2026 வரை இலங்கையின் வறுமை விகிதம் அதிகரித்த மட்ட்த்தில் காணப்படும் – உலக வங்கி

2026 ஆம் ஆண்டு வரை இலங்கையில் வறுமை விகிதம் இருபத்தி இரண்டு சதவீதத்தை விட உயர் மட்டத்திலிருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

உலக வங்கியின் அறிக்கைகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 வீத மிதமான வளர்ச்சியைக் கணித்துள்ளது.

எவ்வாறாயினும், 2022 இல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டினாலும், நாடு இன்னும் அதிகளவிலான வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை எதிர்கொள்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் 25.9 வீதமான மக்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 வரை நாட்டின் வறுமை விகிதம் 22 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்குமென்று உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான பாதையில் சென்றாலும், வலுவான மற்றும் நம்பகமான கட்டமைப்பு சீர்திருத்தங்களின் தொடர்ச்சியுடன் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை, ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான தாக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் மிகவும் முக்கியமானவை என உலக வங்கியின் பணிப்பாளர் எச்.பரிஸ் குறிப்பிடுகிறார்.