ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரை எமது மக்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விட்டது : மனோ

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு – செலவுத் திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு எம்மை ஏமாற்றமடைய செய்துள்ளது கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்றைய வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

உலக வங்கி, ஐநா நிறுவனமான உலக உணவு திட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றால், உணவின்மை மற்றும் வறுமை ஆகிய விடயங்களில் இலங்கையிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரிவினராக பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த பின்தங்கிய பிரிவினருக்கான விசேட ஒதுக்கீட்டு திட்டங்களை ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அது நடைபெறவில்லை.

  • உடனடியாக நிவாரண திட்டங்கள் இல்லாவிட்டாலும் கூட, இம்மக்களின் இக்குறைபாடுகள் பற்றி தான் அறிந்துள்ளேன் என்பதை ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டு கூறி இருக்க வேண்டும்.

அப்படியாயின், இந்த நலிவடைந்த மக்களை அது ஓரளவு சாந்தப்படுத்தி இருக்கும். தமது பிரச்சினைகள் பற்றி ஆளுகின்ற அரசு அறிந்து வைத்துள்ளது என்பதை அறிந்து மக்கள் சற்று நம்பிக்கை அடைந்து இருப்பார்கள். தீர்வுகள் தாமதமாகி வரும் என ஆறுதல் அடைந்து இருப்பார்கள்.

ஆனால், உயிருள்ள உழைக்கும் மக்களை மறந்து விட்டு, தோட்டங்களில் உள்ள காணிகளை பற்றி பேசி, பயிரிடப்படாத காணிகளை, புதிய முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்க போவதாக நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனதுவரவு – செலவுத் திட்ட உரையில் கூறி உள்ளார்.

நமது மக்களுக்கு பயிரிடப்படாத காணிகள் தருவதாக எனக்கு பாராளுமன்றத்தில் தந்த வாக்குறுதியை அவர் மறந்து விட்டார்.

அப்போது அவர் பிரதமர். இப்போது ஜனாதிபதி. ஆனால், நாம் மறக்கவில்லை. நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை துன்பப்படும் நமது மக்களை, இந்த அலட்சியம் கொல்லாமல் கொல்கிறது.

காணாமல்பாேனவர்கள் தொடர்பாக ஆராயும் காரியாலயத்தின் தலைவரை பதவி நீக்க வேண்டும் – மனோ

காணாமல் போனவர்கள் என யாரும் இல்லை என்றால் காணாமல் போனோர் தொடர்பாக முறையிடுவதற்காக காரியாலயம் எதற்கு என்ற கேள்வி எழுகின்றது. அதனால் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராயும் காரியாலயத்தின் தலைவரை பதவிநீக்கம் செய்து, செயற்திறமையான ஒருரை நியமிக்கவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் தொடர்பாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்த கருத்து பதில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

காணாமல் போனாேர் தொடர்பாக ஆராய்ந்து விசாரணை நடத்த மிகவும் கஷ்டத்துடனே காரியாலயம் அமைத்தோம். ஆனால் தற்போதைய அதன் தலைவர், காணாமல் போனவர்கள் என யாரும் இல்லை என தெரிவித்திருக்கின்றார்.

அவருக்கு பைத்தியம் பிடித்துள்ளதா என எனக்கு தெரியாது. ஏனேனில் காணாமல் போனவர்கள் என யாரும் இல்லை என்றால், இதுதொடர்பாக ஆராய காரியாலயம் எதற்கு என்ற கேள்வி எழுகின்றது. அதனால் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராயும் காரியாலயத்தின் தலைவர் தொடர்பாக நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் காணாமல் போனவர்கள் தொடர்பாக முறைப்பாடு தெரிவிக்க காரியாலயம் அமைக்க பாராளுமன்றத்தில் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலேயே அனுமதித்துக்கொண்டடோம். இதற்கு தற்போதுள்ள ஆளும்ரதப்பினரே எதிராக இருந்தனர்.

நான் அமைச்சராக இருக்கும்போது இதுதொடர்பான காரியாலயம் மாத்திறை, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நாங்கள் திறந்துவைத்தோம். எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் எங்களுக்கு வேலைசெய்ய இடமளிக்கவில்லை.

அதனால் காணாமல் போனவர்கள் தொடர்பாக தேடிக்கொள்ள முடியாமல் போனது. ஆனால் நாங்கள் அதற்கு எதிர்ப்பு இல்லை. அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கின்றோம்.

அத்துடன் நாட்டில் 88, 89 காலப்பகுதியிலும் காணாமல் போனவர்கள் இருக்கின்றார். அதேபோன்று 2000ஆம் ஆண்டில் காணாமல் போனவர்களும் இருக்கின்றார்கள்.

வடக்கிலும் இடம்பெற்றது. தெற்கிலும் இது இடம்பெற்றது. அதனால் இந்த சாபத்தை நாட்டில் இருந்து முற்றாக துடைதெரிந்துவிடுவோம். அதற்காகத்தான் நாங்கள் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய காரியாலயம் அமைத்தோம்.

அதனால் நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்து அன்று இதற்கு தெரிவித்தாலும் நாங்கள் ஆதரவளிக்கின்றோம். ஆனால் அதன் தலைவரை மாற்றவேண்டும். அவரால் முறையாக செயற்பட முடியாது. அவரை வைத்துக்கொண்டு காரியாலயத்தின் பணிகளை மேற்கொள்ள முடியாது என்றார்