கடன் மறுசீரமைப்புக்கான அடுத்தகட்ட சமிக்ஞை எதனையும் இதுவரையில் சீனா வெளியிடவில்லை

இந்தியா, ஜப்பான் மற்றும் இறையாண்மைக் கடனாளர்களின் பாரிஸ் கிளப் ஆகியவற்றின் நிதித் தலைவர்கள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் கலந்துரையாடலுக்காக கூட்டு மாநாட்டை நடத்தியுள்ளனர்.

இந்த மாநாட்டின் ஊடாக இலங்கையின் கடன் பிரச்சினைகளை எவ்வாறு சிறந்த முறையில் கையாள்வது என்பது தொடர்பில் சீனாவிற்கும் ஏனைய கடன் வழங்குநர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

அத்துடன், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கையின் கடன் பேச்சுக்களில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இதில் சீனா பங்கேற்றிருக்கவில்லை.

‘இலங்கை இன்னும் ஆழமான கடன் நெருக்கடியில் உள்ளது.அதன் நெருக்கடியில் இருந்து இலங்கை விரைவாக வெளிவருவதற்கு விரைவான கடன் மறுசீரமைப்பு விரைவாக தேவைப்படுகிறது’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி நிர்வாக இயக்குனர் கென்ஜி ஒகாமுரா கூறினார்.

‘அனைத்து உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களும் பங்கேற்கும் பேச்சுவார்த்தைகள் விரைவாக முன்னேற்றம் காணும் என்று நாங்கள் நம்புகிறோம்.’ என்றும் அவர் தமது எதிர்பார்ப்பினை வெளியிட்டார்.

சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் முதல் இலங்கைக்கு கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல் கொடுப்பனவுக்கான மதிப்பாய்வின் மூலம் இரண்டாவது தவணைக்கு முன்னதாக கடன் மறுசீரமைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஒகாமுரா மேலும் கூறினார்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்குவதற்கான பரந்த வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் நடத்தப்பட்ட வட்டமேசைக் கலந்துரையாடலின்போது சீனாவும் முக்கிய கோரிக்கைகளில் சிலவற்றை மென்மையாக்க ஒப்புக்கொண்ட பின்னரே இந்த மாநாடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறுசீரமைப்பு விவாதங்களில் சீனா பங்கேற்க விரும்புவதாக இலங்கையின் முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சீனா எந்தவொரு இடத்தலும் பகிரங்கமான கலந்துரையாடலுக்கு தயாரான கருத்தினை வெளியிடவில்லை.

கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மெதுவான முன்னேற்றம் காரணமாக அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை மற்றும் சாம்பியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகளில் சீனாவின் வகிபாகம் பற்றிய கவலைகள் பொதுவாக நீடித்துக்கொண்டே இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் இலங்கை சீனாவுடன் ஒரு தனியான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்களை முன்னெடுப்பது பொருத்தமான நகர்வதாக அமையாது என்றும் இந்தச் செயற்பாடு ஏனைய கடன்வழங்குநர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார்.

‘வொஷிங்டனில் நடந்த சந்திப்புகளில், இலங்கையின் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தாங்கள் இன்னும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்’ என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் பதிவுகள் மூலம் தெரிவித்ததது.

ஆனாலும், அதற்காக அடுத்தகட்ட நகர்வுகளை சீனா எவ்விதாக முன்னெடுக்கப்போகின்றது என்பது சம்பந்தமாக எந்தவொரு சமிக்ஞையையும் சீனா வெளியிடவில்லை.

இவ்வாறான பின்னணியில் இலங்கைக்கு அண்மையில் சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் வென்க் யூபோ, பிறீமியர் சூகோ போன்ற உயர்மட்டக்குழுவினர்கள் சொற்ப இடைவெளியில் விஜயம் செய்துள்ளனர்.

ஆனால், குறித்த விஜயங்களின்போது ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அதேபோன்று இலங்கையின் கரையோர மாவட்டங்களில் உள்ள வறுமைக்கு உட்பட்வர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

ஆனால், குறித்த குழுவினர்கள் கடன் மறுசீரமைப்பு குறித்து எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. மாறாக, பொதுப்படையில், இலங்கையின் மேம்பாட்டிற்கு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலைமையானது, சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை தற்போது வரையில் அறிந்து கொள்ள முடியாத சூழலையே ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில், அதன் மொத்த வெளிநாட்டுக்கடனில் 12சதவீதத்தினை சீனாவுக்கே செலுத்த வேண்டிய நிலைமையில் உள்ளது.

குறிப்பாக, சீனாவிடமிருந்து கடன்களைப் பெற்று நிறுவப்பட்ட மத்தல விமான நிலையம், தாமரைக்கோபுரம் போன்றன எவ்விதமான வருமானங்களையும் பெற்றுக்கொடுக்காத நிலையில் வெள்ளையானைகளாக உருவெடுத்துள்ளன.

இவ்வாறான நிலையில் சீனாவின் கடனை மீளச் செலுத்துவதற்கு இலங்கைக்கு தற்போதைய நெருக்கடியான நிலையில் வழிகளில் எதுவும் இல்லாத சூழலே நீடிக்கின்றது.