ஜேவிபி கால மனித புதைகுழி ஆவணங்களை அழிக்க கோத்தா உத்தரவிட்டார்; சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு!

1989ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) கிளர்ச்சிக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின்போது, தான் இராணுவ அதிகாரியாக செயற்பட்ட பகுதியில் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இரகசிய மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை தடுக்கும் வகையில் பொலிஸ் பதிவுகளை சிதைத்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர் குழுக்களின் அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களில் சுமார் 20 பாரிய புதைகுழிகளை தோண்டி எடுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களது உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அது கூறியது.

அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களால் நிறுவப்பட்ட பல விசாரணை ஆணைக்குழுக்களில் எதுவுமே பாரிய புதைகுழிகள் பற்றி ஆராய கட்டளையிடப்படவில்லை. மாறாக, உண்மையை வெளிக்கொணரும் முயற்சிகள் தடைபட்டன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, நீதிபதிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர், குடும்பங்களின் சட்டத்தரணிகள் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது, உயிருள்ள சாட்சிகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை, பிரேதப் பரிசோதனை தரவுகள் சேகரிக்கப்படவில்லை மற்றும் மிகவும் அரிதான நிகழ்வுகளில் ஒருவர் தண்டிக்கப்பட்டார், பின்னர் அவர்கள் மன்னிக்கப்பட்டனர், அது கூறியது.

“இது அரசியல் விருப்பமின்மையின் கதை – போதுமான சட்ட கட்டமைப்பு, ஒரு ஒத்திசைவான கொள்கையின் பற்றாக்குறை மற்றும் போதுமான ஆதாரங்கள் இல்லாதது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அது தீர்க்கப்படாத சோகத்தின் கதை; இழந்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்காமல் வாழவும் இறக்கவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், ”என்று அது கூறியது.

மனிதப் புதைகுழிகளை தோண்டியெடுப்பதில் உள்ள தாதமதத்தில் ராஜபக்சவின் பங்கு அரசியல் தலையீட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அது கூறியது.

2013 ஆம் ஆண்டு மத்திய இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அப்பகுதியில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து காவல்துறை பதிவுகளையும் அழிக்குமாறு அப்போதைய சக்திவாய்ந்த பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டதாக அறிக்கை கூறுகிறது.

1989 ஆம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின் போது, ஒரு இராணுவ அதிகாரியாக கோட்டாபய ராஜபக்ச, இந்த பிராந்தியத்தில் பணியாற்றியிருந்தார்.

விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் ராஜபக்ச மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்தக் கோரிக்கை

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் குறித்துத் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகள், அச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறும், அச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்திடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முறையற்ற பயன்பாடு குறித்துக் கண்டனத்தை வெளிப்படுத்தி பேராசிரியர்களான ஜயதேவ உயன்கொட, அர்ஜுன பராக்கிரம, சுமதி சிவமோகன் ஆகியோர் உள்ளிட்ட 156 தனிநபர்களும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், சட்ட மற்றும் சமூக நிதியம், தேசிய சமாதானப்பேரவை உள்ளிட்ட 25 சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மையகாலங்களில் 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் மற்றும் அச்சட்டப்பிரயோகத்தின் ஊடாகக் கருத்துச்சுதந்திரம் மீறப்படல் என்பன தொடர்பில் நாம் தீவிர கரிசனை கொண்டுள்ளோம்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமென உருவாக்கப்பட்ட இச்சட்டத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் சட்டத்தரணிகளை மௌனிக்கச்செய்வதற்கும், அவர்களைத் தண்டிப்பதற்கும் அரசாங்கம் பயன்படுத்திவருகின்றது.

அதன் ஓரங்கமாக அண்மையில் நடாஷா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகர ஆகியோர் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டமையைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உள்நாட்டில் தனிச்சட்டமாக நிறைவேற்றப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்துவதென்பது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் சார்ந்த இலங்கையின் அணுகுமுறை தொடர்பான முக்கிய அளவுகோலாகும்.

அவ்வாறிருக்கையில் அண்மையகாலங்களில் இலங்கையினால் இச்சட்டம் பிரயோகிக்கப்படும் முறை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு அதன் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தது.

எனவே இச்சட்டத்தின் தவறான பயன்பாடு, அச்சட்டத்தின் ஊடாக இலக்குவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் தரப்பினருக்கு மாத்திரமன்றி, தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

அதுமாத்திரமன்றி மனித உரிமைகளைக் கையாளும் முறைமை குறித்தும், இச்சட்டப்பிரயோகம் மீதான தேசிய மற்றும் சர்வதேச அழுத்தங்கள் குறித்தும் இலங்கை அரசாங்கம் பெருமளவுக்குக் கவனம் செலுத்தவில்லை என்பதை அண்மையில் இடம்பெற்ற கைதுகள் எடுத்துக்காட்டுகின்றன.

தேசிய ரீதியான அல்லது இன, மதரீதியான வெறுப்பைத் தூண்டுவதை கருத்துச்சுதந்திரத்தை நசுக்குவதற்கான ஆயுதமாக இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்திவருகின்றது. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் தனிநபர்களின் கருத்துக்களுக்காக அவர்களை இலக்குவைப்பதற்கும், பகிரங்கமாக அச்சுறுத்துவதற்குமான துணிச்சலை பேரினவாதக்குழுக்களுக்கு வழங்கியுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறும், அச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்று அக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச மேற்பார்வையில் விசாரணை அவசியம் என வலியுறுத்தல்

இலங்கையின் உள்நாட்டு மோதல்களின் போதுகாணாமல் போனவர்களின் உடல்கள் காணப்படலாம் என சந்தேகிக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐந்து மனித சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள்விடுத்துள்ளன.

கடந்தகால குற்றங்களை கையாள்வது குறித்து இலங்கை அரசாங்கம் உண்மையான தீவிரமான ஆர்வத்தை கொண்டிருந்தால் அனைத்து மனித புதைகுழிகளையும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையில் இலங்கை அரசாங்கம் தோண்டவேண்டும் என ஐந்து சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

மனிதபுதைகுழிகள் குறித்து கடந்தகாலங்களில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐந்துஅமைப்புகளும் இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளில் எவ்வாறு தலையிட்டன என்பது குறித்து முழுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளன.

கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெளிவான பார்வையில்-இலங்கையில் மனித புதைகுழியின் பின்னால் – உண்மையை தேடுதல் என்ற விவரணச்சித்திரமும் வெளியிடப்பட்டது – இந்த விவரணச்சித்திரம் காணாமல்போனவர்களின் உறவுகள் எவ்வாறு நீண்ட போராட்டத்தை முன்னெடுக்கின்றனர் என்பதை விபரிக்கின்றது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ச இராணுவத்தில் பணியாற்றியவேளை- மாத்தளை பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போனார்கள் அவ்வேளை அவர் அந்த பகுதியின் இராணுவ அதிகாரியாக காணப்பட்டார் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு அவரது பெயரையும் தனது விசாரணைகளின் போது குறிப்பிட்டிருந்தது என ஐந்து அமைப்புகளும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை செய்யாதுவிடின் சர்வதேச சமூகம் செய்வதற்கு நேரும் – ஐ. நா. மனித உரிமைகள் பேரவை காட்டம்

கடந்த கால மீறல்கள் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூறல் செயல்பாடுகளை முன் னெடுக்கவில்லை. இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாதுவிடின் சர்வதேச சமூகம் அதனை பூர்த்தி செய்வதற்கான பங்கை வகிக்க முடியும் – இவ்வாறு ஐ. நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நாடா அல்-நஷிப் எச்சரித்துள்ளார்.

அத்துடன் நம்பகமான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என்றும் இலங்கை தொடர்பில் அவர் நேற்றுமுன்வைத்த வாய்மூல அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடக்கிறது. இதில், இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை நேற்று வாசிக்கப்பட்டது. பிரதி ஆணையாளர் இதனை முன்வைத்தார்.

அதில், “ஆழமான அரசமைப்பு மறுசீரமைப்புகளை மேற்கொண்டு, பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது மாத்திரமல்லாமல் மனித உரிமைகளை பாதுகாப்பதையும் உறுதிப்படுத்துமாறு இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தை அலுவலகம் வலியுறுத்துகின்றது.

உள்ளூர் பதற்றம் மற்றும் முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி ஆரம்பித்துள்ள பேச்சுகள் மற்றும் தொல்பொருள், வனவள திணைக்களம் மற்றும் படைத் தரப்பினருக்கு காணிகளை சுவீகரிக்கப் போவதில்லை என்ற உறுதி மொழி ஆகியவற்றுடன் அனைத்து தரப்பினருக்குமான ஞாபகார்த்த நினைவுசின்னம் உட்பட கடந்தகால விடயங்களை கையாள்வது தொடர்பான அறிவிப்புகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நாங்கள் வரவேற்கின்றோம்.

எனினும் இந்த விடயங்கள் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஊடாக இந்த உறுதிமொழிகள் தெளிவாக தெரியக்கூடிய வகையில், இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நல்லிணக்க பொறிமுறையான உண்மை ஆணைக்குழு தொடர்பான அறிவிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் இரண்டு ஆணைக்குழுக்களை இலங்கை அரசாங்கம் அமைத்திருந்தது. எனினும், அந்த ஆணைக்குழுக்கள் மூலம் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிமனை பாதிக்கப்பட்டவர்களை திருப்தி செய்யும் வகையில் எதிர்பார்த்த இலக்குகளை அடையவில்லை. கடந்த காலம் தொடர்பான பொறுப்புக்கூறலில் கணிசமான இடைவெளி காணப்படுகின்றது. தண்டனை விலக்களிப்பு காணப்படும் வரை நீடித்த சமாதானத்தை அடைய முடியாது. 51/1 தீர்மானத்தின் கீழ் பொறுப்புகூறலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் குறித்த முன்னேற்றம் தொடர்பாக அதற்கான குழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இது தற்போது முன்னெடுக்கப்படும் குற்றவியல் விசாரணைகளுக்கு உறுதியான ஆதரவளிக்கும் ஒன்றாக இருக்கும். ஐ. நா. மற்றும் ஏனைய மூலங்கள் ஊடாக சேகரிக்கப்படும் தரவுகள் எதிர்கால பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த செயல்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் முக்கிய பங்கை வகிப்பார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகள் மற்றும் குடிசார் அமைப்புக்களுடன் செயல்திறன் மிக்க ஈடுபாடு இதில் இருக்கும். கடந்த கால மீறல்கள் குறித்து இலங்கை அதிகாரிகள், நம்பகமான விசாரணைகள் மற்றும் வழக்கு தொடுக்கும் செயல்பாடு உள்ளிட்ட ஏனைய பொறுப்புகூறல் செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை. இந்தப் பொறுப்புகூறல் செயல்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாதுவிடின் சர்வதேச சமூகம் அதனை பூர்த்தி செய்வதற்கான பங்கை வகிக்க முடியும்” – என்றார்

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து பிரித்தானியா கவலை

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் இலங்கையில் பயன்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

கருத்துசுதந்திரம் ஓன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை அவை வலியுறுத்தியுள்ளன. பிரிட்டனின் மனித உரிமைக்கான இராஜதந்திரி ரிட்டா பிரென்ஞ் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நிலங்களை விடுவித்தல் நீண்டகால தடுத்துவைப்பு மற்றும் ஊழல் ஆகியவை குறித்த கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்காக இலங்கையின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை வரவேற்கின்றோம் இலங்கையின் அனைத்து இன மற்றும் மத சமூகத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அடிப்படையாக அமையலாம்.

தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்கு தற்போது நடவடிக்கைகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்கின்றோம்,பயங்கரவாத சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப காணப்படவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

கருத்துசுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். நல்லிணக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பை நோக்கி இலங்கை தனது முதல்கட்ட நடவடிக்கையை எடுக்கின்ற நிலையில் வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் அனைவரையும் உள்வாங்கல் போன்றவற்றின் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

நாட்டின் தேர்தல் முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைப்பதன் மூலம் அதன் ஸ்தாபனங்கள் ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை பேணுவதன் மூலம் இலங்கை தனது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை பேணுவது அவசியம் எனவும் அவை தெரிவித்துள்ளன.

ஒரு தசாப்தகாலப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் – ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்

இலங்கைக்குக் கடந்த ஒரு தசாப்தகாலமாக விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட ஆணையாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க்கின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (19) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் முதல்நாள் அமர்வில் தொடக்கவுரை ஆற்றுகையிலேயே இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இலங்கையை எடுத்துநோக்குமிடத்து, பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் கூறுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பது கவலைக்குரிய விடயமெனச் சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க், ‘இருப்பினும் இலங்கை தொடர்ச்சியாக எம்மோடு இணைந்து செயலாற்றிவருகின்றது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஒரு தசாப்தகாலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணைபெற்ற பலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததாகவும், அவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டுமெனத் தாம் ஊக்குவிப்பதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் திங்கட்கிழமை (19) ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தொடரின் திங்கட்கிழமை (19) ஆரம்ப அமர்வில் இலங்கை குறித்து மிகச்சொற்பளவான விடயங்கள் மாத்திரமே பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை (21) இலங்கை நேரப்படி மாலை 6.30 மணி (ஜெனிவா நேரப்படி பி.ப 3 மணிக்கு) இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை வாசிக்கப்படவுள்ளது.

இவ்வறிக்கையில் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற 51/1 தீர்மானத்தின் பிரகாரம் நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல்மோசடிகள் என்பன மனித உரிமைகள்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகள் தமது கரிசனைகளை வெளிப்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டாலும், இம்முறை இலங்கை தொடர்பில் புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படமாட்டாது.

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவு – மனித உரிமைகள் ஆணைக்குழு

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கமைய, தமது பரிந்துரைகள் ஜூலை முதல் வாரத்தில் உரிய தரப்பினருக்கு வழங்கப்படும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்புக்குள் எம்.வி.எஸ்க்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானது. இந்த தீ விபத்தின் காரணமாக இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் முன்னெடுத்திருந்தது.

கலாநிதி அஜந்தா பெரேரா மற்றும் சூழல் பாதுகாப்பு மையம் ஆகியோர் இந்த விசாரணைகளின் முறைப்பாட்டாளர்களாவர். அதற்கமைய, இதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள், நபர்களிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

அதற்கமைய, இது குறித்த ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. விசாரணைகளின் அடிப்படையிலான பரிந்துரைகள் ஜூலை முதல் வாரத்தில் உரிய தரப்பினரிடம் கையளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(13) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.

கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதியும் அதன் பின்னரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காகவே அஜித் ரோஹன இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ்மா அதிபரினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவும் அங்கம் வகிக்கின்றார்.

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தெரியவந்த சந்தேகநபர் தொடர்பான அறிக்கையை, எதிர்வரும் வியாழக்கிழமை ஆணைக்குழுவில் வழங்குமாறு தெரிவித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதியும் அதனை அண்மித்த நாட்களிலும் தமது சொத்துகள், வீடுகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 70 பேரிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

ஜெனிவா 53ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான அழுத்தம் குறையும்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது.

எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நிகழ்ச்சி நிரல்களின்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், 19ஆம் திகதி பிற்பகலில் இலங்கை பற்றிய வாய்மொழி அறிவிப்பை வழங்குவார்.

அன்றைய தினமே அவர், ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் நிகரகுவா மற்றும் இலங்கை பற்றிய தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.

முன்னதாக 2022 செப்டம்பர் 51/1 தீர்மானத்தின் கீழ், 2023 செப்டம்பர் 2023 இல் நடைபெறவுள்ள 54வது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்க இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால், எதிர்வரும் ஜூன் மாத அறிக்கை கடுமையானதாக இருக்காது என்று ஜெனீவா தரப்பு தெரிவித்துள்ளது.

2022இல் ஐக்கிய நாடுகளின் மனிதை உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51-1 தீர்மானத்தின்போது 20 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.20 நாடுகள் வாக்களிக்கவில்லை.

இந்த தீர்மானத்தின்படி, இலங்கையில் நல்லிணக்கத்தில் முன்னேற்றம் உட்பட மனித உரிமைகள் நிலைமையை கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும் உயர் ஸ்தானிகர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மீதான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் தாக்கம் மற்றும் மனித உரிமைகள் பேரவைக்கு அதன் ஐம்பத்து மூன்றாவது மற்றும் ஐம்பத்தி ஐந்தாவது அமர்வுகளில் வாய்வழி புதுப்பிப்பை வழங்குதல், ஐம்பத்து நான்காவது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதன் ஐம்பத்தி ஏழாவது அமர்வில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான கூடுதல் விருப்பங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கை என்பன இந்த தீர்மானத்தின்படி வலியுறுத்தப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துகின்றது – சர்வதேச மன்னிப்புச்சபை கவலை

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

முகமட் அஸ்வர் முகமட் அனாஸ் முகமட் ஹபீர் ஜபீர் முகமட் சித்தீக் இராவுத்தர் மரீக்கார் ஆகிய நால்வரும் இலங்கை பொலிஸாரினால் மே 18ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனசர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

நாங்கள் முன்னர் கரிசனை வெளியிட்டுள்ளபடி பயங்கரவாத தடைச்சட்டம் கண்மூடித்தனமான கைதுகளிற்கும் நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கும் துணைபோகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் காலத்திற்கு காலம் ஏதேனும் நியாயமான அல்லது உரிய செயல்முறை பாதுகாப்பின்றி சிறுபான்மையினத்தவர்களை இலக்குவைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை சித்திரவதைகள் போன்றவற்றின் மூலம் பலவந்தமாக வாக்குமூலம் பெறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவானிற்கு வழங்கிய தகவல்களின் படி அதிகாரிகள் மேலும் நால்வரிடம் வாக்குமூலங்களை பெறவுள்ளனர் அவர்கள் தாங்களும் கைதுசெய்யப்படலாம் என அச்சம்கொண்டுள்ளனர் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அரசாங்கம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவேளை இந்த விடயங்கள் கவலையை ஏற்படுத்துகி;ன்றன என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கான வரைவிலக்கணத்தை மேலும் விஸ்தரிக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்இவலுவான ஆதாரங்கள் இருந்தால் நியாயமான விசாரணை தரங்களை பயன்படுத்தி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குற்றத்திற்காக அவர்களிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை உடனடியாகவும் பாரபட்சமின்றியும் சர்வதேச மனித உரிமைகள்தரநிலைகளிற்கு இணங்க முன்னெடுக்கவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.