நாரா நிறுவனத்தினால் நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் இழப்பு

இலங்கையின் கடற்பிராந்தியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் (நாரா) ஒப்படைக்கப்பட்டிருப்பதன் காரணமாக சுமார் 32 ஆண்டுகளாக நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இப்பொறுப்பை திறம்பட முன்னெடுப்பதற்கு ஏற்றவாறு தேசிய நீர்வரைவியல் காரியாலயத்தை உருவாக்கும் நோக்கில் இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்குச் சொந்தமான கடற்பிராந்தியத்தை நிர்வகிப்பதுடன் தொடர்புடைய இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம்.

கடற்பிராந்தியத்தில் உயிர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச பிரகடனத்தை அடிப்படையாகக்கொண்டே சகல நாடுகளும் அவற்றின் கடற்பிராந்தியத்தை நிர்வகிக்கின்றன.

தமது கடற்பரப்பின் ஊடாகப் பயணிக்கும் கப்பல்களுக்கான கட்டணம் அறவிடல், கடற்பிராந்தியப் பாதுகாப்பின் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல், கடற்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் இப்பிரகடனத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையானது இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் கேந்திர நிலைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கின்றது. உலகின் ஏனைய அனைத்துப் பிராந்தியங்களுக்குமான நுழைவாயிலாகவும், பொருளாதார மற்றும் வாணிப ரீதியில் பெருமளவான நன்மைகளை ஈட்டித்தரக்கூடிய வகையிலும் இலங்கையின் அமைவிடம் உள்ளது.

இலங்கைக் கடற்பரப்பின் ஊடாக நாளாந்தம் சுமார் 200 – 300 வரையான கப்பல்களும், வருடாந்தம் சுமார் 35,000 கப்பல்களும் பயணிக்கின்றன. இவ்வாறு எமது கடற்பரப்பின் ஊடாகப் பயணிக்கும் கப்பல்களிடமிருந்து அதற்கேற்றவாறு கட்டணம் அறவிடப்படும்.

அதற்குரிய அதிகாரம் கடந்த 1981 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (நாரா) வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடற்பிராந்திய விவகாரங்களை உரியவாறு கையாள்வதற்கான நிபுணத்துவம் அக்கட்டமைப்புக்கு இல்லை. அதன் விளைவாக கடந்த 32 ஆண்டுகளாக (1981 தொடக்கம்) எமது நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி எமது கடற்பிராந்தியத்தை உரியவாறு நிர்வகிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் ஏற்ற பொருத்தமான கட்டமைப்பு இன்மையால், அதுபற்றிய தீர்மானங்கள் ஏனைய வெளிநாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இது நாட்டுக்கான வருமானத்தை இல்லாமல் செய்வதுடன் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது.

குறிப்பாக கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்த கப்பல்களின் எண்ணிக்கை கடந்த 2015 ஆம் ஆண்டு 4,197 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், அது 2022 இல் 3,648 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று 2015 ஆம் ஆண்டு திருகோணமலை துறைமுகம், காலி துறைமுகம், காங்கேசன்துறை மற்றும் காரைநகர் துறைமுகம் ஆகியவற்றுக்கு வருகைதந்த கப்பல்களின் எண்ணிக்கை முறையே 164, 72, 32 ஆகப் பதிவாகியுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டு அவை முறையே 95, 7 மற்றும் 0 ஆக வீழ்ச்சிகண்டுள்ளன.

இவையனைத்தையும் கருத்திற்கொண்டு எமது நாட்டுக்குரிய கடற்பிராந்தியத்தை முறையாக நிர்வகிக்கும் நோக்கிலேயே தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் எதிர்ப்பையும் மீறி இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தைத் தயாரித்து, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம். இச்சட்டமூலத்தின் ஊடாக தேசிய நீர்வரைவியல் காரியாலயம் என்ற புதிய கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கும் விதமாக சிரேஷ்ட நீர்வரைவியலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதற்குப் பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படுவார். அதன்மூலம் நாட்டின் கடற்பிராந்தியத்தை முறையாக நிர்வகிக்கவும், அதனூடாக வருமானமீட்டவும் முடியும் என்று தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் பினாமிகளை வைத்து அட்டை பண்ணைகளை அமைக்கிறார் என குற்றச்சாட்டு

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களிடம் சலுகையைப் பெற்றும், பினாமிகளை வைத்து அட்டை பண்ணைகளை அமைத்தும் வருவதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (13) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய நாட்டிலே மீனவர்கள் பல கோணங்களிலும் பல இன்னல்கள் சந்தித்து கொண்டு வருகின்ற இந்த நேரத்திலே, மீண்டும் மீண்டும் அவர்களுக்கு செயற்கையான துன்பங்களையும் துயரங்களையும் கொடுத்துக் கொண்டுவரும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றது.

நாம் எமது கடற்தொழில் சம்பந்தமான விடயங்களையும் அதன் அபிவிருத்தி தொடர்பான விடயங்களையும் அரசிடம் இருந்து கேட்டுப் பெறுவதுமே வழக்கம். அந்த வகையிலே இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் சில விடயங்களை முன்வைத்த போதும் எந்தப் பலனும் கிட்டவில்லை.

இந்தியாவில் இருந்து வருகின்ற இழுவை மடி தொழிலாளர்கள் எங்களுக்கு செய்கின்ற அடாவடித்தனங்கள், அத்துமீறல்கள் என்பவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினால் அங்கே கடத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வந்து அந்தப் போராட்டத்தை நிறுத்தி அதனை முறியடிக்கின்றார்.

உள்ளூர் இழுவை மாடி தொழில் செய்யக்கூடாது என்ற சட்டம் அரச வர்த்தமானி அறிவித்தலில் இருந்த போதும் கூட, உள்ளூர் இழுவை மடித்தொழிலைச் செய்து நமது எஞ்சிய வளங்களையும், வாழ்வாதாரத்தையும் உள்ளூர் இழுவைமடி தொழிலாளர்கள் சீரழித்து வருகின்றார்கள். இதற்கு எதிராக போராட்டம் நடத்தினால் அங்கேயும் வந்து குறுக்கே விழுந்து அந்தப் போராட்டத்தை தடுப்பதும் இல்லாமல் அந்த இழுவை மடி தொழிலாளர்களுக்கு தானும் ஊக்கம் கொடுத்து ஏதோ சலுகையைப் பெற்று, அந்தத் தொழிலை மீண்டும் மீண்டும் சட்டத்திற்கு முரணாக செய்வித்துக் கொண்டு வருகின்றார் கடற்தொழில் அமைச்சர்.

அட்டைப் பண்ணைகளால் தமக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை நாங்கள் தெளிவுபடுத்தி பல முறைப்பாடுகளை செய்தாலும் அதனை முறியடித்து அட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி கொடுப்பது மட்டுமில்லாமல் அதில் தானும் பினாமிகளை வைத்து, தனக்கு சொந்தமான அட்டைப் பண்ணைகளையும் போட்டு அங்கே மீனவர்களுடைய வாழ்வாதாரத்தையும் சுரண்டிக் கொண்டு வருகின்றார்.

எங்களுடைய பிரச்சனைகளை சொல்லக் கூடிய ஒருவராக மீன்பிடி அமைச்சர் இருக்க வேண்டிய நிலையில், நாங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக, எங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் குழி தோண்டி புதைக்கின்ற, எங்களை அழிவு பாதையில் இட்டுச் செல்கின்ற ஒரு வழியை வகுக்கின்ற இக்கட்டானவராகவே எமது மீன்பிடி அமைச்சர் காணப்படுகின்றார்.

என்று டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றதிலிருந்து வடபகுதியிலே என்னென்ன அபிவிருத்தியை செய்திருக்கின்றார் என நாங்கள் கோடிட்டு பார்க்க வேண்டும். வடபுலத்தில் எங்கேயாவது ஒரு மீன்பிடித் துறைமுகம் வந்திருக்கின்றதா?,

அல்லது நங்கூரம் இடும் மையம் வந்திருக்கின்றதா?, அல்லது மீனவர்களுக்கு வசதியாக எரிபொருள் நிலையங்களை ஏற்பாடு செய்து கொடுக்கின்றாரா?, அல்லது அவர்களுக்கு குளிரூட்டி பெட்டிகள் ஏதாவது ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றாரா?, இது தவிர போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பல்லாயிரம் பேருள்ள நிலையில் இன்று வரை அவர்களுக்கான வாழ்வாதாரமாக ஏதாவது அரசிடமிருந்து தொழில் உபகரணங்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றாரா? எதுவுமேயில்லை.

இப்படியாக எங்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாக எங்கள் அபிவிருத்தியை வளர விடாமல் தடுக்கின்ற ஒருவராக தங்களது மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவாவனந்தா செயற்பட்டு கொண்டு வருகின்றார். அந்த வகையிலே அவரிடம் முறைப்பாடு செய்து எந்தவொரு செயல்பாடுகளையும் செய்ய முடியாது. ஆகையால் ஜனாதிபதியை சந்தித்து அவரிடம் சில முறைப்பாடுகளை செய்யலாம் என நினைத்திருக்கின்றோம் – என்றார்.

Posted in Uncategorized

13ஐ முழுமையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் – கடற்தொழில் அமைச்சர்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் அரசியல் யாப்பில் உள்ளன. 13ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் ஊடாக அதனை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ள போதிலும் , தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரா பிரச்சினைகளாவே காணப்பட வேண்டும் என்று எண்ணும் சில தமிழ் தலைவர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தினால் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது , ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ,

கேள்வி : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸ் விஜயத்தின் போது அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அதிகார பரவலாக்கம் குறித்த கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு?

பதில் : ஒரு கால கட்டத்தில் இலங்கையில் பிரச்சினைகள் காணப்பட்டன. அந்த பிரச்சிகளுக்கு தீர்வு கோரி ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ் மக்கள் , அதன் ஊடாக தீர்வினைப் பெற முடியாது என ஆயுதப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதற்கமையவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவானது.

எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த ஒப்பந்தத்தின் ஊடாக வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் துரதிஷ்டவசமாக அன்றிருந்த பெரும்பாலான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஒரு முழுமையான யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அரசியல் யாப்பில் காணப்படுகிறது. 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும். எனினும் இதற்காக ஜனாதிபதி மாத்திரம் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் போதாது. தமிழ் மக்கள் தரப்பில் அவர்களின் பிரதிநிதிகள் உண்மையுடன் முன்வர வேண்டும்.

கேள்வி : 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் பொலிஸ் , காணி அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. எனினும் மத்திய அரசாங்கம் அவற்றை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகத் தோன்றவில்லையே?

பதில் : இருப்பதிலிருந்தே முதலில் ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே முன்னோக்கிச் செல்ல முடியும். தேசிய நல்லிணக்கத்துக்கு ஊடாகவும் , பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாகவுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனினும் சில தமிழ் தலைவர்கள் அதற்கு முரணான நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றதன் பின்னர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கேள்வி : இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை வடக்கு மக்கள் சாதகமான கோணத்தில் பார்க்கின்றனரா? இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் முரண்பாடான கருத்துக்களையல்லவா முன்வைத்துக் கொண்டிருக்கின்றன?

பதில் : எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும். அந்த வகையில் சகல பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் நிச்சயம் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகின்றேன். இதற்கான சிறந்த அறிகுறிகளாக காணிப்பிரச்சினை , அரசியல் கைதிகள் எனக் கூறப்படுகின்றவர்களின் விடுதலை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாகவே வைத்திருக்க வேண்டும் என எண்ணும் அரசியல்வாதிகளே குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கேள்வி : வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. எனினும் தற்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் எந்த அடிப்படையில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் : இந்த பிரச்சினைக்கு 1987 இல் தீர்வு வழங்கப்பட்டது. எனினும் அன்றிருந்தவர்கள் அதனை நிராகரித்ததோடு , மறுபுறம் அதனை முறைகேடாக பயன்படுத்திக் கொண்டனர். நாடு; எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் அதே வேளை , இந்த விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

வடக்கு – கிழக்கு மீனவர்களுக்கு விரைவில் சீனாவின் மண்ணெண்ணெய் – கடற்றொழில் அமைச்சர்

சீன அரசாங்கத்தினால் கடத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மண்ணெண்ணை விரைவில் வடக்கு கிழக்கில் உள்ள ஏழு கடை தொழில் மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை முழுவதுமான கடற்தொழில் அமைச்சர் என்ற வகையில் மீனவ மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன். மீனவ மக்களின் வாழ்வாதாரம் அன்றாட தொழில் நடவடிக்கை வீட்டு வசதிகள் என்பவற்றை மேம்படுத்தும் முகமாக சீன அரசாங்கம் சுமார் 1500 மில்லியன் ரூபாக்களுக்கான செயற் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

அதன் ஆரம்ப நடவடிக்கையாக இலங்கையில் உள்ள 15 கடற் தொழில் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 27 ஆயிரம் படகு உரிமையாளர்களுக்கு, ஒருவருக்கு 150 லீட்டர் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 75 லீட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதோடு இரண்டாம் கட்டமாக எஞ்சியவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

வட மாகாணத்தில் உள்ள நான்கு கடற் தொழில் மாவட்டங்களுக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று கடற்தொழில் மாவட்டங்களுக்கும் விரைவில் மண்ணெண்ணை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் கடற் தொழிலாளர்களுக்கான வீடு மற்றும் கடற்தொழிலாளர்களுக்கான வலைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

அது மட்டுமல்லாது எரிபொருள் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு பற்றியில் இயங்கக்கூடிய படகினை சம்பிரதாயபூர்வமாக கடலில் இறக்கியுள்ளோம்.

எரிபொருளிலும் பார்க்க பற்றியில் இயங்குப் படகு இலாபகரமானதாகவும் சூழலுக்கு மாசு இல்லாத தொழில் நுட்பமாக கருதும் நிலையில் அதனை இலங்கையில் விரிவுபடுத்துவதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆகவே ஜப்பான் அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கமும் கடற் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு முன் வந்துள்ள நிலையில் விரைவில் அதற்குரிய செயல்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்றொழிலை சர்வதேச நியமங்களுக்கு ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவருடன் ஆராய்வு

சர்வதேச கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஆழ்கடல் படகுகளின் செயற்பாடுகள் மீன்பிடி தொடர்பான சர்வதேச நடைமுறைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபிஷ் அவர்களுக்கும், கடற்றொழில் அமைச்சருக்கும் இடையேயான சந்திப்பு புதன்கிழமை (24) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீன்பிடிப் படகுகளில், VMS எனப்படும் படகுகளை கண்காணிக்கும் கருவி பொறுத்தப்பட்டிருப்பதன் அவசியத்தையும், அதன் பராமரிப்பு மற்றும் சேவைகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர்.

அத்துடன் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி கடலில் நடைபெறும் அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் என்பவற்றை கண்காணிப்பது மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலின்போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவு கடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சுருக்குவலை மற்றும் ஒளிபாச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கோரி வட்டுவாகல் பாலத்தில் இருந்து கோட்டபாய கடற்படை முகாம் வரை சென்ற கடற்தொழிலாளர்கள் அங்கு கடற்படை முகாமை முற்றுகையிட்டு தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த கடற்தொழில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டநடவடிக்கையின்போது முல்லைத்தீவு கடலினை நம்பி 5ஆயிரத்திற்கு மேற்பட்ட கடற்தொழிலாளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் சாலை தொக்கம் கொக்கிளாய் வரையான கடற்பரப்பில் சுருக்குவலை ஒளிபாச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதனால் மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுவதால் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் சிறுமீன் இனங்கள் அழிக்கப்படுகின்றன.

கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்ப்டட தீர்மானத்திற்கு அமைய காவல் அரண்களை அமைத்து கட்டுப்படுத்தி தருமாறும் கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை தளபதிற்கும் கோட்டபாய கடற்படை முகாம் தளபதிற்கும் கடற்தொழிலாளர்கள் மனு கையளித்துள்ளதுடன்.

கடற்தொழில் அமைச்சருக்கும் விடையத்தினை தெரியப்படுத்தி இன்று இரவிற்குள் முடிவு சொல்லப்படும் என அறிவித்துள்ளதை தொடர்ந்து கடற்தொழிலாளர்கள் கலைந்து சென்றுள்ளார்கள்.

கெளதாரி முனையில் தனியார் நிறுவனத்துக்காக நில அளவீடு : மக்கள் கடும் எதிர்ப்பு

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனை பகுதியில் 98 ஏக்கர் காணியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் நோக்கில் நில அளவீடு மேற்கொள்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கௌதாரி முனை கிராம அலுவலர் பிரிவில் இறால் வளர்ப்பு திட்டத்திற்கு 98 ஏக்கர் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்கில் இன்றைய தினம் (04-04-2023) நில அளவீடு செய்ய முற்பட்டபோது நில அளவீட்டுப் பணிகள் பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளின்மை 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த காணிகள் இன்றி வாழுதல் என பல்வேறு காணித் தேவைகள் உள்ள போதும் இருக்கின்ற போதும் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் அரச காணிகள் உள்ளடங்களாக 98 ஏக்கர் காணியை தனியார் தனியாருக்கு வழங்கும் நோக்கில் நில அளவீடு செய்வதற்கான நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் குறித்த அளவீட்டுப்பணிகள் தடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு காணித்தேவைகள் உள்ள நிலையில் தமது பகுதியில் உள்ள காணிகளை வழங்க முடியாது என்றும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்

இன்று காலை நில அளவீட்டினை மேற்கொள்வதற்காக நில அளவீட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் நில அளவீடு செய்வதற்கு சென்றபோது பொதுமக்களால் குறித்த நில அளவீட்டுப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு பூநகரி பிரதேச செயலாளர் த.அகிலன் சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடியுடன் இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்

பருத்தித்துறையில் கடற்தொழிலாளர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றநிலையில் பருத்தித்துறை வீதி ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கில் 14
கடற்றொழிலாளர் சங்கங்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பருத்தித்துறை பிரதேச செயலக ஊழியர்கள் எவரும் கடமைக்கு உள்ளே செல்லமுடியாதவாறு பருத்தித்துறை பிரதேச செயலக வாயில்கள் மறிக்கப்பட்டு போராட்டகாரர்கள் அமர்ந்திருந்த நிலையில் தீடீரென வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன்போது அவ்வழியே வருகைதந்த நீதவானும் போராட்டம் காரணமாக திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எமக்குரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலீஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய துணைத்தூதுவரை சந்தித்த கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கபிரதிநிதிகள்

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் துணைதூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்த மீனவர் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை வழங்கியதோடு,  வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

குறிப்பாக இந்திய  கடற்றொழிலாளர்களின் நாட்டுப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கவுள்ளதாக வெளிவந்த செய்திகள் தொடர்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள் இந்திய  துணைதூதுவருக்கு தெரிவித்துள்ளனர்.

இந்திய விசைப்படகுகளுக்கு அனுமதி வழங்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்!

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால்  ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற்தொழில் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாக, வெளியான செய்தி தொடர்பில்,  யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலிலையே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற்தொழில் மேற்கொள்ள அனுமதிக்க  கூடாது என வலியுறுத்தியும் இதற்கு  நடவடிக்கை எடுக்க கோரியும் நேரில் சந்தித்து பேச வாய்ப்பு தருமாறு  ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோருவது.

ஐனாதிபதியிடம் இருந்து, கோரிக்கைக்கு  சாதகமான பதில் கிடைக்காது விட்டால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது.

அத்துடன் நாடாளுமன்றில் பேசிய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமையை பரிசீலிப்பதாக தெரிவித்தமை ஏற்றுக்கொள்ள முடியாது.

புனித ஸ்தலமான கச்சதீவினை கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் பேச்சுக்களை நடாத்த அனுமதிக்க கூடாது என யாழ் மறை மாவட்ட ஆயரிடம் ஊடகங்கள் வாயிலாக கோருவது போன்ற முடிவுகள் இந்த கலந்துரையாடலில் எட்டப்பட்டுள்ளன.