இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துகின்றது – சர்வதேச மன்னிப்புச்சபை கவலை

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

முகமட் அஸ்வர் முகமட் அனாஸ் முகமட் ஹபீர் ஜபீர் முகமட் சித்தீக் இராவுத்தர் மரீக்கார் ஆகிய நால்வரும் இலங்கை பொலிஸாரினால் மே 18ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனசர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

நாங்கள் முன்னர் கரிசனை வெளியிட்டுள்ளபடி பயங்கரவாத தடைச்சட்டம் கண்மூடித்தனமான கைதுகளிற்கும் நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கும் துணைபோகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் காலத்திற்கு காலம் ஏதேனும் நியாயமான அல்லது உரிய செயல்முறை பாதுகாப்பின்றி சிறுபான்மையினத்தவர்களை இலக்குவைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை சித்திரவதைகள் போன்றவற்றின் மூலம் பலவந்தமாக வாக்குமூலம் பெறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவானிற்கு வழங்கிய தகவல்களின் படி அதிகாரிகள் மேலும் நால்வரிடம் வாக்குமூலங்களை பெறவுள்ளனர் அவர்கள் தாங்களும் கைதுசெய்யப்படலாம் என அச்சம்கொண்டுள்ளனர் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அரசாங்கம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவேளை இந்த விடயங்கள் கவலையை ஏற்படுத்துகி;ன்றன என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கான வரைவிலக்கணத்தை மேலும் விஸ்தரிக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்இவலுவான ஆதாரங்கள் இருந்தால் நியாயமான விசாரணை தரங்களை பயன்படுத்தி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குற்றத்திற்காக அவர்களிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை உடனடியாகவும் பாரபட்சமின்றியும் சர்வதேச மனித உரிமைகள்தரநிலைகளிற்கு இணங்க முன்னெடுக்கவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

22 தமிழ் அரசியல் கைதிகளே தற்போது சிறைகளில் உள்ளனர் – நீதி இராஜாங்க அமைச்சர்

யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் எனவும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் ஆண் கைதிகள்,பெண் கைதிகள், நீதிமன்றத்தினால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ள கைதிகள்,சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், மரண தண்டனை கைதிகள், சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகள்,ஆயுள் தண்டனை கைதிகள்,சிறு வயது கைதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,290 ஆக காணப்பட வேண்டும். ஆனால் பௌதீக வள பற்றாக்குறையினால் 25,899 சிறைக்கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மேலதிகமாக 14,609 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 45 ஆண்களும், 01 பெண் என்ற அடிப்படையில் 46 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பேரின் எண்ணிக்கை 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 பேருக்கு எதிரான விசாரணைகள் நிறைவு பெறாத காரணத்தினால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த 22 பேர் தொடர்பில் நீதியமைச்சு சட்டமாதிபர் திணைக்களத்துடன் ஒன்றிணைந்து விசேட நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்

சக மனிதர்களிடம் மனிதாபிமானத்தை பின்பற்றுங்கள்; வெசாக் செய்தியில் ஐ.நா செயலாளர் நாயகம் வலியுறுத்து

உலகளாவிய ரீதியில் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கௌதம புத்தரின் போதனைகளான சகிப்புத்தன்மை, கருணை, மனிதாபிமானம் ஆகிய பண்புகளை பின்பற்றி நடப்பது இன்றியமையாததாகும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கௌதம புத்தரின் பிறப்பு மற்றும் பரிநிர்வாணமடைதலைக் குறிக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கும் அவர், இத்தினத்தை கொண்டாடுவதன் நோக்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகளுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கிடையிலான புரிந்துணர்வு, நிலையான அமைதி மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்பனவே அவையாகும் என்றும் அன்ரோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கௌதம புத்தரின் போதனைகளான சகிப்புத்தன்மை, கருணை, மனிதாபிமானம் ஆகியவற்றை பின்பற்றுவது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அனைவரும் வாழ்வதற்கு ஏற்புடைய அமைதியானதும் சமாதானமானதுமான உலகத்தை கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டாம்

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தேசிய கலந்துரையாடல் முடிவடைந்து, தெளிவான திட்டத்துடன் அதன் பரிந்துரைகள் வெளியிடப்படும் வரை காத்திருக்குமாறும் ஆணைக்குழு கோரியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக கவனம் செலுத்துவதற்கு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து மேலும் ஆராய வேண்டியமை அவசியமானது என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் 30 வருடங்களுக்கும் மேலாக நீடித்த, உள்நாட்டுப் போரின் அழிவுகளின் கீழ் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு சமூகங்களுக்கு மாத்திரமல்ல என்றும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

70 மற்றும் 80 களில் தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் இந்த செயல்முறை அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சமாதானம் மற்றும் நல்லிணக்க செயல்முறையை சமமாக எதிர்கொள்ளும் ஒரு தேசிய உரையாடலை நிறுவுவது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு சட்டமூலத்திற்கான சூழலின் அவசியத்தை சிறப்பாக வரையறுக்கும் என்பதை உறுதியான கருத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

மனித உரிமைகள் குறித்து புரிந்துணர்வுள்ளவர்களை மனித ஆணைக்குழுவிற்கு நியமிக்க வேண்டும்

மனிதஉரிமைகள் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டவர்களை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு நியமிக்கவேண்டும் எனஆணைக்குழுவின் தலைவர் ரோகிணி மாரசிங்க கருத்துவெளியிட்டுள்ளார்.

மனித உரிமைகள் குறித்து சிறிதளவும் அறிவில்லாதவர்களை இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்களாக நியமித்தமை நாட்டின் மனித உரிமை நிலவரத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவருக்கும் அதன் உறுப்பினர்களிற்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

மனித உரிமைகள் குறித்து எந்த புரிந்துணர்வும் இல்லாதவர்களை நியமித்தமையே இந்த பிரச்சினைக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் குறித்து சிறந்த புரிந்துணர்வு கொண்டவர்களை ஆணைக்குழுவிற்கு நியமிக்கவேண்டும் என நான் ஜனாதிபதிக்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ள ரோகிணி மாரசிங்க அவ்வாறான நியமனங்களை மேற்கொள்ளாத பட்சத்திலேயே இவ்வாறான குழப்பநிலை ஏற்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று ஆணையாளர்களிற்கும் மனித உரிமைகள் குறித்து எதுவும் தெரியாது அவர்கள் கூட்டங்களிற்கு கூட சமூகமளிப்பதில்லை,அவர்கள் எதுவும் செய்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை ஆணைக்குழுவின் பணியாளர்களிடம் அவர்கள் குறித்து கேட்கவேண்டும் அவர்கள் அனைத்து விடயங்களையும் தெரிவிப்பார்கள் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சிறுபான்மையினரை இலக்கு வைக்க உதவும்

தற்போதைய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கண்டனங்கள் எழுந்ததை தொடந்து அரசாங்கம் முன்னேற்றகரமான சட்டத்தை கொண்டுவருவதாக உறுதியளித்தது,ஆனால் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு பதில் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலம் பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணத்தை அதிகரித்துள்ளது ஒன்றுகூடல் கருத்துசுதந்திரம் ஆகியவற்றிற்கான உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அமைதியான விதத்தில் தன்னை விமர்சிப்பவர்களையும் சிறுபான்மை சமூகத்தவர்களையும் இலக்குவைப்பதற்கான கடுமையான சட்டங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

உடன்படமறுப்பவர்கள் மீதான அரசாங்கத்தின் ஒடுக்குமுறையும் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்துவைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தற்போதைய பயங்கரவாத தடை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதும் உத்தேச சட்டம் மூலம் உள்ள ஆபத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஐ.நா மனித உரிமை சாசனங்களுக்கமைய இயற்றப்படவில்லை – அம்பிகா சற்குணநாதன்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது ஐ.நா மனித உரிமை சட்டங்களுக்கோ சாசனங்களுக்கோ அமைய இயற்றப்படவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தற்போது கொண்டு வருவதில்லை எனவும், தாமதிப்பதாகவும் நீதியமைச்சர் கூறியிருக்கின்றார். தற்போது அது நல்ல விடயம் என்று தான் நாம் கூற வேண்டும். இந்தச் சட்டமானது இரகசியமான விதத்தில்தான் இயற்றப்பட்டது.

பல உரிமைகளில் தாக்கத்ததை ஏற்படுத்தும் இவ்வாறான சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முதல் அச்சட்டம் இயற்றப்படும் போது மக்களின் அபிப்பிராயங்கள், சிவில் சமூகங்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், நிபுணர்கள் ஆகியோரின் அபிப்பிராயங்களையும் எடுத்துதான் சட்டத்தை இயற்ற வேண்டும். ஆகவே இந்தச் சட்டத்திற்கு தற்போது அதற்கான நிலை எழுந்து கொண்டிருக்கிறது.

அரசாங்கத்திற்கு மக்கள், நிபுணர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்று செவிமடுத்து, முக்கியமாக, எமது அரசியலமைப்பில் உள்ள உரிமைகள் மீறப்படாமல், இதனை உருவாக்க கடமைகள் உள்ளன.

ஏனெனில் இலங்கை பல்வேறு ஐ. நா சாசனங்களில் கைச்சாத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு கடமை இருக்கிறது.

இந்த சாசனங்களில் உள்ள உரிமைகளை இலங்கையில் நடை முறைப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமாகும். இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது ஐ.நா மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை.

ஆகவே, அரசாங்கம் இதனை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வராமல், தற்போது இதை நிறுத்தி இவ்வாறான சட்டம் இயற்றுவது என்றால், வெளிப்படையான முறையில் நான் முன்னர் குறிப்பிட்ட அத்தனை பேரையும் இணைத்து அவர்களின் அபிப்பிராயங்களை எடுத்து சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு ஏற்றதான ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்” – என்றார்.

பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணத்தை மீளாய்வு செய்ய வேண்டும் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் பயங்கரவாததத்திற்கு கொடுத்துள்ள வரைவிலக்கணத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் என்ற பிரிவில் பயங்கரவாதத்திற்கு கொடுத்துள்ள வரைவிலக்கணத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டும் என மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வந்துள்ளது என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு இந்த வரைவிலணக்கத்தின் பரந்துபட்ட நோக்கம் இந்த விடயத்தை சிக்கலாக்குகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலத்தில் பயங்கரவாதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் அபிப்பிராயபேதத்தினை வெளிப்படுத்தும் நியாயபூர்வமான செயற்பாடுகளிற்கும் பயங்கரவாத செயற்பாடுகளிற்கும் இடையில் வித்தியாசம் காண்பதை கடினமானதாக்கியுள்ளது எனவும் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணங்காதிருப்பவர்கள் சிவில் சமூகத்தினரை இலக்குவைப்பதற்காக அரசாங்கம் பயங்கரவாதம் குறித்த பரந்துபட்ட வரைவிலக்கணத்தை பயன்படுத்தக்கூடும் என மனித உரிமை ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

இது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமையை மீறுகின்றது எனவும் தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு சுதந்திரமான பேச்சிற்கான உரிமையும் மீறப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணம் பேச்சுசுதந்திரம் நடமாட்ட சுதந்திரம் ஆகியவற்றின் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படலாம் என்ற அச்சம்காரணமாக பொதுநலன்கள் குறித்த விடயங்களில் மக்கள் வெளிப்படையாக கருத்து கூற தயங்குவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

நில அபகரிப்புகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் – பிரித்தானியா

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் நில அபகரிப்புகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் தெற்காசிய இராஜாங்க அமைச்சர் அஹ்மட் பிரபு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் என்ன விடயங்களை முன்வைத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பேரவையில், 51-1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான சர்வதேச முயற்சிகளை ஐக்கிய இராச்சியம் வழிநடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது, இலங்கை தொடர்பாக அறிக்கையிடுவதற்கும் கடந்தகால மனித உரிமை மீறல்களின் ஆதாரங்களை பாதுகாப்பதற்கும், எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளில் பயன்படுத்துவதற்கும், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு உதவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரியில் இலங்கையின் உலகளாவிய காலமுறை மீளாய்வின் போது வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட வலியுறுத்தல்களை பிரித்தானியா வழங்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கமைவாக இருக்க வேண்டும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு விதிகளும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரோஸ் முச்செனா தலைமையிலான குழு மார்ச் 27 முதல் நேற்று வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநாட்டவும் பாதுகாக்கவும் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் கூறியுள்ளது.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அமைப்புக்கள், அவர்களின் நீண்ட கால கோரிக்கையான உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றைக் கேட்க அரசு அவசரமாகவும் உண்மையாகவும் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்துடனான விதிமுறைகளும் நிபந்தனைகளும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் மற்றும் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது