தேர்தலை ஒத்திவைப்பதானது நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும்; பேராயர் எச்சரிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கலாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அது இறுதியில் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றினை இன்று(செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதால் இலங்கை சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்ற நம்பிக்கையை இழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாட்டு நாடுகளின் திவால் நிலை மற்றும் உதவியால் நாட்டைப் பெரிய நெருக்கடிக்கு தள்ள வேண்டாம் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசத்தின் நலனுக்காக முன்வருவது அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் சரியான நேரத்தில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எதிர்மறையான நற்பெயரைப் பெறுவதைத் தவிர்க்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

75 ஆண்டுகளாக இடம்பெறும் ஊழல் மோசடிகளே இலங்கையின் யாசகம் பெறும் நிலைக்கு காரணம் – பேராயர்

சுதந்திர தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி எமது நாடு சிறப்பாகவுள்ளதாக வெளிநாட்டு தூதுவர்களிடமும், இராஜதந்திரிகளிடமும் காண்பித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.

கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகளே இதற்கு காரணமாகும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது இலங்கை பாரிய நெருக்கடி மிக்க நாடாக காணப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்ற ஊழல் மோசடிகளால் இந்த நிலைமை ஏற்பட்டது.

இலங்கை இன்று பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி, சகல துறைகளிலும் வீழ்ச்சியடைந்த நாடாக காணப்படுகிறது.

பொருளாதார சீர்குலைவால் மாத்திரமின்றி அனைத்து துறைகளினதும் சீர்குலைவின் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.

எமது மக்கள் சரியான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை. நீதியை போன்றே சரியானவற்றை நடைமுறைப்படுத்துவதை இன்று மக்கள் மறந்துள்ளனர்.

தமக்கு ஏதேனுமொன்று கிடைக்கப் பெறும் என்ற எதிர்பார்ப்பிலேயே அனைத்தையும் நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

உயர் மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை எவரேனும் ஒருவரிடம் ஏதாவதொன்றை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பெப்ரவரி 4ஆம் திகதி என்ன சுதந்திர தினத்தை கொண்டாடினோம்?

21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, தேசிய கொடியேற்றப்பட்டு, வீதிகளில் மரியாதை அணிவகுப்புக்களை ஏற்பாடு செய்து, இது சிறந்த நாடு என்பதை தூதுவர்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் காண்பித்தோம்.

ஆனால், மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.

இதுவா சுதந்திரம்? புரட்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் என்று ஜனாதிபதி கூறுகின்றார். அது எமது சுதந்திரமா அல்லது ஜனாதிபதியின் சுதந்திரமா?

இலங்கை இதற்கு முன்னர் இழைத்துள்ள பல தவறுகளின் காரணமாகவே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் பிரதானமானது திறந்த பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தியமையாகும்.

எமது நாட்டில் காணப்படும் பொருட்களுக்கான தட்டுப்பாடு இந்தியாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. சீனாவுடனும் இவ்வாறான உறவே காணப்படுகிறது.

தற்போதுள்ள கடனை மீள செலுத்த முடியாமல், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மேலும் கடன் பெறவுள்ளனர். நாம் எமது தாய்நாட்டை சீரழித்துள்ளோம் என்றார்.

நாட்டை நிர்வகிக்கும் அனைத்து தரப்பினரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர்

நாட்டில் இன்று நேர்மை காணப்படுகின்றதா? அடி மட்டத்திலிருந்து உயர்மட்டத்தில் உள்ளவர்கள் வரை அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர். நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர். இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோயாகும். பல ஆண்டுகளாக நாம் இந்த நோய்க்கு அடிமையாகியுள்ளோம். இதிலிருந்து விடுபடுவதற்கான பலம் எம்மிடமில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (டிச. 25) பன்னிப்பிட்டி தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையின் போது உரையாற்றுகையிலேயே பேராயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று, அதன் மூலம் உணவு உண்பதற்கு நாம் பழகியுள்ளமை வெட்கப்பட வேண்டிய முன்னுதாரணமாகும்.

முன்னைய காலங்களைப் போன்று எமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்யும் நிலைமை காணப்பட்டால், இன்று இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்காது.

புதிதாக தோற்றம் பெறும் அனைத்துக்கும் அடிமையாகி, அனைத்தையும் வணங்கும் சமூகம் எமது நாட்டில் தோற்றம் பெற்றுள்ளது.

உலகின் சொத்துக்களுக்கும் அதிகாரத்துக்கும் அடிமையாகாமல், அவற்றின் மீது பேராசை கொள்ளாமல் அவற்றிலிருந்து மீள வேண்டும் என்பதையே இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் இறப்பும் வலியுறுத்துகின்றன. புத்த பெருமானும் இதனையே போதித்துள்ளார்.

எமது நாட்டில் தயாரிக்கக்கூடிய அனைத்தையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நாம் பழகியுள்ளோம். இதன் காரணமாக நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அவை எதனையுமே இறக்குமதி செய்வதற்கு எம்மிடம் இன்று பணம் இல்லை.

முன்னைய காலங்களைப் போன்று எமக்கு தேவையானவற்றை நாமே தயாரிப்பதற்கு பழகிக்கொண்டிருந்தால், இன்று எமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று, அதன் மூலம் உணவு உண்பதற்கு நாம் பழகியுள்ளமை வெட்கப்பட வேண்டிய முன்னுதாரணமாகும்.

நாட்டில் இன்று நேர்மை காணப்படுகின்றதா? அடி மட்டத்திலிருந்து உயர்மட்டத்தில் உள்ளவர்கள் வரை அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர்.

நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர். இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோயாகும். பல ஆண்டுகளாக நாம் இந்த நோய்க்கு அடிமையாகியுள்ளோம். இதிலிருந்து விடுபடுவதற்கான பலம் எம்மிடமில்லை.

எம்மிடம் சொத்துக்கள் காணப்படுவது போதுமானதல்ல. இன்றைய சூழலில் பொய்களுக்குப் பின்னால் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். வறுமை நிலையில் உள்ளவர்களுடன் நத்தார் தினத்தை நாம் கொண்டாட வேண்டும் என்றார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அறிவு பூர்வமாக புரட்சியே அவசியம் – பேராயர்

அரசியல்வாதிகள் தமது அதிகாரங்களையும் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்நாட்டை பயன்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது.

வெளிநாடுகளில் கல்வி கற்று வந்த அரசியல்வாதிகளால் நாட்டின் கலாசாரம் சீரழிக்கப்படுவதற்கு மகா சங்கத்தினர் அனுமதித்து விடக்கூடாது என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கம்பஹா – குருண புனித பீட்டர் வித்தியாலயத்தில் புதிய கட்டடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உயர்மட்டத்திலுள்ளவர்கள் முதல் அடிமட்டத்திலுள்ளவர்கள் என அனைவரும் இன்று மோசடிகளுக்கு அடிமையாகியுள்ளனர்.

இதன் காரணமாக 74 வருடங்களுக்குள் உண்மைகளை பொய்யாகவும் , பொய்களை உண்மைகயாகவும் மாற்றுவதற்காக போக்கின் காரணமாகவே நாடு இன்று இந்த நிலைமையை அடைந்துள்ளது.

ஒருபுறம் போதைப்பொருளை உபயோகிப்பவர்களுக்கும் , அவற்றை தம்வசம் வைத்திருப்பவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது.

ஆனால் மறுபுறம் கஞ்சா பயிர்செய்கையை ஊக்குவிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் கல்வி கற்றவர்கள் இலங்கைக்கு வந்து கசினோக்களையும் , இரவு நேர தொழில்களையும் ஊக்குவிக்குமாறு கூறுகின்றனர்.

எமது நாட்டின் நாகரீகம் எங்கே? பௌத்த போதனைகளால் ஒழுக்கம் மிக்க சமூகத்தினர் தோற்றம் பெற்ற இந்த நாட்டின் கலாசாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது.

இதுபோன்ற முட்டாள் தனமான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று மகா சங்கத்தினரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

முழு நாட்டையும் விற்றேனும் உண்டு வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இவர்கள் காணப்படுகின்றனர். ஒவ்வொரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு பகுதிகளையும் வழங்குவதாகக் குறிப்பிடுகின்றனர்.

இவற்றின் மூலம் எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்புவது? அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும் , பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இந்த நாட்டை உபயோகித்துக் கொள்ள வேண்டாம்.

சர்வதேச நாணய நிதியமும் , உலக வங்கியும் கூறுகின்றது என்பதற்காக நாட்டுக்கு பொறுத்தமற்ற சட்டங்களை நடைமுறைப்படுத்துவது கையேந்தும் செயற்பாட்டைப் போன்றதல்லவா? நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முழுமையான அறிவு பூர்வமாக புரட்சியே அத்தியாவசியமானதாகும் என்றார்.

Posted in Uncategorized

அரசியல் அமைப்பில் கடுமையான மாற்றங்கள் வேண்டும் – பேராயர்

தற்போது நடைமுறையில் உள்ள இந்த நாட்டின் சட்டங்கள், ஒரு தனிநபருக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கு முழு தேசத்தையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆட்சி செய்ய அதிகாரம் அளிக்கும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 12 வீடுகளை கையளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிலையில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் கடுமையான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் உண்மையான ஜனநாயகத்தை அனுமதிக்கும் புதிய அரசியலமைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சுதந்திரம் அடைந்து கடந்த 74 ஆண்டுகாலமாக மக்களுக்கு பொய்களை சொல்லி அவர்களை ஏமாற்றி அவர்கள் விரும்பியதைச் சாதிப்பதற்காக அரசியல் தலைவர்கள் சட்டத்தைக் கையாண்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.

தவறை ஏற்றுக்கொண்டாலேயே மன்னிக்க முடியும் – பேராயர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்புலத்தில் இருப்பவர்கள் மறைந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

இருப்பினும் தங்களின் பாவங்களுக்கு மிகவும் வேதனையான கர்மவினையை சந்திக்க நேரிடும் என்றும் தவறை ஏற்றுக் கொள்ளுங்கள் அதனை நாம் மன்னிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு கனேமுல்ல, பொல்லத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டுத்திட்டத்தை குறித்த குடும்பங்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது பேராயர் இதனை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி எனக்கு தனிப்பட்ட வகையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமக்கு வந்த மறுநாளே அவர் என்னை தொலைபேசி மூலம் அழைத்து அவற்றையெல்லாம் எவ்வாறு வெளிப்படையாகக் கூற முடியும்? என்று கேட்டார்.

அறிக்கைகளை சிபாரிசு செய்ய வேண்டியது நீங்கள் இல்லை இதனை பொலிஸாரிடம், நீதிமன்றத்திடம் ஒப்படையுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர் ஒன்றும் கூறவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தவர். ஏன் அவருடைய பொறுப்புகளை மறைப்பதற்கு முயற்சிக்கிறார். அதன் பின்னணியில் அரசியல் சதி ஒன்று இருப்பதாக பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பல தெளிவற்ற விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை வெளிக்கொணர்வதற்கு எவரும் ஆர்வம் காட்டுவதில்லை.

சட்டா அதிபர் திணைக்களத்திற்கு கண்களும் இல்லை, காதுகளும் இல்லை,அதனால் ஒன்றையும் செய்வதற்கு முடியாது உள்ளது.

தற்போது நாட்டில் செவிடான யானைகள் மற்றும் ஒரு பெரிய யானையும் அதன் கூட்டத்துடன் வந்துவிட்டது. அவர்களிடம் வீணை வாசிப்பது பயணற்றது.

சட்டத்தை நினைத்தப்படி மாற்றி இதை வைத்து அதனை கை கழுவி விடலாம் என்று நினைக்கிறார்கள். அவ்வாறு நினைத்தால் மற்றவர்களுக்கு ஹீரோவாக தோன்றலாம். ஆனால் ஒன்று நினைவில் இருக்கட்டும். வேதத்தில் உள்ளது. நீங்கள் செய்த பாவங்கள் உங்களை பின் தொடரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்

கருத்து சுதந்திரத்தை அரசாங்கம் ஆணவத்துடன் நசுக்குகிறது – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆவேசம்

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளான, பேச்சு, கருத்து மற்றும் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரத்தை அரசாங்கம் ஆணவத்துடன் தொடர்ந்து நசுக்குகிறது என்று, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், இன்று (08) தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் மற்றும் அவற்றுக்கு எதிராக அமைதியான போராட்டங்கள் அல்லது எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தும் மனித உரிமைகளுக்கான போராட்டக்கார்களுக்கு எதிராக தற்போதுள்ள அரசாங்கத்தால் நடத்தப்படுவது கொடூரமான மற்றும் சகிக்க முடியாத அடக்குமுறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறான மற்றும் நியாயமற்ற முறையில் முறையில் பயன்படுத்துவதற்கும், சமூகத் தலைவர்கள் மற்றும் அத்தகைய கொள்கைகளுக்கு அமைதியான எதிர்ப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கும் நாங்கள் அரசாங்கத்தை கண்டிக்க விரும்புகிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் உட்பட மூவர், அவர்கள் மீது தெளிவான குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் அநியாயமான முறையில் 75 நாட்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கர்தினால் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்த வகையான நெறிமுறையற்ற நடைமுறையை எந்த சூழ்நிலையிலும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இருவரும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.

அதேவேளை, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, எவ்வித தீவிர உணர்வும் இன்றி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுதலை செய்ய பரிந்துரைக்கப்படும் முறையற்ற விதம் குறித்தும் எமது ஆச்சரியத்தை வெளிப்படுத்த விரும்புகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பினால் எம்மை மெளனிக்க செய்ய முயல்கின்றனர் – பேராயர்

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை வெளிநாடுகளின் அடிமையாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே இன்று கையேந்தி உண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாத இந்த ஆட்சியாளர்களுக்கு மீண்டும் வாக்களித்து விட வேண்டாம் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

மேலும் , இலங்கை அரசாங்கம் அல்லது அரச நிறுவனங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் குறைகளை முன்வைப்பவர்களின் குடியுரிமையை 20 ஆண்டுகளுக்கு குறையாத காலப்பகுதிக்கு நீகுவதற்கான ஏற்பாது புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பேராயர் , இதனால் தாம் முழுமையான மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வியாழக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எம்மை ஆட்சி செய்கின்ற, எமது வாக்குகளால் தெரிவு செய்யப்படும் தலைவர்கள் ஏன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை காண்பிக்காமலுள்ளனர்? இதற்கான காரணம் என்பது தொடர்பில் எம்மால் புரிந்து கொள்ள முடியாமலுள்ளது. தாம் தெரிவு செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்த வாக்குகளை வழங்கிய மக்களின் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமல்லவா?

தற்போது தேர்தல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் காணப்பட்ட தேர்தல் முறைமையில் தொகுதி முறைமை காணப்பட்டது. இந்த முறைமையின் கீழ் நாம் தெரிவு செய்யும் எந்தவொரு உறுப்பினரானாலும் , அவர் அவரது தொகுதியிலுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துவார். ஆனால் தற்போது அவ்வாறொன்று இல்லை. வாக்குகளைப் பெறுவதற்காக முழு மாவட்டத்திற்கும் செல்ல வேண்டியுள்ளது.

இவ்வாறு வாக்குகளைப் பெறுவதற்கு கோடிக்கணக்கான பணத்தை செலவிட வேண்டும் என்பதால் , அவர்கள் மோசடியாளர்களுடன் இணைந்து அதற்காக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பார்கள். இறுதியில் வாக்களித்த மக்கள் தமது உரிமைகள் தொடர்பில் குரலெழுப்பும் போது அவர்களை துரத்தியடிப்பார்கள். 1978 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டுக்கு ஏற்பட்ட பாரிய அழிவு இதுவேயாகும்.

எமது நாட்டின் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளனர். பல வருடங்களாக எமது நாட்டை வெளிநாடுகளின் அடிமையாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே தற்போது ஏனைய நாடுகளிடம் கையேந்தி உண்ண வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று எமது நாட்டில் வீடுகள் இன்றி எத்தனை குடும்பங்கள் உள்ளன? கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரே தற்போது இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சாகவும் உள்ளார். டொலரைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட அதிசொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கள் மூன்றை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவா நகர அபிவிருத்தி அமைச்சு என்ற ஒன்று காணப்படுகிறது? சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து , அவர்கள் முன் தலை குனிந்து இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலைமை என்ன? மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியாத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும். மீண்டும் இவர்களுக்கு வாக்களித்து விட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

மாறாக இவர்களுக்கு வாக்களித்து விட்டு , பின்னர் என்னிடம் வந்து வீடமைத்து தருமாறு கோர வேண்டாம். ஜனாதிபதியினால் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும் அந்தக் குழு அரசியலமைப்பின் உள்ளடக்கம் தொடர்பில் யாரிடமும் சென்று எந்தவொரு நிலைப்பாட்டையும் பெறவில்லை. மாறாக அவர்களுக்குள்ளேயே கலந்துரையாடி பிரதியொன்றை தயாரித்து அதனை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

அதன் பிரதியொன்று எனக்கும் கிடைக்கப் பெற்றது. அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்தினால் அது நாட்டுக்கு சாபக்கேடாகும். ஒழுக்கமற்றவொரு அரசியமைப்பினையே தயாரித்துள்ளனர்.

எவரேனும் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது அரச நிறுவனத்திற்கு எதிராகவோ , ஐக்கிய நாடுகள் சபை , வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு தலைவர்களிடம் குறைகளைக் கூறினால், குறித்த நபரின் குடியுரிமையை 20 ஆண்டுகளுக்கு குறையாத காலப்பகுதிக்கு தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியலமைப்பில் உள்ளடக்கியுள்ளனர். கல்வி கற்றவர்கள் என்று கூறப்படுபவர்கள் இதனையே செய்துள்ளனர். எம்மை முழுமையாக மௌனிக்கச் செய்துள்ளனர். இதுவே எமது நாட்டுக்கு இடம்பெற்றுள்ள நிலைமையாகும் என்றார்.

மனச்சாட்சியற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட இலங்கையை முன்னேற்றுவது இலகுவான விடயமல்ல : பேராயர்

யாருக்கும் பொறுப்பு கூறுவதற்கு அவசியமற்ற நிர்வாக பொறிமுறையை நாட்டில் ஏற்படுத்தி , சட்டத்தை தமது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளே தற்போது காணப்படுகின்றனர். இவ்வாறான மனசாட்சியற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட முன்னேற்றுவது இலகுவான விடயமல்ல என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக் கொள்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான காப்புறுதி தொகையை 10 இலட்சம் வரை அதிகரித்துக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா – இந்திகொல்ல புனித ஜூட் திருத்தலத்தின் வருடாந்த சிறப்பு ஆராதனை ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றது. இதன் போதே பேராயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

யாருக்கும் பொறுப்பு கூறாத , பொறுப்பு கூற அவசியமற்ற நிர்வாக முறைமையை நாட்டில் ஏற்படுத்தி , நாட்டின் சட்டத்தை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு பொறுப்பற்ற மோசமான தீர்மானங்களை எடுத்து நாட்டை கையேந்தி உண்ணும் நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி தொகை 2 இலடசத்திலிருந்து 10 இலட்சம் வரை அதிகரித்துள்ளது.

நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் , மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் இவ்வாறே அமைந்துள்ளன. நாட்டில் மனசாட்சியுள்ள மக்கள் பிரதிநிதிகள் எங்கே? அரசியல் தலைவர்கள் எங்கே? இவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமா? சட்டத்தை சிறிதளவேனும் கவனத்தில் கொள்ளாமல் , அநீதியான முறையில் ஆட்சி செய்வதற்காக அரசியல் அதிகாரத்தை பாவிக்கும் அரசியல்வாதிகள் கொண்ட நாட்டை எவ்வாறு முன்னேற்ற முடியும்?

உலகிலுள்ள அபிவிருத்தியடைந்த நாடுகளில் மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பில் எவரேனுமொரு அரசியல்வாதியின் பெயர் வெளியிடப்பட்டால் , குறித்த நபர் உடனடியாக பதவி விலகிவிடுவார். ஆனால் எம் நாட்டிலுள்ளவர்கள் பதவி விலகுவதற்கு பதிலாக , அவர்களது பலத்தை மேலும் அதிகரித்துக் கொள்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்றனர். அவரவருக்கு தேவையான வகையில் சட்டத்தை வலைத்துக் கொள்கின்றனர். தமக்கு ஏற்றாட்போல் அந்த சட்டங்களை பாவித்து நாட்டுக்குள் பாரதூரமான நிலைமையை ஏற்படுத்துகின்றனர். இது போன்ற மோசடிகள் நிறுத்தப்பட வேண்டும். மனசாட்சி கொண்ட தலைமைத்துவமொன்று நாட்டுக்கு அவசியமாகும். ஆனால் நாடு தற்போது செல்லும் முறைமையில் அவ்வாறானதொரு தலைமைத்துவம் இருப்பதாக உணர முடியவில்லை என்றார்.

Posted in Uncategorized