தென்னிலங்கையில் புதிய கூட்டணி உதயம்

நாட்டின் சிறந்த எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘சுதந்திர மக்கள் கூட்டணி’ உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை பதிவு செய்யும். இந்தக் கூட்டணியால் நாட்டை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும். அதற்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

‘சுதந்திர மக்கள் கூட்டணியின்’ அங்குரார்ப்பண நிகழ்வு இன்று புதன்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

நாட்டின் எதிர்காலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலேயே நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். சிறந்த ஆட்சியொன்றை முன்னெடுப்பதற்கு நாட்டில் ஜனநாயகம் என்பது அடிப்படை அத்தியாவசிய தேவையாகும்.

இந்த கூட்டணியை ஸ்தாபிப்பதற்காக கடந்த ஓரிரு வாரங்களாக கடுமையாக பாடுபட்டோம். உள்ளுராட்சி தேர்தலை இலக்காகக் கொண்டே நாம் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம்.

அதற்கமைய மக்களின் முழுமையான ஆதரவுடன் நாம் முழு நாட்டிலும் வெற்றி பெறுவோம். 90 சதவீத வெற்றியை எம்மால் பதிவு செய்ய முடியும். வடக்கு , கிழக்கில் நாம் போட்டியிடுவோம். இந்த கூட்டணியால் நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். இதற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்.’ என்றார்.

ஜன ஜய பெரமுனவின் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா உரையாற்றுகையில் ,

‘இவ்வாறானதொரு பலம் மிக்க கூட்டணியை அமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டில் ஏற்பட்ட உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலைமைக்கான காரணம் அரசியல் முறைமைகளில் காணப்பட்ட தவறுகளாகும். ஆட்சி மாற்றத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்த்த எதுவுமே இடம்பெறவில்லை. எனவே எமது இந்த கூட்டணிக்கு சரியான பாதையில் பயணிக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது.

இம்முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தீர்க்கமானதாகும். தலைவர்களின் பின்னால் செல்லும் அரசியல் கலாசாரம் மாற்றம் பெற வேண்டும். எனவே தான் இந்தக் கூட்டணியை தலைவர் ஒருவரின் கீழ் வழிநடத்தாமல் , தலைமைத்துவ சபையை அமைத்துள்ளோம் என்றார்.

உத்தர லங்கா சபாகயவின் தலைவர் விமல் வீரவன்ச உரையாற்றுகையில் ,

‘சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்பதற்கு புதிய அரசியல் முறைமையொன்று அத்தியாவசியமானதாகும். அந்த பொறுப்பினையே நாம் தற்போது ஏற்றுள்ளோம். இலங்கையின் நிதி நெருக்கடியின் பாரதூர தன்மை குறித்து பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான அபாயமான நிலைமையிலிருந்து நாட்டை மீட்ப்பதற்கு எந்தவொரு முடிவினையும் எடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.’ என்றார்.

சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும உரையாற்றுகையில் ,

‘கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான 23 கட்சிகள் நாட்டுக்கான தீர்க்கமான தீர்மானத்தை எடுத்தன. அதே போன்று ஒற்றுமையுடன் புதிய கூட்டணியில் எதிர்காலத்திலும் பயணிக்க வேண்டும். இந்தக் கூட்டணியில் 12 பிரதான கட்சிகள் உள்ளன. இவற்றில் 36 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 17 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் உள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பழைய அரசியல் கூட்டணிகளைப் போன்றல்லாது மற்றொரு புதிய முற்போக்கான அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. இந்த நாடு ஆட்சியாளருக்கு சொந்தமானதல்ல. அதே போன்று எந்தவொரு கட்சியும் அதன் தலைவருக்கு சொந்தமானதல்ல. குடும்பமொன்றை கேந்திரமாகக் கொண்ட ஆட்சிக்கு உறுதுணையாக செயற்பட்டமை நாம் இழைத்த பெருந்தவறாகும். அந்த தவறை திருத்திக் கொள்ளும் வகையிலேயே இந்த புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.’ என்றார்.

என்னை விமர்சித்தவர்கள் ஐ.தே.க வுடன் இணைந்து அனைத்தையும் இழந்துள்ளனர் – மைத்திரிபால

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த போது என் மீது கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அவ்வாறு என்னை விமர்சித்தவர்களே இன்று ஐ.தே.க. தலைவருடன் இணைந்து அனைத்தையும் இழந்து நிற்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் திங்கட்கிழமை (டிச. 26) நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்கள் எதிர்நோக்கியுள்ள துயரம் தொடர்பில் அரசாங்கமும் அறிந்திருக்கிறது. எனவே விரைவில் மக்களுக்கான ஏதேனுமொரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சுதந்திரத்தின் பின்னர் 1977 வரை நாடு இவ்வாறானதொரு நிலைமைக்கு தள்ளப்படும் என்று நான் ஒருபோதும் எண்ணவில்லை.

இதில் தாக்கம் செலுத்தும் 3 பிரதான காரணிகளில் முதலாவது 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பாகும். பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்களில் அரசியல்வாதிகள் தன்னிச்சையாக செயற்படுவதற்கு இதுவே வழியமைத்தது.

தற்போது அமைச்சரவை நியமனமும் இதில் தாக்கம் செலுத்துகிறது. எனவே விஞ்ஞானபூர்வமாக அமைச்சரவை நியமிக்கப்பட்டால் அது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவ்வாறான சூழல் மாற்றமடைய வேண்டுமெனில் தற்போதுள்ள முறைமையில் மாற்றம் அவசியமாகும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் உண்மையானவையாகும். எனினும் இறுதியில் அவர்களின் நற்பெயரை சீரழித்துக் கொண்டனர்.

தலைவரொருவர் இன்றி 3 நாட்கள் நாடு காணப்பட்டது. அந்த 3 நாட்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை தலைவராக தெரிவு செய்திருக்க வேண்டும். எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே அதனை தவறாக வழிநடத்திவிட்டனர்.

நான் ஜனாதிபதியானதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட போது, கட்சியை காட்டிக் கொடுத்துவிட்டதாக தற்போது பொதுஜன பெரமுனவிலுள்ளோர் என்னை விமர்சித்தனர்

. எவ்வாறிருப்பினும் நான் அன்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் பொதுஜன பெரமுன ஜனாதிபதி , பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளையும் இழந்து நிற்கிறது.

அன்று பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் மிகக் குறுகிய காலத்திற்குள் இவ்வாறானதொரு கட்சி ஸ்தாபிக்கப்பட்டு, இத்தகைய வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அதன் தலைவர் பெருமை பேசிக் கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் எதுவும் இல்லாமல் போயுள்ளது என்றார்.

புதிய வருடத்தில் புதிய கூட்டமைப்பு – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நாட்டின் எதிர்கால அரசியலுக்கான புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியை எதிர்வரும் ஜனவரி மாதம் அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் ஜயஶ்ரீ மா போதியை வழிபடுவதற்காக நேற்று(14) சென்றிருந்த போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறை நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படாவிடில் நாடு மோசமான விளைவுகளை எதிர் நோக்கும் – மைத்திரி

விவசாயத்துறையில் எடுத்த தீர்மானங்களின் விளைவை முழு ,நாட்டு மக்களும் தற்போது நன்கு எதிர்கொண்டுள்ளார்கள். விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு விரைவான தீர்வை காணாவிட்டால் நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.06) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் விவசாயம், நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் ஆகிய அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

விவசாய நடவடிக்கைகளுக்கான பயிர் விதை விநியோகத்தில் பாரிய தட்டுப்பாடு காணப்படுகிறது. காலநிலை மற்றும் மண்வளத்திற்கு உகந்த வகையிர் பயிர் விதைகள் சந்தையில் விநியோகிக்கப்படுவதில்லை.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்கள் தற்போது முழுமையாக இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்பட்டுள்ளது.

நாட்டின் உணவு பாதுகாப்பு எந்நிலையில் காணப்படுகிறது என்பதை பற்றி புதிதாக குறிப்பிட வேண்டிய தேவை கிடையாது.

உணவு பாதுகாப்பிற்கு உரிய சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை. உணவு பாதுகாப்புக்கு விரைவான தீர்வு எடுக்காவிட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

விலங்குகளினால் பயிர்செய்iகைக்கு ஏற்படும் விளைகள் தொடர்பில் தொழினுட்ப ரீதியில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

நா நாட்டில் உரம் தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.சந்தையில் உரம் ஒவ்வொரு விலையில் காணப்படுகிறது.

நெல்லுக்கான உத்தரவாத விலை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நெற்பயிர்ச்செய்கை உற்பத்திக்கான செலவுக்கும், நெல் சந்தைப்படுத்தல் சபை நிர்ணயிக்கும் விலைக்கும் இடையில் பாரிய வேறுப்பாடு காணப்படுகிறது. ஆகவே விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்க வேண்டும்.

விவசாயத்துறையில் எடுத்த தீர்மானங்களின் விளைவை முழு நாட்டு மக்களும் தற்போது நன்கு எதிர்கொண்டுள்ளார்கள்.

விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு விரைவான தீர்வை காணாவிட்டால் நாடு மிக மோசமான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் தரம் குறித்து பாரிய பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. சேதன பசளை உற்பத்திகள் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முன்னாள் ஜனாதிபதிகளால் பொது நிதி வீணடிப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தனது தனிப்பட்ட பணியாளர்களுக்காக ஜனாதிபதியின் மொத்த செலவினத்தில் 43 வீதத்தை பயன்படுத்தியுள்ளார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தமது தனிப்பட்ட பணியாளர்களுக்காக 57 வீதத்தை பயன்படுத்தியுள்ளார்.

தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உத்தரவு மூலம் இந்த விபரங்கள், ஊடகம் ஒன்றினால் பெறப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2010 முதல் 2014 வரை 630 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் 2,578 பேர் கொண்ட தனிப்பட்ட பணியாளர்களைக் கொண்டிருந்தார்.

எனினும் 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் மைத்ரிபால சிறிசேன 1347 பணியாளர்களுக்காக 850 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவிட்டிருந்தார்.

அந்த வகையில், இரண்டு ஜனாதிபதிகளும் தமது தனிப்பட்ட பணியாளர்களை பராமரிப்பதற்காக 1480 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.