இந்திய ரூபாயை இலங்கையின் பயன்படுத்த அனுமதிக்க கூடாது – விமல் வீரவன்ச

நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைக்கு காரணமான தரப்பினரால், அதனை மீட்டெடுக்க ஒருபோதும் முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த நல்லாட்சி காலத்தில்தான் மத்திய வங்கி பிணை முறி மோசடி மேற்கொள்ளப்பட்டது.

இவர்தான் நாட்டின் பிரச்சினையை ஏற்படுத்திய பிரதான நபர். நாட்டில் இவரால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரப் பிரச்சினையானது, கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் தீவிரமடைந்தது.

இதனை நாம் சுட்டிக்காட்டியபோதுதான், அரசாங்கத்திலிருந்து நாம் அன்று ஒதுக்கப்பட்டோம்.
இந்த நிலையில், நாட்டின் இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி தங்கள் நாட்டு ரூபாயை இலங்கையில் பயன்பாட்டுக்கு விடுவதற்காக இந்தியா தற்போது முயற்சித்து வருகிறது.

இப்போதும் யாழில் சில கடைகளில் இந்தியா ரூபாய்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ரூபாயை இங்கே பயன்படுத்தினால், அந்நாட்டின் சுங்கத்தையும் எமது நாட்டின் சுங்கத்தையும் ஒன்றாக இணைந்து விடுவார்கள்.

அப்படியானால், இந்திய பொருட்கள் எதற்கும் சுங்கவரி அறவிடப்பட மாட்டாது. இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பாரிய நன்மையாக அமைந்துவிடும்.

இதற்கு தான் விக்கிரமசிங்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. நாட்டில் பிரச்சினையொன்றை ஏற்படுத்திய இந்தத் தரப்பினரால் ஒருபோதும் அந்தப் பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.