கடற்றொழில் அமைச்சர் பினாமிகளை வைத்து அட்டை பண்ணைகளை அமைக்கிறார் என குற்றச்சாட்டு

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களிடம் சலுகையைப் பெற்றும், பினாமிகளை வைத்து அட்டை பண்ணைகளை அமைத்தும் வருவதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (13) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய நாட்டிலே மீனவர்கள் பல கோணங்களிலும் பல இன்னல்கள் சந்தித்து கொண்டு வருகின்ற இந்த நேரத்திலே, மீண்டும் மீண்டும் அவர்களுக்கு செயற்கையான துன்பங்களையும் துயரங்களையும் கொடுத்துக் கொண்டுவரும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றது.

நாம் எமது கடற்தொழில் சம்பந்தமான விடயங்களையும் அதன் அபிவிருத்தி தொடர்பான விடயங்களையும் அரசிடம் இருந்து கேட்டுப் பெறுவதுமே வழக்கம். அந்த வகையிலே இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் சில விடயங்களை முன்வைத்த போதும் எந்தப் பலனும் கிட்டவில்லை.

இந்தியாவில் இருந்து வருகின்ற இழுவை மடி தொழிலாளர்கள் எங்களுக்கு செய்கின்ற அடாவடித்தனங்கள், அத்துமீறல்கள் என்பவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினால் அங்கே கடத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வந்து அந்தப் போராட்டத்தை நிறுத்தி அதனை முறியடிக்கின்றார்.

உள்ளூர் இழுவை மாடி தொழில் செய்யக்கூடாது என்ற சட்டம் அரச வர்த்தமானி அறிவித்தலில் இருந்த போதும் கூட, உள்ளூர் இழுவை மடித்தொழிலைச் செய்து நமது எஞ்சிய வளங்களையும், வாழ்வாதாரத்தையும் உள்ளூர் இழுவைமடி தொழிலாளர்கள் சீரழித்து வருகின்றார்கள். இதற்கு எதிராக போராட்டம் நடத்தினால் அங்கேயும் வந்து குறுக்கே விழுந்து அந்தப் போராட்டத்தை தடுப்பதும் இல்லாமல் அந்த இழுவை மடி தொழிலாளர்களுக்கு தானும் ஊக்கம் கொடுத்து ஏதோ சலுகையைப் பெற்று, அந்தத் தொழிலை மீண்டும் மீண்டும் சட்டத்திற்கு முரணாக செய்வித்துக் கொண்டு வருகின்றார் கடற்தொழில் அமைச்சர்.

அட்டைப் பண்ணைகளால் தமக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை நாங்கள் தெளிவுபடுத்தி பல முறைப்பாடுகளை செய்தாலும் அதனை முறியடித்து அட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி கொடுப்பது மட்டுமில்லாமல் அதில் தானும் பினாமிகளை வைத்து, தனக்கு சொந்தமான அட்டைப் பண்ணைகளையும் போட்டு அங்கே மீனவர்களுடைய வாழ்வாதாரத்தையும் சுரண்டிக் கொண்டு வருகின்றார்.

எங்களுடைய பிரச்சனைகளை சொல்லக் கூடிய ஒருவராக மீன்பிடி அமைச்சர் இருக்க வேண்டிய நிலையில், நாங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக, எங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் குழி தோண்டி புதைக்கின்ற, எங்களை அழிவு பாதையில் இட்டுச் செல்கின்ற ஒரு வழியை வகுக்கின்ற இக்கட்டானவராகவே எமது மீன்பிடி அமைச்சர் காணப்படுகின்றார்.

என்று டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றதிலிருந்து வடபகுதியிலே என்னென்ன அபிவிருத்தியை செய்திருக்கின்றார் என நாங்கள் கோடிட்டு பார்க்க வேண்டும். வடபுலத்தில் எங்கேயாவது ஒரு மீன்பிடித் துறைமுகம் வந்திருக்கின்றதா?,

அல்லது நங்கூரம் இடும் மையம் வந்திருக்கின்றதா?, அல்லது மீனவர்களுக்கு வசதியாக எரிபொருள் நிலையங்களை ஏற்பாடு செய்து கொடுக்கின்றாரா?, அல்லது அவர்களுக்கு குளிரூட்டி பெட்டிகள் ஏதாவது ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றாரா?, இது தவிர போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பல்லாயிரம் பேருள்ள நிலையில் இன்று வரை அவர்களுக்கான வாழ்வாதாரமாக ஏதாவது அரசிடமிருந்து தொழில் உபகரணங்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றாரா? எதுவுமேயில்லை.

இப்படியாக எங்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாக எங்கள் அபிவிருத்தியை வளர விடாமல் தடுக்கின்ற ஒருவராக தங்களது மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவாவனந்தா செயற்பட்டு கொண்டு வருகின்றார். அந்த வகையிலே அவரிடம் முறைப்பாடு செய்து எந்தவொரு செயல்பாடுகளையும் செய்ய முடியாது. ஆகையால் ஜனாதிபதியை சந்தித்து அவரிடம் சில முறைப்பாடுகளை செய்யலாம் என நினைத்திருக்கின்றோம் – என்றார்.