ரோயல் பார்க் கொலையாளிக்கு அரசியலமைப்பை மீறி பொதுமன்னிப்பு வழங்கவில்லை – மைத்திரி

ரோயல்பார்க் கொலையாளி ஜூட் ஜயமஹவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் அரசியல் அமைப்பை  மீறி தான் செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

ஜூட் ஜெயமகவிற்கான பொதுமன்னிப்பு அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

2005 இல் அத்துருகிரியவில் உள்ள ரோயல் பார்க் தொடர் மாடியில் பெண்ணொருவரை கொலை செய்தமைக்காக கொழும்பை சேர்ந்த செல்வந்தரின்  மகனிற்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது.

2019 நவம்பர் 9 ம் திகதி ஜூட்ஜெயமகவிற்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பொதுமன்னிப்பை வழங்கினார். தனது பதவிக்காலத்தின் இறுதியில் சிறிசேன பொது மன்னிப்பை வழங்கியிருந்தார்.அ

அதன் பின்னர் ஜெயமஹ நாட்டிலிருந்து வெளியேறினார் அவர் தற்போது எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை.

இந்நிலையிலேயே தான் பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் அரசியலமைப்பை மீறவில்லை என சிறிசேன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக்கொள்ளாமை தவறான சமிக்ஞைகளை அனுப்பும்:சஜித் எச்சரிக்கை

சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசியலமைப்பு சபையில் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையில் தற்போது 9 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளதாகவும், எனினும் அதற்கு 10 பேர் தேவை எனவும் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் தர்மலிங்கம் சித்தாத்தனை 10வது உறுப்பினராக உறுதிப்படுத்துமாறு சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவை வியாழன் கூடுகின்றது

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாட அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

இதன்போது உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்கள் அங்கு எடுக்கப்படம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நிதி ஆணைக்குழு, கொள்முதல் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன அடங்கும்.

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எஞ்சிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்மொழிந்ததுடன், தமிழ்கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில், அவரது நியமனத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பு பேரவையில் உள்வாங்கப்படவுள்ள மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களில், மலையக இந்திய வம்சாவளி தமிழர் சார்பில் பிரதாப் ராமானுஜத்தின் பெயரை பரிந்துரைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு பேரவைக்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 3 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் தற்போது 5 சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், எஞ்சிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு உத்தர லங்கா சபாகய கட்சி எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனமானது இழுபறி நிலையில் உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லர் – உதய கம்மன்பில

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலமைப்பு பேரவை ஊடாக அதிகார பகிர்வை அணுகுவார்கள் என்பதனால் கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்தோம்.

கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்கள் நிறைவுப் பெற்றுள்ள நிலையில் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் இன்றும் இழுபறி நிலையில் உள்ளது.உறுப்பினர் நியமனத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கருத்தொற்றுமை கிடையாது.

பெரும்பான்மையினவாதத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், சிறுபான்மையினத்தவர்களுக்கு இடமளிக்க கூடாது என்பதற்காகவும் அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பெயர் பரிந்துரையை பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் எதிர்தரப்பினர் எதிர்த்ததாக கூட்டமைப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

அரசியலமைப்பு பேரவைக்கு சுயாதீன தரப்பினர் ஒருவரின் பெயரை பரிந்துரைக்க நாங்கள் ஆரம்பத்தில் தீர்மானிக்கவில்லை.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வரவு செலவுத் திட்ட மீதான விவாதத்தில் சுட்டிக்காட்டி,அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளை விமர்சித்தார்கள்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டதை தொடர்ந்து கூட்டமைப்பினர் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

தமது நோக்கங்களுக்காக மாத்திரம் செயற்படும் கூட்டமைப்பினரை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களாக நியமிப்பது சாத்தியமற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலமைப்பு பேரவை ஊடாக அதிகார பகிர்வை அணுகுவார்கள் என்ற காரணத்தால் அவர்களின் பெயர் பரிந்துரையை நாங்கள் எதிர்த்தோம்.

இது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடு அல்ல,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களுக்கு உண்மையான அபிவிருத்திகளை வழங்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். அதிகார பகிர்வு அபிவிருத்திக்கான வழியாக அமையாது என்றார்.

அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளின் விண்ணப்பங்கள் வியாழனன்று பரிசீலனை

21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட  மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள  அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம்  மிக விரைவில் எடுக்கப்படவுள்ளது.

இதற்காக  எதிர்வரும் வியாழக்கிழமை  அரசியலமைப்பு பேரவை  கூடவுள்ளதாக அறிய முடிகின்றது.

அரசியலமைப்பு பேரவையின் சிவில் பிரதிநிதித்துவம்  தொடர்பில்  112  பேர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நவம்பர் 28ம்  திகதியுடன் முடிவடைந்தது.

எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இல்லாதவர்கள், சிறந்த மற்றும் நேர்மையானவர்கள், பொது அல்லது தொழில் வாழ்க்கையில் நற்பெயரைப் பெற்றவர்கள்  குறித்த பேரவை உறுப்பினர் பதவிக்கு  விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக கருதப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பொருத்தமான மூவரை தெரிவு செய்வது  தொடர்பில் விண்ணப்பங்கள் வியாழனன்று பரிசீலிகப்படவுள்ளதாக அறிய முடிகின்ரது.

அதன் பின்னர் அவ்வாறு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்கள் உடனடியாக பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தாமதம் – விஜயதாஸ கவலை

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

ஒவ்வோர் அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட நிலைப்பாட்டினால் பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம் தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தியதன் பின்னர் நீதிச் சேவை ஆணைக்குழுவை தவிர ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய நியமனம் இடம்பெறும் வரை ஆணைக்குழுக்களின் தற்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதில் தலைவராகவும் உறுப்பினராகவும் பதவி வகிக்க முடியும்.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளதை பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் உறுப்பினர் நியமனத்தின் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு இவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். அரசியல் கட்சிகள் தனிப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி, தமது கட்சியின் பரிந்துரைகளை முன்வைக்காமல் இருக்கின்றன.

21ஆவது திருத்தம் முழுமையாக செயற்படுத்தப்பட வேண்டுமாயின், அரசியலமைப்பு பேரவை விரைவாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றார்.

அரசியலமைப்பு சபையில் ஒரு தமிழருக்கும் இடமில்லை – உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம் – மனோ

அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும், ஒரு முஸ்லிம் எம்பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்பி இருக்க வேண்டும் என்பது மிக, மிக நியாயமான ஒரு எதிர்பார்ப்பு.

ஆனால், இதையும்கூட தட்டி பறிக்க உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரின் “உத்தர சபை” கட்சி முயல்கிறது. அந்த நியமனம் உதய கம்மன்பில எம்பிக்கு வழங்க வேண்டும் என அந்த கட்சி பிடிவாதம் பிடிக்கிறது. இது உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம். திருத்த முடியாத திமிர்வாதம். இதை எதிர்த்து முறியடிப்பதில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, இரட்டை குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவை நியமனங்களில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ மேலும் கூறியதாவது,

அரசியலமைப்பு பேரவையில் சட்டப்படி பத்து உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதில் ஏழு எம்பிக்களும், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இடம் பெற வேண்டும். இந்த எம்பிகளில், நான்கு சிங்கள எம்பிகளும், தலா ஒரு எம்பியாக மூன்று எம்பீக்கள், வடகிழக்கு தமிழர், முஸ்லிம்கள், இலங்கை இந்திய தமிழர் ஆகியோரை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இதுவே நியாயமான நடவடிக்கை. ஆனால், இது நடைபெறவில்லை.

சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சி தலைவர் ஆகிய மூவரும் தம் பதவிநிலை காரணமாக அரசியலமைப்பு பேரவையில் இடம் பெறுகின்றார்கள். ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவரும் தம் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். இதன்படி ரணில் விக்கிரமசிங்க, தமது பிரதிநிதியாக எம்பி நிமல் சிறிபால சில்வாவையும், சஜித் பிரேமதாச தமது பிரதிநிதியாக எம்பி கபீர் ஹசீமையும் நியமித்துள்ளனர்.

அரசாங்கம், பிரதான எதிர்கட்சி ஆகிய கட்சிகளை சாராத சிறுகட்சிகளின் பிரதிநிதியாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேரித்துள்ளது. இப்போது இதுவே பிரச்சினையாக மாறியுள்ளது.

மொட்டு கூட்டணியில் தெரிவாகி விட்டு, அரசாங்கங்கத்தின் எல்லா தவறுகளுக்கும் காரணமாகி விட்டு, இப்போது எதிர்கட்சி பக்கத்தில் வந்து உட்கார்ந்துள்ள உதயகம்மன்பில, விமல் வீரவன்ச கும்பல், இதையும் தட்டி பறிக்க பார்க்கிறது.

உண்மையில், இந்த விவகாரத்தில் மலையக இந்திய வம்சாவளி தமிழரே முதலில், அநீதிக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம், அவர்கள் நியமிக்கும் எம்பியாக இந்திய வம்சாவளி தமிழரை பிரதிநித்துவம் செய்யும் ஒரு எம்பியை நியமிக்கும்படி, நானும், எம்பி பழனி திகாம்பரமும் கோரிக்கை விடுத்தோம்.

தான் ஏற்கனவே, எம்பி நிமல் சிறிபால சில்வாவை பெயரிட்டு விட்டதாகவும், முதலிலேயே கூறி இருந்தால், பரிசீலிக்க இடமிருந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் கூறினார். தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பி ஒருவரை தமது பிரதிநிதியாக நியமிக்க முதலில் எம்மிடம் உடன்பட, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பிறகு தமது கட்சியில் இருந்து, எம்பி கபீர் ஹீசிமை நியமிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு உள்ளதாக கூறினார். எம்பி கபீர் ஹீசிம் சகோதர முஸ்லிம் எம்பி என்பதால் அதை நாம் புரிந்துக்கொண்டோம்.

இந்நிலையில், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவர், கட்டாயம் மலையக இந்திய வம்சாவளி தமிழராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அதற்கான பெயரையும் நாம், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, பிரதமர், எதிர்கட்சி தலைவர்ஆகியோரிடம் சிபாரிசு செய்து வழங்கியுள்ளோம்.

இத்தகைய பின்னணியில், இறுதியான ஒரேயொரு எம்பி நியமனத்தில், எம்பி சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சிபாரிசு செய்துள்ளது. அது சட்டப்படியும், அரசியல் நியாயப்படியும் சரியானது. ஆகவே அதை நாமும் ஆதரிக்கிறோம். இதையே இன்று பிரச்சினைக்கு உள்ளாக்கி, அதையும் தட்டிப்பறித்து, ஈழத்தமிழ், மலையக தமிழ் என்ற பேதமில்லாமல் ஒரு தமிழ் எம்பிகூட அரசியலமைப்பு பேரவையில் இடம்பெற முடியாத நிலைமையை இனவாதிகள் ஏற்படுத்த முயல்கிறார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியலமைப்புப் பேரவைக்கு அழையுங்கள் – சஜித்

அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை உடனடியாக வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்தார்.

பன்முகத்தன்மையின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதற்கு தான் ஒருபோதும் உடன்பாடில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,வடக்கு-கிழக்கு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

நிரந்தர அரசியல் தீர்வைப் பெறுவதற்கான பொறிமுறை – அனைத்து தமிழ்த் தேசியத் தரப்பினருக்கும் ரெலோ முன்மொழிவு

  1. இந்தியாவின் தலைமையில் மேற்பார்வை
  2. சர்வதேச நாடுகளின் பங்களிப்பு
  3. ஐநாவின் பிரதிநிதித்துவம்
  4. நிபுணர்கள் குழு உருவாக்கம்
  5. புலம்பெயர் உறவுகள் ஒருங்கிணைப்பு
  6. தீர்வு நடைமுறைப் படுத்தும் வரையான செயல்பாடு

 

இந்தியாவின் தலைமையில் மேற்பார்வை

தமிழ் தேசிய அரசியல் தரப்பில் செயல்படும் அனைவரும் சமஸ்டி முறையான அரசியல் தீர்வே இறுதி நிலைப்பாடு என்பதை ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பிடும் அம்சமாக ஒற்றையாட்சி அற்ற, தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைந்து, எமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய முற்று முழுதாக அதிகார பகிர்வோடு கூடிய அலகாக அமைய வேண்டும் என்பதில் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளோம். அதே நேரம் அரசியல் யாப்பிலே ஏற்கனவே உள்ள அதிகாரங்களை முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்தி மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதிலும் ஒத்த நிலைப்பாட்டில் உள்ளோம்.

பிராந்திய வல்லரசாகவும், தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையில் ஆரம்ப கட்டத்தில் இருந்து அக்கறையோடு செயற்பட்டு வந்த அண்டை நாடாகவும், இலங்கை அரசியலிலே செல்வாக்கு செலுத்தக்கூடிய நிலையிலேயே உள்ளமையாலும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இருப்பவர்களாகவும், ஏற்கனவே இலங்கை அரசியல் யாப்பிலே அதிகாரப் பகிர்வுக்கான ஒரு ஏற்பாட்டை செய்தவர்கள் என்ற வகையிலும், தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை தீர்க்கக்கூடிய அரசியல் தீர்வை வலியுறுத்தி வருபவர்களாகவும் இருப்பதனாலே இந்தப் பேச்சுவார்த்தை இந்தியாவின் தலைமையிலான மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாடுகளின் பங்களிப்பு

சர்வதேச நாடுகளான பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி மற்றும் நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து இப்பொறிமுறையில் பங்குபெற்றல் அவசியமானது. ஐநா பொதுச் சபை, பாதுகாப்புச் சபை மற்றும் மனித உரிமை பேரவை என்பவற்றில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களாக, ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அக்கறை கொண்டவர்களாகவும் முன் நின்று செயல்படுபவர்களாகவும், பல சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நமது பங்களிப்பை வழங்கியதோடு அது பற்றிய அனுபவம் உள்ளவர்களாகவும், இலங்கை அரசாங்கத்தின் மீது பொருளாதார ரீதியாகத் தாக்கத்தை செலுத்தக் கூடியவர்களாகவும், மற்றைய நாடுகளையும் தங்கள் பின் அணி திரட்டக் கூடிய வல்லமை கொண்டவர்களாகவும் இருப்பதானாலே இவர்கள் பங்களிப்பு அவசியமானது. குறிப்பாக பிரித்தானியா இலங்கையை காலனித்துவ ஆட்சியில் வைத்திருந்த நாடாகவும் இங்கு நிலவியிருந்த சமஸ்டி ஆட்சி முறையை ஒற்றையாட்சி முறைமைக்கு மாற்றியவர்களும் அதனால் தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறுவதற்கு கடமைப்பட்டவர்களாகவும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐநாவின் பிரதிநிதித்துவம்

ஐநாவின் பிரதிநிதித்துவம் இந்த பொறிமுறையில் அவசியமாகிறது. பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களை தாண்டி தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை என்பன மீள நிகழாமையை உறுதிப்படுத்துவது நிரந்தரமான அரசியல் தீர்வு ஆகும். மேலும் உலக நாடுகளில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளை ஆணைக்குழுக்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் நிபுணர் குழுவின் மூலம் தீர்த்து வைத்த அனுபவமும் வரலாற்றையும் கொண்டது ஐநா.

நிபுணர்கள் குழு உருவாக்கம்

மேற்கூறிய பிராந்திய சர்வதேச வல்லரசுகளின் நிபுணர்களும் ஐநாவின் நிபுணர்களும் தமிழ் மக்கள் தரப்பில் அரசியல் யாப்பு தயாரிப்பு சம்பந்தமான நிபுணர்களும் எல்லைகள் மீள் நிர்ணயம் நிர்வாகம் மற்றும் நிதிய ஆளுமை சம்பந்தமான நிபுணர்களும் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும். இந்த குழுவில் தமிழ் மக்கள் சார்பில் புலம் பெயர் உறவுகளில் இருந்து நிபுணர்களும் இடம் பெறுவர். தவிர ஆலோசனை வழங்கவும் நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவும் உருவாக்கப் பட வேண்டும்.

புலம்பெயர் உறவுகள் ஒருங்கிணைப்பு

தமிழ் தேசியத் தரப்பினரும் புலம்பெயர் உறவுகளும் ஒருமித்து, இந்த நிபுணர் குழுவினருக்கான செயல்பாட்டை உறுதி செய்யவும், ஏதுவான அரசியல் சூழ்நிலைகளை உரிய தரப்புகளுடன் இணைந்து ஏற்படுத்துவதும் முக்கியமானதாகும். இந்த அடிப்படையிலான பங்களிப்புடனும் வழிகாட்டுதலுடனும் அரசியல் தீர்வு எட்டப்படுதல் வேண்டும். அதற்கான தொடர்ச்சியான செயல்பாடும் அவசியமாகும்.

அரசியல் தீர்வானது இந்த நிபுணர் குழுவினர்கள் வழிகாட்டுதலிலே முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்தப்படும் வரை நாங்கள் பரிந்துரைத்த பொறிமுறை செயற்பாட்டில் இருக்க வேண்டும். முற்று முழுதான அதிகார பகிர்வு முறைமையை எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி நடைமுறைப்படுத்துவது, எப்படி முற்றுப் பெற வைப்பது என்பதை இந்தப் பொறிமுறையின் வழிகாட்டுதலுடன் தமிழ் தலைவர்கள் ஒப்பேற்ற வேண்டும்.

தீர்வு நடைமுறைப் படுத்தும் வரையான செயல்பாடு

கடந்த காலங்களில் அதிகாரப் பகிர்வு முறைமை அரசியல் யாப்பிலே உருவாக்கப்பட்டு இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் வெற்றுக் காகிதங்களாகவே அமைந்துள்ளன. அப்படியல்லாமல் நியாயமான அரசியல் தீர்வை எட்டுவதும் அதனூடான அதிகார பகிர்வினை உறுதி செய்து நடைமுறைப் படுத்தும் வரை இந்தப் பொறிமுறையை தொடர்ச்சியான செயல்பாட்டில் வைத்திருப்பது அவசியமானது. தமிழ் மக்களுடைய நிரந்தரமான அரசியல் விடிவை எட்டுவதற்கு அனைத்து தமிழ் தேசிய தரப்பினரும் நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

அரசுடனான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து இறுதி இலக்கை எட்டும் வரைக்குமான விடயங்களை அரசியல் மாற்றங்களைத் தாண்டி தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பொறிமுறையை நாங்கள் முன்மொழிந்திருக்கிறோம். தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றும் அனைத்து தரப்பினரும் இந்தப் பொறிமுறையை மேலும் செழுமைப்படுத்த உங்கள் பங்களிப்பை கோரி நிற்கிறோம். குறை குற்றம் கூறி, ஒருவர் மீது ஒருவர் சேறு வாரி வீசிக் காலத்தை வீணடிக்கும் வெட்டி விவாதங்களை தவித்துக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுகிறோம்.

உங்கள் பரிபூரண ஆதரவுடன் மேற் குறிப்பிட்ட பொறிமுறையின் உருவாக்கம், நடைமுறை, மற்றும் செயற்பாட்டை முன்னெடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். தமிழ் தேசிய இனத்தின் இறுதி இலக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான இந்த அரிய சந்தர்ப்பத்தை ஒருமித்து பயன்படுத்துவோமாக.

குருசுவாமி சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு