பிரதமரை சந்தித்தார் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர்

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனாகா அகிஹிட்டோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு புதன்கிழமை (14) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ஜனாதிபதியை சந்தித்த ஜப்பானிய நிதியமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நிதியமைச்சர் சுசூகி (H.E. Mr. SUZUKI Shunichi) உள்ளிட்ட ஜப்பான் தூதுக் குழுவினர் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பானிய பிரதமர் அடுத்தவாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடில்லியில் நடைபெற்ற ஜி. 20வது அரச தலைவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் முக்கிய அபிவிருத்தி உதவி பங்காளிகளில் ஒருவரான ஜப்பானிய தலைவர், ஜனாதிபதி தலைமையிலான அரச அதிகாரிகளுடன் நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாட வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

கிளிநொச்சி மாணவி காலை உணவு உண்ணாமையால் ஜப்பானிய தூதுவர் முன் மயங்கி விழுந்தார்

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இலக்கம் 02 ஆ.தா.க பாடசலைக்கு ஜப்பானிய மக்களின் நன்கொடையாக வழங்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடத்தை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு வருகை தந்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுசி கிடாக்கியை வரவேற்கும் நிகழ்விற்காக காலை உணவு உட்கொள்ளாது வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்த பாண்ட் அணி மாணவி தூதுவருக்கு முன்னால் மயங்கி வீழ்ந்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடும் வெயில் மற்றும் காலை உணவு உட்கொள்ளாத நிலையில் பாண்ட் இசையுடன் ஜப்பானிய தூதுவரை அழைத்துவருகின்ற போதே மாணவி மயங்கி வீழ்ந்துள்ளார்.

மயங்கி வீழ்ந்த மாணவியை உடனடியாக ஆசிரியர்கள் குறித்த இடத்திலிருந்து தூக்கிச் சென்றுவிட்டனர்.

ஜப்பானின் இலகு ரயில் திட்டத்தை மீள செயற்படுத்த அமைச்சரவை அனுமதி

ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான உடன்படிக்கையை எட்டுவதற்கு பொருத்தமான காலக்கெடுவைத் தயாரிப்பதற்காக கொழும்பில் உள்ள ஜப்பானிய இராஜதந்திர தூதரகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்தார்.

இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமைக்கு ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி கவலை தெரிவிப்பு

கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமை தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமர் Fumio Kishida-வை டோக்கியோ நகரில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

வௌிநாடு அல்லது வேறு ஒரு தரப்பினரது தலையீட்டுடன் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய செயற்றிட்டங்களை இரண்டு தரப்பினரதும் இணக்கப்பாடுகள் இல்லாமல் நிறுத்துவதற்கு அல்லது இரத்து செய்வதற்கு முடியாதவாறு எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக சட்டங்களை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

அனைத்து பாரிய செயற்றிட்டங்கள் தொடர்பிலான யோசனைகள், அந்த செயற்றிட்டங்களின் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியதை கட்டாயமாக்குவதாகவும் ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுவதற்காக ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக ஜப்பான் பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார்.

இதனிடையே, ஜப்பானின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான அமைச்சர் Taro Kono-வை ஜனாதிபதி இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இலங்கையை நகர்த்துவதற்கான திட்டம் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக பேரவையினரையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக பேரவையின் 20 ஆவது ஆண்டு வருடப் பூர்த்தியை முன்னிட்டு இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது, இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீடுகளை ஆரம்பிப்பதற்காக தொழில் முயற்சியாளர்களின் பூகோள இயக்கமொன்றை உருவாக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆசியா எதிர்கொள்ளும் மூன்று சவால்கள் – ஜப்பான் உரையில் ஜனாதிபதி ரணில்

ஜனநாயகவிழுமியங்களும் மனித உரிமைகளும் காலநிலை மாற்றமும் வர்த்தக ஒருங்கிணைப்பும் ஆசியா எதிர்கொள்ளும் சவால்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் இடம்பெற்ற ஆசியாவின்  எதிர்காலம் என்ற நிக்கேய் போராத்தின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ஆசியா எதிர்கொள்ளும் இந்த மூன்று சவால்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகவிழுமியங்களும் மனித உரிமைகளும் காலநிலை மாற்றமும் வர்த்தக ஒருங்கிணைப்பும் ஆசியா எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

ஆசியா முழுவதிலும் உள்ள பல்வேறுபட்ட அரசியல் அமைப்புகள் மற்றும் மனித உரிமைகளின் வரையறைகளுக்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற வகையில் ஆசியாவின் முக்கியத்துவம் உலக சனத்தொகையில் 60வீதமான மக்கள் வாழ்வது  உலக பொருளாதாரத்திற்கு ஆசியாவின் மிகப்பெரிய பங்களிப்பு குறித்தும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவின் மீட்சி இந்தியாவின் உள்நாட்டு கேள்வி போன்றவற்றையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஆசியா உலகளாவிய பொருளாதார சக்தியாகவும் மிகவும் ஆற்றல் மிக்க பிராந்தியமாகவும் மாறியுள்ளது என்றும், அதன் பொருளாதாரம் ஏற்கனவே ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

ஆசிய நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம் குறித்து ‘நிக்கேய்’ மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது ஆசிய நாடுகளின் வெப்பநிலை உயர்வு, கடுமையான  வானிலை நிலைமைகள் மற்றும் கடல் மட்ட உயர்வு , ஆசிய நாடுகளின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை பாதிக்கும் என வலியுறுத்தினார்.

இலகு ரயில் வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை – ஜப்பான் தூதுவர்

கொழும்பு – மாலபே இடையிலான இலகு ரயில் சேவைத்திட்டத்தினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி தெரிவித்துள்ளார்.

இலங்கை மோட்டார் வர்த்தக சங்கத்தினால் நேற்று புதன்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலகு ரயில் புகையிரத திட்டம் தொடர்பில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது மற்றும் ஜப்பான் வர்த்தக சமூகத்தின் நம்பிக்கையை இலங்கையால் மீண்டும் பெற முடியுமா என்பதை பொறுத்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தினால் 2.2 பில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் கொழும்பு, கோட்டையிலிருந்து மாலம்பே வரையான இலகு ரயில் சேவைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு ஜப்பான் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை 2020ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக இரத்து செய்தது.

ஜைக்கா நிறுவனத்தினால் 12 ஆண்டுகள் சலுகை காலம் உள்ளடங்கலாக, 40 ஆண்டுகளுக்கு 0.1 சதவீத வட்டியுடன் கடனை மீள செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், இதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய எவ்வித காரணமும் இன்றி, இலங்கை அரசாங்கம் இரத்து செய்துள்ளது. 2020 செப்டெம்பர் 24ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கமையவே இத்திட்டம் இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், இந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜப்பான் இணங்கியுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், ஜப்பான் தூதுவர் அதற்கு மாறுபட்ட கருத்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களுக்காக ஜப்பான் 1.8 மில்லியன் நன்கொடை

இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறுவர்களுக்கு உதவுவதற்காக யுனிசெப் நிறுவனத்திடம் ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதனூடாக 6 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானிய திட்டங்களின் மூலம் இலங்கைக்கு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் வாய்ப்பு

இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தயாராக இருக்க, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அங்கீகாரம் போதுமானதாக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் தொகையைப் பெறுவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சீர்திருத்தம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் காரணமாக இலங்கைக்கு கூடுதலாக 220 பில்லியன் யென் (1.6 பில்லியன் அமெரிக்க டொலர்) நிதி திறக்கப்படும் என்று Bloomberg இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இடைநிறுத்தப்பட்ட ஜப்பானிய திட்டங்களை மீண்டும் தொடங்குவதன் மூலம் இந்த 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்கு திறக்கப்படும் என Bloomberg இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கைக்கு வழங்கிய அங்கீகாரம் எதிர்கால செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானது என ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.