பாராளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. உரை
சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தல்
கொழும்பு, செப். 9, 2026:
பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து நீக்கப்படுவது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிநாடுகளால் பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள ஒருவர் பாதுகாப்புப் படைகளின் உயர்பதவியில் இருப்பது பொருத்தமானதல்ல எனக் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கைகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், செம்மணி உள்ளிட்ட புதைகுழிகள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதியும் நியாயமும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“உள்ளக விசாரணையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச அனுசரணையுடன் இடம்பெற வேண்டும்” என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. வலியுறுத்தினார்.
மேலும், கடந்த காலங்களில் நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்றளவும் சிறைகளில் உள்ள இளைஞர்கள் தொடர்பில் அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் எவராக இருந்தாலும், அவர்களின் அரசியல் அல்லது சமூக பின்னணியைப் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபர்களாகக் குறிப்பிடப்படுபவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட கருத்துகளையும் சுட்டிக்காட்டினார்.
“தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது எங்களுடைய ஆதரவு நிச்சயமாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் தொடர்பில் அறிக்கைகளை வெளியிடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. வலியுறுத்தினார். ஐ.நா. மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏறாவூர் உப தவிசாளர் தாக்கப்பட்ட சம்பவம்
தொடர்ந்து, ஏறாவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் ஞானசுந்தரம் கஜேந்திரன் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் அவர் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
ஐ.நூதீன் என அழைக்கப்படும் அதிகாரி தொடர்பில் விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் கோரிக்கை விடுத்தார்.
கள்ளிக்குளம் காணி விவகாரம்
மேலும், கள்ளிக்குளம் பகுதியில் வன இலாகா திணைக்களத்தினர் காணி எல்லைக் கற்களை நாட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கள்ளிக்குளம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, அப்பகுதியில் வன இலாகா திணைக்களத்தினர் காணி எல்லைக் கற்களை நாட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டிருந்த போதிலும், அந்தத் தீர்மானத்தை மீறி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
“அபிவிருத்திக் குழு எடுக்கின்ற தீர்மானங்களை அரச திணைக்களங்கள் ஏன் கடைப்பிடிக்க மறுக்கின்றன?” எனக் கேள்வி எழுப்பிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சில அரச திணைக்களங்கள் தனியான அரசாங்கம் போன்று செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அரசாங்கம் மற்றும் அபிவிருத்திக் குழுக்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு அரச அதிகாரிகள் உரிய முறையில் செவிசாய்க்க வேண்டும் என்றும், மக்களின் காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தடையாக இருக்கும் திணைக்கள நடவடிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
“ஜனாதிபதி கூறினாலும், வேறு யார் கூறினாலும் நாங்கள் இதனை கவனத்தில் கொள்ளமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் திணைக்களங்கள் செயற்படக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்