடைய பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவரின் வாக்குமூலமொன்றை பதிவுசெய்துகொள்ள வேண்டிய தேவையேற்பட்டுள்ளதால், கோரப்படும் ஆவணங்களுடன் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி காலை 09.30 மணிக்கு அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழுவினால் பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தன்மை தொடர்பிலான அறிக்கையொன்று, பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுச் சின்னமொன்றை தாபிக்கும் போது பின்பற்றப்படவேண்டிய நடமுறைகள் தொடர்பிலான அறிக்கையொன்று, நினைவுத் தூபியை நிர்மாணித்ததற்குரியதான கொள்முதல் கோப்பு மற்றும் அதன் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி மற்றும் நினைவுத் தூபியின் தற்போதைய நிலைமை தொடர்பிலான அறிக்கையொன்று போன்ற விடயங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தினுள் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு வழிவகுப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டு முழுமைபெறாத நிலையில் இருந்த தூபி இடிக்கப்பட்டது.

தூபி இடிக்கப்பட்டதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாலும், தமிழ் உணர்வாளர்களாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனவரி 09 முதல் 10 வரை யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. அதனையடுத்து 11 ஆம் திகதி அதிகாலை மாணவர் பிரதிநிதிகளுக்கும், பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது உரிய அனுமதிகள் பெறப்பட்டு தூபி அமைக்கப்படும் எனத் துணைவேந்தரால் உறுதியளிக்கப்பட்டது.

அதன் பின்னர், நிலைமை தொடர்பில் பல்கலைக்கழகப் பேரவையில் விளக்கமளிக்கப்பட்டு அதற்கான அனுமதி பெறப்பட்டதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தூபி அமைப்பதற்காகப் பல்கலைக்கழக நிதி பயன்படுத்தப்படுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. தன்னார்வ நன்கொடையாளர்களிடமிருந்து அப்போதைய மாணவர் ஒன்றியத்தினர் சேகரித்த நிதியைப் பயன்படுத்தி தற்போதைய தூபி அமைக்கப்பட்டதுடன், தூபி கட்டப்பட்டதற்கான நிதி விபரங்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கணக்கறிக்கையில் காட்டப்பட்டதுடன், கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட அறிக்கை பல்கலைக்கழக நலச் சேவைகள் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் நிகழ்வு

யாழ்ப்பாணம் – இந்திய உதவித்துணைத் தூதரகம்,மற்றும் காந்தி சேவா சங்கத்தின் இணைந்த ஏற்பாட்டில் இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தினை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தி அவர்களின் 154ஆவது ஜனதின நினைவேந்தலான அஞ்சலி இன்று திங்கட்கிழமை (02) யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக இருக்கின்ற மகாத்மா காந்தி சிலையின் முன்பாக இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் இந்திய உதவித்துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு அவரின் திருச்சுருவத்திற்கான மலர்மாலை அணிவித்து நினைவேந்தல் செலுத்தினார்.

இதன்போது ‘காந்தீயம் ஏடு’ வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

 

நிகழ்வில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

திலீபனுக்கான நீதியை பாரத தேசம் தாமதிக்காது வழங்க வேண்டும் – சபா குகதாஸ்

தியாகி திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தல் அரசின் சட்ட மற்றும் இராணுவ காவல்துறை இயந்திரத்தின் அச்சுறுத்தல் மத்தியில் உணர்வு பூர்வமாக தமிழர் தாயகம் எங்கும் மக்களால் அனுஸ்டிக்கப்பட்டது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி வெளிநாடுகளில் சகல நினைவேந்தல்களையும் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக கூறிவரும் சமநேரம் உள் நாட்டில் அரச இயந்திரத்தை பயன்படுத்தி தடைகளை ஏற்படுத்துவதும் புலனாய்வாளரைக் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல் மற்றும் நேரடி அச்சுறுத்தல் என்பன தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஆகவே அரசாங்கம் நினைவேந்தல் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது.

உண்மையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அச்சுறுத்தல் இல்லாவிட்டால் மாபெரும் மக்கள் எழுச்சியை காணமுடியும் இது அரசாங்கத்திற்கு தெரியும். சர்வதேசத்திற்கும் புரியும்.

தியாகி திலீபன் ஐந்து அம்ச கோரிக்கைகளை பாரத தேசத்தை நோக்கி முன் வைத்து உண்ணா நோன்பை ஆரம்பித்தமை அனைவரும் அறிந்த வரலாறு. ஆனால் இன்றுவரை அக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அவசரகால சட்டம் தற்காலிக நீக்கமே தவிர பயங்கரவாத தடைச் சட்டத்துடன் இணைந்துள்ளது. இது தொடர்பில் கடந்த காலத்தில் கசப்பான நிலையில் பாரத தேசம் இருந்தாலும் இன்று மக்களின் உணர்வுக்கு நீதி வழங்க வேண்டும்.

2009 ஆயுத போராட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் மௌனிக்கப்பட்ட பின்னர் ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் விடுதலைப் போராட்ட நினைவேந்தல்களை நினைவு கொள்ள தவறவில்லை. பல அரச எதிர்ப்புக்கள் மத்தியில் அனுஸ்டிக்கின்றனர். இதன் மூலம் ஒரு செய்தியை மக்கள் வெளிப்படுத்துகின்றனர். தமக்கான விடுதலை வேண்டும் அது இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்பதே ஆகும்.

அத்துடன் ஈழத்தில் நடந்த விடுதலைப் போராட்டம் வெறுமனே ஒரு அமைப்பு சார்ந்த விடயம் இல்லை அது ஒட்டுமொத்த மக்களின் விடுதலை வேட்கை என்பதை வெளிப்படுத்துகின்றது.

தியாக தீபம் திலீபனுக்கான நீதியை பாரததேசம் இனியும் அலட்சியம் செய்யாது தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வழங்க முன்வர வேண்டும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை பலவீனப்படுத்தும் சிங்கள ஆட்சியாளர்களின் செயற்பாடுகளுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மழைக்கு மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுட்டிப்பு

யாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் , நாட்டு பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகனினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன் , யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06க்கும் மேற்பட்ட ஊர்தி பவனிகள் வந்திருந்தன.

நினைவு சுடர் ஏற்றுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பாக கடும் மழை பொழிய ஆரம்பித்த போதிலும் , மழையையும் பொருட்படுத்தாது , நினைவிடத்தில் கூடி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தியாக தீபம் திலீபன் ஐந்தம்ச கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் ஆலய வீதியில் நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 12 நாட்களில் அவரது உயிர் பிரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமலையில் திலீபனின் நினைவூர்தி மீது தாக்குதல்; கஜேந்திரன் எம்.பியும் தாக்கப்பட்டார்.

திருகோணமலை – கொழும்பு வீதியில், சர்தாபுர பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று (17) திருகோணமலை மூதூர், சேனையூர், தம்பலகாமம் பகுதிகள் ஊடாக திருகோணமலை நகரத்தை நோக்கி, திகோணமலை – கொழும்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்தது.இதன்போது, இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

அந்த பகுதியில் பொலிஸார், இராணுவ புலனாய்வுத்துறையினரும் பிரசன்னமாகியிருந்ததாகவும், பொலிஸார் தாக்குதலை தடுக்க தவறியதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் : உயிரிழந்த மாணவிகளுக்கு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது விமானப்படையினர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 53 பாடசாலை மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உயிரிழந்தனர்.

அவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வருடந்தோறும் பல இடங்களில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று திங்கட்கிழமை (14) செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.

செஞ்சோலை வளாகம்

செஞ்சோலையில் மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் இன்று (14) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையிலான இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கத்தோடு, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம்

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் தாய் தமிழ் பேரவையின் ஆதரவோடு சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலின்போது படுகொலை செய்யப்பட்ட மூன்று சகோதரிகளின் தாயொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு, உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

 

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (14) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் /- வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது எம்.கே. சிவாஜிலிங்கம் பொதுச்சுடர் ஏற்றி, உயிரிழந்த மாணவிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

முல்லைத்தீவு – வள்ளிபுனம், செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் 2006 ஆம் ஆண்டு இலங்கை வான்படையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று(14) மதியம் 12 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.

 

வீரமுனை படுகொலையின் 33 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து வீரமுனையில் ஆலய பூசையுடன்  நேற்று(12) அங்கு அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த யுத்த சூழ்நிலையில் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல்கள் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை வளவினுள்ளும் தஞ்சம் புகுந்திருந்தனர்.

வீரமுனை மற்றும் அதனை சூழவுள்ள வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை ஆகிய கிராமங்களில் சுமார் 400இற்கும் அதிகமானவர்கள் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் தாக்கப்பட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மர்மக் குழுவினரால் 400இற்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலங்காலமாக கடந்துபோக முடியாத வடுக்களான காணப்படும் பல படுகொலைகளோடு வீரமுனை படுகொலையும் 33 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட ஒரு சம்பவமாகவே பதிவாகி நிற்கின்றது.