இந்தியப் பெருங்கடலின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக இலங்கை உள்ளது – அலி சப்ரி

இந்தியப் பெருங்கடலின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக இலங்கை  உள்ளதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடல் எல்லையிலுள்ள நாடுகள் அமைப்பின் மாநாடு பங்களாதேஷில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களை பரஸ்பரம் முன்னேற்றுவதற்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இந்து சமுத்திர எல்லையிலுள்ள நாடுகளுடன் தீவிரமாக ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்து சமுத்திரப் பிராந்தியம் தொடர்பான விடயங்களில் இலங்கையின் அர்ப்பணிப்பு இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அடித்தளங்களில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றின் மையத்தில் இலங்கை மூலோபாய ரீதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தியப் பெருங்கடல் எல்லையிலுள்ள நாடுகளுடனான இலங்கையின் பாரம்பரிய மற்றும் புராதன தொடர்புகள் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கையின் புவியியல் மையமானது குறிப்பிடத்தக்க வகையில் எளிதாக்கப்பட்டதுடன், பல நூற்றாண்டுகளாக கடல் வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கு உதவியது என்பதை அனுபவ ஆதாரங்கள் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடல் வளங்களை நிலையான மற்றும் திறமையான முறையில் பயன்படுத்துவதில் இலங்கையின் முயற்சிகள் மற்றும் கடல் மாசுபாடு சவால்கள் மற்றும் கரையோரப் பகுதியையும் இந்தியப் பெருங்கடலையும் பாதுகாப்பதற்காக செயற்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் இதன்போது உறுப்பு நாடுகளுக்கு விளக்கினார்.