மாகாணசபைமுறையால் இனப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வை பெற்றுதர முடியாது – அனுரகுமார

பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த தமிழ் மக்களின் அதிகாரத்திற்கான நியாயமான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்

சண்டே டைம்சிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளர்ர்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுத்து தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

மாகாணசபைமுறையால் இனப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வை பெற்றுதர முடியாது ஆனால் அது தங்களின் உரிமை என தமிழ் மக்கள் கருதுகின்றர் மாகாணசபைமுறை தொடரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கேள்வி-

அரசமைப்பின் 13வது திருத்தம் குறித்து தேசிய மக்கள் சக்தியி;டமிருந்து எந்த கருத்தும் பதிலும் இல்லையே உங்களால் அதனை தெளிவுபடுத்த முடியுமா?

பதி;ல்- நாங்கள் பல தடவை 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைகள் குறித்த எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றோம்.

2019ம் ஆண்டு வெளியான எங்களின் கொள்கை குறித்த ஆவணத்திலும் இது குறித்து தெரிவித்திருக்கின்றோம்.

எனினும் நான் மீண்டும் உங்களிற்கு இதனை தெளிவுபடுத்துகின்றேன்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு மாகாணசபைமுறையே முழுமையான தீர்வு என நாங்கள் கருதவில்லை எனினும் மாகாணசபைகள் கடந்த மூன்று தசாப்தங்களிற்காக மேல் நாட்டில் காணப்பட்டுள்ளன எங்கள் கட்சியும் மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவது குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வடக்குகிழக்கு மக்கள் மாகாணசபைகளை தங்களின் உரிமைகளில் ஒன்று என கருதுகின்றனர்.

பல வருடங்கள் வேண்டுகோள் விடுத்த பின்னர் தங்களிற்கு கிடைத்த வெற்றி மாகாணசபைகள் என வடக்குகிழக்கு மக்கள் கருதுகின்றனர்.

மாகாணசபை முறையை தொடரவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம்.

கேள்வி- தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தேசிய மக்கள் சக்தி எவ்வாறு அணுகும்?

பதில்-

மாகாணசபைமுறை மாத்திரம் இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு போதுமானதல்ல என்பதை நான் ஏற்கனவே உங்களிற்கு தெரிவித்துள்ளேன்.

இலங்கையில் பல வருடங்களாக அரசியல் என்பது ஒரு சமூகத்தை மற்றைய சமூகத்துடன் மோத விடுவதாக காணப்படுகின்றது.

உதாரணத்திற்கு 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி என்பது முழுமையாக முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான கோசத்தினை அடிப்படையாக கொண்டிருந்தது.

எங்கள் நாட்டின் வரலாறு முழுவதும் அரசியல் வெற்றிக்காக சமூகத்தின் ஒரு பகுதியினரை மற்றைய தரப்பிற்கு எதிராக திருப்பிவிடும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

அரசியல்கட்சிகள் அவை எந்த சமூகத்தை சேர்ந்தவையாகயிருந்தாலும் சரி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சில சந்தர்ப்பங்களில் மக்கள் மத்தியில் பதற்றத்தை தூண்டியுள்ளன.

எங்கள் அரசியல் முற்றுமுழுதாக இதிலிருந்து வேறுபட்டது.

மிகவும் நெருக்கடியான தருணத்தில் நாங்கள் தேசிய ஐக்கியம் இன ஐக்கியம் ஆகியவற்றிற்காக குரல்கொடுத்திருக்கின்றோம்.

ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான முதல் நடவடிக்கையாக சமூகங்களை பிரிப்பதற்கு பதில் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கும் அரசியல் முறையை உருவாக்கவேண்டும்.

நாங்கள் அதனை செய்கின்றோம்.

கேள்வி- இதன் மூலம் பிரச்சினைகளிற்கு எவ்வாறு தீர்வை காணமுடியும்?

பதில்- தமிழர்களாக உள்ளதால் தமிழ் மக்கள் சில இனத்துவ நெருக்கடிகளை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்பது எங்களிற்கு தெரியும்.

அது மொழி கலாச்சாரம் மத சுதந்திரம் அரசியல் அதிகாரத்திற்கான போதியளவு சமவாய்ப்பின்மை போன்றவையை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன.

இவற்றிற்கு தீர்வை காணவேண்டும்.

அரசமைப்பில் சில ஏற்பாடுகள் உள்ளபோதிலும் அவற்றை பின்பற்றவில்லை நடைமுறைப்படுத்தவில்லை.

பிரிவினைவாத யுத்தம் முடிவடைந்து 15வருடங்களாகின்றது ஆனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கு நேர்மையான தீர்வுகள் எவற்றையும் முன்வைக்கவில்லை.

நாங்கள் இரண்டு விதமான அணுகுமுறைகளை நம்புகின்றோம்.

முதலாவது அரசியல் விவகாரம் -பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த தமிழ் மக்களின் அதிகாரத்திற்கான நியாயமான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம்.

இரண்டாவதாக இலங்கையின் ஏனைய சமூகத்தினரை போல தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் உள்ளன இந்த பிரச்சினைகளிற்கு தீர்வுகள் காணப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

இல்லையேல் ஒருவரை ஒருவர் தூண்டிவிடுகின்ற பிரிவினைவாத அரசியல் கலாச்சாரத்தினால் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது.

எனவே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுத்து தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் நம்புகின்றோம்.

கேள்வி – நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கபடவேண்டும் – இது குறித்து நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம்.

நிறைவேற்று அதிகார முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே அது பொருத்தமற்றது என நாங்கள் கருதிவந்துள்ளோம்.

46 வருடங்களிற்கு பின்னரும் இது இலங்கைக்கு பொருத்தமற்றது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

ஆகவே இதனை நீக்கவேண்டும்.

கேள்வி- தமிழ் முஸ்லீம் சமூகத்தினர் தொடர்பான உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்- ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக செயற்படும் அரசாங்கம் எங்களிற்கு தேவையில்லை அனைத்து சமூகத்தினரையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கமே எங்களிற்கு தேவை.

நாங்கள் வடக்கை சேர்ந்த அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம், மலையகம் மற்றும் முஸ்லீம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் நாங்கள் சிங்களவர்களிற்கான அரசாங்கத்தை மாத்திரம் உருவாக்கவேண்டியதில்லை.

வடக்கு மக்கள் அது சிங்கள அரசாங்கம் என கருதும் ஒன்று தேவையில்லை.

நாட்டின் அனைத்து மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் அரசாங்கமே எங்களிற்கு தேவை.

அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்களின் பரந்துபட்ட ஆதரவு அவசியம் .அவர்கள் அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யவேண்டும்.a