ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட,கிழக்கில் தனித்துப் போட்டி – ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் மாலை (ஜன. 10) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது பற்றியும் எதிர்கால கட்சியின் செயற்றிட்டங்கள் பற்றியும் கலந்துரையாடும் நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வடக்கு, கிழக்கில் தனித்து தனது மரச் சின்னத்தில் போட்டியிடும்.

ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடும். இதன் மூலம்  பலத்தையும் கண்டுகொள்ள முடியும்.

தேர்தல் முடிந்த பிறகு கூட்டமைப்பு அமைப்பது தொடர்பில் யோசிப்போம். இதற்கு சஜித் பிரேமதாஸவும் உடன்பாட்டை தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலி சாஹீர் மெளலானா, கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீட், செயலாளர் நாயகம் /ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்கான குழுவொன்று பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டது.

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும் போக்கை கடைப்பிடிக்கக்கூடாது – ஹக்கீம்

சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

அவரின் இந்த முயற்சியை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளிநாட்டு கன்சியூளர் பதவி மிகவும் பொறுப்புவாய்ந்த சேவையாகும். கடந்த காலங்களில் சிறந்த அதிகாரிகள் இந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

அதனால் எமது நாடு தொடர்பில் அவர்கள் சிறந்த முறையில் செயற்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அரசியல் ரீதியில் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்படுவதால் ஜெனிவாவில் எமது விடயங்களை முறையாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்காலத்தில் மனித கடத்தல்கள் தொடர்பில் வெளிநாட்டு அதிகாரிகள் முக்கிய கவனம் செலுத்தவேண்டும்.

அத்துடன் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இம்முறை எமக்கு அவமானத் தோல்வி. இந்த தோல்விக்கான காரணம் என்ன என்பதை பார்க்கவேண்டும்.

ஜெனிவா தீர்மானங்களுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும். மாறாக மனித உரிமை விடயத்தில் நலுவுவதற்கான முயற்சிகளை செய்யக்கூடாது. அரசாங்கம் தொடர்ந்து மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை அவமதி்க்கும் வகையிலேயே செயற்பட்டு வந்திருக்கின்றது.

இனங்களுக்கிடையில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசிவந்த நபரை ஒருநாடு ஒருசட்டம் செயலணியின் தலைவராக அந்த அரசாங்கம் நியமித்தது. இந்த நடவடிக்கையை மேற்கொண்டபோது அப்போதைய நீதி அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்யவும் முயற்சித்தார்.

அதேபோன்று கொவிட் தொற்றில் மரணிப்பவர்களை எரிப்பதற்கு விஞ்ஞான ரீதியில் எந்த அடிப்படையும் இல்லாத நிலையில், அரசியல் ரீதியில் எடுத்த தீர்மானத்தின் அடையிலேயே சடலங்களை எரிக்க தீர்மானித்தனர். இதன் மூலம் முஸ்லிம் மக்களை நோவிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது.

அத்துடன் ஜெனிவா மனித உரிமை பேரவையின் பந்தி 10இல் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் கொவிட் தொற்றில் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு திர்மானம் எடு்ததவர்கள் யார் என்பதை கண்டறிந்து, இதற்கு பின்னால் வேறு சக்திகள் இருக்கின்றதா என தேடிப்பார்க்க விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். இந்த காரியத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அதனால்தான் இம்முறை ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கவில்லை.

அத்துடன் அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் என்பதில் ஜனாதிபதி முயற்சி செய்து வருவதை காணமுடிகின்றது. அதனை நாங்கன் வரவேற்கின்றோம். எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றார். அவரின் இந்த முயற்சியை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என விசாரிக்கப்பட வேண்டும் – ஹக்கீம்

வேண்டுமென்றே வெறுப்புணர்வைத் தூண்டி அதன் மூலமாக எங்களுக்குச் செய்யப்பட்ட அநியாயங்களை நாங்கள் ஒரு போதும் மறந்து விடவோ கிடப்பில் போடவோ முடியாது. அவற்றுக்கு நியாயம் கோரி நிற்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் சனிக்கிழமை (நவ.26) தவிசாளர் விருது வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது,

ஏப்ரல் 21 இன் பயங்கவாதக் கும்பலைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. ஆனால் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கும்பலின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினால் நினைவுகூரப்படுவதுமில்லை. நினைவுகூரப்பட வேண்டியதுமில்லை. அந்தச் செயலைச் செய்தவர்களுடைய ஜனாஸாக்களைக் கூட நாங்கள் பொறுப்பெடுக்கவில்லை. அவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதுதான் எங்களது முடிவு. அவர்கள் மேற்கொண்டது முஸ்லிம் சமூகத்திற்கான போராட்டமுமல்ல. இதற்குப் பின்னாலும் சில பெருந்தேசியவாதக் கழுகுக் கூட்டம் இருந்ததா என்பது கண்டு பிடிக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தின் வெறுப்புணர்ச்சியை முஸ்லிம்கள் மீது தூண்டி அதன் மூலமாக ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பாடுபட்டவர்கள் தாங்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின்னரும் முஸ்லிம் சமூகத்தைப் படாதபாடு படுத்தினார்கள். கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களுக்குச் செய்த அநியாயம் இவ்வாறு அவர்களது வெறுப்புணர்ச்சி எல்லை கடந்து சென்றது. இன்னமும் முஸ்லிம்களுக்குள் தீவிரவாதம் ஊடுருவியிருக்கிறது என்று நிரூபிக்கத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும், முள்ளிவாய்க்கால் சம்பவம் பற்றி விசாரிக்கப்பட வேண்டும். சரணடைந்தவர்களுடைய உயிர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை இப்பொழுது சர்வதேச சமூகத்திற்கு முன்னால் வைத்திருக்கிறார்கள். இவ்வாறு நடந்த அநியாயங்களைக் கண்டறிவதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைனக்துழுவொன்று அமைக்கப்படவுள்ளது.

அதேநேரம் அடுத்து வரும் அரசியல் என்பது வித்தியாசமாக நடக்கப் போகின்றது. அந்த வித்தியாசமான அரசியலில் முஸ்லிம் சமூகமாக இருக்கட்டும் தமிழ் சமூகமாக இருக்கட்டும் நாங்கள் எல்லோரும் மிகக் கவனமாகக் காய்நகர்த்தி சரியான இலக்குகளை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். என்னதான் பேசினாலும் துரோகச் செயல்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு முடிவு காண முடியாது.

துரோகத்தைப் பற்றிப் பேசிப் பேசி காலத்தைக் கடத்துவதல்ல நோக்கம். தெற்கிலுள்ள சிங்கள சமூகத்தினரும் சிறுபான்மைச் சமூகத்தினரின் கோரிக்கைகள் நியாயமானது என்று நம்புகின்ற அளவக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அடைந்து கொள்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் இதுவென நான் நம்புகின்றேன்” என்றார்.

அனைவரும் அணிதிரண்டு இனப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – ரவூப் ஹக்கீம்

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சியை வரவேற்கின்றேன்.ஜனாதிபதியின் இந்த பிரவேசத்தை சிறந்த சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளவேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் அணிதிரண்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (நவ. 23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16 விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் தீர்வுப்பொது ஒன்றை கொண்டுவந்தார். அப்போது அவரின் அமைச்சரவையில் மஹிந்த ராஜபக்ஷ்வும் ஒரு அமைச்சராக செயற்பட்டிருந்தார்.

அந்த தீர்வுப்பில் பிராந்தியங்களின் ஒன்றிணைப்பு என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தற்போது வேறுமாதிரி குறிப்பிடப்படுகின்றது. அது பிரச்சினை அல்ல. ஆனால் அதிகார பரவலாக்கம் எவ்வாறு இடம்பெறுகின்றது. மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் அதிகார பரவலாக்கம் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதுதான் முக்கியமானது. அதனால் ஜனாதிபதி அதிகார பரவலாக்கம் தொடர்பாக சபையில் கருத்துக்களை கேட்டார். அதற்கு இணக்கமா என கேட்டார். ஜனாதிபதியின் இந்த பிரவேசத்தை சிறந்த சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

அதற்காக நாங்கள் அனைவரும் அணிதிரண்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதனால் இந்த விடயத்தில் மாறுபட்ட அரசியல் கருத்துக்களை வைத்துக்கொண்டு நாங்கள் செயற்படப்போவதில்லை.

ஆனால் அதிகார பரவலாக்கல்தான் இங்கே முக்கிய விடயமாக அமையவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலுமொரு ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி அமைக்க இருப்பதாக தெரியவருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் விசாரணை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதில் பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சம்பவத்தின் பின்னணி தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக நாங்கள் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்தோம். ஆனால் தாக்குதல் காலப்பகுதியில் உதிர்த்த நாமல் குமார போன்ற இளைஞர்கள் தற்போது எங்கே என தெரியாது. அதேபோன்று திகன ககலவரத்துக்கு காரணமாக இருந்த அமித் வீரசிங்க, இவர்கள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை.

எனவே ஜனாதிபதி அமைக்கும் ஆணைக்குழுவில் இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடை ஏற்க முடியாது – ஹக்கீம்

மக்கள் அன்றாடம் வாழமுடியாத நிலையில் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு மொத்த வரவு செலவு திட்டத்தில் 10வீதம் ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் கொள்கை அடிப்படையில் புதிய சீர்திருத்தங்களை மேற்காெள்ள ஜனாதிபதி எடுத்து வரும் முயற்சியை பாராட்டுகின்றோம்.

ஆனால் மக்கள் பாரிய வறுமை கோட்டின் கீழ் இருக்கும் நிலையில் மக்களுக்கு மானியங்கள் எதுவும் இல்லாத நிலையில் பாதுகாப்பு பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக வரவு செலவு திட்டத்தின் மொத்த தொகையில் 10வீதத்தை பாதுகாக்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்தளவு நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்குவதற்கு பாரிய அச்சறுத்தல்கள் எதுவும் இல்லை.

அத்துடன் இந்தியாகூட பாதுகாப்புக்கு வரவு செலவு திட்டத்தில் 9வீதமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. எனவே மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் சிந்தித்திருக்கலாம் என்றார்.

Posted in Uncategorized