தமிழர்கள் ஜனநாயக பலத்தை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிரூபிப்பது அவசியம் – சபா.குகதாஸ் வலியுறுத்து

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை முன் நிறுத்தி ஒரு திரட்சியான ஜனநாயக பலத்தை நிரூபிப்பது அவசியம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை  இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளருமான சபா.குகதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்த மௌனிப்பின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களின் அடிப்படை அபிலாசைகளை முன் நிறுத்தி ஒரு திரட்சியான ஜனநாயக பலம் 15 ஆண்டுகளை கடந்தும் வெளிப்படுத்தப் படவில்லை. இதற்கான சரியான தேர்தல் களம் என்றால் அது ஜனாதிபதித் தேர்தல் மட்டும் தான்.

ஏனைய தேர்தல்களில் திரட்சியான முடிவை வெளிப்படுத்துவது தற்போதைய நிலையில் மிக இலகுவான விடயம் இல்லை.

கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல்களில் பல்வேறு முடிவுகளை எடுத்தாலும் அவை இன ரீதியாக சாதகமான அமையவில்லை.

ஆனால், யுத்தத்தின் பின்னரான சூழலில் ஒற்றுமையாக ஜனநாயகப் பலத்தை வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இதனை நடைமுறைப்படுத்த தமிழர் தாயகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒரே தளத்தில் ஒன்றிணைய வேண்டும். ஒரே முடிவை உறுதியாக எடுக்க வேண்டும்.

தமிழர்கள் எடுக்கும் முடிவுகளை பேரினவாதம் இனவாதமாக மாற்றிவிடும் என்கிற விமர்சனங்களை தாண்டி தந்திரேபாயமாக ஜனநாயக பலத்தை உறுதி செய்ய செயல் திறன்களை வடிவமைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழர்கள் எவ்வகையான முடிவுகளை எடுத்தாலும் தென்னிலங்கை அதனை இனவாதமாகவே மாற்றியது.

உதாரணமாக சமஷ்டி கேட்டாலும் பிரிவினைவாதம், பதின்மூன்றை கேட்டாலும் பிரிவினைவாதம் இதுதான் யதார்த்தம்.

எனவே, இதனைத் தாண்டி இனத்தின் அபிலாசைகளை முன் நிறுத்தி ஒற்றுமையாக முடிவுகளை எடுப்பது அவ்வாறான ஜனநாயகப் பலத்தை சர்வதேச அரங்கிலும் பூகோள பிராந்திய நாடுகளின் உரையாடலிலும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு சாதகமாக பயன்படுத்த எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர் கொள்ள மாறுபட்ட கருத்துக்களை தாண்டி ஒன்றிணைவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் யார்? தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா என்பது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அரசியல் அமைப்பின் பிரகாரம் இவ்வருடம் பழைய முறையிலோ அல்லது புதிய ப முறையிலோ தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.

இவ்வாறான நிலையில் தென் இலங்கையில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது தமிழ் தேசியக் கட்சிகள் சார்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

தமிழ் கட்சிகளைச் சேர்ந்த சிலர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களிடம் வாக்குகள் வழங்குமாறு கோருவது என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கோருவதால் தென் இலங்கையில் செயல்படுகின்ற இனவாத சக்திகளுக்கு சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சாதகமாக அமைந்து விடும் என சில தமிழ் தரப்பினர்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

இவ்வாறு இரு பக்கவாதங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரே நிலைப் பாட்டில் செயற்படுகின்ற தமிழ் கட்சிகள் மக்களின் எதிர்கால அரசியல் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சக தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி வழங்கிய வாக்குமூலங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் – ஜனா எம்.பி. வலியுறுத்து

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களை தள்ளிப்போடுவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடே தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எது எப்படிஇருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடாத்தியே ஆகவேண்டும்.அந்த தேர்தலை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கான தீர்வினை நோக்கியதாக இருக்கவேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க,தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பியை பொறுத்த வரையில் தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.தமிழர்களின் பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியாகவந்த மாகாணசபை முறைமையினை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்கள் ஜேவிபியினர்.அதற்கு எதிராக எதிர்த்தவர்கள் மட்டுமன்றி தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கினை பிரித்து தனியலகாக மாற்றியவர்கள் இவர்கள் என்பதை நாங்கள் மறக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ஜேவிபியினர் தமிழர்களின் வாக்குகளை பெறவேண்டுமானால் தமிழர் பகுதிகளில் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டுமானால் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வினை முன்வைக்கின்றார்கள் என்பதை பொறுத்தே நாங்கள் அவர்களுடன் எந்தவிதமான உறவுகளையும் முன்னெடுக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் 11 வது தேசிய மாநாடு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ( ரெலோ) 11வது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் முன்னதாக கட்சியின் கொடியேற்றப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

விடுதலை போராட்டத்திற்காக உயிர்நீத்த அனைத்து பொதுமக்களுக்கும், போராளிகளுக்குமாக ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கட்சியின் மாநாட்டுப் பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தம் கருணாகரம், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தமிழர் தாயகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக அணிதிரள்வோம் : செல்வம் எம்பி வலியுறுத்து

மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று(23) இடம்பெற்றது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் எந்த தேர்தலையும் சந்திப்பதற்கும் நாம் தயாராக தான் இருக்கின்றோம். அதிபர் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனப்பிரச்சனை சார்ந்து தமிழ் தரப்பிற்கு என்ன செய்யவேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

வெறுமனே கருத்துச் சொல்லிவிட்டு ஏமாற்றுகின்ற நிலைமையினை இம்முறை மக்கள் ஏற்கமாட்டார்கள் அதற்கு உடந்தையாக நாங்களும் இருக்கமாட்டோம். பொது வேட்பாளர் விடயத்தை நாம் சரியாக கையாளவேண்டும்.

ஒருவரை நிறுத்திவிட்டு சொற்பவாக்குகளை பெறும் நிலை இருந்தால் ஒட்டுமொத்த தமிழினத்தின் மானமே போய்விடும். எனவே சரியான நெறிப்படுத்தலின் ஊடாகவே அந்த‌ விடயத்தை செய்யவேண்டும்.

நாளையதினம் எமது மாநாட்டில் வலுவான ஒரு கோரிக்கையினை முன்வைக்க இருக்கின்றோம். எங்களிடத்தில் ஒற்றுமை இல்லை என்று ஏளனப்படுத்தும் விமர்சனத்தை தொடர்ச்சியாக சந்திக்கின்றோம் எனவே அரசியல் கதிரைகளுக்காக வசனங்களை மாத்திரம் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை.

எம்மை பொறுத்தவரை இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் எமது மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலைமை ஏற்ப்படும். அத்துடன் சர்வதேசத்தின் பார்வையினையும் பெறமுடியும்.

இதன்போது தென்னிலங்கை எங்களை பார்த்து அச்சப்படும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்.

எம்மை பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சியினை நாம் ஒதுக்கிவிட முடியாது. பிரச்சனை தொடர்ந்து இருக்கின்றது.

இந்த ஒற்றுமைக்குள் நாங்கள்கொண்டு வரவேண்டும். ஆனால் பொதுச்சின்னம் என்பதே எமது கருத்து. பொதுச்சின்னமாக குத்துவிளக்கு அமைந்திருக்கின்றது.

அவர்களோடு பேசி பொதுச்சின்னத்தின் கீழ் அணிதிரள்வதற்கான முயற்சியினை நிச்சயமாக நாங்கள் மேற்கொள்ளுவோம், தனிப்பட்ட கட்சியின் கீழ் எமது ஒற்றுமை இருக்காது என்றார்.

ரெலோவின் பொதுக்குழுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் வவுனியாவில் இடம்பெற்றன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  11 ஆவது தேசிய மாநாட்டிற்கான கட்சியின் பொதுக்குழு கூட்டமும் நிர்வாக தெரிவும் ஜனநாயக முறையில் 23-03-2023 இன்றைய தினம்‌ இடம்பெற்றது.

 

 

 

ரெலோ சுவிஸ் கிளையால் வுவுனியா தாஸ் நகர் முன்பள்ளிக்கு நிதியுதவி

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
ரெலோ சுவீஸ்கிளையால்,வவுனியா பூந்தோட்ட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தாஸ் நகர் முன்பள்ளிக்கு
(10.03.2024) ஆசிரியைக்கானா மாதாந்த கொடுப்பனவுமாவட்ட பொறுப்பாளர் புருஸ் (விஜயகுமார்) ஊடாக வழங்கப்பட்டது.

வவுனியா பூந்தோட்டத்தில் எமது கட்சியினரால் 1990 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்ட தாஸ் நகரத்தில் உருவாக்கப்பட்ட விபுலானந்தர் முன்பள்ளியின் நிர்வாகச் செலவு மற்றும் இரண்டாவது ஆசிரியைக்கான மாதாந்த கொடுப்பனவு போன்றவை 2016 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சுவிஸ்கிளையினரால் வழங்கப்பட்டு வருகிறது.

விபுலானந்தர் முன்பள்ளி, தாஸ் நகரில் அமைந்துள்ளது . இப்பாடசாலையில் 20க்கும் மேற்பட்ட சிறார்கள் கல்வி கற்றுவருகின்றார்கள்.
இந்த கிராமமானது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முயற்சியால் 1990 பின்னர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றாகும்.

அந்தவகையில் சிறீ நகர், தங்கா நகர் ,குட்டி நகர், குகன் நகர், பாஸ்கரன் நகர் என ஆறுக்கு மேற்பட்ட குடியேற்ற கிராமங்கள் ரெலோ வவுனியா மாவட்ட நிர்வாகத்தினரால் அக்காலத்தில் உருவாக்கப்பட்டது.

ஐ.எம்.எவ் பிரதிநிதிகளை தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றாக சந்திக்க வேண்டும்- சபா.குகதாஸ் வலியுறுத்து

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக சந்திப்பது தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பலப்படுத்தும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசிற்கு வழங்கும் கடன்கள் மூலம் பிரச்சினைகளுக்கான நிரந்தர மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும் , மேலும் அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டிய விடயங்களை IMF பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்துவது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தனித் தனியாக கருத்துப் பகிர்வது, சந்திக்காது ஒதுங்குவது போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து ஒற்றுமையாக சந்திப்பது சிறப்பாக அமையும்.

அரசாங்கத்திற்கு நெருக்கடி வழங்கும் தரப்புக்கள் மூலம் அழுத்தங்களை பிரயோகித்தல் தமிழ் மக்களின் பிரச்சினைகளின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்புக்களை உருவாக்கும் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வவுனியா வெடுக்குநாறி மலை சம்பவத்திற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கண்டனம்

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் நேற்று இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது பக்தர்களின் சமய வழிபாடுகளுக்கு பொலிசார் இடையூறு விளைவித்ததுடன் அங்கிருந்த சமய செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரமுகர்கள் மீதும் வன்முறையை மேற்கொண்டுள்ளனர் இந்த சம்பவமானது கண்டனத்திற்குரியது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்த கருத்தினை இன்றைய தினம் (9) செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் அலுவலகத்தில் வைத்து தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயமானது காலங்காலமான சைவ சமய வழிபாட்டு தளமாக இருந்து வருகிறது இந்த நிலையில் நேற்றைய தினம் (8)சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த பக்தர்கள் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் இன மத நல்லினக்கத்திற்கு பாதகமாக அமையும்

எனவே பொலிசார் எதற்nடுத்தாலும் பொது மக்களிடம் அத்துமீறும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் தமிழ் மக்கள் அவர்களுக்குச் சொந்தமான பூமியில் அவர்களுடைய பாரம்பரிய சமய கடமைகளை செய்வதற்கு இடையூறு விளைவித்த இந்த செயற்பாட்டை நான் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக பொலிசார் செயற்படுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுக்கிறேன் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்தார்

ரெலோ இயக்கத்தால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார் தன்வந்த்!

பாக்கு நீரினையை கடந்த இளம் உலக சாதனையாளர் ஹரிகரன் தன்வந்த் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினரால் நிறைகுடம் வைத்து அமோக வரவேற்பளிக்கப்பட்டு பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் 13 வயதில் அவரது துணிச்சலான சாதனையை பாராட்டி ஊக்குவிக்குமுகமாக துவிச்சக்கர வண்டி ஒன்றும் பணப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கபட்டார்.

இந்நிகழ்வுகள் இன்றைய தினம் மாலை ரெலோ இயக்கத்தின் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் இயக்கத்தின் பொதுக்குழு, மூத்த உறுப்பினரும் முன்னால் நகரசபை உறுப்பினருமான சிங்கன், மற்றும் பல மூத்த உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் முன்னிலையில் இடம்பெற்றது இந்நிகழ்வுகளை மூத்த உறுப்பினர் சிங்கன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.