சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க உயர்மட்ட தூதுவர் இலங்கைக்கு விஜயம்

மலையக தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி டிசைரி கோர்மியர் ஸ்மித் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவர் இன்று 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார். டிசைரி கோர்மியர் ஸ்மித் தெற்காசியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அவர் கொழும்பு, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மேலும், கோர்மியர் ஸ்மித், மலையக தமிழர்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

நுவரெலியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் ஆங்கில கல்விக்கான உதவித்தொகைத் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் கோர்மியர் ஸ்மித் பங்கேற்கவுள்ளார். இது ஒரு அமெரிக்க அரசாங்க நிதியுதவியுடன் கூடிய உலகளாவிய திட்டமாகும், இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன்களின் அடித்தளத்தை வழங்குகிறது. இந்நிகழ்வில் மூன்று மாத பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 25 மாணவர்களுக்கு அவர் விருதுகளை வழங்குவார். இந்த முயற்சியானது மலையக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை அவர்களின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்த புதிய தொழிற்தகைமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிச் சிங்கள சட்டமே நாடு இன மத ரீதியாக பிளவடைய காரணம் – மனுஷ நாணயக்கார

தனிச் சிங்கள சட்டமே நாடு இனஇமத ரீதியாக பிளவடைய காரணம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் அரசியல் நோக்கத்திற்காகவும் பொருளாதார நோக்கத்திற்காகவும் இனவாதமும் மதவாதமும் சமூகத்தில் பரப்பப்பட்டன. இதனை அரசியல்வாதிகளும் தங்களின் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

இந்த நாடு வீழ்ந்தபோது, அனைவரும் ஒன்றிணைந்து தான் இந்நாட்டை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.அத்துடன் பேச்சில் மட்டுமன்றி, செயற்பாட்டிலும் எமது ஐக்கியத்தை நாம் காண்பித்துள்ளோம்.

எதிர்க்காலம் குறித்து மட்டும் குறைகூறிக் கொண்டிருக்காமல், புதிதாக சிந்திக்கும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்.

1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்துதான், இந்நாடு பல இனவாத மோதல்களுக்கு முகம் கொடுத்தது. இங்கு தான் நாம் பிரிந்தோம். இதன் பின்னர்தான் ஆயுதம் ஏந்தப்பட்டு, கொடிய யுத்தமும் நாட்டில் ஏற்பட்டது.

இவை தான் நாடு முன்னேற்றமடைய தடையாக இருந்தன.

1956 இற்குப் பின்னர் நாட்டை விட்டு பல புத்திஜீவிகள் வெளியேறினர். 1983 இலும் 2022 இலும் இதேபோன்று புத்திஜீவிகள் உள்ளிட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். நாம் நம்மை உணராத காரணத்தினால்தான், அடுத்தவரின் குறைகளை பெரிதாகக் காண்கிறோம்.

நாம் ஏனையவரின் மத, இன, கலாசாரத்தை மதித்தால் மட்டுமே, இந்நாட்டை முன்னேற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

திம்புலாகல சிங்கள மக்களை வெளியேற்றின் தமிழ் – சிங்கள இனக்கலவரம் உருவாகும் – சரத் வீரசேகர எச்சரிக்கை

மட்டக்களப்பு – திம்புலாகல சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) இடம் பெற்ற இஸ்ரேல்- பலஸ்தீன மோதல், பூகோள தாக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு திம்புலாகல பகுதியில் வாழும் சிங்களவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை புலிகள்  சிங்களவர்களை அழித்து அப்பகுதியில் சிங்கள இன பரம்பலை இல்லாதொழித்தார்கள்.

திம்புலாகல சிங்கள பாரம்பரிய கிராமம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆகவே திம்புலாகல சிங்கள கிராம விவகாரத்தில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் அதிகாரத்துடன் சிங்களவர்களை வெளியேற்றினால் சிங்கள -தமிழ் இன முரண்பாடு தோற்றம் பெறும்.

இலங்கை ஒற்றையாட்சி நாடு. ஒவ்வொரு மாகாணங்களும் ஒவ்வொரு இனங்களுக்கு என்று எழுதிக் கொடுக்கவில்லை. அனைவருக்கும் உரிமை உண்டு.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆயுதம் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு முன்னுரிமை வழங்கியுள்ளது. இவர்களின் நோக்கங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

இலங்கை விவகாரங்களில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் இல்லை – பிரித்தானிய இந்து – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இணையனுசரணை நாடுகள் உள்ளிட்ட சகல தரப்புக்களுடனும் கலந்துரையாடித் தீர்மானிக்கப்படுமென பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கை விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், எனவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர் மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு வருகைதந்த பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான் கடந்த இரு தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாஸ ராஜபக்ஷ, காஞ்சன விஜேசேகர, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, கொழும்பை தளமாகக்கொண்டியங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

அதன் நீட்சியாக வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அவர், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்குடன் இணைந்து வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து தொழில் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள், நல்லிணக்கம் மற்றும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் விவகாரத்தில் அரசாங்கத்தின் உத்தரவாதம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார்.

அதுமாத்திரமன்றி முகமாலைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான், அங்கு நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் கண்ணிவெடி அகழ்வுப்பணிகளையும் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யானுக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று முன்தினம் மாலை 7.00 மணிக்கு யாழ் ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது. சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனும், புளொட் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனும் கலந்துகொண்டிருந்தனர். தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த போதிலும், பிற காரணங்களால் அவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்கவில்லை.

அதன்படி, இச்சந்திப்பில் பங்கேற்ற தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்தும், அண்மையகாலங்களில் வட-கிழக்குவாழ் தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் பிரித்தானிய அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

குறிப்பாக அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா பதவி விலகி, நாட்டைவிட்டு வெளியேறியமை குறித்தும், அதற்கு குருந்தூர்மலை விவகாரத்தில் அவர் வழங்கிய தீர்ப்பு மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள் பிரதான காரணமாக இருப்பதாகவும் தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகள் விளக்கிக் கூறினர். அதேபோன்று, வட-கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கள் மற்றும் இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களை இடித்தும், புதிதாகவும் நிர்மாணிக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகள் என்பன பற்றியும் இச்சந்திப்பின்போது விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இவ்விடயத்தில் வட-கிழக்கு மாகாணங்களில் முப்படையினர் மற்றும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தனியார் காணி அபகரிப்புக்கள் பற்றிய பட்டியல் மற்றும் அவ்விரு மாகாணங்களிலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 71 பௌத்த விகாரைகள் பற்றிய பட்டியல் ஆகிய இரு ஆவணங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பிரித்தானிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யானிடம் கையளித்தார்.

அதேபோன்று, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்ட ஆன்-மேரி ட்ரெவெல்யான், அவர் அதனைச் செய்வாரா என்று தமிழ்ப்பிரதிநிதிகளிடம் அபிப்பிராயம் கோரினார்.

அதற்குப் பதிலளித்த பிரதிநிதிகள், இவ்விடயத்தில் தமக்குப் பல்வேறு சந்தேகங்களும் மாறுபட்ட நிலைப்பாடுகளும் இருப்பதாகக் குறிப்பிட்டனர். 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அபிப்பிராயம் கோரப்போவதாக ஜனாதிபதி கூறியிருப்பதன் மூலம், இவ்விடயத்தில் அவரிடம் உண்மையான அரசியல் தன்முனைப்பு இல்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிவதாகவும், அரசியலமைப்பின் உள்ளடக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்திடம் அனுமதிகோரத் தேவையில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், அடுத்த தேர்தல் வரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மாட்டார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இலங்கையைக் காலனித்துவத்தின்கீழ் வைத்திருந்து, தமது ஆட்சிமுறையை இலங்கைக்கு வழங்கிச்சென்ற பிரித்தானியாவுக்கு இவ்விடயத்தில் தலையீட்டு, தீர்வுகாண உதவவேண்டிய தார்மீகக் கடப்பாடு உண்டு என்றும் அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யானுக்கு தமிழ்ப்பிரதிநிதிகள் நினைவுறுத்தினர்.

அடுத்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எதிர்வரும் ஆண்டு முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என தமிழ்ப்பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர். அதுமாத்திரமன்றி இலங்கை விவகாரம் சர்வதேச மட்டத்தில் ஒரு பேசுபொருளாக இருப்பதற்கும், அழுத்தம் பிரயோகிக்கப்படுவதற்கும் இவ்வாறான தீர்மானங்கள் முக்கிய காரணமாக இருப்பதனால், இதனைக் கைவிடாது தொடர்வது அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதற்குப் பதிலளித்த பிரித்தானிய அமைச்சர், இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் ஏனைய இணையனுசரணை நாடுகள் மற்றும் இலங்கையைச்சேர்ந்த சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கமுடியும் எனத் தெரிவித்தார். இருப்பினும் இலங்கை விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், ஆகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பொலிஸ் அதிகாரம் இன்றிய மாகாண சபையுடன் அடுத்த வருடம் தீர்வு; மனித உரிமை மீறல்களுக்கு நாட்டினுள்ளேயே தீர்வு – ஜனாதிபதி ரணில்

“இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்தவுள்ளேன்.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வேறுபாடுகளை முன்நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில் நேற்று கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி மாணவர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடினார்.

அதனையடுத்து பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் தமிழ், சிங்கள மொழிகளில் இசைக்கப்பட்டன.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ‘‘தேசிய கீதத்தில் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று கூறப்படுவதால் அதனை சிங்களத்தில் இசைத்தாலும் தமிழில் இசைத்தாலும் பிரச்சினைகள் இல்லை. அனைவரும் ஒன்றுபட்டு ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.

வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல் களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவைச் சந்திக்க நேரிட்டது. அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. நான் அனைத்து தலைவர்களுடனும் பேச்சு நடத்தவே எதிர்பார்க்கின்றேன். இன மத பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவோம். மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்.

பொலிஸ் அதிகாரங்களை ஒருபுறம் வைத்துவிட்டு விடயங்களைப் பார்ப்போம். நான் கல்வி அமைச்சராக இருந்தபோது நாட்டில் ஒன்பதாயிரம் பாடசாலைகள் காணப்பட்டன. அவற்றை ஒரு போது என்னால் நிர்வாகம் செய்ய முடியாமல் போனது. ஒன்பதாயிரம் பாடசாலைகளையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. மாகாண சபைகளையும், ஒழுக்கத்தையும் பேணுவது மத்திய ஆட்சியின் செயற்பாடாகும்.

மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அதனை நாம் நாட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வோம். வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. சர்வதேசத்திற்கு சென்று அதனை தீர்த்துக் கொள்ள முடியும் என்று நான் நம்பவில்லை என்றார்

நாட்டின் பொருளாதாரம் முழுமையாகச் சரிவடைந்ததால் கடந்த வருடத்தில் நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற. அனைத்து வேறுபாடுகளையும் விடுத்து நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும். உள்நாட்டுப் பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை.” – என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருடன் மட்டக்களப்பு சென்.மைக்கல் கல்லூரியின் அதிபர் எண்டன் பெனடிக் உட்பட பாடசாலையின் ஆசிரியர் குழாம், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட னர்.

பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை பிரிக்க முடியாது – ஜனாதிபதி

பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை பிரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘பொருளாதார உரையாடல் – ஐ.எம்.எப் மற்றும் அதற்கு அப்பால்’ என்ற தொனிப்பொருளில் இன்று(30) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.எம்.எப் திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்தை அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி நாட்டை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர்களில் ஒருவர் 83 கலவரங்களின் போது தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் எரித்து சூறையாடியர் – ருகுணு பல்கலைக்கழக துணைவேந்தர் குற்றச்சாட்டு

1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, ஜே. வி. பி க்காகத் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்த ஒரு பேராசிரியரே இன்று என்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிறார். அவர்கள் பல்கலைக் கழகத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். வீடற்ற தமிழ்க் குடும்பம் ஒன்றுக்கு வீட்டைக் கட்டிக் கொடுத்து விட்டு அரசியல் செய்யட்டும் என்று ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன தெரிவித்துள்ளார்.

ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தரை ஏழு நாட்களுக்குள் பதவி நீக்க வேண்டும் எனக் கோரி நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இது தொடர்பில் பகிரங்க அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேனவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 15 ஆம் திகதி நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். அதேநேரம் ருகுண பல்கலைக்கழக வெலமடம வளாகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளால் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், ஏழு நாட்களுக்குள் துணைவேந்தரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு நிபந்தனைக் கடிதமொன்றை அனுப்புவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறி கடந்த 5 ஆம் திகதி தனது அலுவலகத்துக்குச் சென்ற சமயம், அவரது அறையிலிருந்து வழக்கத்துக்கு மாறான மணம் வந்ததாகவும், அது அவரைக் கொலை செய்யும் வகையில் பரவ விடப்பட்ட நச்சு வாயுக் கசிவு என்றும் துணைவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவையனைத்தும் தன்னைப் பதவி நீக்கம் செய்வதற்காக வேண்டுமென்றே சோடிக்கப்பட்டவை என்று குறிப்பிட்டுள்ள துணைவேந்தர், தனக்கெதிரான சதியில் முன்னிற்போருக்கு எதிராகப் பல குற்றச் சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.

இதேநேரம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தான் மறுப்பதாகத் தெரிவித்துள்ள துணைவேந்தர், மேலும் குறிப்பிடுகையில் றொகான் லக்சிறி, பேராசிரியர் நிரமல் ரஞ்சித் தேவசிறி மற்றும் பேராசிரியர் உப்புல் அபேரத்ன ஆகியோர் அரசியல் காரணங்களுக்காகவே என்னைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு பாடுபடுகிறார்கள்.

நான் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இரண்டாவது தடவையாகத் திறமை அடிப்படையில் கூடிய புள்ளிகளைப் பெற்றுத் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டவன். அரசியல் செல்வாக்கினால் பதவியைப் பெற்றவன் நானல்ல. இங்கு கலாநிதிப் பட்டத்துக்காக நிதியைப் பெற்று விட்டு 13 வருடங்களுக்கு மேல் பணத்தை மீளளிக்காமல் இருப்பவர்களும், ஆராய்சி ஒதுக்கீடுகள் மற்றும் பரீட்சைகளில் மோசடி செய்வோருமே எனக்கு எதிராக என்னைப் பதவி நீக்கம் செய்யத் துடிக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, ஜே. வி. பி க்காகத் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்த ஒரு பேராசிரியரே இன்று என்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிறார். அவர்கள் பல்கலைக் கழகத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். வீடற்ற தமிழ்க் குடும்பம் ஒன்றுக்கு வீட்டைக் கட்டிக் கொடுத்து விட்டு அரசியல் செய்யட்டும் என்று பகிரங்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன்

நாட்டில் தற்போது காணப்படுகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக இருந்தால், அதற்கான அடிப்படையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு எட்டப்பட வேண்டும். அவ்வாறான தீர்வினை வழங்குவது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தார்.

தற்போது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விரைவான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவை வெற்றி பெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற தீர்வை ஏற்கப்போவதில்லை என்பது உறுதியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உட்பட சர்வகட்சிகளுடன் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தொடர்ச்சியாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட இதர விவகாரங்கள் தொடர்பில் விரைவானதொரு நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது. இந்த முயற்சி வெற்றிபெறுமா, இல்லையா என்பது குறித்து உறுதியான, நம்பிக்கையான கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது.

இருப்பினும், எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்குரிய சந்தர்ப்பமொன்று கிட்டியுள்ளது. அவ்விதமாக கிட்டியுள்ள சந்தர்ப்பத்தினை நாங்களாக புறமொதுக்கியதாக இருக்க முடியாது. ஆகவே, தற்போதைய விரைந்த முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு எம்மால் இயலுமான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளோம்.

அதேநேரம் தற்போது நாட்டில் காணப்படுகின்ற நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால், அவற்றுக்கு அடிப்படையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்குரிய நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுத்தப்பட்டால் தான், நாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்து சூழல்களிலும் மாற்றங்கள் நிகழும். சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி முகவரங்கள் உதவிகளை வழங்கும்.

சர்வதேச நாடுகள் கடன் மறுசீரமைப்புக்களை செய்யும். ஆகவே தான் ஆட்சியில் உள்ள அரசாங்கம் தீர்வு விடயத்தில் கரிசனை கொண்டுள்ளது.

அந்த வகையில், ஆட்சியில் உள்ள அரசாங்கம் நியாயமான தீர்வினை வழங்குவதற்கான கடப்பாட்டை கொண்டிருக்கின்றது. எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் அந்த தீர்வு அமைய வேண்டும். மீளப்பெற முடியாத வகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகின்ற வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அக்கருமங்கள் பிரிக்க முடியாத, பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எம்மை பொறுத்தவரையில், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற எந்தவொரு தீர்வினையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்றார்.

அடுத்த ஜனவரி முதல் பலகட்ட பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும் – அலி சப்ரி

இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு குறித்து அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் பலகட்டப்பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாராகியுள்ளது என்று வெளிவிவகர அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பேச்சுவார்த்தை விடயத்தில் அர்ப்பணிப்புடனேயே செயற்பட்ட வருகின்றது என்று தெரிவித்த அவர், அனைத்து இனக்குழுமங்களின் அரசியல் தரப்புக்களிலும் ‘பிச்சைக்காரன் புண்போன்று’ இந்த விடயம் நீடிக்க வேண்டும் எனக் கருதும் வன்போக்கு நிலைப்பாடுகளை உடையவர்கள் உள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

சர்வகட்சி மாநாட்டின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனங்களுக்கிடையிலான தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் நீண்டகாலமான கரிசனை கொண்டவராக இருக்கின்றார்.

இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு பல தசாப்தங்களாகவே இருந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில், தற்போது சர்வகட்சிகளின் பங்கேற்புடன், பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளை எதிர்மறையாகப் பார்ப்பவர்களும் உள்ளார்கள்.

குறிப்பாக, ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தேடுவதற்கான முன்னெடுக்கப்படுவதாகவும் கூறுகின்றார்கள். சர்வதேச நாயணநிதியத்தின் உதவிகளைப்பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் செயற்படாகவும் பிரசாரம் செய்யப்படுகின்றது.

உண்மையிலேயே சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களுக்கும் இனப்பிரச்சினை உள்ளிட்ட இதர பிரச்சினைகள் குறித்த பேச்சுக்களுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை.

நாணயநிதியத்துடனான பேச்சுக்கள் தொடர்பாக பிரத்தியோகமான சந்திப்புக்களும் பேச்சுக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தப் பேச்சுவார்த்தைக்கும் இனப்பிரச்சினைக்கான  தீர்வு குறித்த பேச்சுக்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. தமிழ், முஸ்லிம், சிங்க, மலையக தரப்புக்களில் இனப்பிரச்சினையாது தீர்க்கப்பட்டு விடாது ‘பிரச்சைக்காரன் புண்’ போல நீண்டுகொண்டிருக்க வேண்டும் என்று கருதுகின்ற தரப்பினர் இருக்கின்றார்கள்.

இது துரதிஷ்டவசமானது. அத்துடன், அவர்களை வெற்றிகொள்வதும் சவால்கள் நிறைந்தது. ஆனால், அவ்விதமான விடயங்களை எல்லாம் கடந்து தான் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அதற்கு தயாராகவே உள்ளது.

குறிப்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பல்வேறு கட்டப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் எவ்விதமான தயகத்தினையும் அரசாங்கத்தரப்பு காண்பிக்கப்போவதில்லை.

மேலும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபித்தல், கைதிகளின் விடுதலை உள்ளிட்டவற்றுக்கான அடிப்படைச் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு விட்டன. காணமாலாக்கப்பட்டவர்களின் உறவிர்கள் பற்றியும் கவனத்தில் கொண்டு இழப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை வழங்குவதற்கு தயராகவே உள்ளோம் என்றார்.

இனப்பிரச்னை தீர்ந்தால் பொருளாதார நெருக்கடி நீங்கும் – அனுர பிரியதர்ஷன யாப்பா

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டுமாயின் அடிப்படைப் பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு எட்டப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைக்கு பொது இணக்கப்பாட்டுடன் தீர்வு காண்பது அவசியமாகும். இனப்பிரச்னைக்கு தீர்வு காண குறுகிய கால அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது எனவும் அவர் கூறினார்.

அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் தேசிய ரீதியான பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியமாகும். இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது குறுகிய கால அடிப்படையில் தீர்வு காண இணக்கப்பாடு எட்டப்பட்டது.

நிறைவேற்று அதிகாரம் மற்றும் அரசியலமைப்பினை அடிப்படையாக கொண்டு அரசியல் தீர்வு விவகாரத்தில் தீர்வு காணப்படவேண்டும். தேசிய பிரச்னைக்கு தீர்வு எட்டப்படவேண்டிய தருணம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. ஆகவே சகல தரப்பினரது ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக கருதி தீர்வு காண இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அடிப்படை பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றார்.