ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட,கிழக்கில் தனித்துப் போட்டி – ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் மாலை (ஜன. 10) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது பற்றியும் எதிர்கால கட்சியின் செயற்றிட்டங்கள் பற்றியும் கலந்துரையாடும் நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வடக்கு, கிழக்கில் தனித்து தனது மரச் சின்னத்தில் போட்டியிடும்.

ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடும். இதன் மூலம்  பலத்தையும் கண்டுகொள்ள முடியும்.

தேர்தல் முடிந்த பிறகு கூட்டமைப்பு அமைப்பது தொடர்பில் யோசிப்போம். இதற்கு சஜித் பிரேமதாஸவும் உடன்பாட்டை தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலி சாஹீர் மெளலானா, கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீட், செயலாளர் நாயகம் /ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்கான குழுவொன்று பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டது.