மன்னார் மாவட்டத்தில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று திங்கட்கிழமை (19) மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து நிதி உதவி வழங்கி வைத்தார்.

நோர்வே நாட்டில் உள்ள நடேசு அறக்கட்டளை ஊடாக 10 மாணவர்களுக்கும்,ஜேர்மனியைச் சேர்ந்த நாகரெட்ணம் ஜெயதீபன் மற்றும் புலேந்திரன் ஆகியோர் 10 மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.
-மாணவர் ஒருவருக்கு இன்றைய தினம் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.குறித்த மாணவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் 2 வருடங்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறுமை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு தடையாக அமையக்கூடாது என்ற நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து குறித்த உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.