வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை இருவருக்குமான சிலை நிறுவுவதற்கு நாளை வரை(05) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
கடந்த 25/07/2026 அன்று தியாகிகள் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது 43 வது தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவு நாளில் அவரது சகோதரனால் அவரது சொந்த காணியில் சிலை வைப்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இன்றுவரை சிலை வைக்க தடை
இந்தநிலையில் கடந்த 22/07/2026 அன்று முன்னாள் வல்வெட்டிதுறை நகரசபை உப தவிசாளர் சதீஸ் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்த நிலையில் இன்றுவரை குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைக்க தடை விதிக்கப்பட்டிருந்தது
நீதிமன்றின் உத்தரவு
இன்றையதினம் வழக்கு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந் நிலையில் அரச சட்டத் தரணியால் புலனாய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு காலம் கோரப்பட்ட நிலையில் நாளைய தினம் வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் சிலை நிறுவுவதற்கும் நாளை வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட்ட ஐந்து சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்றில் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்ட கந்தசாமி சதீஸ் சார்பில் மன்றில் முன்னிலை ஆகியிருந்தனர்.
இதேவேளை சதீஸ் அவர்களுடன் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் ஞானேந்திரன், சமூக ஆர்வலர் S.கஜந்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பொறுப்பாளர் ஈசன்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் க.கணேசகுமாரன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்