உயிருடன் இருக்கும் வரை தனி ஈழத்தை உருவாக்க அனுமதிக்கப் போவதில்லை – சரத் வீரசேகர

‘‘பிக்குகளுக்கு அவதூறு ஏற்படுத்த ஒருசிலர் திட்டமிட்டு செயற்படுகிறார்கள். ஆனால், காவி உடை அணிந்தவர்கள் இருக்கும் வரை எமது இனத்தை அழிக்க முடியாது. துஷ்டர்களின் எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறாது. நாங்கள் உயிருடன் இருக்கும்வரை தனி ஈழத்தை உருவாக்க இடமளிக்க மாட்டோம். மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்பட்டால் இந்த தமிழ் பிரதிநிதிகள் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கக் கூடாது. அவர்களின் குடும்பங்களுடன் யுத்தம் இடம்பெறும் நாடுகளுக்கு அனுப்ப யோசனை முன்வைப்போம்’’ என்று பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின்போதே இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது, எமது நாடு சுத்தமாக தேரவாத பெளத்தத்தை பாதுகாத்துவரும் நாடாகும். இதனை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். எமது அரசர்கள் ஒவ்வொருவரும் பெளத்த சாசனத்தை பாதுகாக்கவே யுத்தம் செய்தார்கள். சாசனத்தை பாதுகாப்பதற்காகவே இந்த நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விகாரைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே இதனை பாதுகாக்க வேண்டியது சிங்கள மக்களின் முக்கிய பொறுப்பாகும். தற்போதுள்ள இளைய பிக்குகள் பெளத்த தர்மத்தை பரப்புவதற்கு இணையத்தளம், சமூக வலைத்தளங்களினூடாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் மாலைதீவு, ஆப்கானிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா போன்ற சகல நாடுகளும் பெளத்த நாடுகளாகும். ஆனால் அந்த நாடுகள் இன்று பெளத்த நாடுகள் இல்லை. அதற்கு காரணம் அவர்கள் சாசனத்தை பாதுகாக்கவில்லை. நாம் சாசனத்தை பாதுகாத்தமையின் காரணமாகவே, 2500 வருடங்கள் கடந்தும் எமது நாடு இன்றும் பெளத்த நாடாக இருக்கின்றது. அந்த சாசனத்தை பாதுகாப்பதற்கான முழு பொறுப்பு இன்று பிக்குகளுக்கும் இருக்கிறது. ஒருசில பிரதேசங்களில் சிங்கள, முஸ்லிம் மக்கள் பிக்குகளை பராமரித்தாலும் அநேகமாக சிங்கள மக்களே அவர்களுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குகிறார்கள். சிங்கள மக்கள் இலங்கையிலேயே வாழ்கிறார்கள். நாடு சிக்கலுக்குள்ளானால் சிங்கள மக்களும் சிக்கலுக்குள்ளாகுவார்கள். சிங்கள மக்கள் சிக்கலுக்குள்ளானால் பிக்குகளின் இருப்பும் கேள்விக்குறியாகிவிடும். அவர்களின் இருப்பு சிக்கலுக்குள்ளான பெளத்த சாசனமே இல்லாமல் போகுமளவுக்கு சிக்கல் நிலை ஏற்படும். அதனால் மொத்த தர்மமும் இல்லாமல் போய்விடும். அதன் காரணமாகவே எமது நாட்டில் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிக்குகள் முன்னிருந்தார்கள்.

மன்னர் காலத்தில் இடம்பெற்ற போர் நிலைமைகளின்போது போருக்கு பிக்குகள் ஆதரவாக இருந்தமைக்கு காரணம் பெளத்த சாசனத்தை பாதுகாப்பதற்காகவாகும். இவ்வாறு எமது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பிக்குகள் தவறு செய்துவிட்டால் அல்லது குரலை உயர்த்தி பேசிவிட்டார்கள் என்றால் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். பிக்குகளை எமது தேசத்தின் முன்னோர்களாக கருதுகிறோம். அவ்வாறெனில், இது நாட்டின் உயிர் நாடியின் மீதும் கலாசாரத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். இது திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் செயற்பாடாகும். மேற்குலக நாடுகளின் அனுசரணையில், எந்தவொரு சமயத்தையும் மதிக்காத, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் செயற்படும் நபர்களே இவ்வாறு செய்கிறார்கள். ஆனால், காவி உடை அணிந்தவர்கள் இருக்கும் வரை எமது இனத்தை அழிக்க முடியாது. துஷ்டர்களின் எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறாது.

வெளிநாடுகளிலுள்ள பிக்குகளும் பெளத்தத்துக்காக பெரும் பங்காற்றி வருகிறார்கள். தாய்வானிலிருக்கும் போதகம சந்திம தேரர், பிரான்ஸிலுள்ள சந்த ரத்ன தேரர், அமெரிக்காவிலுள்ள வல்பொல பியனந்த தேரர், மலேசியாவிலுள்ள சன்னங்கரதேரர் போன்றோர் பெளத்தத்தை பாதுகாக்க பெரும் பங்காற்றி வருகிறார்கள். எமது சாசனத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் நாட்டின் தேசிய ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். தற்போதையளவில் வடக்கு கிழக்கில் இருக்கும் பெளத்த வழிபாட்டுத் தலங்கள், பெளத்த தொல்பொருள் ஆதாரங்கள் பாரியளவில் அழிக்கப்படுகின்றன. குருந்தி விகாரை பிரச்சினையை நான் எனது கண்கூடாக பார்த்துள்ளேன். நெடுங்கேணியிலுள்ள விகாரையை தரைமட்டமாக்கி, அதன் மீது வேறு சமய வழிபாடுகளை முன்னெடுக்கிறார்கள். தற்போதே இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றதென்றால் அந்த மாகாணத்தை தனியாக்கினால் அல்லது தனியான அரசொன்று உருவாகினால் எந்தளவு அழிவு ஏற்படும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதனாலேயே நாட்டின் ஒற்றுமையை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதாக தெரிவித்து பயங்கரவாதிகளை நினைவுகூர்வதற்கு தமிழ் பிரதிநிதிகள் முயற்சித்தார்கள். நாட்டை பிளவடைய செய்யவே பயங்கரவாதிகள் முயற்சித்தார்கள். நாட்டை பிரிப்பதற்கு எதிரான பயங்கரவாத போரில் எமது மக்களை பறிக்கொடுத்துள்ளோம். அநேகமானவர்கள் அங்கவீனமுற்றார்கள். அவ்வாறானவொரு நிலைமைக்கு மீண்டும் இடமளிக்க முடியாது. தமிழ் மக்களே இதனால் பெரும் கஷ்டங்களை அனுபவித்தார்கள். தமிழ் பிரதிநிதிகள் தொடர்பில் நாங்கள் வெட்கப்படுகிறோம். சிறுவர்களுக்கு விடுதலை புலிகளின் சீருடைகளை அணிந்தது மாத்திரமல்லாமல், அவர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிவித்திருந்தார்கள். தற்போதிருந்தே சிறுவர்களின் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிராக வைராக்கியத்தை உருவாக்கவே முயற்சிக்கிறார்கள். எவ்வாறாயினும், இந்த ஒற்றுமையை பாதுகாப்போம். நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழத்தை உருவாக்க இடமளிக்க மாட்டோம். நான் மட்டுமல்ல, தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு மக்களும் மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்பட்டால் இந்த தமிழ் பிரதிநிதிகள் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளியோம். அவர்களின் குடும்பங்களுடன் யுத்தம் இடம்பெறும் இடங்களுக்கு அனுப்ப யோசனை முன்வைப்போம் என்றார்.

மாவீரர் தினத்தில் அஞ்சலி செலுத்தியோரை கைது செய்யுமாறு ஜனாதிபதி ரணில் பணிப்பு

மாவீரர் தினத்தில் புலிகளை நினைவுபடுத்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவை கூட்டத்தில் பணித்துள்ளார்.

புலிகளை நினைவுகூரும் வகையில் ஆடைகளை அணிந்தமை ,புலிச் சின்னம், கொடிகளை ஏந்தியமை உட்பட்ட பல்வேறு விடயங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அது புலிகளின் மீளுருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் தென்னிலங்கையில் இருப்பதால் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி நீதியமைச்சர் விஜயதாசவையும் ,பொதுமக்கள் பாதுகாப்பமைச்சர் டிரான் அலசையும் கேட்டுள்ளார்.

இதனையடுத்து மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் உடனடியாக விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளனர்.அத்துடன் புலிகளின் சின்னங்களுடன் நினைவுகூர்ந்தவர்கள் விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது

பயங்கரவாத தடைச்சட்டத்தை நினைவு கூர்பவர்களை கைது செய்ய பயன்படுத்தும் இலங்கை அரசாங்கம் – பேர்ள் அமைப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் மாவீரர் நாளில் அமைதியான முறையில் நினைகூருவதை குற்றமாக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவது குறித்து இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு பேர்ள் கரிசனை வெளியிட்டுள்ளது.

தமிழர்களிற்கு எதிரான பாதுகாப்புபடையினரின் நடவடிக்கைகள் முன்னைய அரசாங்கங்கள் போல தற்போதைய அரசாங்கமும் சிங்கள பௌத்த பேரினவாத கொள்கைகளை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதை புலப்படுத்தியுள்ளன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கம் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதையும் இலங்கையில் தமிழர்களின் குரல்களை ஒடுக்க முயல்வதையும் கண்டிக்கவேண்டும்,குறிப்பாக அவர்கள் இந்த கடினமான தருணங்களில் தங்களின் நேசத்திற்குரியவர்களை நினைகூரும் இந்த தருணத்தில் என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்: 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை

மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள் போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து இருந்தனர் என சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.

அவை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , படங்களில் இனம் காணப்பட்ட சிறுவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

உரும்பிராயை சேர்ந்த முன்னாள் போராளியொருவரின் குடும்பத்தினர், ஒரு சிறாரை போராளியை போல ஆடை அணிவித்து அழைத்து வந்துள்ளனர்.

கோப்பாயை சேர்ந்த அன்றாட உழைப்பாளியொருவரும் தனது 3 பிள்ளைகளை போராளிகளை போல ஆடை அணிவித்து அழைத்து வந்துள்ளார்.

போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதற்கு உறவுகளுக்கு முழுமையான உரிமை உண்டு – ஜனாதிபதி ரணில்

இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு. இந்த விடயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் நினைவேந்தல் தென்னிலங்கை அரசியலில் சர்ச்சையாக மாறியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மீண்டுமொரு ஆயுதப் போரை தமிழர்களோ, சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ விரும்பவில்லை. எனினும், கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆயுதப் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் அமைதியாக நினைவேந்த அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இதை எவரும் இனவாத ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் பார்க்கக்கூடாது.

தேசிய ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் இதைத்தான் விரும்புகின்றார்கள்.

எனவே, தீர்வை நாம் விரைவில் வழங்க வேண்டும். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும்போதும் இதனைக் குறிப்பிட்டுள்ளேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் மிக உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்

பிரித்தானியாவில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழர் வரலாற்று மையத்தில் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வுபூராவாக அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.

தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்களினால் கொடிவணக்கம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடருக்கான ஆயத்த மணி ஒலி எழுப்பப்பட்டு தாயக மண்ணுக்காக தம் உயிரை ஈந்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகளால் தமிழர் வரலாற்று மைய கண்ணீரில் மூழ்கியது. தொடர்ந்து தமிழீழ எழுச்சிப் பாடல்களும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்

மாவீரர் நாள் 2023 ஆண்டிற்க்கான பொதுசுடரினை வட கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

தொடர்ந்து மாவீரர் நாள் 2023ம் ஆண்டிற்க்கான பிரித்தானியத் தேசியக் கொடிஇளையோர் அமைப்பு செல்வி பார்பரா ராஜன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

மாவீரர் நாள் 2023ம் ஆண்டில் தமிழீழத் தேசியக் கொடியினை பிரித்தானியத் தமிழர் ஒருங்கமைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. ஆனந் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் புதல்வன் பிரபாநந்தன் அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் சுடர் ஏந்தி மலர்வணக்கத்தினை செலுத்தினார்கள்.

வடக்கு-கிழக்கில் தடைகளை தாண்டி உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்!

வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் தடைகளை தாண்டி மாவீரர் நாள் நினைவேந்தல் நேற்று உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு கடற்கரை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், அளம்பில், வன்னி விளான்குளம், முள்ளியவளை, ஆலங்குளம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மன்னார் மாவட்டத்தின் ஆட்காட்டி வெளி, பெரிய பண்டிவிரிச்சன், முள்ளிக்குளம் துயிலுமில்லங்களிலும், வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி, தரவை, தாண்டியடி, வாகரை கண்டலடி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்திலும், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதேவேளை, இறுதி நிமிடத்தில் உட்புகுந்த பொலிஸாரின் அராஜகத்துக்கு மத்தியில் மட்டக்களப்பு தரவையில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அங்கு நுழைந்த பொலிஸார் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக்கொடிகளை அறுத்தெறிந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களின் உறவுகள், பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதனால் வரலாறு காணாத வகையில் இன்றைய தினம் மக்கள் திரண்டமையால் கடும் வாகன நெரிசலும் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக காணப்பட்டது.

கிளிநொச்சி – கனகபுரம்
கிளிநொச்சி – கனகபுரம்
கிளிநொச்சி – முழங்காவில்

யாழ்ப்பாணம் – கோப்பாய்

கோப்பாய் – யாழ்ப்பாணம்
கோப்பாய் – யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோப்பாய்  மாவீரர் துயிலும் இல்லம்  இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், நினைவேந்தல் இடம்பெற்றது.

கொடிகாமம்

கொடிகாமம் – யாழ்ப்பாணம்
கொடிகாமம் – யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் நேறறு மாலை முன்னெடுக்கப்பட்டன. அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகச்சுடரை மாவீரர்களான கப்டன் ரசியன், மேஜர் ரெஸ்ரார்,மேஜர் வண்ணன் ஆகியோரின் தாயாரும் மற்றும் மாவீரர் குமரர் மற்றும் சந்திரன் ஆகியோரின் சகோதரியும் ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் பொதுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்கள்,உறவுகள், சமூக ஆர்வலர்கள்,அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் – யாழ்ப்பாணம்

எள்ளங்குளம்-யாழ்ப்பாணம்
எள்ளங்குளம்-யாழ்ப்பாணம்

வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதான ஈகச்சுடரினை கடற்கரும்புலி மாவீரர் தமிழினியின் தந்தையார் முத்துலிங்கம் சிவப்பிரகாசம் ஏற்றி வைத்தார்.

சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்

சாட்டி – தீவகம்
சாட்டி – தீவகம்

யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொது ஈகச்சுடர் முன்னாள் போராளியும், இரண்டு மாவீரர்களின் தந்தையுமான வி.கந்தசுவாமியினால் ஏற்றப்பட்டது.

வல்வெட்டித்துறை கம்பர் மலை

வல்வெட்டித்துறை – கம்பர்மலை

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கரது நினைவாலயம் முன்பாக மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது. மாவீரர்களின் உறவுகள் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால்

முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால்

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தந்தையான தனபாலசிங்கம் ஏற்றி வைக்க ஏனைய உறவுகளுக்கு அவர்களது உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு கடற்கரை

முல்லைத்தீவு – கடற்கரை

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்கரையில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடரை கடற் கரும்புலி மேஜர் நிதர்சன் அவர்களின் தாயார் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

வவுனியா – ஈச்சங்குளம்
வவுனியா – ஈச்சங்குளம்

வவுனியாவில் பிரதான மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள ஈச்சங்குளம் பகுதியில் 561 ஆவது இராணுவ தலைமையகம் அமைந்திருப்பதால் அதற்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் நினைவேந்தல்கள் இடம்பெற்றன. இதன் போது மணி ஒலிக்கப்பட்டு, ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தின் பிரதான ஈகச்சுடரினை மேஜர் உமாசங்கர் மற்றும் கப்டன் கஜலக்சுமி ஆகியோரின் தாயார் வள்ளிப்பிள்ளையால் ஏற்றி வைக்கப்பட்டது. இதனையடுத்து நினைவேந்தலில் கலந்து கொண்ட மாவீரர்களின் பெற்றோர்களால் சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி

மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி
மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி

மட்டக்களப்பு மாவட்டம் மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச் சோலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் திங்கட்கிழமை மாலை 6.05 மணிக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி சொலுத்தினர். குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தைச் சூழ பொலிசார் அவர்களது கடமையில் ஈடுபட்டிருந்துடன் அவ்வப்போது நிகழ்வை குழப்பும் வகையில் ஏற்பாட்டாளர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்ததுடன், கலந்து கொண்டிருந்த பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களையும் பொலிசார் அவர்களது கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மட்டக்களப்பு – வாகரை

மட்டக்களப்பு- வாகரை
மட்டக்களப்பு- வாகரை

மட்டக்களப்பு வாகரையில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.

மன்னார் – பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்

மன்னார் – பண்டிவிரிச்சான்
மன்னார் – பண்டிவிரிச்சான்
மன்னார் – பண்டிவிரிச்சான்

மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று திரண்ட மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுச் சுடர் ஏற்றப்பட்ட பின் மாவீரர்களின் உறவுகள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இதன் போது மாவீரர்களின் உறவுகள் அருட்தந்தையர்கள்,அருட் சகோதரிகள்,அரசியல் பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆட்காட்டிவெளி

மன்னார் – ஆட்காட்டிவெளி
மன்னார் – ஆட்காட்டிவெளி

மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் நேற்று மாலை நினைவு கூரப்பட்டது. தமிழ் தேசிய விடுதலைக்காக தனது மகனை கரும்புலியாக வழங்கிய தந்தை பொதுச் சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார் .

திருகோணமலை
திருகோணமலை மாவட்டம் சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் பொலிஸாரால் தடுக்கப்பட்ட நிலையில், சம்பூர் பத்திரகாளி கோவில் முன்றலில் அனுஷ்டிக்கப்பட்டது.

Posted in Uncategorized

புலிகளின் முதல் மாவீரர் சங்கருக்கு அஞ்சலி

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதனுக்கு ஈகைச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர் நாளை முன்வைத்துத் தமிழ்க் கட்சிகள் சிந்திக்க வேண்டியவை – நிலாந்தன்

ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் மாவீரர் நாள் எனப்படுவது ஆயுதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் ஒரு கருநிலை அரசு இருந்தது. கட்டுப்பாட்டு நிலம் இருந்தது. எனவே மாவீரர் நாள் ஓர் அரச நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டது. மாவீரர்களின் குடும்பத்தவர்களுக்கு அரச அனுசரணையும் அரச வசதிகளும் கிடைத்தன. துயிலுமில்லங்களை அக்கருநிலை அரசு புனிதமாக, ஒரு மரபாகப் பராமரித்தது.

ஆனால் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் கடந்த 15 ஆண்டுகளாக நினைவு கூர்தலே ஒரு போராட்டமாக மாறியிருக்கிறது.

நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் இப்பொழுதும் தடை செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் இப்பொழுதும் நடைமுறையில் உள்ளது. அதைத் திருத்தி ஒரு புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் எத்தனிக்கின்றது. இப்படிப்பட்டதோர் சட்டச் சூழலில், சட்டரீதியாகத் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை நினைவு கூர்வது சட்டப்படி குற்றமாகும்.

அந்த அடிப்படையில்தான் போலீசார் கடந்த 15 ஆண்டுகளாக நீதிமன்றங்களை நாடி நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு எதிராக தடை உத்தரவுகளைப் பெற்று வருகிறார்கள். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றங்கள் அவ்வாறு தடை உத்தரவுகளைப் பிறப்பிப்பது இல்லை. சிலசமயம் நிபந்தனைகளோடும் சில சமயம் நிபந்தனைகள் இன்றியும் நினைவு கூர அனுமதிக்கப்படுகின்றது. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் நினைவு கூர்தலுக்கான வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். மாவீரர் நாள் ஒப்பீட்டளவில் பரந்த அளவிலும் பெருமெடுப்பிலும் அனுஷ்டிக்கப்படும். இம்முறையும் அப்படித்தான். வடக்கில் பெரும்பாலான நீதிமன்றங்களில் நினைவு கூர்தலுக்குச் சாதகமாக முடிவுகள் வெளிவந்துள்ளன. கிழக்கில், மட்டக்களப்பிலும் அப்படித்தான்.

அதாவது கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நினைவு நாளுக்குமாக தமிழ் மக்கள் வழக்காட வேண்டியிருக்கிறது. நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது. ஆனால் அது ஒரு சட்ட விவகாரம் மட்டுமல்ல. ஒரு சட்டப் போராட்டம் மட்டுமல்ல. அதைவிட ஆழமான பொருளில், அது ஓர் அரசியல் போராட்டம். அது ஒரு அரசியல் விவகாரம். அதனை அரசியல்வாதிகள் அரசியல் போராட்டமாக முன்னெடுக்க வேண்டும்.ஆனால் தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் அப்படி ரிஸ்க் எடுத்துப் போராடவும்,சிறைகளை நிரப்புவதற்காகப் போராடவும் தயாராகக் காணப்படுகின்றார்கள்?
சட்டதரணிகள் அதிகம் செலுத்தும் தமிழ்த் தேசிய அரசியலில், அது பெருமளவுக்கு ஒரு சட்டப் போராட்டமாகத்தான் காணப்படுகின்றது. அதை ஓர் அரசியல் போராட்டமாக ; நினைவு கூர்வதற்கான கூட்டுரிமைக்கான, பண்பாட்டு உரிமைக்கான,ஒரு போராட்டமாக முன்னெடுப்பதற்கு தமிழ் கட்சிகளால் முடியவில்லை. நினைவு கூரும் உரிமைக்காக மட்டுமல்ல ஏனைய எல்லா விடயங்களுக்காகவும் பொருத்தமான விதங்களில் தொடர்ச்சியாகவும் பெருந்திரளாக மக்களைத் திரட்டியும் போராட முடியாத தமிழ் கட்சிகள், நினைவு கூர்தலை ஒரு போராட்டமாக மாற்றி விட்டன.

2009க்கு பின்னரான நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் நினைவு கூர்தல் ஒரு பிரிக்கப்படவியலாத பகுதி என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இறந்த காலத்தைத் தத்தெடுக்கும் அரசியல்வாதிகள், ஆயுதப் போராட்டத்தின் நேர் வாரிசுகளாகத் தங்களை காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள், அந்த ஆயுதப் போராட்டம் வெளிப்படுத்திய வீரத்தையும் தியாகத்தையும் பின் தொடரத் தயார் இல்லை.

இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு பொறுப்பு அதிகம். அக்கட்சி தன்னை ஆயுதப் போராட்டத்தின் நேர் வாரிசு போல காட்டிக் கொள்கிறது. விட்டுக்கொடுப்பற்ற சமரசத்துக்கு இடமற்ற ஒரு தரப்பாகவும் தன்னை காட்டிக் கொள்கின்றது. அப்படியென்றால், ஆயுதப் போராட்டத்தில் வெளிப்பட்ட வீரத்தையும் தியாகத்தையும் அக்கட்சியானது அறவழிப் போராட்டத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.

தையிட்டி விகாரைக்கு முன்பு ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் அக்கட்சி போராடி வருகிறது. திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு அக்கட்சி வடக்கு கிழக்காக வாகன ஊர்தியைக் கொண்டு போன போது திருகோணமலையில் திட்டமிட்டு இறக்கப்பட்ட சிங்கள மக்கள் அந்த ஊர்தியைத் தாக்கினார்கள். இது விடயத்தில் ஏனைய கட்சிகளை விடவும் முன்னணி ஒப்பீட்டளவில் ரிஸ்க் எடுக்கிறது என்பது உண்மை. ஆனால் அது போதாது. ஏனைய கட்சிகளை போராட்டத்துக்கு விசுவாசம் அற்றவை என்றும், உண்மையாகப் போராடாதவை என்றும், வெளிநாடுகளின் கைக்கூலிகள் என்றும், அதனால் நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு தகுதியற்றவை என்றும் விமர்சித்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, தனக்கு அந்தத் தகுதி அதிகம் என்பதனை போராட்டக் களத்தில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர நினைவு கூர்தல் களத்தில் அல்ல.

அதாவது ஆயுதப் போராட்டத்தின் நேரடி வாரிசுகளாக தங்களைக் கருதும் எந்த அரசியல்வாதியும் அந்த ஆயுதப் போராட்டம் வெளிப்படுத்திய வீரத்தினதும் தியாகத்தினதும் தொடர்ச்சியாகவும் தங்களை நிரூபித்துக் காட்ட வேண்டும்.ஆனால் அவ்வாறான வீரத்தையோ தியாகத்தையோ கடந்த 15 ஆண்டுகளிலும் எந்த அரசியல்வாதியிடமும் காண முடியவில்லை.

அதற்காக அவர்களை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லியோ இரத்தம் சிந்திப் போராடச் சொல்லியோ இக்கட்டுரை கேட்கவில்லை. மாறாக இப்போது இருக்கும் தமிழ்த் தேசிய அரசியலில் எங்கே அதியுச்ச தியாகமும் வீரமும் தேவைப்படுகின்றனவென்றால் அது தேசத் திரட்சியைப் பாதுகாப்பதில் தான். தமிழ் மக்களை ஒரு பெரிய மக்கள் கூட்டமாகக் கட்டியெழுப்புவதில்தான். அதற்குத்தான் அதிக புத்திசாலித்தனமும் தீர்க்கதரிசனமும் தேவைப்படுகின்றன. அதுதான் இறந்தவர்களின் ஆன்மாவைக் குளிரச் செய்யும். அதுதான் தியாகிகளுக்குச் செய்யும் உண்மையான வணக்கம். கடந்த 14 ஆண்டுகளாக தங்களுக்குள் தாங்களே உடைந்துடைந்து போகும் தமிழ்க்கட்சிகள் இறந்தவர்களுக்கு செய்யும் ஆகப்பெரிய மரியாதை அதுவாகத்தான் இருக்கும்.

2009க்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு தேசமாகத் திரட்டுவதில்தான் தங்கியிருக்கின்றது. தேசியவாத அரசியல் எனப்படுவது மிகப்பெரிய திரளாக மக்களைக் கூட்டிக் கட்டுவதுதான்.ஆனால் எந்த ஒரு கட்சியாலும் அவ்வாறு மக்களை பெருந்திரளாகக் கூட்டிக்கட்ட முடியவில்லை என்பதைத்தான் கடந்த 15 ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன.

2009இல் கூட்டமைப்பு இருந்தது. அதிலிருந்து முதலில் 2010ல் கஜேந்திரகுமார் வெளியேறினார். அவருக்கு பின் 2015ல் தமிழரசு கட்சிக்குள் இருந்து பேராசிரியர் சிற்றம்பலம்,சிவகரன்,அனந்தி,அருந்தவபாலன்,உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேறினார்கள். அதன் பின் ஈ.பி.ஆர்.எல்.எஃப் வெளியேறியது. அதன் பின் இடையிலே வந்த விக்னேஸ்வரன் இடையிலேயே வெளியேறினார். அதன்பின் தமிழ் மக்கள் பேரவைக்குள் ஒன்றாக நின்ற கட்சிகள் உடைந்து சிதறின. அதன் பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் உடைவு ஏற்பட்டு மணிவண்ணன் வெளியேறினார். அதன் பின் கூட்டமைப்பில் இருந்து பங்காளிக்கட்சிகள் வெளியேறின. அதன்பின் பங்காளி கட்சிகளும் விக்னேஸ்வரனும் சேர்ந்து ஒரு கூட்டை உருவாக்கவிருத்த பின்னணியில், விக்னேஸ்வரனும் மணிவண்ணனும் சேர்ந்து அக்கூட்டை விட்டு வெளியேற்றினார்கள்.

இப்பொழுது உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்குள் தலைமைத்துவ போட்டி எழுந்திருக்கிறது. அடுத்த தலைவர் யார் என்பதைத் தெரிவதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் . இத்தேர்தலில் போட்டியிடும் இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான மோதல் முகநூலில் ஒரு புதிய மோது களத்தைத் திறந்து விட்டிருக்கிறது. இரண்டு தலைவர்களுடைய விசுவாசிகள் மிகக் கேவலமாக ஒருவர் மற்றவரை வசை பாடுகிறார்கள். ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கப் பார்க்கின்றார்கள். இத்தனைக்கும் சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரே கட்சிக்குள் ஒன்றாக இருந்தவர்கள்.

இதுதான் மணிவண்ணன் கட்சிக்குள் இருந்து பிரிந்த போதும் நடந்தது. அங்கேயும் முன்னாள் தோழர்கள் பின்னாள் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டார்கள். கட்சி ரகசியங்கள் வெளியரங்கிற்கு வந்து நாறின. முன்னணிக்கும் மணிவண்ணனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை போலவே இப்பொழுது சிறீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான மோதலானது முகநூலில் மற்றொரு அசிங்கமான மோதல் களத்தைத் திறந்து விட்டிருக்கிறது.

இப்படிப்பட்டதோர் அரசியற் சூழலில், சிதறிக்கொண்டு போகும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இறந்தவர்களுக்கும் தியாகிகளுக்கும் செய்யும் ஆகக்கூடிய மரியாதை எதுவென்று சொன்னால் ஒரு தேசமாக திரண்டு காட்டுவதுதான். செய்வார்களா?