செப்ரெம்பருக்கு முன்னர் கடன் சீரமைப்பு நிறைவு

‘கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்து பொருளாதாரத்தை ஒரு நிலையான நிலைக்கு கொண்டு வர முடியும்” என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த பொருளாதாரக் கொள்கைக்கு பொதுஜன பெரமுனவும் தேவையான ஆதரவை வழங்கியது.

இந்த நாடு மீள வேண்டுமானால் அந்த ஆதரவு மிகவும் முக்கியமானது. இந்தநிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து. திவால் நிலையில் இருந்து வளமான நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கை வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதலீட்டாளர்கள் எவரும் நாட்டுக்கு வரவில்லை.

இந்த சூழ்நிலையிலேயே நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவேண்டியேற்பட்டது.

சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் பிச்சைக்காரர்களாக வாழ விரும்புவதில்லை. அவர்கள் கண்ணித்துடனேயே வாழ விரும்புகின்றனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால் இலங்கைக்கு அவற்றை நிறைவேற்றுவதை தவிர வேறு வழிகள் இல்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு- செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாணயம் அச்சிட அரசாங்கம் தீர்மானம் – சம்பிக்க

கோட்டாபய – கப்ரால் சென்ற தவறான பாதையில் தற்போதைய அரசாங்கமும் செல்கிறது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாணயம் அச்சிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடன் பெறல், நாணயம் அச்சிடல் இதனை தவிர்த்து எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 43 ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரி நன்மைகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்தால் மாத்திரமே நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

திறைசேரி முறிகள் தொடர்பான சட்டமூலத்தை தற்போது அவசரமாக கொண்டு வந்துள்ளனர். இது முறையாக கலந்துரையாடப்படாது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரசாங்கமும் முன்னாள் அரசாங்கம் போன்றே செயற்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்‌ஷ. அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் சென்ற பாதையிலேயே தற்போதைய ஆட்சியாளர்கள்செல்கின்றனர்.

இவர்களால்தான் அதிகளவில் பணத்தை அச்சிடவும், அதிக வட்டி வீதத்தையும் அறவிட நேர்ந்தது. வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையையும் கடந்து நாங்கள் செல்கின்றோம். வருமானத்தை விடவும் செலவு அதிகரித்து மீண்டும் விழப் போகின்றோம்.

மத்திய வங்கி சட்டமூலத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் பிற்போடப்பட்டது.மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட்டால் அரசாங்கத்தின் விருப்பத்துக்கு அமைய திறைசேரி உண்டியல் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முடியாது. ஆகவே அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரச மற்றும் தேசிய கடன்களை மறுசீரமைக்கும் போது சமூக கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறும். ஆகவே சமூக கட்டமைப்பின் தோற்றம் பெறும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

பயங்கரவாத சட்டமூலத்தை வாபஸ் பெற்றாலே ஜீ,எஸ்.பி. வரி சலுகையை மீண்டும் பெறலாம் – ஹர்ஷ டி சில்வா

மக்களின் ஜனநாயக உரிமை மீறல், மனித உரிமை மீறப்படும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. சலுகை கிடைக்கப்போவதில்லை.

அதனால் ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

ஐரோப்பிய ஒன்றியத்தால் நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி, சலுகை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள நாங்கள் விண்ணப்பிக்கவேண்டும்.

அதன் பிறகு எந்த நாடுகளுக்கு இதனை வழங்குவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும். தற்போது ஆசியாவில் இலங்கை. பாகிஸ்தான் உட்பட 4 நாடுகளுக்கே இந்த ஜீ.எஸ்.பி சலுகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

ஜீ.எஸ்.பி. சலுகையைப் பெற்றுக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்திடம் 27 இணக்கப்பாடுகள் இருக்கின்றன. அதனை அந்த நாடுகள் செயற்படுத்த வேண்டும்.

அந்த இணக்கப்பாடுகளில் பிரதான விடயமாக இருப்பது, மனித உரிமை, தொழிலாளர் உரிமை, நல்லாட்சி மற்றும் சூழலை பாதுகாப்பது தொடர்பானதாகும். அதில் பிரதானமாக இருப்பது தேர்தல் உரிமையாகும்.

தேர்தல் நடத்தாமல் இருப்பது மக்களின் வாக்குரிமையை மீறும் பாரிய விடயமாகக் கருதப்படுகிறது. அதனால் மக்களின் ஜனநாயக உரிமையை விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அடுத்த விடயம்தான் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம். அதனால் அரசாங்கம் எந்தத் தீர்மானத்தை மேற்கொண்டாலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளாவிட்டால் ஒருபோதும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. சலுகை மீண்டும் கிடைக்கப்போவதில்லை.

ஏனெனில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் பல, மக்களுக்கு அரசமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள் மீறப்படுகின்றன.

மக்களின் உள்ளத்தில் இருக்கும் விடயங்களை வீதிக்கிறங்கி அரசாங்கத்துக்குத் தெரிவிக்கும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. இவ்வாறானதொரு செயலை பயங்கரவாத செயல் எனத் தெரிவித்து, அவர்களுக்கு எதிராகத் தடுப்புக்காவல் உத்தரவு பிரப்பிப்பதை ஐரோப்பிய ஒன்றியம் அனுமதிப்பதில்லை.

அதனால் ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் ஓமான் முதலீட்டாளர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டிருக்கிறார். அவர் இப்போது தனது தொழிற்சாலையை மூடிவிட்டு செல்லப்போகிறார் எனத் தெரியவருகிறது.

இவ்வாறு இருக்கையில் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவார்களா? இந்த தொழிற்சாலை மூடப்பட்டால் 500 இறகும் மேற்பட்டவர்களுக்கு தொழில் இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. என்றாலும் ஓமான் முதலீட்டாளருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் இந்த நாட்டின் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நம்பிக்கை இல்லை, மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பில் நம்பிக்கை இல்லை. கட்டளையாளர் போல் நாட்டை நிர்வகிக்க நடவடிக்கை எடுத்தால் ஜீ.எஸ்.பி. சலுகை எமக்கு கிடைக்கப்பாவேதில்லை.

2010 இலும் எமது ஜீ.எஸ்.பி. சலுகையை இல்லாமலாக்கிக்கொண்டது இந்த அரசாங்கமாகும். ஜீ.எஸ்.பி. சலுகை இல்லாமல் போனால் 630 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படும் என்றும் எமது வறுமை நிலை மேலும் அதிகரிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. அதனால் அரசாங்கம் ஜீ.எஸ்.பி சலுகையை பாதுகாத்துக்கொண்டு செயற்பட வேண்டும். – என்றார்.

இலங்கையை செழிப்பான பாதையில் கொண்டு செல்ல முடியும் என நாணய நிதியம் நம்பிக்கை

இலங்கையை செழிப்பான பாதையில் மீண்டும் கொண்டுசெல்ல முடியும் என சர்வதேச நாணயநிதியம் நம்பிக்கைவெளியிட்டுள்ளது.

ஆசியா பசுபிக்கின் பொருளாதார நிலை குறித்து செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் சர்வதேச நாணயநிதியத்தின் ஆசியபசுபிக்கிற்கான இயக்குநர் கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு முக்கிய பிரச்சினை உள்ள நாடு என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை அடிப்படையாக கொண்ட திட்டம் நுண்பொருளாதார ஸ்திரப்படுத்தல் பணவீக்கத்தை குறைத்தல் போன்றவற்றை வலியுறுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதிஒருங்கிணைப்பு வருவாய் ஒருங்கிணைப்பினை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் வருவாய் திரட்டல் வரிவசூலிப்பு போன்றவற்றில் இலங்கை மிகவும் பின்னிலையில் உள்ளமைக்கும் இதுவும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.

இதற்கு கொவிட்டிற்கு முன்னர்அவர்கள் முன்னெடுத்த கொள்கைளில் உள்ள தவறுகளே இதற்கு காரணம் அவர்கள் வரிச்சலுகையை வழங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஆதரவு திட்டம் என்பது வருவாய் அடிப்படையிலான ஒருங்கிணைப்பு ஆகும் இது பொருளாதாரத்திற்கு ஸ்திரதன்மையை வழங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மிகவும் உயர்நிலைக்கு சென்ற பணவீக்கத்தை கட்டுப்படுத்த சர்வதேச நாணயநிதியம் விரும்புகின்றது என தெரிவித்துள்ள அவர் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் ஆட்சி மற்றும் ஊழல் விவகாரங்களிற்கும் தீர்வை காணமுயல்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி மற்றும் ஊழல் விவகாரம் குறித்து ஆழமான கண்டறிதலை மேற்கொண்ட முதல் நாடு இலங்கை எனவும் தெரிவித்துள்ள அவர் மேலும் இது இலங்கை வறியவர்கள் மற்றும் நலிந்தவர்களிற்கு எவ்வாறு உதவவேண்டும் என்பதை மையப்படுத்திய திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் கடன்வழங்குநர்கள் உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்களை உள்ளடக்கிய கடன் வழங்குநர்களுடன் கடன் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான நல்லெண்ண முயற்சிகளை இலங்கை அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை 2022 இல் 8.7 வீத வீழ்ச்சி காணப்பட்டது 2023 இல் இது 3வீதமாக காணப்படும சிறிய மீட்சி காணப்படும் எனவும் கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தவேண்டும் இதன் காரணமாக கடன்களை பேண்தகு தன்மை கொண்டமையாக மாற்றலாம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தை இலங்கை குறைக்கவேண்டும் என் என்றால் அது வறியவர்கள் மீது சுமையை செலுத்துகின்றது வறியவர்கள் நலிந்தவர்களை காயப்படுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி தயார்

பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கும், பொருளாதார மீட்சியைத் துரிதப்படுத்துவதை முன்னிறுத்தியும் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், பல்வேறு துறைகளிலும் இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

தென்கொரியாவின் இன்ஸியான் நகரில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்ஸுகு அஸகவாவுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (2) நடைபெற்றது.

இதன்போது மிகவும் சவாலான காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களுக்காகவும் நாட்டின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்தி வழங்கிய உதவிகளுக்காகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்தார்.

அதேவேளை டிஜிட்டல்மயமாக்கல், விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்திவலு ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கும் நிதியியல்துறை உறுதிப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும் அமைச்சர் அலி சப்ரி கோரிக்கைவிடுத்தார்.

அதற்குப் பதிலளித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்ஸுகு அஸகவா, மிகமோசமான பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கும், மீட்சிக்கான வலுவான அடித்தளத்தை இடுவதற்கும் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைப் பெரிதும் பாராட்டியதுடன் பல்வேறு துறைகளிலும் இலங்கையுடன் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

Posted in Uncategorized

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தை இலக்கினை ஆரம்பிக்கவுள்ளது – பாரிஸ் கிளப்

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தை இலக்கினை ஆரம்பிக்கவுள்ளதாக பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், ஜப்பான், இந்திய நிதி அமைச்சர்கள் மற்றும் இலங்கையின் தலைவர், பிரதிநிதிகள், கடன் வழங்குநர்கள் என பலரும் கலந்துக்கொண்டு இந்த பேச்சுவார்த்தை தளத்தினை அமைத்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை(12.04.2023) பாரிஸ் கிளப் தெரிவித்திருந்தது.

இதற்கமைய கடன் வழங்கும் குழுக்கள் எதிர்கால கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் பற்றியும் பேசப்பட்டு வருகின்றது.இதேவேளை நியாயமான சுமை பகிர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் மறுசீரமைப்பின் ஒப்பீடு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விரும்புவதாக பாரிஸ் கிளப் அறிவித்துள்ளது.

மேலும் இச்செயற்பாட்டில் பொதுத்துறை கடன் வழங்குநர்களும் வரவேற்கப்படுகிறார்கள் என பாரிஸ் கிளப் அழைப்பு விடுத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சீர்திருத்தங்கள் அவசியம் – ஐ.எம்.எவ்

இலங்கை எதிர்நோக்கி வரும் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக் கடன் நிவாரணம் கிடைத்துள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார நிலை படிப்படியாக மீண்டு வரத் தொடங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்டகால பொருளாதார பிரச்சினைகள் மற்றும் தவறான கொள்கை முடிவுகளினால் இலங்கை வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்ததாக ப்ரூவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள நிலைமையிலிருந்து விடுபட சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 04 வருடங்களில் 03 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளதுடன், அந்த பாரிய பிரச்சினையை தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கவும், நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்கவும், வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்கவும், கடன் நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் ஏற்கனவே புதிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை அதிகாரிகள் சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரு பீட்டர் ப்ரூவர் கூறுகிறார்.

பொருளாதாரத்தை வலுப்படுத்த, அதிக வருமானம் ஈட்டுபவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

அதற்காக, முற்போக்கான வரி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது, பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம்.

சர்வதேச நாணய நிதியம் அதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்றும் இலங்கையின் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதற்கு நெருக்கமாக செயற்படும் என நம்புவதாகவும் பீட்டர் ப்ரூவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை விரைவில் பொருளாதார மீட்சியை எட்டும். – இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு மன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது திறைசேரியின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு மன்ற இம்முயற்சியினை பாராட்டிய பிரதி உயர் ஸ்தானிகர்,

இவ்வாறான அமர்வுகளை 6 மாதங்களுக்கு ஒரு தடவை ஒழுங்கமைக்கவேண்டுமென்ற முன்மொழிவுக்கு தனது ஆதரவினையும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியம் குறித்த விவகாரங்களில் இலங்கை மக்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவினை வழங்கியதாக தெரிவித்த அவர்,

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை பிரிக்க முடியாது – ஜனாதிபதி

பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை பிரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘பொருளாதார உரையாடல் – ஐ.எம்.எப் மற்றும் அதற்கு அப்பால்’ என்ற தொனிப்பொருளில் இன்று(30) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.எம்.எப் திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்தை அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி நாட்டை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

IMF உதவி இலங்கைக்கான நிரந்தர ‘பிணையெடுப்பு’ அல்ல – பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டு

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம் ஒரு ‘பிணையெடுப்பு’ (பெயில்-அவுட்) அல்ல. இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படுமே தவிர, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு வழங்கப்படமாட்டாது.

எனவே, நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இந்த உதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளியல் நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கைக்கான 3 பில்லியன் டொலர் உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளியல் அமைப்புக்களும், பொருளாதார நிபுணர்களும் இதுபற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

‘அட்வகாட்டா’ அமைப்பு

இலங்கைக்கான 17ஆவது உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை வழங்கியுள்ள அனுமதி வெறும் ஆரம்பம் மாத்திரமேயாகும். கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் அல்லது மந்தகதியிலான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக கையிருப்பு பற்றாக்குறை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகளுக்கு உதவுவதே நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச் செயற்றிட்டம் ஒரு ‘பிணையெடுப்பு’ (பெயில்-அவுட்) அல்ல. மாறாக இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படும். இது இலங்கை இருதரப்பு, பல்தரப்பு மற்றும் நிதியியல் சந்தைகளை நாடுவதற்கு உதவும்.

எது எவ்வாறிருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம், இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வினை வழங்காது.

ஆகவே, தற்போது சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைத் தொடர்ந்து முதலாவது கட்டமாக இலங்கைக்கு 333 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும். அதனையடுத்து கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான மதிப்பீடு மற்றும் சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்றிட்ட நிபந்தனைகள் என்பன பகிரங்கப்படுத்தப்படும். எஞ்சிய நிதி சுமார் 4 வருடகாலத்தில் வழங்கப்படும்.

இருப்பினும், அது நாணய நிதியத்தின் நிபந்தனைகள் உரியவாறு நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருக்கிறது. இருப்பினும், இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதைத் தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இவ்வுதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும் என்று ‘அட்வகாட்டா இன்ஸ்டியூட்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பு

வழமையாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்கள் பிரச்சினையின் அறிகுறிகளை தணிப்பதற்கு ஏற்ற வகையிலேயே வடிவமைக்கப்படும். மாறாக, அது அப்பிரச்சினைக்கான அடிப்படை காரணத்துக்கு தீர்வினை வழங்காது. அதேபோன்று இலங்கையை பொறுத்தமட்டில், இங்கு அடிப்படை பிரச்சினை நிர்வாகத்திலும், ஊழல் மோசடிகளிலுமே இருக்கின்றது என்பது தற்போது சர்வதேச நாணய நிதியத்துக்கும் ஏனைய அனைத்து தரப்பினருக்கும் தெளிவாக புரிந்திருக்கிறது.

இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய செயற்றிட்டம் இப்பிரச்சினையை கையாள்வதற்கு தவறியிருக்கிறது என்று ‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஷான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளியலாளர் ஸேர்கி லேனோ

இலங்கைக்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருப்பதுடன், முதற்கட்டமாக சுமார் 330 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்கியுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு நாணய மாற்றுக்கையிருப்பில் 15 சதவீத அதிகரிப்பு ஏற்படுவதுடன் அது அத்தியாவசிய பொருட்களின் உயர்வான இறக்குமதிக்கும், அதனைத் தொடர்ந்து மீட்சிக்கும் பங்களிப்பு செய்யும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பொருளியலாளர் ஸேர்கி லேனோ தெரிவித்துள்ளார்.

பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க்

இலங்கைக்கு அடுத்துவரும் 4 வருட காலத்தில் 3 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருக்கிறது.

கடந்த 1965ஆம் ஆண்டிலிருந்து இலங்கை 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கிறது. அவை அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன.

இலங்கைக்கு மீண்டுமொரு கடன் தேவையில்லை. மாறாக, கடந்த 1884 – 1950 வரையான காலப்பகுதியில் நடைமுறையில் இருந்ததைப் போன்ற ‘நாணயச்சபை’ முறைமையே இலங்கையின் தற்போதைய தேவை என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க் தெரிவித்துள்ளார்.