குட்டிமணி தங்கத்துரை சிலை அமைப்பு விவகாரம்: ஏற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவு 5 மணிநேரம் விசாரணை

வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலை நிறுவுதல் ஏற்பாட்டாளரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான கந்தசாமி சதீசிடம் 06-08-2026 கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினர் 5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

நேற்றைய தினம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையம் ஊடக கிளிநொச்சி விசேட குற்ற பிரிவு அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான விசாரணை பிற்பகல் 3 மணி வரை இடம்பெற்றுள்ளது.

அழைப்பாணை

இதேவேளை குறித்த கந்தசாமி சதீஷ் அவர்கள் குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலைகளை கிளிநொச்சியில் உள்ள சிற்ப ஆச்சாரி ஒருவர் மூலம் செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலைகளை 14 நாட்கள் கிளிநொச்சி சிற்பக்கூடத்திலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் ஊடான தடை உத்தரவை வழங்கியுள்ளதுடன் நாளைய தினம் கந்தசாமி சதீஸ் அவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

வல்வெட்டித்துறை முன்னாள் உப தவிசாளரும், குட்டிமணி தங்கதுரை ஆகியோரது சிலை நிறுவுவதற்கான ஏற்பாட்டாளராக சொல்லப்படுகின்ற கந்தசாமி சதீஸ் கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இவர் 6.8.2026 காலை முதல் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

விசாரணை

எந்த விதமான போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் நேற்றைய தினம்(5.8) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் வல்வெட்டித்துறை பொலிஸ் ஊடக கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக இன்று அழைப்பதற்கான அழைப்பு ஆணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.