அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு!

யாழ்ப்பாணம், அராலி பகுதி கடலில் கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் ஏனைய பகுதிகளில் அட்டைப் பண்ணைகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் கடற்றொழிலினையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம். தற்கால பொருளாதார நெருக்கடியால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இவ்வாறு நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பது என்பது “பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பது” போலாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கே வருகை தந்த சிலர் எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள்.

எமது கடலில் இவ்வாறு அட்டைப் பண்ணை அமைக்கும் முயற்சியினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன் இவ்வாறான செயற்பாட்டிற்கு இடமளிக்கவும் மாட்டோம்.

எங்களது கடல் சிறிய கடல். இந்தக் கடலில் பருவகாலத்திற்கு தான் நாங்கள் சிறப்பான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். மற்றைய வேளைகளில் சாதாரண அளவிலேயே எமது மீன்பிடி நடவடிக்கைகள் அமைகின்றன.

இது இவ்வாறு இருக்கையில் அட்டைப் பண்ணைகள் இங்கே அமைத்தால் கடலில் உள்ள வளங்கள் அழியும் சந்தர்ப்பம் உள்ளது.

இறால், நண்டு, மீன் இனங்கள் போன்றன கடற்கரையோரங்களில் தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்நிலையில் கரையோரங்களில் அட்டைப் பண்ணைகளை நிறுவுவதால் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். கடல்வாழ் உயிரினங்கள் நீரோட்டத்தில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் அழிந்தால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தயவுசெய்து எங்களது வயிற்றில் அடிக்காதீர்கள். மீனவர்களை வாழ விடுங்கள்.

தம்பாட்டி, பூநகரி போன்ற கடல்கள் உட்பட பல கடற்பகுதிகளில் அட்டைப் பண்ணைகள் அமைத்ததனால் அப்பகுதி மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் பல நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களது குரல்களுக்கு செவிசாய்ப்பவர்கள் யாருமில்லை. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலையை எண்ணி வருந்துகின்றோம். அவர்களுக்கு எங்களது ஆதரவுகளை தெரிவிக்கின்றோம்.

எரிபொருள் பிரச்சினை எமக்கு பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான அட்டைப் பண்ணைகள் எமக்கு புதிய ஒரு தலையிடியாக மாறியுள்ளது. எனவே உரிய தரப்பினர் மீனவர்களது நிலையை கருத்தில் கொண்டு மிக விரைவில் இதற்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என்றனர்.