அவுஸ்திரேலியாவில் ஈழதமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு அதியுயர் விருது

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான சங்கரி சந்திரன் என்பவர் அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) விருதை வென்றுள்ளார்.

‘சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ்’ (‘Chai Time at Cinnamon Gardens’) என்ற நாவலுக்காகவே அவருக்கு இவ் விருதானது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பிப்பதற்காக 80களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்படும் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் எடுத்துக்காட்டுவதோடு, போர், இனப்படுகொலை, இனவெறி, குடும்பம், காதல் மற்றும் நட்பு போன்ற கருப்பொருள்களை இந்த நாவல் ஆராய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் “அவுஸ்திரேலிய எழுத்தாளர்களிடையே அங்கீகாரம் பெறுவது அசாதாரணமானது. ‘மைல்ஸ் பிராங்க்ளின் இலக்கிய விருதை வென்றது மிகவும் பெருமையாக இருக்கிறது” என சங்கரி குறிப்பிட்டுள்ளார்.

வைத்திய தம்பதிகளான சங்கரியின் பெற்றோர் 80களில் உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்று பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.