கச்சதீவை மீட்டெடுப்பதே முதன்மையான செயல்திட்டம் – தமிழக அரசு

கச்சத்தீவை மீட்பதே தமது முதன்மையான நிகழ்ச்சி நிரல் என தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கச்சத்தீவை மீட்பதும், பாரம்பரிய கடற்றொழிலை மீட்டெடுப்பதும் தமிழக அரசின் முதன்மையான செயல்திட்டமாக இருக்கும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை கடக்கிறார்கள் என்று காரணத்தைக் காட்டி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளை இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தடுத்து வைத்துள்ளது. இது தமிழக கடற்றொழிலாளர் சமூகத்தினரிடையே கவலை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்பப் பெறுவதும், பாக்கு நீரினை பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுப்பதும் தமிழக அரசின் முதன்மையான செயல்திட்டத்தில் உள்ளது என அவர் கூறியுள்ளார்.