தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் காலத்தை இழுத்தடிக்கும் ரணில்! – டலஸ் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களுக்கான தீர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும், ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள் காலத்தை இழுத்தடிப்பு செய்பவையாக உள்ளன என்று – இவ்வாறு சுதந்திர மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும எம்.பி. தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டியிடுகின்ற நிலையில் அம்பாறை மாவட்டத்துக்கான சபைகளின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை தெய்யத்தகண்டியில் நேற்று டலஸ் அழகப்பெரும சந்தித்துப் பேசினார். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ச உடன் வந்திருந்தார். அனைத்து கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிஸாம் அடங்கலாக அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பில் டலஸ் அழகப்பெரும எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:-

“எனது மிக நீண்டகால அரசியல் பயணத்தில் நான் எப்போதும் நேர்மையானவனாகவே நடந்து வருகின்றேன். நான் மக்களின் பணத்தை எந்த வகையிலும் சுரண்டியதில்லை. இலஞ்சம், ஊழல், துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஈடுபட்டவன் அல்லன். நாட்டுக்கும், மக்களுக்கும் மொட்டு நன்மை செய்யும் என்று நம்பி ஆதரித்தோம். அந்த நம்பிக்கை பொய் என்று கண்டபோதே அரசில் இருந்து விலகினோம்.

சுதந்திரம் கிடைக்கப் பெற்ற காலம் தொட்டு இந்த நாட்டில் தொடர்ச்சியாகக் குடும்ப ஆட்சியே நடந்து வருகின்றது. மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களே மாறி மாறி இந்த நாட்டை ஆண்டு வருகின்றனர். இதை மாற்ற வேண்டும் என்று நாம் விரும்பினோம். ஊழல் அற்ற ஆட்சியைக் கொண்டு வர எத்தனித்தோம்.

இதற்காகவே ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போட்டியில் பங்கேற்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னை ஆதரிப்பதாக இருந்தது. ஆனால், இறுதியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சம்பந்தன் கடைசி நேரத்தில் மாறி விட்டார்.

நாம் விரும்புகின்ற நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இளையோர்கள் அடங்கலாக இந்த நாட்டு மக்களின் முன்னிலையில் வந்திருக்கின்றோம். தேர்தலில் போட்டியிடுகின்றோம். எமது வேட்பாளர்களை ஆதரியுங்கள்” – என்றார்.

தென்னிலங்கையில் புதிய கூட்டணி உதயம்

நாட்டின் சிறந்த எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘சுதந்திர மக்கள் கூட்டணி’ உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை பதிவு செய்யும். இந்தக் கூட்டணியால் நாட்டை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும். அதற்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

‘சுதந்திர மக்கள் கூட்டணியின்’ அங்குரார்ப்பண நிகழ்வு இன்று புதன்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

நாட்டின் எதிர்காலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலேயே நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். சிறந்த ஆட்சியொன்றை முன்னெடுப்பதற்கு நாட்டில் ஜனநாயகம் என்பது அடிப்படை அத்தியாவசிய தேவையாகும்.

இந்த கூட்டணியை ஸ்தாபிப்பதற்காக கடந்த ஓரிரு வாரங்களாக கடுமையாக பாடுபட்டோம். உள்ளுராட்சி தேர்தலை இலக்காகக் கொண்டே நாம் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம்.

அதற்கமைய மக்களின் முழுமையான ஆதரவுடன் நாம் முழு நாட்டிலும் வெற்றி பெறுவோம். 90 சதவீத வெற்றியை எம்மால் பதிவு செய்ய முடியும். வடக்கு , கிழக்கில் நாம் போட்டியிடுவோம். இந்த கூட்டணியால் நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். இதற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்.’ என்றார்.

ஜன ஜய பெரமுனவின் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா உரையாற்றுகையில் ,

‘இவ்வாறானதொரு பலம் மிக்க கூட்டணியை அமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டில் ஏற்பட்ட உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலைமைக்கான காரணம் அரசியல் முறைமைகளில் காணப்பட்ட தவறுகளாகும். ஆட்சி மாற்றத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்த்த எதுவுமே இடம்பெறவில்லை. எனவே எமது இந்த கூட்டணிக்கு சரியான பாதையில் பயணிக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது.

இம்முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தீர்க்கமானதாகும். தலைவர்களின் பின்னால் செல்லும் அரசியல் கலாசாரம் மாற்றம் பெற வேண்டும். எனவே தான் இந்தக் கூட்டணியை தலைவர் ஒருவரின் கீழ் வழிநடத்தாமல் , தலைமைத்துவ சபையை அமைத்துள்ளோம் என்றார்.

உத்தர லங்கா சபாகயவின் தலைவர் விமல் வீரவன்ச உரையாற்றுகையில் ,

‘சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்பதற்கு புதிய அரசியல் முறைமையொன்று அத்தியாவசியமானதாகும். அந்த பொறுப்பினையே நாம் தற்போது ஏற்றுள்ளோம். இலங்கையின் நிதி நெருக்கடியின் பாரதூர தன்மை குறித்து பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான அபாயமான நிலைமையிலிருந்து நாட்டை மீட்ப்பதற்கு எந்தவொரு முடிவினையும் எடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.’ என்றார்.

சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும உரையாற்றுகையில் ,

‘கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான 23 கட்சிகள் நாட்டுக்கான தீர்க்கமான தீர்மானத்தை எடுத்தன. அதே போன்று ஒற்றுமையுடன் புதிய கூட்டணியில் எதிர்காலத்திலும் பயணிக்க வேண்டும். இந்தக் கூட்டணியில் 12 பிரதான கட்சிகள் உள்ளன. இவற்றில் 36 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 17 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் உள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பழைய அரசியல் கூட்டணிகளைப் போன்றல்லாது மற்றொரு புதிய முற்போக்கான அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. இந்த நாடு ஆட்சியாளருக்கு சொந்தமானதல்ல. அதே போன்று எந்தவொரு கட்சியும் அதன் தலைவருக்கு சொந்தமானதல்ல. குடும்பமொன்றை கேந்திரமாகக் கொண்ட ஆட்சிக்கு உறுதுணையாக செயற்பட்டமை நாம் இழைத்த பெருந்தவறாகும். அந்த தவறை திருத்திக் கொள்ளும் வகையிலேயே இந்த புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.’ என்றார்.

மின் கட்டண அதிகரிப்பு – மக்களுக்கு கடவுளே துணை – டலஸ் டலஸ் அழகபெரும

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் நாட்டு மக்களுக்கு கடவுள் துணை என பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும்.

மின்கட்டண திருத்தம் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. பொருளாதார பாதிப்பின் சுமையை நாட்டு மக்கள் மீது முழுமையாக சுமத்த முடியாது.

அரசாங்கம் பல்வேறு செலவுகளை குறைத்துக்கொண்டால் மக்கள் மீதான வரி விதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கம் அமைச்சரவை அமைச்சுக்களை விஸ்தரித்துக்கொள்ள அவதானம் செலுத்தியுள்ளது.

38 இராஜாங்க அமைச்சுக்கள் அவசியமற்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை ஒரு இராஜாங்க அமைச்சுக்களை கூட நியமிக்காமல் வரையறுக்கப்பட்ட அமைச்சுக்களுடன் அரச நிர்வாகத்தை முன்னெடுத்தார். இதனை அரசாங்கம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.

மின்கட்டண அதிகரிப்பால் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். நாட்டில் மொத்த மின்பாவனையாளர்களில் 30 அலகுக்கும் குறைவான மின் அலகினை பாவிக்கும் 14 இலட்சம் மின்பாவனையாளர்கள் உள்ளார்கள்.

இவர்கள் பொருளாதார ரீதியில் கீழ்நிலை மட்டத்தில் உள்ளவர்கள். இவ்வாறான நிலையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் நாட்டு மக்களுக்கு கடவுள் தான் துணை என பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும்.

மின்கட்டண திருத்தம் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும். மக்களிடம் வளம் இருந்தால் தான் மின்கட்டணத்தை செலுத்துவார்கள்.

மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் எவ்வாறு வாழ்வது என்பதை அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றார்.

இன, மத பேதமற்ற வகையில் புதிய அரசியலமைப்பு ஊடாக நிலையான தீர்வு காண வேண்டும் – டலஸ் அழகபெரும

எதிர்கால அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவும், அரசியல் பிரதிவாதிகளை இலக்காக கொண்டும், நாட்டில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது.

சமூக கட்டமைப்பில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு  இன, மத பேதமற்ற வகையில் புதிய அரசியலமைப்பு ஊடாக நிலையான தீர்வு காண வேண்டும். அதற்கு நாங்கள்  முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக்கைதிகளின்  வழக்குகள் தொடர்பில் தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்துமாறும்  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச. 05) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு,நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஒருசிலர் 10 அல்லது 15 வருடங்களுக்கு அதிக காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறை கைதிகள் பலர் சாதனைகளை புரிந்துள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இலக்காக கொண்டு இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் ஆரூரரன்  அண்மையில் அரச இலக்கிய விருதில் தமிழ் சிறுகதைக்கான விருதை பெற்றுள்ளார். இவரை போன்று பலர்  இவ்வாறு சிறையில் உள்ளார்கள்.

60 அல்லது 70 ஆண்டுகளாக சிறையில்  6 பேர் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தேவதாசன்  என்ற சிறை கைதி கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பலர் நோய் வாய்ப்பட்ட நிலையில் சிறை  கைதிகளாக உள்ளார்கள் இவ்வாறானவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

எமது நாட்டின் கல்வி முறைமையை சிறைச்சாலைகள் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் பாடசாலைக்கு செல்லாத 2494 கைதிகளும்,ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையை தோற்றிய 12 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளும், புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளும் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 6,790 கைதிகளும் உள்ளார்கள்.

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் 198 பட்டதாரிகள் சிறைகைதிகளாக உள்ளார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைகைதிகள்  தொடர்பில் நீதியமைச்சர் தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்த  வேண்டும்.அத்துடன் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வழக்குகள்  துரிதப்படுத்தப்பட்டு, உண்மை நிலை நாட்டப்பட வேண்டும்.

அரசியல் பிரதிவாதிகளை இலக்காக கொண்டும். எதிர்கால அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் நாட்டில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகிறது. இரண்டாம் குடியரசு யாப்பு இதுவரை 21 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது,

ஆனால் எப்பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. பல ஆண்டுகால பழமை கொண்ட ஜப்பான் நாட்டின் அரசியலமைப்பு இதுவரை ஒருமுறை தான் திருத்தம்  செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 235 வருடகால அரசியல் பின்னணியை கொண்டு ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பு இதுவரை 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது,ஆனால் 74 ஆண்டுகால அரசியல் பின்னணியை கொண்ட இலங்கையின் அரசியலமைப்பு இதுவரை 21 முறை சீர்த்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகள் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு அரசியலமைப்பை திருத்தம் செய்யவில்லை. நாட்டு மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி அரசியலமைப்பினை திருத்தம் செய்துள்ளன. நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டன ஆனால் நடைமுறையில் அது சாத்தியமாகவில்லை.

சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இனம், மத பேதமற்ற  வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.