இலகு ரயில் திட்டத்தை மீண்டும் இலங்கைக்கு வழங்க ஜப்பான் விருப்பம்

ஜப்பானிய அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் நிர்மாணிக்க தயாராக உள்ள நிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை எட்டியவுடன் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் என ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடெனகி ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தனவிடம் குறிப்பிட்டுள்ளார்.

ருவான் விஜயவர்தனவுக்கும் ஜப்பானிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில் இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் மீண்டும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் பின்னர் ஜப்பானிய அரசாங்கம் பல முதலீட்டுத் திட்டங்களின் மூலம் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் ருவான் விஜயவர்தன ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஜப்பான் விஜயத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும், அங்கு ஜப்பானிய அரசாங்கமும் இத்திட்டத்தை மீள ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

இலகு ரக ரயில் திட்டம் இடைநிறுத்தப்பட்டதால் 597.8 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.